'நிம்மதியாக சாப்பிட முடியவில்லை'; நீலகிரி மாவட்டத்தில் பூஞ்சை ஈக்கள் படையெடுப்பால் மக்கள் அவதி

  • பிரசுரிக்கப்பட்டது
  • வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள்

நீலகிரி மாவட்டத்தின் குன்னூர், சேலாஸ், கோத்தகிரி, ஜக்கனாரை, அரவேணு, கோடமலை உள்ளிட்ட பல பகுதிகளில் கடந்த சில வாரங்களாக ஆயிரக்கணக்கான சிறிய ஈக்கள் கூட்டமாகப் பரவி, மக்களின் அன்றாட வாழ்க்கையைப் பாதித்து வருகின்றன.

வீடுகள், கடைகள் மற்றும் உணவகங்களுக்குள் புகுந்துவிடும் இந்தப் பூச்சிகளால் உணவு தயாரிப்பது, சாப்பிடுவது, கடைகளை நடத்துவது அனைத்துமே சிரமமாகியுள்ளதாக மக்கள் கூறுகின்றனர்.

இவற்றைக் கட்டுப்படுத்த உடனடி நடவடிக்கை எடுக்கக் கோரி, அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் சேலாஸ் பகுதியில் ஜூலை 22ஆம் தேதி கடையடைப்புப் போராட்டமும் நடத்தப்பட்டது.

இந்தப் பூச்சிகள் மனிதர்களுக்கு ஆபத்தை ஏற்படுத்தும் 'கருப்பு ஈக்கள்' அல்ல என்றும், 'சையாரிடே' (Sciaridae) குடும்பத்தைச் சேர்ந்த 'கருஞ்சிறகு பூஞ்சை ஈக்கள்' (Dark-winged fungus gnats) என்றும் பூச்சியியல் வல்லுநர்களும் உயிரியலாளர்களும் பிபிசியிடம் தெரிவித்தனர்.

இவற்றால் மனிதர்களுக்கு நேரடியான உயிரியல் ஆபத்து இல்லை. இவை நஞ்சையும் வெளியிடுவதில்லை. ஆனால் அதிவேகமாக இனப்பெருக்கம் செய்வதால், பெரும் எண்ணிக்கையில் தோன்றி மக்களுக்குக் கடுமையான இடையூறுகளை விளைவிப்பதாகத் தெரிவித்தனர்.

பல பகுதிகளுக்குப் பரவிய ஈக்கள்

இந்தப் பூச்சிகளின் தொல்லை முதலில் மேட்டுப்பாளையம்–கோத்தகிரி சாலையில் உள்ள நீலகிரியின் நுழைவாயிலான குஞ்சப்பனை பகுதியில் கண்டறியப்பட்டதாக உள்ளூர் செய்தியாளர்கள் கூறுகின்றனர்.

பின்னர் கொட்டகம்பை, அரவேணு உள்ளிட்ட உயரமான பகுதிகளிலும் அவை காணப்பட்டுள்ளன.

அரவேணு மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் முதலில் பூச்சிகள் அதிகரித்தபோது, அவை மழைக் காலத்தில் வரும் ஈசல் அல்லது அந்துப்பூச்சி வகையாக இருக்கலாம் என்று நினைத்த மக்கள், ஓரிரு நாட்களில் மறைந்துவிடும் என்று எதிர்பார்த்துள்ளனர். ஆனால் பூச்சிகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்தது.

இதையடுத்து ஜக்கனாரை ஊராட்சி நிர்வாகம் பரவலான தூய்மைப் பணிகளை மேற்கொண்டது. நடுஹட்டி, நெடுகுளா, குஞ்சப்பனை, கொணவக்கரை, கெங்கரை உள்ளிட்ட பிற ஊராட்சிகளில் பணியாற்றும் தூய்மைப் பணியாளர்களும் வரவழைக்கப்பட்டனர். குப்பைகள், சாக்கடைக் கால்வாய்கள் மற்றும் ஈரப்பதமான இடங்களில் மருந்து தெளிக்கப்பட்டதுடன், கொசுக்களைக் கட்டுப்படுத்தப் பயன்படுத்தப்படும் புகையும் அடிக்கப்பட்டது.

இதற்குப் பிறகு அரவேணு பகுதியில் பூச்சிகளின் எண்ணிக்கை ஓரளவு குறைந்ததாக மக்கள் கூறுகின்றனர். ஆனால் சேலாஸ், கோடமலை உள்ளிட்ட வேறு பகுதிகளில் அவற்றின் தொல்லை தொடர்ந்து அதிகரித்துள்ளது.

சமைக்கவும் சாப்பிடவும் முடியாத நிலை

சேலாஸ் பகுதி கவுன்சிலர் பாஸ்கர், "கடைகள், வீடுகள், சாலைகள் என அனைத்து இடங்களிலும் இவற்றின் தொல்லை அதிகமாகிவிட்டது. வாயைத் திறந்து எதையும் சாப்பிட முடியவில்லை. இருசக்கர வாகனத்தில் சென்றால் கண்களில் பூச்சிகள் விழுகின்றன. இதனால் விபத்துகளும் நடக்கின்றன. கிருமிநாசினி தெளித்தும் பயன் ஏற்படவில்லை" என்றார்.

வீடுகள் மற்றும் உணவகங்களில் உணவு தயாரிப்பதே கடினமாகிவிட்டதாகவும், சமைத்த உணவுகளில் இந்தப் பூச்சிகள் விழுந்து விடுவதால் அவற்றைப் பயன்படுத்த முடியாத நிலை ஏற்படுவதாகவும் அவர் கூறினார்.

சேலாஸ் வியாபாரிகள் சங்கத் தலைவர் அப்துல் மஜீத், இதனால் கடைகளே அதிகம் பாதிக்கப்பட்டு இருப்பதாகத் தெரிவித்தார்.

"ஒரு தேநீர் தயாரித்து வாடிக்கையாளருக்குக் கொடுப்பதற்குள் அதில் ஈ விழுந்துவிடுகிறது. கடைகளில் எதையும் திறந்து வைக்க முடியவில்லை. பூச்சிகள் முடிக்குள் விழுகின்றன. மூக்கு மற்றும் வாய்க்குள் புகுந்துவிடுகின்றன. கண்களில் விழுந்தால் கண்கள் சிவந்து விடுகின்றன" என்றார்.

சில இடங்களில் மஞ்சள் நிறத்தில் கோடிக்கணக்கான முட்டைகள் காணப்படுவதாகவும், மருந்து தெளித்தும் புகை அடித்தும் அவற்றின் எண்ணிக்கை குறையவில்லை என்றும் அவர் கூறினார்.

நிலைமையின் தீவிரத்தை அரசுக்கு உணர்த்துவதற்காக ஜூலை 22ஆம் தேதி காலை 10 மணி முதல் நண்பகல் 12 மணி வரை கடையடைப்பு நடத்தப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.

கோடமலையைச் சேர்ந்த ஊர்க்காவல்படை காவலர் பத்மா, இரவில் விளக்கு போட்டால் கதவைத் திறக்க முடியாத அளவுக்கு பூச்சிகள் வருவதாகக் கூறினார்.

"முதலில் இந்தப் பூச்சிகள் பகலில் வரவில்லை. இப்போது பகலிலும் படையெடுக்கின்றன. கதவுகள், ஜன்னல்களை திறந்து வைக்க முடியவில்லை. துணிகளைத் துவைத்துக் காயப் போட்டால் அவற்றிலும் நூற்றுக்கணக்கான ஈக்கள் ஒட்டிக் கொள்கின்றன" என்றார்.

இவை எந்த வகை பூச்சிகள்?

இந்தப் பூச்சிகளை அடையாளம் காண, காட்டுயிர் மற்றும் இயற்கை பாதுகாப்பு அறக்கட்டளையைச் சேர்ந்த ஆய்வாளர்கள் கள ஆய்வு மேற்கொண்டனர்.

உயிரியலாளர் மொய்னுதீன், இவை சையாரிடே குடும்பத்தைச் சேர்ந்த கருஞ்சிறகு பூஞ்சை ஈக்கள் என்று விளக்கினார்.

"ஒரு பூச்சி ஒரே நேரத்தில் 100 முதல் 200 முட்டைகள் வரை இடும். 21 முதல் 28 நாட்கள் வரை இதன் வாழ்க்கைச் சுழற்சி இருக்கும். முதிர்ந்த பூச்சிகளை மட்டும் அழிப்பதில் பயனில்லை. அவற்றின் இனப்பெருக்கத்தையும் லார்வா எனப்படும் புழுப் பருவத்தில் இருப்பனவற்றையும் கட்டுப்படுத்த வேண்டும்" என்றார்.

இந்தப் பூச்சிகளின் மொத்த நீளம் சுமார் 2.8 மில்லிமீட்டர் மட்டுமே. காளான் வளர்க்கும் இடங்கள், கொய்மலர் சாகுபடிக் குடில்கள், ஈரமான மண், சேறும் சகதியும் நிறைந்த பகுதிகள் மற்றும் அழுகும் கரிமப் பொருட்களில் உள்ள பூஞ்சைகளை உண்டு இவை உயிர் வாழ்கின்றன.

புகை அடிப்பதன் மூலம் இவற்றை முழுமையாக அழிக்க முடியாது என்றும், இனப்பெருக்கம் நடைபெறும் ஈரமான இடங்களைக் கண்டறிந்து லார்வாக்களை அழிப்பதே முக்கியம் என்றும் மொய்னுதீன் அறிவுறுத்துகிறார்.

இப்போது திடீரென அதிகரித்தது ஏன்?

இந்த ஆண்டு நீலகிரியில் பலாப்பழம் மற்றும் நாவல் பழங்களின் விளைச்சல் அதிகமாக இருந்ததாகவும், கீழே விழுந்த பழங்கள் முறையாக அகற்றப்படாமல் அழுகியதால் பூஞ்சை ஈக்கள் அதிகரித்திருக்கலாம் என்றும் தென்னிந்திய ஐக்கிய தோட்ட உரிமையாளர்கள் சங்கத்தின் தேயிலை ஆராய்ச்சி அறக்கட்டளை ஆலோசகரும் பூச்சியியல் நிபுணருமான அசரியா பாபு கூறினார்.

அத்துடன், "சாணம், சமையலறைக் கழிவுகள் மற்றும் மட்கும் கரிமப் பொருட்களும் அவற்றின் இனப்பெருக்கத்துக்கு ஏற்ற சூழலை உருவாக்குவதாக" அசரியா பாபு குறிப்பிட்டார்.

மொய்னுதீன் கூற்றுப்படி, இந்த ஈக்களின் லார்வாக்களை இயற்கையாக உண்ணும் 'ரோவ் வண்டுகள்' எண்ணிக்கையில் குறைந்திருப்பதும் ஒரு காரணமாக இருக்கலாம். "தேயிலை மற்றும் காய்கறித் தோட்டங்களில் பயன்படுத்தப்படும் பூச்சிக் கொல்லிகள் இந்த வண்டுகளின் எண்ணிக்கையைப் பாதித்திருக்கலாம். ஆனால் இந்த திடீர் பரவலுக்கான உறுதிப்படுத்தப்பட்ட ஒரே காரணமாக அதைக் கூற முடியாது" என்பதையும் அவர் தெளிவுபடுத்தினார்.

கோவை சலீம் அலி பறவையியல் மற்றும் இயற்கை வரலாற்று மையத்தின் இயக்குநர் ரமேஷும், இவை சையாரிடே குடும்பத்தைச் சேர்ந்த பூஞ்சை ஈக்கள்தான் என்பதை உறுதிப்படுத்தினார்.

இவற்றை எவ்வாறு கட்டுப்படுத்தலாம்?

சுற்றுப்புறத்தைச் சுத்தமாக வைத்திருப்பது, அழுகிய பழங்கள் மற்றும் சமையலறைக் கழிவுகளை அகற்றுவது, ஈரமான மண்ணை உலர வைப்பது, இனப்பெருக்க இடங்களில் மருந்து தெளித்து லார்வாக்களை அழிப்பது ஆகியவை முக்கியம் என்று நிபுணர்கள் அறிவுறுத்துகின்றனர்.

அதோடு, "மஞ்சள் நிற ஒட்டுப் பொறிகள் மற்றும் ஒளிப் பொறிகளைப் பயன்படுத்தி முதிர்ந்த ஈக்களைப் பிடிக்கலாம். அதிக வெளிச்சமுள்ள விளக்குகளின் அருகே பூச்சிகளைத் திரட்டி, ஒரே இடத்தில் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளையும் மேற்கொள்ளலாம்."

பருவமழை நன்றாகப் பெய்து காலநிலை மாறும்போது இவற்றின் எண்ணிக்கை இயற்கையாகக் குறைய வாய்ப்புள்ளதாகக் கூறுகிறார் உபாசி தேயிலை ஆராய்ச்சி அறக்கட்டளை ஆலோசகரும், பூச்சியியல் வல்லுநருமான அசரியா பாபு . இருப்பினும், இனப்பெருக்கம் நடைபெறும் இடங்களைக் கண்டறிந்து அழிப்பதே நீண்டகாலத் தீர்வு என்றும் அசரியா பாபு வலியுறுத்தினார்.

அதேவேளையில், "இந்தப் பூச்சிகள் குறித்து மக்களை பீதியடையச் செய்யும் தவறான தகவல்கள் பரவுவதைத் தடுக்க வேண்டும், மாவட்ட நிர்வாகமும் உள்ளாட்சி அமைப்புகளும் இணைந்து அறிவியல்பூர்வமான கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்" என்றும் அசரியா பாபு குறிப்பிட்டார்.

நீலகிரி மாவட்ட ஆட்சியரிடம் இது தொடர்பாக எடுக்கப்படும் நடவடிக்கைகள் குறித்துக் கேள்வியெழுப்பி பிபிசி தமிழ் பலமுறை தொடர்பு கொண்டபோதும் பதில் கிடைக்கவில்லை.

சுகாதாரத்துறை எடுத்துள்ள நடவடிக்கைகள் குறித்து மாவட்ட ஆட்சியருடன் பேசிய பிறகு தகவல் வழங்கப்படும் என்று அவரது உதவியாளர் தெரிவித்த நிலையில், இதுவரை எந்தத் தகவலும் வழங்கப்படவில்லை.

உலிக்கல் பேரூராட்சித் தலைவர் ராதா, "பலவிதமான மருந்துகளைத் தெளித்தும், புகை அடித்தும் பார்த்தோம். அவை கட்டுப்படவில்லை. தற்போது சுகாதாரத் துறை அதிகாரிகள் முகாமிட்டு, அவர்களின் ஆலோசனைப்படி புதிய கிருமிநாசினிகளைத் தெளித்து வருகின்றனர். பேரூராட்சி முழுவதும் தூய்மைப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. விரைவில் நிலைமை கட்டுப்படுத்தப்படும் என்று நம்புகிறோம்," என்றார்.

- இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு