'4 மாதங்களில் ஆயிரத்துக்கும் அதிகமான தொல்லியல் பொருட்கள்' - ரோமானியர்களின் வணிக மையமாகத் திகழ்ந்த கோவை வெள்ளலூர்

  • பிரசுரிக்கப்பட்டது
  • வாசிக்கும் நேரம்: 7 நிமிடங்கள்

கோவை மாவட்டத்தில் உள்ள வெள்ளலூரில் நான்கு மாதங்களாக நடைபெற்று வரும் அகழ்வாராய்ச்சியில் கி.மு. முதல் நூற்றாண்டிலிருந்து கி.பி. 12 ஆம் நூற்றாண்டு வரையிலான ஆயிரத்துக்கும் அதிகமான பொருட்கள் கிடைத்துள்ளன. அவை பொதுமக்களின் பார்வைக்கு வைக்கப்பட்டன.

ஏற்கெனவே வெள்ளலூரில் ஆயிரத்துக்கும் அதிகமான ரோமானிய நாணயங்கள் கிடைத்துள்ள நிலையில், தற்போது கிடைத்துள்ள பொருட்கள் இந்த அகழ்வாராய்ச்சியின் முக்கியத்துவத்தை உணர்த்துவதாக உள்ளன.

மேற்கு மற்றும் கிழக்குக் கடற்கரைப் பகுதிகளை இணைத்த வணிகப்பாதையான ராசகேசரிப் பெருவழியில் அமைந்திருந்ததால் வெள்ளலூர் வணிக மையமாகத் திகழ்ந்ததை, இங்கே கிடைத்துள்ள பொருட்கள் உறுதி செய்திருப்பதாக தொல்லியல் அலுவலர் சுரேஷ் பிபிசியிடம் தெரிவித்தார்.

வெள்ளலூரில் கிடைத்த கல்மணிகள், காங்கேயத்தில் இயற்கையாகக் கிடைத்த கல்லில் கொடுமணலில் செய்யப்பட்டவை என்று கூறுகிறார் மூத்த தொல்லியல் ஆய்வாளரும், ஓய்வு பெற்ற தொல்லியல் துறை இணை இயக்குநருமான பூங்குன்றன்.

வேறு எங்கும் கிடைக்காத அளவுக்கு வெள்ளலூரில் ரோமானிய நாணயங்கள் கிடைத்திருப்பதால், ரோமானியர்கள் வணிகம் செய்ய வந்தபோது அங்கு தங்கியிருக்க குடியிருப்பு அமைத்திருந்திருக்கலாம் என்கிறார் வரலாற்று ஆய்வாளர் சி.ஆர்.இளங்கோவன்.

ஆனால் இதுவரை நடந்துள்ள அகழ்வாராய்ச்சிகளில் அதற்கான ஆதாரங்கள் எதுவும் கிடைக்கவில்லை என்கின்றனர் தொல்லியல் துறையினர்.

காட்சிக்கு வைக்கப்பட்ட பொருட்கள்

வரும் அக்டோபர் மாதம் வரை, இந்த அகழ்வாராய்ச்சி தொடரவுள்ளது. கடந்த மூன்றரை மாதங்களாக வெள்ளலூரில் மேற்கொள்ளப்படும் அகழ்வாராய்ச்சிகளில் கிடைத்த பொருட்களை, பொதுமக்கள் பார்வையிடும் வகையில் கடந்த ஜூலை 19 ஞாயிறன்று தமிழ்நாடு தொல்லியல் துறை காட்சிப்படுத்தியிருந்தது.

வெள்ளலூரில் அகழ்வாராய்ச்சி நடக்கும் இடங்களில் ஒன்றான தேனீஸ்வரர் கோவில் பகுதிக்கு அருகிலேயே நடந்த இந்த தொல்லியல் பொருள் கண்காட்சியை ஆயிரத்துக்கும் அதிகமான மக்கள் வந்து பார்வையிட்டுச் சென்றனர்.

சங்கு மற்றும் கண்ணாடியால் ஆன வளையல்கள், இரும்புக்கருவிகள், பல்வேறு வகையான மட்பாண்டங்கள், மணிகள், சுடுமண்ணால் ஆன நூற்புக்கருவிகள் (spindle whorls) மற்றும் விளையாட்டு வில்லைகள் (hopscotch markers) ஆகியவை பொதுமக்களின் பார்வைக்கு வைக்கப்பட்டிருந்தன. வெள்ளலூரில் இந்த இடம் உள்பட 4 இடங்களில் அகழ்வாராய்ச்சி நடந்து வருவதாக தொல்லியல் துறையினர் விளக்கினர்.

நொய்யல் ஆற்றின் தென்கரையில் அமைந்துள்ள வெள்ளலூரில் அழகு நாச்சியம்மன் கோவில் பகுதியில் துவங்கி, வெள்ளலூர் வாரச்சந்தை நடக்கும் உப்பிலியார் திட்டு வரையிலும் 4 இடங்களை தொல்லியல் துறை அடையாளம் கண்டு அங்கு அகழ்வாராய்ச்சிகளை மேற்கொண்டு வருகிறது.

பிபிசியிடம் பேசிய தமிழக அரசின் தொல்லியல் துறையின் கோவை தொல்லியல் அலுவலர் சுரேஷ், ''வெள்ளலுாரில் மொத்தம் 100 ஏக்கர் பரப்பளவில் சங்க காலத்துக்கு முன்பு மக்கள் வாழ்ந்ததற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளன. ஆனால் அவற்றில் பெரும்பாலான பகுதிகள், குடியிருப்புகளாக, கட்டடங்களாக மாறிவிட்டன. அதை விடுத்து மீதமுள்ள பகுதிகளில்தான் அகழ்வாராய்ச்சியைத் தொடங்கியுள்ளோம்.'' என்றார்.

தேனீஸ்வரர் கோவில் அருகிலுள்ள ஒரு தனியார் இடம், கரிவரதராஜப் பெருமாள் கோவில் அருகிலுள்ள தனியார் தென்னந்தோப்பு, உப்பிலியார் திட்டு பகுதியிலுள்ள அரசு நத்தம் புறம்போக்கு மற்றும் ஆதி திராவிடர் நலத்துறை பள்ளி விடுதிக்கு அருகில் என 4 இடங்களில் 5 மீட்டருக்கு 5 மீட்டர் என்ற அளவில் 2 மீட்டர் ஆழத்தில் 11 குழிகளை தொல்லியல் துறையினர் இதுவரை தோண்டியுள்ளனர்.

''அகழ்வாராய்ச்சிகள் நடக்கும் பிற பகுதிகளை ஒப்பிட்டால் வெள்ளலூரில் குறைவான வகையுள்ள (varieties) பொருட்களே கிடைத்துள்ளன. ஆனால் எண்ணிக்கை மிக அதிகம். அதாவது 4 மாதங்களுக்குள் ஆயிரத்துக்கும் அதிகமான பொருட்கள் கிடைத்திருப்பதுதான் ஆச்சர்யமூட்டும் தகவலாக உள்ளது. கி.மு. முதல் நூற்றாண்டிலிருந்து கி.பி. மூன்றாம் நூற்றாண்டு வரை, கி.பி.ஐந்தாம் நூற்றாண்டு முதல் கி.பி.பத்தாம் நூற்றாண்டு வரை, கி.பி.12 ஆம் நூற்றாண்டு முதல் ஆங்கிலேயர் காலம் வரை என, 3 காலகட்டங்களைச் சேர்ந்த பொருட்களாக இவை அடையாளம் காணப்பட்டுள்ளன.'' என்றார் தொல்லியல் அலுவலர் சுரேஷ்.

இந்தப் பொருட்களுக்கு இன்னும் கார்பன் காலக்கணிப்பு (carbon dating) சோதனை நடத்தப்படாத நிலையில், ஏற்கெனவே கார்பன் காலக்கணிப்பு செய்யப்பட்ட முந்தைய கண்டுபிடிப்புகளுடன் ஒப்பிட்டு இந்தக் காலகட்டங்களை மதிப்பிட்டிருப்பதாக தொல்லியல் துறையினர் கூறுகின்றனர்.

இதுபற்றி விளக்கிய தொல்லியல் அலுவலர் சுரேஷ், ''இவற்றில் 4 செப்பு நாணயங்கள் கிடைத்துள்ளன. அதில் ஒன்று ஆங்கிலேயர் காலத்து நாணயம் என அடையாளம் காணப்பட்டுள்ளது. மற்ற 3 நாணயங்களும் இன்னும் சரி பார்க்கப்பட வேண்டியுள்ளது. நொய்யல் ஆற்றுப்படுகையில் நடக்கும் இந்த அகழ்வாராய்ச்சி, கடந்த காலங்களைப் பற்றிய புதிய புரிதலை உண்டாக்கியுள்ளன. இப்போது வரையிலும் கிடைத்துள்ள பொருட்கள் அனைத்தும், வெள்ளலூர் ஒரு பழங்கால வணிக மையமாகத் திகழ்ந்ததை உறுதிப்படுத்துகின்றன.'' என்றார்.

இதே வெள்ளலூரில்தான் ஆயிரத்துக்கும் அதிகமான ரோமானிய நாணயங்கள் கண்டறியப்பட்டதையும் இதற்கு சான்றாகக் கூறுகிறார் தொல்லியல் அலுவலர் சுரேஷ். முந்தைய கண்டுபிடிப்புகளில் கிடைத்த அந்த ரோமானிய நாணயங்கள் அனைத்தும் கி.மு. முதல் நூற்றாண்டுக்கும் கி.பி. நான்காம் நூற்றாண்டுக்கும் இடைப்பட்ட காலத்தில் ஆட்சி செய்த ரோமானியப் பேரரசர்களுக்குரியவை என்பது கண்டறியப்பட்டுள்ளது என்கிறார்.

ராசகேசரிப் பெருவழியில் அமைந்திருந்த பழமையான வணிகநகரம்

சங்ககாலத்துக்கு முன்பே வெள்ளலூர் நகரம் இருந்திருந்தாலும், சங்ககாலத்தில்தான் அது வணிக நகரமாக மாறியதாகச் சொல்கிறார், தமிழகத்தின் மூத்த தொல்லியல் ஆய்வாளரும், ஓய்வு பெற்ற தமிழக அரசின் தொல்லியல் துறை இணை இயக்குநருமான அர.பூங்குன்றன். அது வணிக நகரமாக இருந்ததை விவரிக்கும் முன் வெள்ளலூர் என்பதற்கான பெயர்க்காரணத்தையும் அவர் விளக்கினார்.

''பத்தாம் நூற்றாண்டு கல்வெட்டில் அதன் பெயர் வேளில் என்று இருந்துள்ளது. அதாவது சிற்றரசரின் தலைநகரம். பின்பு வேளில் உடன் ஊர் என்ற அடைமொழியும் சேர்ந்துள்ளது. இதில் வேளில் என்பது எந்த குடியைக் குறிப்பது என்பதற்கான குறிப்புகள் எதுவும் கிடைக்கவில்லை. அதுதான் நாளடைவில் வெள்ளலூராக திரிந்துவிட்டது. பதினொன்றாம் நூற்றாண்டு கல்வெட்டிலேயே இந்த பெயர் வந்துவிட்டது.'' என்றார் அர.பூங்குன்றன்.

இதற்கு இடைப்பட்ட காலத்தில் வெள்ளலூருக்கு தென்னூர் என்றும் ஒரு பெயர் இருந்ததாக பதிவு செய்கிறார் தொல்லியல் அலுவலர் சுரேஷ். நொய்யல் ஆற்றின் தென்கரையில் இருந்ததால் இந்தப் பெயர் வந்திருக்கலாம் என்றாலும் அது யூகம் மட்டுமே என்கிறார் அவர். ஆனால் வேளில் ஊர் என்பதே காலப்போக்கில் வெள்ளலூர் ஆக திரிந்துவிட்டதாகவே இவர்கள் ஒருமித்த கருத்தைத் தெரிவிக்கின்றனர்.

பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில்தான் முதல் முறையாக வெள்ளலூரில் ரோமானியர்களின் தங்க அணிகலன்கள் கிடைத்ததைச் சுட்டிக்காட்டுகிறார், தொல்லியல் ஆய்வாளர் அர.பூங்குன்றன்.

அப்போது ஏழெட்டு தங்க மோதிரங்களே கிடைத்தது வரலாற்றில் பதிவு செய்யப்பட்டிருப்பதாகக் கூறும் அவர், அவை வணிகம் செய்ய வந்த ரோமானியர்களால் வேளில் என்ற சிற்றரசர்களுக்கு காணிக்கையாகத் தரப்பட்டிருக்கலாம் என்கிறார்.

பிபிசியிடம் இதுபற்றி விளக்கிய அர.பூங்குன்றன், ''வெள்ளலூரில்தான் முதல் முறையாக 1,500 தங்கம் மற்றும் வெள்ளி ரோமானிய நாணயங்கள் கிடைத்துள்ளன. உடுமலைப்பேட்டையிலிருந்து ஆனைமலை செல்லும் வழியிலுள்ள வடபூதிநத்தம் என்ற ஊரிலும் இதேபோன்று அதிகளவில் ரோமானிய நாணயங்கள் கிடைத்தன. கி.மு. முதல் நூற்றாண்டு துவங்கி 5 நூற்றாண்டுகள் வரை ரோமானியர்கள் இங்கு வணிகம் செய்ததற்கான ஆதாரங்களாக இவற்றைக் கருதலாம்.'' என்றார்.

''ரோமானியர்கள் வணிகம் செய்வதற்காக கப்பலில் வந்து சோழமண்டலக் கடற்கரை துறைமுகங்களுக்கு வந்து அங்கிருந்து கடல் வழியே கேரள துறைமுகங்களை வந்தடைந்துள்ளனர். ஆனால் பாலக்காடு கணவாய் வழியாக இவ்விரு பகுதிகளை இணைக்கும் பாதை இருப்பதை அறிந்து, அவ்வழியே தங்கள் பயணத்தை மாற்றிக் கொண்டுள்ளனர். அதுதான் ராசகேசரிப்பெருவழி. அந்த வழியில் வெள்ளலூர் இருப்பதால் நதிக்கரையில் இருந்த இந்த நகரத்தை ஒரு வணிகமையமாக அவர்கள் மாற்றியிருக்கலாம்.'' என்றார் அர.பூங்குன்றன்.

இந்தப் பாதையைப் பற்றி விளக்கிய தொல்லியல் அலுவலர் சுரேஷ், ''மேற்கு மற்றும் கிழக்குக் கடற்கரைப் பகுதிகளை இணைக்கும் பழங்கால வணிகப் பாதையில் வெள்ளலூர் அமைந்துள்ளது. இந்த பாதை வெள்ளலூர், சூலூர், கத்தான்கன்னி, கொடுமணல், சேரர்களின் தலைநகரான கரூர் மற்றும் சோழர்களின் தலைநகரான உறையூர் போன்ற இடங்கள் வழியாகச் சென்றது," என்றார்.

''அப்போது வெள்ளலூரிலிருந்தே ரோமானியர்கள் நிறையப் பொருட்களை வாங்கி, அதற்குப் பதிலாக பண்ட மாற்று முறையில் தங்கம், வெள்ளி மற்றும் செம்பு நாணயங்களைக் கொடுத்துள்ளனர். அதனால்தான் இங்கே அதிகளவில் ரோமானிய நாணயங்கள் கிடைத்துள்ளன. பிரிட்டிஷ் ஆட்சிக்காலத்திலேயே இங்கு ரோமானிய நாணயங்கள் கண்டெடுக்கப்பட்டன. ரோமானியர்களின் வணிகத் தொடர்புகள் உறுதியான அடிப்படையில்தான் இப்போது இங்கு அகழ்வாராய்ச்சியை மேற்கொண்டு வருகிறோம்.'' என்றார் சுரேஷ்.

மட்பாண்டம், இரும்புப் பொருட்களே இதுவரை வெள்ளலூரில் அதிகமாகக் கிடைத்துள்ளதாகக் கூறும் தொல்லியல் அலுவலர் சுரேஷ், இதுவரை கொடுமணலில் கிடைத்தது போன்ற கல்லில் செய்த அணிகலன்கள் இங்கு கிடைக்கவில்லை என்றார்.

அதனால் இவ்விரு நகரங்களிலும் கிடைத்த பொருட்களுக்குமான கால இடைவெளி ஒரு நூற்றாண்டிலிருந்து இரு நூற்றாண்டு வரை முன் பின்னாக இருக்கலாம் என்கிறார் அவர். அதாவது கொடுமணலில் கிடைத்த கல்மணிகள் கி.மு.மூன்றாம் நூற்றாண்டாக இருந்தால் வெள்ளலூரில் கிடைத்த நாணயங்கள் கி.மு. முதல் நூற்றாண்டாக இருக்கலாம் என்பது அவரின் கணிப்பாக உள்ளது.

ஆனால் கொங்கு பகுதி என்றழைக்கப்பட்ட பகுதிகளில் வெவ்வேறு ஊர்களில் படிப்படியாக உருமாற்றப்பட்ட அணிகலன்கள் வெள்ளலூரில் வணிகம் செய்யப்பட்டிருக்கலாம் என்பதை விளக்குகிறார், தொல்லியல் ஆய்வாளர் அர.பூங்குன்றன்.

காங்கேயம் அருகேயுள்ள படியூர் என்ற ஊரில் இயற்கையாகக் கிடைத்த கல்லை வெட்டி எடுத்து கொடுமணலில் அணிகலன் செய்து அதை வெள்ளலூரில் வணிகம் செய்திருக்கலாம் என்கிறார் அவர்.

பிபிசியிடம் இதுபற்றி விளக்கிய அவர், ''கார்னீலியன் எனப்படும் வாடாமல்லி நிறத்திலான விலையுயர்ந்த கல்மணிகள் (Carnelian Quartz Beads) கொடுமணலில் 6 ஆயிரம் என்ற எண்ணிக்கையில் கிடைத்தன. அதேபோன்று, பச்சைக்கல் மணி 200 அங்கு கண்டெடுக்கப்பட்டது. வெங்கச்செங்கல் எனப்படும் ஒரு விதமான கல்மணியும் அங்கு கிடைத்தது. நீலகிரியில் தேவாலா பகுதியில் அமெதீஸ்ட் (Amethyst) எனப்படும் நீலநிறக்கற்கள் கிடைத்துள்ளன. அதனால்தான் அதற்கு நீலகிரி என்று பெயர் வந்ததாகவும் ஒரு தகவல் இருக்கிறது. இவை அனைத்தையும் வணிகம் செய்யும் இடமாக வெள்ளலூர் இருந்திருக்கலாம்.'' என்றார்.

குதிரை மேய்வது போன்ற மணிக்கல் வெள்ளலூரில் கிடைத்ததைக் குறிப்பிட்ட அவர், அது தமிழ்நாட்டுக் கல்லில் தயாரிக்கப்பட்டது என்றும், கொடுமணலில் கிடைத்த கார்னீலியன் கற்கள் அனைத்தும் குஜராத்திலிருந்து கொண்டு வரப்பட்டவை என்ற தகவலையும் தெரிவித்தார். ரோமானியர்கள், வெள்ளலூர் துவங்கி, கரூர், கொடுமணல் எல்லா இடங்களிலும் வணிகம் செய்ததற்கு ஏராளாமான ஆதாரங்கள் உள்ளதையும் அவர் சுட்டிக்காட்டுகிறார். நாகஸ்வாமி எழுதிய ரோமன் கரூர், தமிழக அரசின் தொல்லியல் துறை வெளியிட்ட கருணானந்தன் தொகுப்பு ஆகியவற்றிலிருந்து இதற்கான தரவுகளை பிபிசியிடம் விளக்கினார் அர.பூங்குன்றன்.

வெள்ளலூரில் ரோமானியர்கள் குடியிருப்பு இருந்திருக்குமா?

வெள்ளலூரின் பழமையைப் பற்றி மேலும் விளக்கிய அவர், ''தற்போது அகழ்வாராய்ச்சி நடக்கும் பகுதியில் அமைந்துள்ள தேனீஸ்வரர் கோவில், இடைக்கால சேரமன்னன் ரவி கோதை, வீரநாராயணன் போன்றவர்களால் 9 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டதற்கான கல்வெட்டுகள் அங்குள்ளன. அங்குள்ள உலகளந்த பெருமாள் கோவில், அழகு நாச்சியம்மன் கோவில் அனைத்துமே ஆயிரம் ஆண்டுகள் பழமையானவை.'' என்றார்.

கோவையைச் சேர்ந்த வரலாற்று ஆய்வாளரும், கோவை குறித்து தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் பல நூல்களை எழுதியுள்ளவருமான சி.ஆர்.இளங்கோவன், சமீபத்தில் வெளியிட்ட 'நதியின் பிழையன்று' என்ற வரலாற்றுப் பின்னணி கொண்ட புதினத்திலும் நொய்யல் நதிக்கரையில் அமைந்துள்ள வெள்ளலூரின் பழமையைப் பதிவு செய்துள்ளார். இந்தியாவிலேயே அதிகளவில் அங்குதான் ரோமானிய நாணயங்கள் கிடைத்ததையும் அவர் அதில் குறிப்பிட்டுள்ளார். அவை குறித்த பலவிதமான தரவுகளையும் அவர் பகிர்ந்தார்.

பிபிசியிடம் பேசிய சி.ஆர்.இளங்கோவன், ''சென்னை எழும்பூரில் உள்ள அரசு அருங்காட்சியகத்தில் நாணயங்கள் பகுதியில் ரோமானிய நாணயங்கள் அதிகமாகவுள்ளன. அதைத் தவிர்த்து நாணயவியல் ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ள தனிநபர்கள் உள்ளிட்ட சிலரிடமும் இந்த ரோமானிய நாணயங்கள் உள்ளன. இவை கிடைத்த இடங்களைக் கொண்டு தொல்லியல் துறை, 'இந்தியாவில் கிடைத்த ரோமானிய நாணயங்கள்'' (Roman coins available in India) என்ற ஒரு நூலை வெளியிட்டுள்ளனர். அதில் இதற்கான தரவு உள்ளது.'' என்றார்.

''கோவையைப் பற்றி அதிக அளவிலான நூல்களை எழுதியுள்ள கோவைக்கிழாரின் 'கோவையின் வரலாறு' நூலிலும் இதுபற்றி அவர் விரிவாக எழுதியிருக்கிறார். முதல் முறையாக 1870களில் அந்த நாணயங்கள் கிடைத்தது பற்றியும், பின்பு 1930களில் கிடைத்த ரோமானிய நாணயங்கள் குறித்தும் அவர் எழுதியிருக்கிறார். இவர்களை தவிர்த்து, ரோமானிய எழுத்தாளரும், இயற்கை மற்றும் வரலாற்று ஆய்வாளருமான பிளினி (Pliny the Elder) தனது நூலில் ரோமானியர்களுக்கும், இந்தியர்களுக்கும் இடையில் குறிப்பாக தமிழகத்துக்கும் உரோமைக்கும் (Rome) இருந்த வணிகத் தொடர்புகளைக் குறித்து விரிவாகப் பதிவு செய்துள்ளார்.'' என்றார் சி.ஆர்.இளங்கோவன்.

ஒட்டுமொத்தமாக இந்தத் தரவுகளின்படி, இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் ரோமானிய நாணயங்கள் கிடைத்திருந்தாலும் அவை அதிகமாகக் கிடைத்தது நொய்யல் நதிக்கரையில்தான் என்று கூறும் சி.ஆர்.இளங்கோவன், அவற்றிலும் பெரும்பாலானவை கிடைத்தது வெள்ளலூரில்தான் என்கிறார்.

இதை ஆமோதிக்கும் 'நீலமலை தொல்லியல்' நூலின் ஆசிரியர்களில் ஒருவரும், தொல்லியல் ஆய்வுகளை மேற்கொள்ளும் யாக்கை அறக்கட்டளை நிர்வாகியுமான சுதாகர் நல்லியப்பன், வெள்ளலூரிலுள்ள உப்புப்பள்ளம் என்ற பகுதியில்தான் அதிகளவு ரோமானிய நாணயங்கள் கிடைத்துள்ளன என்கிறார். அதன் தொடர்ச்சியாகவே தற்போது அங்கு அகழ்வாராய்ச்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

தொல்லியல் துறை வைத்த கண்காட்சியைப் பார்வையிட்ட ஓய்வு பெற்ற தலைமையாசிரியரும், 'காலந்தோறும் வெள்ளலூர்' என்ற நூலின் ஆசிரியருமான வி.கே.பாலதண்டபாணி, ''வெள்ளலூரில் நடக்கும் அகழ்வாராய்ச்சியில் இதுவரை கிடைத்துள்ள பொருட்களைப் பார்க்கும்போது, இந்த நகரத்தின் பழமையும் பெருமையும் தெரியவருகிறது. இது இன்னும் விரிவாக மேற்கொள்ளப்பட வேண்டும்.'' என்றார்.

வெள்ளலூர் குறித்து இவர் எழுதியுள்ள நூலிலும் ரோமானிய நாணயங்கள் குறித்து புகைப்படங்களுடன் விரிவாக குறிப்புகள் எழுதியுள்ளார். அவற்றில் ரோமானியப் பேரரசர்களின் உருவங்களும், பெயர்களும் பொறிக்கப்பட்டு இருப்பதை அவர் விளக்கியுள்ளார். வெள்ளலூரின் தொன்மை, கோவில்கள், திருவிழாக்கள், விடுதலைப் போராட்டத்தில் நகரின் பங்களிப்பு குறித்தும் அவர் விரிவாக எழுதியுள்ளார்.

ரோமானிய நாணயங்கள் அதிகளவில் வெள்ளலூரில் கிடைத்ததன் காரணமாக, அப்பகுதியில் ரோமானியர்கள் குடியிருப்புகள் அமைத்துத் தங்கியிருந்திருக்கவும் வாய்ப்புள்ளதாகத் தெரிவித்தார் வரலாற்று ஆய்வாளரும், எழுத்தாளருமான சி.ஆர்.இளங்கோவன். கரூர், கொடுமணல் என பல நகரங்களில் அவர்கள் இருந்திருக்க வாய்ப்பிருப்பினும் வெள்ளலூரில்தான் ஒரே இடத்தில் 200 என்ற எண்ணிக்கையில் ரோமானிய நாணயங்கள் கிடைத்ததை வைத்து இத்தகைய யூகம் எழுவதாகவும் அவர் தெரிவித்தார்.

''அந்தக் காலத்தில் பாய்மரத்தை வைத்தே கடற்பயணங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அதனால் காற்றின் திசையைக் கணித்தே அவர்கள் பயணங்களை மேற்கொள்வார்கள். தென்மேற்குப் பருவக்காற்று காலத்தில் இங்கு வந்து வடகிழக்குப் பருவமழைக்குப் பின்பே மீண்டும் திரும்பியிருப்பார்கள். இதற்கு இடைப்பட்ட காலகட்டத்தில் அவர்கள் ஏதாவது ஒரு பகுதியில் தங்கியிருக்க வேண்டும். அப்படி வெள்ளலூரில் ரோமானியர்கள் தங்கியிருக்க குடியிருப்பு அமைத்திருக்கலாம் என்பது என்னுடைய ஒரு யூகம்.'' என்றார் சி.ஆர்.இளங்கோவன்.

இந்தக் கருத்தை முற்றிலுமாக மறுப்பதற்கில்லை என்று கூறிய தொல்லியல் அலுவலர் சுரேஷ், ''ரோமானியர்கள் இங்கு குடியிருப்பு அமைத்து தங்கியதற்கான ஆதாரம் இதுவரை கிடைக்கவில்லை. அப்படி ஒருவேளை அவர்கள் தங்கியிருந்திருந்தால் ரோமானிய நாணயங்களுடன் அவர்கள் அன்றாட வாழ்வில் பயன்படுத்திய பிற பொருட்களும் கிடைத்திருக்க வேண்டும். இதுவரை அப்படிப்பட்ட பொருட்கள் எதுவும் கிடைக்கவில்லை. ஒருவேளை இனிவரும் நாட்களில் மேற்கொள்ளப்படும் அகழ்வாராய்ச்சியில் இதற்கு விடை கிடைக்கலாம்.'' என்றார்.

- இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு