You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
அதிக கட்டணம் வந்திருந்தால் மின் வாரியத்திடம் முறையிட்டு நிவாரணம் பெறுவது எப்படி?
- எழுதியவர், நந்தினி வெள்ளைச்சாமி
- பதவி, பிபிசி தமிழ்
- பிரசுரிக்கப்பட்டது
- வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள்
"வழக்கமாக எங்கள் வீட்டுக்கு ரூ.1,250 என்றளவில் மின்கட்டணம் வரும். திடீரென இந்த மாதம் ரூ.5,791 மின்கட்டணம் வந்துள்ளது. வயரிங், மீட்டர் ஆகியவற்றில் ஏதேனும் பிரச்னை இருக்கலாம், அதை மாற்றி பார்க்கலாம் என அதிகாரிகள் கூறுகின்றனர். எப்போதும் கடன் வாங்கித்தான் மின்கட்டணம் செலுத்துகிறோம். ஆனால் 6,000 ரூபாய் என்பது பெரிய தொகை. அதை எப்படி செலுத்த முடியும்?"
தருமபுரி மாவட்டம் அரூரில் உள்ள அம்பேத்கர் நகரை சேர்ந்த பிரணிதா என்ற ஊடகங்களுக்கு அளித்த பேட்டி இது.
தமிழ்நாட்டில் வீடுகளுக்கு இரு மாதங்களுக்கு ஒருமுறை என மின் பயன்பாடு கணக்கு எடுக்கப்படுகிறது. தமிழ்நாட்டில் ஒரு யூனிட்டுக்கான கட்டணம், நுகர்வோர் பயன்படுத்தும் மொத்த யூனிட்டுகளுக்கு ஏற்றாற்போல் மாறுபடும். யூனிட் அதிகரிக்க அதிகரிக்க ஒரு யூனிட்டுக்கான கட்டணமும் மாறுபடும்.
உதாரணமாக, 0-400 யூனிட் வரை ஒரு யூனிட்டுக்கான கட்டணம் ரூ. 4.7 401-500 யூனிட்டுகள் எனில் அதுவே ஒரு யூனிட் கட்டணம் ரூ. 6.3ஆக உள்ளது. இவ்வாறு ஒரு யூனிட் மின்சார பயன்பாட்டிற்கான கட்டணம், மொத்த யூனிட்டுகளுக்கு ஏற்ப மாறுபடுகிறது.
சென்னையை சேர்ந்த பெயர் தெரிவிக்க விரும்பாத நபர் ஒருவர் பிபிசி தமிழிடம் பேசுகையில், "வழக்கமாக எனக்கு இரு மாதங்களுக்கு 4,000 ரூபாய் என்ற அளவில் கட்டணம் வரும். இப்போது இருமடங்கு, அதாவது 8,000 ரூபாய் என்ற அளவில் கட்டணம் வந்துள்ளது. திடீரென இவ்வளவு உயர்ந்தது ஆச்சர்யமாக உள்ளது. எப்படி புகார் அளிப்பது என தெரியவில்லை. புகார் அளித்தாலும் அது மீண்டும் சரிசெய்யப்படுமா என தெரியவில்லை" என்றார்.
இதுபோன்று அதிகப்படியான மின்கட்டணம் வசூலிக்கப்படுவதாக பலரும் சமூக வலைத்தளங்களில் தங்களது ஆதங்கங்களை பதிவிட்டிருந்தனர். வெயில் காலத்தில் அதிகப்படியான மின் பயன்பாடு காரணமாக மின்கட்டணம் அதிகமாக வந்திருக்கலாம் என மின்வாரியம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
தலைமைப் பொறியாளர் சுற்றறிக்கை
இந்த நிலையில், தமிழ்நாடு மின் பகிர்மான கழகத்தில் திருநெல்வேலி மண்டல தலைமைப் பொறியாளர் ஜூன் 29-ஆம் தேதி சுற்றறிக்கை ஒன்றை வெளியிட்டார். "தமிழ்நாடு மின் விநியோகக் கழகம் லிமிடெட் (TNPDCL) வருவாய் அதிகரிப்பு நடவடிக்கைகள் - மதிப்பீட்டில் கண்டறியப்பட்ட முரண்பாடுகள் - தேவையான நடவடிக்கைகள் எடுக்க அறிவுறுத்தல்கள் - மீண்டும் அறிவிப்பு - தொடர்பாக" என குறிப்பிட்டு, பல்வேறு வழிகாட்டுதல்கள் அதில் வழங்கப்பட்டிருந்தன.
அதில், "மீட்டர், மீட்டர் கணக்கீடு அல்லது பில்லிங் செயல்முறைகளில் ஏற்பட்ட குறைபாடுகளால் வீட்டு மின்நுகர்வோருக்கு தவறான மற்றும் அதிகப்படியான மின் கட்டணங்கள் விதிக்கப்பட்டுள்ளன.
- வட்டங்களின் ஆய்வு அறிக்கைகள், நுகர்வோர் புகார்கள், முதலியவற்றின் அடிப்படையில் பின்வரும் குறைபாடுகள் கண்டறியப்பட்டுள்ளன.
- RS/AS/AAO Sub Div. ATO/ATO Sr. ATO/AO (RIS) (பல்வேறு மட்டங்களில் உள்ள அதிகாரிகள்) ஆகியோரால் மதிப்பீட்டின் அடிப்படையில் கள ஆய்வு முறையாக மேற்கொள்ளப்படவில்லை.
- மின் பகிர்மான வட்டம் (EDC - Electricity Division Circle) மட்டத்தில் ஆய்வு மேற்கொள்ளப்படவில்லை.
- பழுதடைந்த மீட்டரின் மின் அளவுகளிலிருந்தே பிரச்னை ஆரம்ப நிலையிலேயே கண்டறியப்படாமல், பிரிவு அலுவலகத்திற்கே பொறுப்பு ஒப்படைக்கப்பட்டுள்ளது.
- தலைமை அலுவலகம் தொடர்ந்து வழங்கியுள்ள வழிகாட்டுதல்களின் படியும், சரியான மதிப்பீடு செய்யவும், தவறான பதிவுகளைத் தவிர்க்கவும், நுகர்வோர் திருப்தியை உறுதி செய்யவும், வேண்டிய நிலையில், இன்னும் பல்வேறு குறைபாடுகள் காணப்படுவது வருத்தத்திற்குரியது" என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தலைவர்கள் கண்டனம்
இந்த சுற்றறிக்கையை சுட்டிக்காட்டி, தமிழ்நாட்டின் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் மின்கட்டண அளவீட்டில் குளறுபடிகள் ஏற்பட்டிருப்பதாக கண்டனம் தெரிவித்துள்ளனர்.
தமிழ்நாடு பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் திங்கட்கிழமை வெளியிட்ட அறிக்கையில், "மின் கணக்கீட்டில் பெரும் குளறுபடிகள் நடந்திருப்பதாக மின்வாரியத் தலைமைப் பொறியாளரே ஒப்புக்கொண்டிருப்பது விஜய் அரசின் நிர்வாகத் தோல்வியைக் காட்டுகிறது. தவறாக வசூலிக்கப்பட்ட கூடுதல் தொகையை மின்வாரியம் உடனடியாகத் திருப்பித் தருவதோடு, மின்கட்டணக் குளறுபடிகளுக்கு நிரந்தரத் தீர்வு காணச் சிறப்புத் தணிக்கையை தவெக அரசு தொடங்க வேண்டும்" என குறிப்பிட்டிருந்தார்.
அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் வெளியிட்ட அறிக்கையில், "ஒவ்வொரு மாதமும் 200 யூனிட் கட்டணமில்லா மின்சாரம் வழங்கப்படும் என தேர்தலுக்கு முன்பாக வாக்குறுதியளித்த தவெக, ஆட்சிக்கு வந்த பின்பு இரு மாதத்திற்கு 200 யூனிட் கட்டணமில்லா மின்சாரம் என அறிவித்து மக்களை ஏமாற்றிய கையோடு, இலவசமாக வழங்கப்படும் மின்சாரத்துக்கான தொகையையும் மக்களிடமே மறைமுகமாக மின்கட்டணத்தின் மூலம் வசூல் செய்ய முற்படுவது கடும் கண்டனத்திற்குரியது." என தெரிவித்துள்ளார்.
தமிழகம் முழுவதும் குளறுபடிகள் குறித்த முறையான விசாரணை மேற்கொண்டு, அவை சரிசெய்யப்படும் வரை மின்கட்டணம் வசூலிக்கப்பட மாட்டாது என மின்வாரியம் அறிவிக்க வேண்டும் எனவும் டிடிவி தினகரன் வலியுறுத்தியுள்ளார்.
மின்வாரிய ஊழியர் சங்கத்தினர் கூறியது என்ன?
மின்வாரிய ஊழியர்களுக்கான சிஐடியூ தொழிற்சங்கத்தை சேர்ந்த சுப்ரமணியம் என்பவர் கூறுகையில், "ஸ்மார்ட் மீட்டரை பொருத்தும்போது நுகர்வு அதிகமாக காட்டப்படுகிறது. இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை சில வீடுகளில் மின் நுகர்வு கணக்கு எடுக்கப்படுவதில்லை. அந்த குறிப்பிட்ட தேதியை தாண்டி எடுக்கும்போது 500 யூனிட்டுகளை தாண்டிவிடுவதால் கட்டணம் அதிகமாகிவிடுகிறது. 500 யூனிட்டுகளுக்கு அதிகம் போனால் இருமடங்காக கட்டணம் செலுத்த வேண்டும்." என்றார்.
மதிப்பீட்டாளர் (assessor) பற்றாக்குறை இருப்பதாக சுப்ரமணியம் தெரிவித்தார்.
நெல்லை மண்டல தலைமைப் பொறியாளர் கூறியது என்ன?
இதுகுறித்து நெல்லை மண்டல தலைமைப் பொறியாளர் லதாவிடம் பிபிசி தமிழ் பேசுகையில், "பொதுமக்களிடமிருந்து அதிக மின்கட்டணம் தொடர்பாக அதிகப்படியான புகார்கள் வருவதில்லை" என்று தெரிவித்தார்.
"அதிகமாக மின்கட்டணம் வசூலிக்கப்படுவதாக ஊடகங்களில் காட்டப்படுவது போன்று அதிகளவில் புகார்கள் வருவதில்லை. நாங்கள் வெளியிட்ட சுற்றறிக்கையில் வழக்கமான வழிகாட்டுதல்கள் தான் குறிப்பிடப்பட்டிருந்தன. அவை தவறாக சித்தரிக்கப்படுகின்றன. வழக்கமான ஆய்வுகளை நடத்த வேண்டும் என எங்களுக்கு அறிவுறுத்தல்கள் வந்தன, அதைத்தான் அதிகாரிகளுக்கு சுற்றறிக்கையாக வழங்கினோம்." என்றார்.
எப்படி புகார் அளிப்பது?
புகார் அளிக்கும் வழிமுறைகள் குறித்து பேசிய தலைமை பொறியாளர் லதா, "அந்தந்த பிரிவு உதவி பொறியாரிடம் புகார் அளிக்கலாம். உதவி பொறியாளர் மட்டத்திலேயே பல பிரச்னைகளுக்கு தீர்வு காணப்பட்டுவிடும். அதிலும் தீர்க்கப்படவில்லையென்றால், நுகர்வோர் குறைதீர்க்கும் மன்றம் (CGRF - Consumer Grievance Redressal Forum) மூலமாகவும் புகார் அளிக்கலாம்." என்றார்.
"பெரும்பாலான பிரச்னைகள் உடனடியாக தீர்க்கப்படுகின்றன. நிலைமின் (static) மீட்டரில் தவறுகள் நடப்பதற்கு வாய்ப்பு குறைவு. தகுதிவாய்ந்த புகார்களுக்கு அடுத்த மின்கட்டணத்தில் சரிசெய்து தரப்படும். இவை வழக்கமாக நடப்பதே." என்றும் அவர் கூறினார்.
அமைச்சர் கூறியது என்ன?
மின்துறை அமைச்சர் நிர்மல்குமார் சென்னையில் திங்கட்கிழமை செய்தியாளர்களிடம் பேசுகையில், "தலைமைப் பொறியாளரின் சுற்றறிக்கை பொதுவான ஒன்றே. சமூக ஊடகங்களில் இதுகுறித்து பேசப்படுகின்றது. ஆனால், குறிப்பாக எந்த புகாரும் இல்லை. பொதுமக்களுக்கு இடையூறு இல்லாமல் எல்லாவற்றையும் சோதிக்க வேண்டும், மீண்டும் சென்று சோதிக்க வேண்டும் என பொதுவாக வெளியிடப்பட்ட சுற்றறிக்கை. பொதுமக்களுக்கு இடையூறு இல்லாமல் எல்லாவற்றையும் பாதுகாப்பாக செய்ய வேண்டும் என அதில் அறிவுறுத்தப்பட்டுள்ளது." என்றார்.
அதிக மின்கட்டணம் குறித்து தாம்பரத்தில் ஒருசிலர் கூறியிருக்கின்றனர் என்று கூறிய அமைச்சர், அதை மீண்டும் பரிசோதித்து பார்க்குமாறு கூறியிருப்பதாக தெரிவித்தார். மதிப்பீட்டாளர் (assessor) பற்றாக்குறை இருப்பதாக கூறிய அவர், 5,500 பேர் இருக்க வேண்டிய இடத்தில் 800 பேர் தான் இருக்கின்றனர் என்றார். "தவறுதலாக யாராவது கணக்கெடுத்திருந்தால் அவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதற்கும் உத்தரவிட்டுள்ளோம். மறுபடியும் கணக்கு எடுக்குமாறு கூறியுள்ளோம்." என்றும் அமைச்சர் நிர்மல்குமார் கூறினார்.
"யாராவது அதிகமாக பணம் செலுத்தியிருந்தால் அது (அடுத்த பில்லில்) சரிசெய்யப்பட்டுவிடும். இதுவரைக்கும் எந்த தவறுகளும் கண்டுபிடிக்கப்படவில்லை. புகார்கள் பரப்பப்படுகிறதா என தெரியவில்லை. 7-8 இடங்களில் இவ்வாறு கூறியிருக்கின்றனர். மீண்டும் கணக்கெடுக்குமாறு கூறியுள்ளோம்." என அமைச்சர் கூறினார்.
-இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு