You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
டெல்லியில் போராட்டக்காரர்கள் மீது பெல்லட் குண்டுகள் பயன்படுத்தப்பட்டதா? போலீஸ் நடவடிக்கை குறித்து எழும் 3 பிரச்னைகள்
- எழுதியவர், பிபிசி ஹிந்தி குழு
- பதவி, புது டெல்லி
- பிரசுரிக்கப்பட்டது
- வாசிக்கும் நேரம்: 6 நிமிடங்கள்
நாள்: திங்கட்கிழமை
இடம்: ஜந்தர் மந்தர், ஜன்பத், கனாட் பிளேஸ்
ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்திக்கொண்டிருக்கும் காக்ரோச் ஜனதா கட்சி, ஜூலை 20-ஆம் தேதி நாடாளுமன்றம் வரை பேரணி நடத்த அழைப்பு விடுத்திருந்தது. இளநிலை மருத்துவப் படிப்புக்கான நீட் தேர்வு வினாத்தாள் கசிவு மற்றும் இதர முறைகேடுகள் தொடர்பாக மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என போராட்டக்காரர்கள் கோரி வருகிறார்கள்.
இந்த பேரணிக்கு முன்னதாக, டெல்லி காவல்துறை பி.என்.எஸ்.எஸ் சட்டத்தின் பிரிவு 63-ன் கீழ் புது டெல்லி மாவட்டத்தில் தடை உத்தரவை அமல்படுத்தியிருந்தது. இந்த பேரணிக்கு எந்த அனுமதியும் கோரப்படவும் இல்லை, வழங்கப்படவும் இல்லை என்றும் டெல்லி காவல்துறை கூறியிருந்தது.
ஆனால், மற்றொரு புறம் ஜூலை 20-ஆம் தேதி காலை முதலே ஜந்தர் மந்தர் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் பெருந்திரளான போராட்டக்காரர்கள் கூடத் தொடங்கினர். கண் இமைக்கும் நேரத்தில் மக்களின் பெரும் கூட்டம் அங்கு சேர்ந்தது.
போராட்டக்காரர்களின் வழியை மறிப்பதற்காகப் பெரிய அளவிலான தடுப்புகள் அமைக்கப்பட்டிருந்தன.
மறுபுறம், எதிர்ப்புத் தெரிவிக்கும் இளைஞர்கள் நூற்றுக்கணக்கில் திரண்டிருந்ததோடு, முன்னோக்கிச் செல்ல ஆர்வமாக இருந்தனர்.
காவல்துறை நடவடிக்கையின் வைரல் வீடியோக்கள்
இதுபோன்ற ஒரு வீடியோவில், காக்ரோச் ஜனதா கட்சியின் நிறுவனர் அபிஜித் திப்கே ஒரு டெம்போ போன்ற வாகனத்தில் அமர்ந்துகொண்டு, காவல்துறையினரிடம் தடுப்புகளை அகற்றுமாறு கோருவது போன்ற காட்சிகள் இடம்பெற்றுள்ளன. இந்த நேரத்தில் காவல்துறை அதிகாரிகள் அவரை கீழே இறங்கி வருமாறு கூறுகிறார்கள், ஆனால் கீழே நிற்கும் கூட்டம் அவ்வாறு செய்ய வேண்டாம் என்று தடுக்கிறது.
போராட்டத்தின் போது அங்கு இணையம் துண்டிக்கப்பட்டிருந்தது.
ஆனால், அன்றைய தினம் ஜந்தர் மந்தர், ஜன்பத், கனாட் பிளேஸ் மற்றும் அதைச் சுற்றியுள்ள பிற பகுதிகளில் நடந்த சம்பவங்களின் வீடியோக்களும், புகைப்படங்களும் சமூக ஊடகங்களில் நிரம்பி வழிந்தன. இந்த வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களில் காணப்படும் காட்சிகளைக் கொண்டு, காவல்துறையின் நடவடிக்கை குறித்து கேள்விகள் எழுப்பப்பட்டு வருகின்றன.
போராட்டக்காரர்களைக் கலைப்பதற்காகக் கண்ணீர்ப் புகைக் குண்டுகள் வீசப்பட்டது மட்டுமின்றி, பாதுகாப்புப் படையினர் அவர்கள் மீது தடியடி நடத்துவதையும் காண முடிந்தது. பல வீடியோக்களில், காவல்துறையினரும் அதிரடிப்படையின் நீல நிற சீருடை அணிந்த பாதுகாப்புப் படையினரும் மக்களைத் தடிகளால் அடித்து விரட்டுவது தெளிவாகத் தெரிகிறது.
காவல்துறையினருடன் சேர்ந்து சாதாரண உடையில் இருக்கும் சில நபர்களும் தடியடி நடத்துவது போன்ற பல வீடியோக்களும் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகின்றன. இது குறித்து அவர்களிடம் கேள்வி எழுப்பப்படும் போது, அவர்கள் மக்களை கொடூரமாக தாக்குவது அந்த வீடியோக்களில் தெரிகிறது.
டெல்லி காவல்துறை அன்றைய தினமே ஒரு அறிக்கையை வெளியிட்டு, "போராட்டக்காரர்கள் புது டெல்லி பகுதியில் ஆக்ரோஷமாகவும் வன்முறையாகவும் நடந்துகொண்டனர். காவல்துறையினர் பலமுறை எச்சரிக்கை செய்தும் அவர்கள் அங்கிருந்து கலைந்து செல்ல மறுத்துவிட்டனர். அவர்கள் காவல்துறையினர் மீது கற்கள் மற்றும் இதர பொருட்களைக் கொண்டு தாக்குதல் நடத்தினர், காவல்துறை தடுப்புகளை உடைக்க முயன்றனர், காவல்துறை மற்றும் அரசு வாகனங்களைத் தாக்கினர், மேலும் பெரிய அளவில் வன்முறையில் ஈடுபட்டனர்" என்று கூறியிருந்தது.
"இந்தச் சம்பவத்தில் மூத்த காவல்துறை அதிகாரிகள் உட்பட 118 காவல்துறையினருக்குக் காயங்கள் ஏற்பட்டுள்ளன. இந்த நேரத்தில் நடந்த மோதல்களில் போராட்டக்காரர்களுள் சுமார் 60 பேரும் காயமடைந்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. போராட்டக்காரர்களுள் சுமார் 70 பேர் காவலில் எடுக்கப்பட்டுள்ளனர், இது தொடர்பாக உரிய சட்டப்பூர்வ நடவடிக்கைகள் தொடங்கப்பட்டு வருகின்றன" என காவல்துறை மேலும் தெரிவித்துள்ளது.
மறுபுறம், காக்ரோச் ஜனதா கட்சி, அமைதியான முறையில் போராட்டம் நடத்திக் கொண்டிருந்த இளைஞர்கள் மீது காவல்துறை கொடூரமான முறையில் தடியடி நடத்தியதாகக் கூறுகிறது. அபிஜித் திப்கே, தனது ஆதரவாளர்களிடம், குறிப்பாக ஆண் காவல்துறை அதிகாரிகளால் கொடூரமாக தாக்கப்பட்ட பெண் போராட்டக்காரர்களிடமும் மன்னிப்புக் கேட்டுக்கொள்வதாகக் கூறினார்.
காங்கிரஸ் தலைவரும், மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி, காவல்துறையின் இந்த நடவடிக்கையைக் கண்டித்து, இந்த நடவடிக்கைக்காகப் பிரதமர் நரேந்திர மோதி மன்னிப்புக் கேட்க வேண்டும் என்று கூறினார்.
இந்த நடவடிக்கை குறித்து பிரதமர் ஏன் மௌனமாக இருக்கிறார் என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.
"மாணவர்களின் ஆடைகள் கிழிக்கப்பட்டன, கைகள் உடைக்கப்பட்டன மற்றும் தலைகள் உடைக்கப்பட்டன" என்று சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் புதன்கிழமை மக்களவையில் தெரிவித்தார்.
"யாரை வேண்டுமானாலும் தூக்குங்கள் என்று மோதி அரசுதான் உத்தரவிட்டது, குழந்தைகளிடம் பீதியை ஏற்படுத்துவதற்கும், பயத்தை உருவாக்குவதற்கும் தான் இது செய்யப்பட்டது" என்று ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கேஜ்ரிவால் புதன்கிழமை கூறினார்.
டெல்லி போலீஸ் அகாடமியின் பிஎன்எஸ் கையேடு பிரிவு 195 (2)-ல், அரசு ஊழியர் எவரையாவது தாக்கும் அல்லது அவரது பணியில் தடையை ஏற்படுத்தும், அல்லது சட்டவிரோதமான கும்பலைக் கலைக்க, கலவரம் அல்லது சண்டையைத் தடுக்க முயலும் போது தனது கடமையைச் செய்யும் அரசு ஊழியர் மீது குற்றவியல் சக்தியைப் பயன்படுத்தும் எவருக்கும், மூன்று ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை, அல்லது குறைந்தபட்சம் 25,000 ரூபாய் அபராதம், அல்லது இரண்டு தண்டனைகளும் விதிக்கப்படலாம் என்று கூறப்பட்டுள்ளது.
ஆனால், திங்கட்கிழமை டெல்லியின் மையப்பகுதியில் நடந்த சம்பவம் மற்றும் எந்த மாதிரியான நடவடிக்கை எடுக்கப்பட்டது என்பது குறித்து கடுமையான கேள்விகள் எழுப்பப்பட்டு வருகின்றன.
பாதுகாப்புப் படையினருக்குக் காயங்கள்
போராட்டத்தின் போது காவல்துறையினருக்கு ஏற்பட்ட காயங்களைக் காட்டும் சில புகைப்படங்களும் வீடியோக்களும் கூட வெளிவந்துள்ளன.
நாடாளுமன்றத்துக்கு செல்லும் சன்சத் மார்க் சாலையில் அமைந்துள்ள காவல் நிலையத்துக்கு அருகில் கண்ணில் காயம் ஏற்பட்டிருந்த காவல்துறை அதிகாரி ஒருவரின் வீடியோவும் வெளிவந்தது.
ஊடகங்கள் கேள்வி எழுப்பியபோது, அந்த காவல்துறை அதிகாரி, "கல் பட்டதால் கண்ணில் காயம் ஏற்பட்டுள்ளது. நாங்கள் தடுப்பு அருகில் நின்றுகொண்டிருந்தோம். முன்னால் இருந்து கல் வந்து தாக்கியது" என்று கூறினார்.
ஜூலை 20-ஆம் தேதி நடந்த போராட்டம் குறித்து டெல்லி காவல்துறை ஒரு அறிக்கையை வெளியிட்டிருந்தது.
அந்த அறிக்கையில், "இன்று (ஜூலை 20) நடந்த உக்கிரமான போராட்டத்தின் போது, பணியில் இருந்த டெல்லி காவல்துறையின் சிறப்பு ஆணையர், இணை ஆணையர், கூடுதல் ஆணையர் மற்றும் துணை ஆணையர் அந்தஸ்து கொண்ட அதிகாரிகள் உட்பட டெல்லி காவல்துறை மற்றும் மத்திய காவல் படைகளைச் சேர்ந்த 118-க்கும் மேற்பட்ட காவல்துறையினர் காயமடைந்தனர்" என்று கூறப்பட்டிருந்தது.
முதல் பிரச்னை: சாதாரண உடையில் தடிகளோடு காவல்துறையினர்
ஜந்தர் மந்தரில் இருந்து வந்துள்ள பல வீடியோக்களில், சிவில் உடையில் காவல்துறையினர் என்று கூறப்படும் சிலர் இருந்ததும், அவர்களது கைகளில் தடிகள் இருந்ததும், அவர்கள் கூட்டத்தைக் கட்டுப்படுத்த பலப்பிரயோகம் செய்ததும் தெரிகிறது. இதேபோல், சிவில் உடையில் இருப்பது குறித்தும், முகத்தை மூடியிருப்பது குறித்தும் சிலரிடம் கேள்வி எழுப்பப்பட்டபோது, அவர்கள் ஆக்ரோஷமாக நடந்துகொள்வதைக் காண முடிந்தது.
இரண்டாவது பிரச்னை: கொடூரமான தடியடி
ஜந்தர் மந்தரில் நடந்த காவல்துறை நடவடிக்கையில் அதிகப்படியான பலப்பிரயோகம் செய்யப்பட்டதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. போராட்டக்காரர்களை அங்கிருந்து அகற்றுவதற்காகக் காவல்துறையினர் தடியடி நடத்தியது மட்டுமன்றி, தப்பியோடிய போராட்டக்காரர்கள் மீதும் பலப்பிரயோகம் செய்ததாக அவர்கள் மீது குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
இது தவிர, பலருக்கு தலை, கண்கள் மற்றும் மார்பில் காயங்கள் ஏற்பட்டுள்ளன, ஆனால் வழிகாட்டுதல்களின்படி தடியடி நடத்தும்போது பாதிப்பைக் குறைப்பதற்கு இடுப்புக்குக் கீழே மட்டுமே தாக்கப்பட வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
21 வயதுடைய இளம்பெண் ஒருவர் டெல்லியின் ஆர்.எம்.எல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார், அவர் பலத்த காயமடைந்துள்ளார். அந்தப் பெண்ணின் நிலைமை மிகவும் கவலைக்கிடமாக இருந்ததால் அவர் வென்டிலேட்டரில் வைக்கப்பட வேண்டியிருந்தது என்று பல ஊடக செய்திகள் கூறுகின்றன.
மூன்றாவது பிரச்னை: பெண்களிடம் அத்துமீறி நடந்துகொண்டதாகக் குற்றச்சாட்டுகள்
பெண்களிடம் அத்துமீறி நடந்துகொண்டதாகக் கூறப்படும் சில வீடியோக்கள் வெளிவந்துள்ளன. ஒரு வீடியோவில், காவல்துறை அதிகாரி ஒருவர் பெண் ஒருவரைக் கன்னத்தில் அறைவதைக் காண முடிகிறது.
மற்றொரு வீடியோவில், ஆய்வாளர் அந்தஸ்தில் உள்ள காவல்துறை அதிகாரி ஒருவர், அங்கிருந்து ஓடும் ஒரு பெண்ணைப் பின்னால் இருந்து தடியால் அடிப்பது தெரிகிறது.
இது தவிர, டெல்லி காவல்துறை பெல்லட் துப்பாக்கிகளைப் பயன்படுத்தியதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. இருப்பினும், இந்தக் குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை என்று டெல்லி காவல்துறை கூறுகிறது. "டெல்லி காவல்துறை அமைதியான போராட்டக்காரர்கள் மீது பெல்லட் துப்பாக்கிகளைப் பயன்படுத்தியது என்ற கூற்றுகள் முற்றிலும் தவறானவை மற்றும் திசைதிருப்பக் கூடியவை. டெல்லி காவல்துறையிடம் பெல்லட் துப்பாக்கிகள் இல்லை, இந்த போராட்டத்தின் போது அவை பயன்படுத்தப்படவும் இல்லை" என்று இந்தக் குற்றச்சாட்டுகள் குறித்து காவல்துறை விளக்கமளித்துள்ளது.
இந்த வைரல் வீடியோக்கள் மற்றும் கொடூரமான நடவடிக்கை குறித்து காவல்துறை மீதான குற்றச்சாட்டுகள் குறித்து டெல்லி காவல்துறை அதிகாரிகள் பலருடன் பேச பிபிசி முயன்றது, ஆனால் அவர்கள் எந்தப் பதிலும் அளிக்கவில்லை.
அவர்களின் பதில் கிடைத்தவுடன், அது இந்த செய்தியில் சேர்க்கப்படும்.
நிபுணர்கள் என்ன சொல்கிறார்கள்?
அம்னெஸ்டி இன்டர்நேஷனல் அமைப்பும் டெல்லியில் போராட்டக்காரர்கள் மீது நடத்தப்பட்ட இந்த 'ஒடுக்குமுறையை' கண்டித்துள்ளதோடு, இது மனித உரிமை மீறல் என்றும் கூறியுள்ளது.
அம்னெஸ்டி இன்டர்நேஷனல் இந்தியாவின் தலைவர் ஆகார் படேல், "ஜந்தர் மந்தரில் நடந்த போராட்டத்திலிருந்து வெளிவந்துள்ள புகைப்படங்களும் செய்திகளும் ஒரு அமைதியான போராட்டம் எவ்வாறு நசுக்கப்படுகிறது என்பதைக் காட்டுகின்றன" என்று கூறினார்.
"சர்வதேச மனித உரிமை அளவுகோல்களின்படி டெல்லி காவல்துறையின் அணுகுமுறை சட்டப்பூர்வமானதா, அவசியமானதா மற்றும் நியாயமானதா என்ற தீவிரமான கேள்விகளை எழுப்புகிறது. டெல்லி காவல்துறை நிதானத்தைக் கடைப்பிடிக்குமாறும், அமைதியான போராட்டக்காரர்களுக்கு எதிராக சட்டவிரோதமான பலப்பிரயோகம் செய்வதை உடனடியாக நிறுத்துமாறும் நாங்கள் கேட்டுக்கொள்கிறோம்" என்றார்.
"சட்டவிரோதமான முறையில் நடந்துகொண்டதாகக் கூறப்படும் அனைத்துக் குற்றச்சாட்டுகளையும் அதிகாரிகள் உடனடியாக, சுதந்திரமான மற்றும் நடுநிலையான முறையில் விசாரிப்பதை உறுதி செய்ய வேண்டும். காவல்துறையினர் தடியடி, கண்ணீர்ப்புகை மற்றும் கற்கள் ஆகியவற்றை அளவுக்கு அதிகமாகப் பயன்படுத்தியதும் இந்தக் குற்றச்சாட்டுகளில் அடங்கும்."
இதுபோன்ற ஒரு போராட்டத்தின் போது களத்தில் இருக்கும் காவல்துறையினர் என்னென்ன செய்ய வேண்டும், கூட்டத்தைக் கட்டுப்படுத்துவதற்கான விதிகள் என்ன சொல்கின்றன, எவ்வாறு குறைந்தபட்ச பலப்பிரயோகம் செய்யப்பட வேண்டும் என்பது குறித்து, உத்தரப் பிரதேச காவல்துறையின் முன்னாள் தலைமை இயக்குநர் ஓ.பி. சிங்கிடம் பிபிசி பேசியது.
"இந்தியாவில் மக்களுக்குப் போராட்டம் நடத்துவதற்கான உரிமை உள்ளது. ஆனால் நாட்டின் பாதுகாப்பையும் நாம் கவனிக்க வேண்டும் என்பதால் இந்திய அரசியலமைப்புச் சட்டம் இந்த போராட்டங்கள் சில கட்டுப்பாடுகளுடன் நடக்க வேண்டும் என்றும் கூறுகிறது. இத்தகைய சூழ்நிலையில், யாருக்கும் 'முழுமையான அதிகாரம்' வழங்கப்படவில்லை. போராட்டத்தை எவ்வாறு முறைப்படுத்த வேண்டும் என்ற இந்த பொறுப்பு, அரசின் மூலம் காவல்துறையைச் சேர்கிறது" என்று அவர் கூறினார்.
"முதலாவதாக எங்கிருந்து தொடங்கி எங்கு வரை செல்லலாம் என்று போராட்டத்துக்கான பாதை தீர்மானிக்கப்படுகிறது, அதற்கு அப்பால் செல்ல அனுமதி வழங்கப்படுவதில்லை" என்று ஓ.பி.சிங் தெரிவித்தார்.
"சூழ்நிலைக்கு தேவைப்பட்டால் கூட்டத்தைக் கலைப்பதற்காகக் கண்ணீர்ப்புகை பயன்படுத்தப்படுகிறது. அதன் பிறகும் கூட்டம் அருகில் வந்தால், தடியடி நடத்தப்படுகிறது. ஆனால், இதற்கு முன்பாக எச்சரிக்கை விடுக்கப்பட வேண்டும்."
சாதாரண உடையில் இருக்கும் காவல்துறைக்குக் கூட்டத்தைக் கட்டுப்படுத்தும் உரிமை உண்டா என்று கேட்டதற்கு உளவுத்துறையைச் சேர்ந்தவர்களின் வேலை தகவல்களை சேகரிப்பது மட்டுமே என்பதால் அவர்கள் சாதாரண உடையில் இருப்பார்கள் என்று அவர் பதிலளித்தார்.
சாதாரண உடைக்கான விதிகள் என்ன?
காவல்துறை அதிகாரிகள் சாதாரண உடையில் தடியடி நடத்தலாமா என்ற கேள்விக்கு ஓ.பி. சிங், "முடியாது, அப்படி இல்லை. சாதாரண உடையில் பணியமர்த்தப்பட்ட நபர்களுக்கு போலீஸ் பணிகளைச் செய்ய அனுமதி இல்லை. அவர்கள் தடியடி நடத்த முடியாது, துப்பாக்கிச் சூடும் நடத்த முடியாது" என்றார்.
இருப்பினும், அவர் சில விதிவிலக்குகளையும் குறிப்பிடுகிறார்.
"சில நேரங்களில் சூழ்நிலை திடீரென மாறும்போது, மூத்த காவல்துறை அதிகாரிகள் சாதாரண உடையில் சம்பவ இடத்துக்கு வர நேரிடலாம். அவர்களை அடையாளம் காண முடியும். கூட்டத்தைக் கட்டுப்படுத்துவதற்காகக் காவல்துறையினரும் வீடியோ பதிவு செய்கிறார்கள், குற்றச்சாட்டுகள் எழும்போது அவை உதவியாக இருக்கும்" என்றார்.
தடியடி நடத்துவது குறித்து காவல்துறை அதிகாரிகளுக்கு என்ன அறிவுறுத்தல்கள் உள்ளன என்பது குறித்து பேசிய ஓ.பி. சிங், "தடியால் எங்கு அடிக்க வேண்டும் என்று கூறப்படுவதில்லை, ஆனால் பயன்படுத்தப்படும் சட்டப்பூர்வ வார்த்தை என்னவென்றால், குறைந்தபட்ச பலப்பிரயோகத்தை பயன்படுத்த வேண்டும் என்பதாகும். அதாவது, நீங்கள் உடலின் ஒரு பகுதியில் தாக்கும்போது அது எந்த வகையிலும் உயிருக்கு ஆபத்தானதாக இருக்கக்கூடாது" என்றார்.
-இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு