குழந்தையின்மைக்கு பெண் மட்டுமே காரணமா?அதிகம் கவனம் பெறாத ஆணின் பிரச்னைகள்

    • எழுதியவர், ஜிம் ரீட்
    • பதவி, சுகாதார செய்தியாளர்
  • பிரசுரிக்கப்பட்டது
  • வாசிக்கும் நேரம்: 8 நிமிடங்கள்

2020-ஆம் ஆண்டின் நடுப்பகுதியில், கோவிட்-19 பெருந்தோற்று உலகையே ஸ்தம்பிக்க வைத்தபோது, பிரிட்டனில் வசிக்கும் லூக்கும் அவரது மனைவியும் குழந்தை பெற்றுக்கொள்ள முடிவு செய்தனர்.

"எனது பதின்ம வயது முழுவதும், ஒரு தெளிவான செய்தி மட்டுமே வலியுறுத்தப்பட்டது. ஆணுறை இல்லாமல் உடலுறவு கொள்ளக் கூடாது, இல்லையெனில் ஒரு பெண் கர்ப்பமாகிவிடக்கூடும் என்பதுதான் அச்செய்தி. எனவே, நீங்கள் வளரும்போது, அனைத்தும் சுமூகமாக நடக்கும் என்று எதிர்பார்க்கிறீர்கள். அவ்வாறு நடக்காதபோது, என்ன செய்வது அல்லது யாரிடம் செல்வது என்று உங்களுக்குத் தெரிவதில்லை" என்று லூக் கூறுகிறார்.

18 மாதங்கள் முயன்றும் பலன் கிடைக்காததைத் தொடர்ந்து, அந்தத் தம்பதியினர் தங்கள் குடும்ப மருத்துவரை அணுகினர்.

கூடுதல் பரிசோதனைகளுக்காக ஒரு மருத்துவமனைக்கும் கருத்தரிப்பு மையத்திற்கும் செல்லுமாறு அவர்களுக்கு பரிந்துரைக்கப்பட்டது.

அதற்கடுத்த ஆண்டில், முழு கவனமும் தனது மனைவியின் மீதே இருந்ததாக லூக் கூறுகிறார்.

அனைத்து மருத்துவ சந்திப்புகளும் அவரது மனைவியின் பெயரிலேயே இருந்தன. அவர் ஆவணங்களை நிரப்ப வேண்டியிருந்தபோது கூட, அவரது தகவல்கள் ஏற்கனவே கோப்பில் இருந்தபோதிலும், அவர்கள் அவரது மனைவியையே தொடர்பு கொண்டனர்.

"இறுதியில், ஒட்டுமொத்த அமைப்பும் இது பெண்களுக்கான பிரச்னை என்ற அனுமானத்தின் அடிப்படையிலேயே இயங்குகிறது. ஆண்களின் தரப்பு முற்றிலும் புறக்கணிக்கப்படுகிறது" என்று அவர் கூறுகிறார்.

ஒரு வருடத்திற்கும் மேலாகக் கடந்து, ஒருமுறை செயற்கை கருத்தரிப்பு (IVF) மூலமான முயற்சி தோல்வியடைந்த பிறகே, லூக்கின் விந்தணுவில் ஏதேனும் பிரச்னை இருக்கலாம் என்று அவருக்குத் தெரிவிக்கப்பட்டது.

"இதை அவர்கள் இப்போதுதான் என்னிடம் சொல்கிறார்களா? என்று நான் யோசித்தேன். இந்தச் செயல்முறையில் என்னை ஒரு வெறும் பார்வையாளராக நடத்துவதற்குப் பதிலாக, எனது எனது உடல்நலம் குறித்த சில அம்சங்களை மிக முன்னதாகவே பரிசோதித்திருக்கலாம்" என்று அவர் விவரிக்கிறார்.

தோராயமாக ஆறு தம்பதிகளில் ஒருவரை மலட்டுத்தன்மை பாதிக்கிறது, இவற்றில் பாதி பேருக்கு ஆண்களின் பிரச்னைகளே காரணமாக இருக்கின்றன.

இது தனித்தோ அல்லது பெண்களுக்கான காரணங்களுடன் இணைந்தோ இருக்கலாம்.

பிரிட்டனின் தேசிய சுகாதாரம் மற்றும் பராமரிப்புக்கான சிறந்த நிறுவனத்தின் சமீபத்திய மருத்துவ வழிகாட்டுதல்களின்படி, 12 மாதங்கள் பாதுகாப்பற்ற உடலுறவுக்குப் பிறகும் கருத்தரிப்பதில் சிரமம் உள்ள தம்பதியினர், ஒரு குழுவாக ஒன்றிணைத்து மதிப்பிடப்பட வேண்டும். பெண்களுக்கும் இணையாக ஆண்களுக்கும் கூடுதல் பரிசோதனைகள் வழங்கப்பட வேண்டும்.

இருப்பினும், கருவுறுதல் தொடர்பான நோயைக் கண்டறிதல், சிகிச்சை மற்றும் விவாதங்கள் என்று வரும்போது ஆண்கள் பெரும்பாலும் புறக்கணிக்கப்படுகிறார்கள் என்று நிபுணர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

"தற்செயலாக நடப்பதாக இருந்தாலும் கூட, இவ்வாறு புறக்கணிக்கப்படலாம். சுகாதாரப் பராமரிப்பு, கருத்தரிப்பு மையங்கள் மற்றும் ஆலோசனைகள் போன்ற பல்வேறு சூழல்களில் இது நடப்பதாக ஆண்கள் எங்களிடம் கூறுகிறார்கள்" என்று லண்டன் பல்கலைக்கழகக் கல்லூரியின் பேராசிரியர் போலா கிரேஸ் கூறுகிறார்.

கிரேஸ் தலைமையிலான 2019ஆம் ஆண்டு ஆய்வு ஒன்று, பல ஆண்கள் கருவுறுதல் செயல்பாட்டில் இன்னும் தீவிரமாகப் பங்கேற்க விரும்பினாலும், தங்கள் கருத்துகள் கேட்கப்படவில்லை என்று அடிக்கடி உணர்வதாகத் தெரிவித்தது.

இதன் விளைவு, பெரும்பாலும் தங்களைத் தாங்களே பலப்படுத்திக் கொள்ளும் ஒரு சுழற்சியாக மாறுகிறது என்று அவர் குறிப்பிடுகிறார்.

சில கருத்தரிப்புச் சேவைகள் ஆண்களைச் சேர்ப்பதில்லை. எனவே அவர்கள் இதில் குறைவாகவே ஈடுபடுகிறார்கள், இது அவர்களுக்கு இதில் ஆர்வம் இல்லை என்ற கருத்தையே மீண்டும் வலுப்படுத்துகிறது.

"ஆண்கள் புறக்கணிக்கப்படும் ஒரு சுழற்சியை நாம் உருவாக்கியுள்ளோம், ஆனால் பின்னர் அவர்கள் பங்கேற்கவில்லை என்றும் அவர்கள் மீதே பழி சுமத்தப்படுகிறது" என்று அவர் கூறுகிறார்.

இது ஆண்களுக்கு மட்டுமல்லாமல், "உணர்ச்சி மேலாண்மை, திட்டமிடல், கவலை மற்றும் முடிவெடுத்தல்" ஆகியவற்றின் பெரும்பகுதியைச் சுமக்க வேண்டியிருக்கும் பெண்களுக்கும் உண்மையான பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடும் என்றும் அவர் குறிப்பிடுகிறார்.

இதன் காரணமாகப் பிரச்னைகள் தாமதமாகக் கண்டறியப்படலாம், சோதனைகள் மற்றும் சிகிச்சைகள் மிகவும் கடினமானதாக மாறலாம், தம்பதியினர் கருத்தரிப்புச் செயல்முறையில் மிகவும் கடினமான மற்றும் செலவுமிக்க வழியை எதிர்கொள்ள நேரிடலாம்.

எனவே, ஒரு ஆணுக்குப் பிரச்னை இருக்கலாம் என்று தெரிவிக்கப்படும் போது, இந்த அமைப்பு எவ்வாறு கூடுதல் ஆதரவை வழங்க முடியும்? ஆண்கள் கருவுறுதல் பற்றி இன்னும் வெளிப்படையாகப் பேசுவதற்கு வேறு என்ன செய்ய முடியும்?

"அமைப்பு ரீதியாகப் புறக்கணிக்கப்படுதல்"

1978-ஆம் ஆண்டில் செயற்கை கருத்தரித்தல் முறை (IVF) மூலமாக முதல் குழந்தை பிறந்தது முதலே, ஓரளவு உயிரியல் காரணங்களுக்காக கருத்தரிப்புச் சிகிச்சைகள் பெரும்பாலும் பெண்களையே மையமாகக் கொண்டுள்ளன.

செயற்கை கருத்தரித்தல் முறையில் முட்டைகளை உற்பத்தி செய்ய சினைப்பைகள் தூண்டப்படுகின்றன. அவை மீட்டெடுக்கப்பட்டு, ஆய்வகத்தில் கருவுறச் செய்யப்படுகின்றன. பின்னர் அதன் விளைவாக உருவாகும் கருவை கருப்பையில் செலுத்துகிறார்கள்.

இதற்கு நேர்மாறாக, பெரும்பாலான ஆண்கள் வெறுமனே விந்து மாதிரியை வழங்கிவிட்டு, அந்தச் செயல்முறை அதன் போக்கில் நடப்பதற்காகக் காத்திருக்கிறார்கள்.

ஆண்ட்ராலஜி (ஆண்களின் இனப்பெருக்க ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தும் ஒரு மருத்துவ சிறப்புப் பிரிவு) பேராசிரியரான ஆலன் பேசி இதுகுறித்துக் கூறுகையில், இந்த சமநிலையின்மை கருத்தரிப்புப் பராமரிப்பின் பரிணாம வளர்ச்சியை வடிவமைத்துள்ளது என்கிறார்.

கருவுறுதல் பிரிவுகளும் மருத்துவ நிலையங்களும் பொதுவாக மகளிர் நல மருத்துவர்களால் நடத்தப்படுகின்றன என்றும், அவர்களின் பயிற்சி பெண்களின் இனப்பெருக்க ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துகிறது என்றும், அதே சமயம் ஆண்களின் இனப்பெருக்க திறன் பெரும்பாலும் ஒரு இரண்டாம் நிலை விஷயமாகவே கருதப்படுகிறது என்றும் அவர் சுட்டிக்காட்டுகிறார்.

"இந்தத் துறையில் ஆர்வம் கொண்ட சில சிறந்த மகப்பேறு மருத்துவர்கள் நல்ல முறையில் பணியாற்றுகிறார்கள் என்பது உண்மைதான், ஆனால் ஆரம்ப சுகாதார நிலையங்கள் அல்லது சிறப்புப் பராமரிப்பு கிளினிக்குகளில் (இரண்டாம் அல்லது மூன்றாம் நிலை), ஆண்கள் இரண்டாம் நிலைக்குத் தள்ளப்படலாம்"என்றும் அவர் குறிப்பிடுகிறார்.

ஒரு கட்டத்தில், லூக் விரைப்பை அல்ட்ராசவுண்ட் பரிசோதனை செய்து கொண்டார். ஆனால் ஒரு வருடத்திற்கும் மேலாக எந்தப் பதிலும் வரவில்லை. பின்னர் அவர் மருத்துவமனைக்கு அதுபற்றி நினைவூட்டினார்.

ஒரு பரிசோதனையில் அவருக்கு வெரிகோசீல் (விந்தணுவின் தரத்தைப் பாதிக்கக்கூடிய விரைப்பையில் உள்ள ஒரு விரிவடைந்த நரம்பு) இருப்பது தெரியவந்தது. அவர் அதற்கான சிகிச்சையைப் பெற்றார், ஆனால் அந்தத் தம்பதியரின் கருவுறுதல் பிரச்னைகள் தொடர்ந்தன.

வாழ்க்கை முறை மற்றும் உணவு முறை குறித்த விரிவான, அவருக்கென பிரத்யேகமாக உருவாக்கப்பட்ட ஆலோசனையை லூக் பெறுவதற்கு மேலும் ஒன்பது மாதங்கள் தேவைப்பட்டன. அவர் ஒரு தனிப்பட்ட இனப்பெருக்க மருத்துவ நிபுணரிடம் அணுகிக் கலந்தாலோசிக்கப் பணம் செலுத்த வேண்டியிருந்தது.

"இது மிகவும் கடினமான மற்றும் தனிமையான ஒரு அனுபவமாக இருந்தது" என்று கூறும் லூக், "ஆண்களுக்கான காரணி இதில் உள்ளது என்பதைக் கண்டறியும்போது ஒரு அதிர்ச்சி ஏற்படுகிறது, இது ஆண்மை பற்றிய அனைத்து வகையான பொதுவான கருத்துகளுடனும் முரண்படுகிறது. ஆனால் அதன் பிறகு இரண்டாவது நிலை என்னவென்றால், இந்த அமைப்பால் முற்றிலும் புறக்கணிக்கப்பட்டதாகவும் கவனிக்கப்படாமல் விடப்பட்டதாகவும் உணர்வதுதான்"என்கிறார்.

தற்போது, இந்தத் தம்பதியினர் ஐ.சி.எஸ்.ஐ தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி மற்றொரு செயற்கை கருத்தரித்தல் சுழற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

இதில் ஆய்வகத் தட்டில் ஆயிரக்கணக்கான விந்தணுக்களுடன் கருமுட்டையை சேர்ப்பதன் மூலம் கருவுறுதலை அனுமதிப்பதற்குப் பதிலாக, ஒரு அதிநவீன ஊசி மூலம் ஒரே ஒரு விந்தணு நேரடியாக முட்டைக்குள் செலுத்தப்படுகிறது.

"பிரச்னையைப் புறக்கணிக்கும் நிலை"

நிலைமை படிப்படியாக மாறத் தொடங்கியுள்ளதாக நிபுணர்கள் கூறுகிறார்கள்.

"விஷயங்கள் சரியான திசையை நோக்கி நகர்கின்றன, ஆனால் நாம் இன்னும் மிகவும் பின்தங்கியிருக்கிறோம்" என்று லண்டன் யுனிவர்சிட்டி காலேஜ் மருத்துவமனைகள் மற்றும் லண்டனில் உள்ள கிளீவ்லேண்ட் கிளினிக்கின் சிறுநீரக அறுவை சிகிச்சை ஆலோசகரான பேராசிரியர் ஹுசைன் அல்நஜ்ஜார் கூறுகிறார்.

உதாரணமாக, ஆரம்ப கட்ட விந்தணு பகுப்பாய்வு ஏதேனும் பிரச்னை இருப்பதை உணர்த்தினால், பெண்கள் மருத்துவரை அணுகுவதற்கு முன்பாகவே ஆண்கள் ஒரு நிபுணரைப் பார்ப்பது இப்போது மிகவும் சாதாரணமாகி வருகிறது.

"விஷயங்கள் மாறுகின்றன என நான் கூறுவதன் அர்த்தம் இதுதான், ஆனால் அது மெதுவாக நடக்கிறது. ஒட்டுமொத்தமாகப் பார்க்கும்போது, மலட்டுத்தன்மை என்று வரும்போது தங்களை முதலில் பரிசோதனைக்கு உட்படுத்திக் கொள்வதில் இன்னும் பெண்களே மிக அதிக எண்ணிக்கையில் இருக்கிறார்கள்" என்று அவர் குறிப்பிடுகிறார்.

பிரிட்டனின் நார்த் யார்க்ஷையரைச் சேர்ந்த 34 வயதான ஜேம்ஸ் போன்ற ஆண்களுக்கு, இந்த மெதுவான மாற்றமே அவர்களின் அனுபவத்தை வடிவமைத்துள்ளது.

குழந்தை பெற்றுக் கொள்ளப் போராடிய பிறகு, ஜேம்ஸ் தான் ""பிரச்னையை புறக்கணிக்கும் நிலை"" என்று விவரிக்கும் ஒரு நிலையை எதிர்கொண்டார்.

அவரது துணைவி தேவையான அனைத்து பரிசோதனைகளையும் செய்து கொண்டிருந்தபோது, இவர் பல மாதங்களாக எதற்கும் செவிசாய்க்காமல் யதார்த்தத்தைத் தவிர்க்க முயன்றார். "அந்த நேரத்தைப் பற்றியும், இழந்த நேரத்தைப் பற்றியும் நான் ஒவ்வொரு நாளும் நினைக்கிறேன்" என்று அவர் கூறுகிறார்.

தனது விந்தணு பகுப்பாய்வு முடிவுகள் இறுதியாக வந்தபோது, ஜேம்ஸ் வீட்டிலிருந்து வெகு தொலைவில் வேலை செய்து கொண்டிருந்தார்.

அவரது விந்தணுக்கள் "பலவீனமாகவும், மெதுவாக நகரக்கூடியதாகவும், சிதைந்த வடிவத்திலும்" இருப்பதாக அவரிடம் தெரிவிக்கப்பட்டது, இயற்கையாகக் குழந்தை பெற்றுக் கொள்வதில் அவருக்குச் சிரமம் இருக்கும் என்பதை அவர் பின்னர் அறிந்துகொண்டார்.

அன்று வீட்டிற்குத் திரும்புவதற்கான கிட்டத்தட்ட மூன்று மணி நேரப் பயணம் "மிகவும் வேதனையானதாகவும், என்ன நடக்கிறது என்று புரியாமலும்" இருந்தது என்கிறார்.

அவரது நோயைக் கண்டறிவதில் தாமதங்கள் ஏற்பட்டன. அவர் ஒரு முழுமையான உடல் பரிசோதனை மற்றும் மேம்பட்ட ஹார்மோன் பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவதற்கு முன்பு மேலும் இரண்டு ஆண்டுகள் கடந்தன. இதற்கு ஒரு தனியார் சிறுநீரக மருத்துவரை அணுகி ஆலோசனை பெற வேண்டியிருந்தது.

பல வருட முயற்சிகளுக்கும், பலமுறை மேற்கொள்ளப்பட்ட செயற்கைக் கருத்தரிப்புச் சுழற்சிகளுக்கும் பிறகும், அந்தத் தம்பதியரின் கருவுறுதல் சிகிச்சை தோல்வியடைந்தது.

"நிபந்தனையற்ற முறையில் நீங்கள் நேசிக்கும் ஒருவரின் துணையாக நீங்கள் இருக்கிறீர்கள், ஆனால் அவர்களின் துன்பத்திற்கு நீங்களே காரணம் என்று உங்களைப் பார்க்கிறீர்கள். அவர்கள் குழந்தை பெற முடியாததற்குக் காரணம் நீங்கள்தான் என்று நீங்கள் உணர்கிறீர்கள்" என்று அவர் அதனை விளக்குகிறார்.

ஆண்களின் மலட்டுத்தன்மை பெரும்பாலும் வீரியம் மற்றும் ஆண்மை பற்றிய கருத்துகளுடன் குழப்பப்படுவதால், சில ஆண்களுக்கு இந்தப் பிரச்னையை ஒப்புக்கொள்வதோ அல்லது விவாதிப்பதோ கடினமாகிறது.

ஒரு விருந்தில், "பெண்கள் அனைவரும் ஒரு பக்கத்தில் அமர்ந்து செயற்கை கருத்தரித்தல் பற்றிப் பேசிக் கொண்டிருந்ததையும், ஆண்கள் அனைவரும் மறுபக்கத்தில் கால்பந்து விளையாட்டைப் பற்றிப் பேசிக் கொண்டிருந்ததையும்" பேராசிரியர் பேசி நினைவு கூர்கிறார்.

ஜேம்ஸ் தனது கருவுறுதல் பிரச்னைகளைத் தனது ஆண்மைக்கு விடுக்கப்பட்ட ஒரு சவாலாகக் கருதவில்லை. ஆனால் இப்பிரச்னையைச் சுற்றியுள்ள களங்கம், அந்த நேரத்தில் அவருக்கு ஆதரவு கிடைப்பதைக் கடினமாக்கியது.

"நீங்களும் உங்கள் துணையும் மட்டுமே இதை எதிர்கொள்கிறீர்கள், எனவே நீங்கள் ஒரு தனித் தீவில் இருப்பது போல் உணர்கிறீர்கள், உங்களைப் போல் வேறு யாரும் இல்லாதது போல் தோன்றுகிறது. யாரிடம் செல்வது, யாரிடம் பேசுவது அல்லது என்ன சொல்வது என்று உங்களுக்குத் தெரியாது" என்று அவர் கூறுகிறார்.

பிரிட்டனின் கருத்தரிப்பு ஒழுங்குமுறை அமைப்பான ஹெச்.எஃப்.இ.ஏ, பெண்களுடன் ஒப்பிடும்போது ஆண்களுக்கான ஆதரவுக் குழுக்கள் இணையவழியிலும் சரி, நேரடியிலும் சரி மிகவும் குறைவாகவே உள்ளதாகக் குறிப்பிடுகிறது. இருப்பினும், இந்த நிலை மாறத் தொடங்குவதற்கான அறிகுறிகள் தென்படுகின்றன.

43 வயதான ஷான் கிரீன்வே என்பவருக்கு 2018-ஆம் ஆண்டில் அசோஸ்பெர்மியா இருப்பது கண்டறியப்பட்டது, இது விந்து திரவத்தில் விந்தணுக்கள் இல்லாத ஒரு நிலையாகும்.

இதற்கான சரியான காரணம் தெரியவில்லை என்றாலும், அவரது பதின்ம வயதில் அவர் பொன்னுக்கு வீங்கி நோயால் பாதிக்கப்பட்டிருந்தார், இந்த வைரஸ் ஆண்களின் மலட்டுத்தன்மையுடன் தொடர்புடையது எனக் கருதப்படுகிறது.

அவரும் அவரது மனைவியும் இறுதியில் விந்தணு தானம் மூலம் குழந்தைகளைப் பெற்றெடுத்தனர். ஆனால் அந்த அனுபவத்தின் பெரும்பகுதியைத் தான் தனியாகவே எதிர்கொண்டதாக ஷான் கூறுகிறார்.

"அங்கு எந்தவொரு ஆதரவும் இருக்கவில்லை, யாரும் இதைப் பற்றித் தனிப்பட்ட கோணத்தில் பேசவில்லை, எனவே எனது கதையைப் பகிர நான் முடிவு செய்தேன்" என்று அவர் கூறுகிறார்.

தனது நண்பருடன் இணைந்து, 40 வயதான சியாரன் ஹானிங்டன், 'ஆண்களுக்கான பாட்காஸ்ட்' மற்றும் கருவுறுதல் பிரச்னை உள்ள ஆண்களுக்கான ஒரு ஆதரவு வலையமைப்பை உருவாக்கினார், இதில் வாட்ஸ்அப் குழுக்கள் மற்றும் நேரடி சந்திப்புகள் போன்றவை அடங்கும்.

ஆண் மலட்டுத்தன்மை குறித்த தற்போதைய விவாதத்தின் நிலையை, சுமார் ஒரு தசாப்தத்திற்கு முந்தைய மனநலம் குறித்த விவாதங்களின் நிலையுடன் அவர்கள் ஒப்பிடுகிறார்கள்.

இது இன்னும் ஒரு பேசத் தயங்கக்கூடிய விஷயமாகவே கருதப்படுகிறது, ஆனால் மெதுவாக இது மிகவும் வெளிப்படையாகப் பேசப்படும் ஒரு தலைப்பாக மாறி வருகிறது.

"சமூகத்தில் மிகவும் ஆழமாக வேரூன்றிய அவப்பெயர் உள்ளது, ஆனால் துரதிர்ஷ்டவசமாக, கட்டாயப்படுத்தப்படும் வரை நீங்கள் கவனம் செலுத்தாத பிரச்னைகளில் இதுவும் ஒன்று" என்று 2012-ஆம் ஆண்டில் குழந்தையின்மை பிரச்னை இருப்பது கண்டறியப்பட்ட சியாரன் கூறுகிறார்.

தனது சூழ்நிலையைக் கட்டுப்படுத்தத் தொடங்கி, தனது வாழ்க்கை முறையை மாற்றியமைக்கத் தனக்கு இரண்டு ஆண்டுகள் ஆயின என்று சியாரன் விளக்குகிறார்.

அவர் தனது உணவு முறையை மேம்படுத்தினார், மது அருந்துவதைத் தவிர்த்தார், மற்றும் உடற்பயிற்சி முறைகளை மாற்றியமைத்தார்.

ஏழு முறை செயற்கைக் கருத்தரிப்பு சிகிச்சை மற்றும் இரண்டு கருச்சிதைவுகளுக்குப் பிறகு, அவரது மனைவி ஜெனிஃபர் இறுதியாக ஒரு ஆண் மற்றும் ஒரு பெண் குழந்தையைப் பெற்றெடுத்தார்.

மன அழுத்தம், தூக்கமின்மை, புகைபிடித்தல், மது அருந்துதல் மற்றும் உணவு முறை ஆகியவை விந்தணுவின் தரத்தைப் பாதிக்கலாம் என்று ஆய்வுகள் சுட்டிக்காட்டுகின்றன.

இருப்பினும், குறுகிய காலத்திலான சிறிய மாற்றங்கள் பெரிய அளவில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்த வாய்ப்பில்லை என்று பேராசிரியர் பேசி குறிப்பிடுகிறார்.

"வாழ்க்கை முறையில் கொண்டு வரும் எந்தவொரு மாற்றமும் தொடர்ந்து கடைப்பிடிக்கப்பட வேண்டும். ஒட்டுமொத்த விந்தணு உற்பத்தி செயல்முறையும் மூன்று மாதங்கள் எடுக்கும். எனவே, நீங்கள் வெள்ளிக்கிழமை இரவு மது அருந்துவதை நிறுத்தினால், திங்கள்கிழமை காலையிலேயே முன்னேற்றத்தை எதிர்பார்க்க முடியாது" என்று அவர் கூறுகிறார்.

அனைத்து ஆண்களும் இந்த அறிவுரையைப் பின்பற்றுவதில்லை.

புகைப்பிடித்தல், மது அருந்துதல் மற்றும் போதைப்பொருள் போன்ற பழக்கங்கள் தங்களுக்குக் குழந்தை பிறப்பதற்கான வாய்ப்புகளைப் பாதிக்கக்கூடும் என்று தெரிந்திருந்தும், அவற்றை கைவிடத் தங்கள் துணைவர்கள் மறுத்துவிடுவதாக சில பெண்கள் தன்னிடம் கூறுவதாக ஷான் சொல்கிறார். "

ஆண்களிடம் ஒருபோதும் பேசியதில்லை, அது வேறு விஷயம்" என்றும் அவர் பகிர்ந்து கொண்டார்.

"சுகாதார அமைப்பு மேம்பட வேண்டும் என்பதை நாம் அறிவோம், ஆனால் இறுதியில் இது இருதரப்பு சம்பந்தப்பட்ட ஒரு விஷயம். சில ஆண்களும் சில பெண்களும் கூட மாற வேண்டியுள்ளது" என்று அவர் குறிப்பிடுகிறார்.

டண்டீ பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்களால் 2022-ஆம் ஆண்டு நடத்தப்பட்ட ஒரு சிறிய ஆய்வு, ஐரோப்பாவில் உள்ள ஆறில் ஒரு கருத்தரிப்பு நிபுணர், ஆண்களை விந்தணு பகுப்பாய்வு செய்ய ஒப்புக்கொள்ள வைப்பதில் தொடர்ந்து சிரமங்களை எதிர்கொள்வதை வெளிப்படுத்தியது.

உலகளவில், சில ஆண்கள் விந்து மாதிரியை வழங்குவதில் சங்கடமாக உணர்ந்தனர், அதே நேரத்தில் மற்றவர்கள் தங்களது பாலியல் வாழ்க்கை சரியாக இருப்பதாலோ அல்லது ஏற்கனவே தங்களுக்குக் குழந்தைகள் இருந்ததாலோ தங்களுக்கு எந்தவொரு கருவுறுதல் பிரச்னையும் இல்லை என்று தாங்களாகவே நினைத்துக் கொண்டனர்.

மாற்றத்தின் அறிகுறிகள்

மனப்போக்கு மாறத் தொடங்கியுள்ளதற்கான அறிகுறிகள் தென்படுகின்றன.

மோசமான உணவு முறை, புகைபிடித்தல் அல்லது ஸ்டீராய்டு பயன்பாடு போன்ற பழக்கவழக்கங்களால் ஆண்களின் இனப்பெருக்கத் திறனுக்கு ஏற்படும் அபாயங்கள் குறித்து, தனிநபர், சமூகம் மற்றும் சுகாதாரக் கல்வி பாடத்திட்டங்கள் இப்போது அதிகளவில் விளக்குகின்றன.

இத்துறையைச் சேர்ந்த மருத்துவ நிபுணர்களும் இந்த மாற்றத்தைக் கவனித்து வருவதாகவும், ஒரு குழந்தை பெறுவதற்கான வாய்ப்பையும் தாண்டி வேறு பல காரணங்களுக்காகவும் இந்த அம்சம் முக்கியமானது என்றும் சுட்டிக்காட்டுகின்றனர்.

பிரிட்டிஷ் சிறுநீரக அறுவை சிகிச்சை நிபுணர்கள் சங்கத்தின் செய்தித் தொடர்பாளராகவும் செயல்படும் பேராசிரியர் அல்நஜ்ஜார் கருத்துப்படி, உடல் பருமன் மற்றும் புகைபிடித்தல் முதல் ஹார்மோன் சமநிலையின்மை வரையிலான பரந்த அளவிலான ஆரோக்கியப் பிரச்னைகளின் குறிகாட்டியாக ஆண்களின் மலட்டுத்தன்மை இருக்கக்கூடும் என்பதற்கான ஆதாரங்கள் அதிகரித்து வருகின்றன.

"ஆரோக்கியமான ஆண்கள் சிறந்த இனப்பெருக்க திறனை கொண்டிருக்க முனைகிறார்கள். அசாதாரணமான விந்தணு பகுப்பாய்வு என்பது சில நேரங்களில் மிகவும் முழுமையான மருத்துவ பரிசோதனை தேவைப்படுகிறது என்பதற்கான முதல் அறிகுறியாக இருக்கலாம்" என்று அவர் கூறுகிறார்.

"அதனால் தான் ஆண் மலட்டுத்தன்மை என்பதை வெறுமனே கர்ப்பம் தொடர்பான ஒரு பிரச்னையாக மட்டுமே பார்க்கப்படக் கூடாது. அது ஆண்களின் ஒட்டுமொத்த ஆரோக்கியம் சார்ந்த ஒரு குறிப்பிடத்தக்கப் பிரச்னையாகவும், முன்கூட்டியே தலையிட்டுச் சிகிச்சை அளிப்பதற்கான ஒரு வாய்ப்பாகவும் அங்கீகரிக்கப்பட வேண்டும் என்று நான் நம்புகிறேன்" என்று அவர் குறிப்பிட்டார்.

மலட்டுத்தன்மையால் வாழ்க்கையில் பாதிப்பைச் சந்தித்த ஜேம்ஸ் போன்ற ஆண்களுக்கு, இது போன்ற முன்னேற்றங்கள் எவ்வளவு சீக்கிரம் வந்தாலும் அது போதுமானதாக இருக்காது.

"சமூகத்தில் இன்னும் நீடிக்கும் இந்த அவப்பெயரை நாம் எதற்கும் செவிசாய்க்காமல் யதார்த்தத்தைத் தவிர்ப்பதன் மூலமாகவோ அல்லது பிரச்னையைப் புறக்கணிப்பதன் மூலமோ மாற்றிவிட முடியாது, மாறாக அதை வெளிப்படையாகக் கொண்டு வருவதன் மூலமே மாற்ற முடியும்" என்று கூறும் ஜேம்ஸ்,

"நாம் எந்தளவுக்கு வெளிப்படையாக இருக்கிறோமோ, அந்தளவுக்குக் குறைவான மக்களே இதை ஒரு தடைசெய்யப்பட்ட விஷயமாகக் கருதுவார்கள் அல்லது இதைப் பற்றிப் பேசுவதால் ஒரு ஆணின் ஆண்மை குறைந்துவிடும் என்று நினைப்பார்கள்" என்கிறார்.

- இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு