You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
இழந்த பற்களை மீண்டும் வளர வைக்க முடியுமா? புதிய தீர்வு எந்த கட்டத்தில் உள்ளது?
- எழுதியவர், சாரா ஸ்லோட்
- பிரசுரிக்கப்பட்டது
- வாசிக்கும் நேரம்: 5 நிமிடங்கள்
மனித ஆரோக்கியத்தில் பற்கள் மிகப்பெரிய பங்கு வகித்தாலும் பல் இழப்புக்கான தற்போதைய சிகிச்சைகள் தற்காலிகமானதாகவும் தரம் குறைவானதாகவுமே இருக்கின்றன. அதற்கு மாறாக நமது பற்களை மீண்டும் வளர்க்க முடிந்தால் எப்படி இருக்கும்?
வயது வந்தவர்களில் 70% பேர் பல் மருத்துவரிடம் செல்ல அஞ்சுவதாக சில ஆய்வுகள் தெரிவிக்கின்றன. பல் துளையிடல் மற்றும் அடைத்தல் மீது அவர்களுக்கு உள்ள கவலை மற்றும் அவநம்பிக்கை வழக்கமான சுத்தம் மற்றும் பராமரிப்பை தவிர்க்க வழிவகுக்கிறது.
ஆனால், ஹன்னெலெ ரூஹோலா பேக்கர் என்கிற உயிரி வேதியியலாளருக்கு வழக்கமான பல் சிகிச்சைக்கு அப்பாற்பட்ட விநோதமான மருத்துவ முறைகளை மேற்கொள்ள விரும்புபவர்களிடமிருந்து தினமும், மின்னஞ்சல் வருகிறது. ரூஹோலா அவர்களின் பல்லை மீண்டும் வளர்க்க வேண்டும் எனக் கோரிக்கை வைக்கின்றனர்.
பற்களை இழந்து பல் வலியால் அவதிப்படும் லட்சக்கணக்கான மக்களுக்கு பாரம்பரியமான பல் சிகிச்சை முறைகளுக்கு மாற்றாக மீளுருவாக்க மருத்துவத்தின் ஆற்றலைக் கொண்டு சேர்க்க உலகம் முழுவதும் பணியாற்றி வரும் விஞ்ஞானிகளில் ரூஹோலா பேக்கரும் ஒருவர்.
இது சாத்தியமானால், ஒரு நாள் பல் மருத்துவரிடம் செல்வது பல்லை செயற்கைப் பொருட்களைக் கொண்டு சரிசெய்வது அல்லது வலுக்கட்டாயமாகப் பிடுங்கி எடுப்பதற்குப் பதிலாக சேதமடைந்த பல் திசுக்கள் அல்லது ஒட்டுமொத்த பல்லையும் மீண்டும் வளர்ப்பதையும் உள்ளடக்கும்.
இந்த முன்மொழிவு அதன் புதுமைக்காக மட்டும் கவர்ச்சிகரமாகத் தெரியவில்லை. பலர் நினைப்பதை விடவும் மனித ஆரோக்கியம் மற்றும் நலத்தில் பற்கள் மிகப்பெரிய பங்கு வகிக்கின்றன.
"இதை நாங்கள் முதலில் தொடங்கியபோது ஒரு விஷயம் தெளிவானது. பல் மருத்துவத்தில் புதிய விஷயத்துக்கு மக்கள் தயாராக இருக்கின்றனர்," என்கிறார் ரூஹோலா பேக்கர். இவர் அமெரிக்காவில் உள்ள வாஷிங்டன் பல்கலைக்கழகத்தின் ஸ்டெம்செல் மற்றும் மீளுருவாக்க மருத்துவ நிறுவனத்தில் இணை இயக்குநராகவும் உள்ளார்.
பல் நோய் ஏற்படுத்தும் இதர பாதிப்புகள்
பற்கள் தான் உலகுக்கான உங்களுடைய சாளரம் என்கிறார், அமெரிக்காவில் உள்ள பல் மருத்துவத்துக்கான டஃப்ட்ஸ் பள்ளியின் பேராசிரியரான பேமலா யெலிக்.
"நீங்கள் வாயைத் திறப்பது அல்லது முறையாகச் சாப்பிடுவதற்கு அச்சப்பட்டால் அது மிகவும் மோசமான சரிவுப் பாதையாக இருக்கும்," என்றார் அவர்.
வரலாற்று ரீதியாக வாய் ஆரோக்கியம் என்பது ஒட்டுமொத்த ஆரோக்கியத்துக்கு அவசியமானது என்பது அங்கீகரிக்கப்படாத ஒன்றாக இருக்கிறது என்கிறார் யெலிக்.
ஈறு நோயால் வரும் பாக்டீரியா உள்ளிட்ட பல் சார்ந்த பிரச்னைகள் இதய நோய் மற்றும் சுவாசப் பிரச்னைகளை அதிகரிக்கலாம் என்பது புரிந்துகொள்ளப்பட்ட ஒன்றாக இருக்கிறது. அது அல்சைமர் நோயுடன் தொடர்புப்படுத்தப்படுகிறது. பல் இழப்பு கூடுதல் நோய்கள் மற்றும் முன்கூட்டிய மரணத்துடனும் தொடர்புப்படுத்தப்படுகிறது. அது சாப்பிடுவது, மெல்வது மற்றும் சிரிப்பது போன்ற திறன்களைப் பாதிப்பதோடு சமூக மற்றும் மன நலனையும் பாதிக்கக்கூடும். இந்தச் சுழற்சி சிறுவயதில் இருந்தே தொடங்கக்கூடும்.
இதனை எதிர்கொள்வதற்கான பல கருவிகள் பல் மருத்துவர்களிடம் உள்ளன. சேதமடைந்தவற்றை நீக்கி ரெசின் கலவை போன்ற மனிதர்களால் தயாரிக்கப்பட்ட பொருட்களை வைத்து இடைவெளிகளை நிரப்புவதன் மூலம் ஈறுகளைச் சரிசெய்ய முடியும். மேலும், சிறிய சிதைவுகளையும் விரிசல்களையும் சரிசெய்ய அவர்கள் நிரப்பிகளைப் பயன்படுத்தலாம்.
ஆனால் இவை குறைபாடுள்ள தீர்வுகளாகவே உள்ளன. உதாரணமாக இந்த நிரப்பிகள் நிலைத்திருக்கும் காலமும் வேறுபடுகின்றன. இவை 5 ஆண்டுகள் முதல் 20 ஆண்டுகள் வரை நீடிக்கக்கூடும்.
இது போன்ற செயல்முறைகளில் மக்கள் மீண்டும் இத்தகைய தலையீடுகளை மேற்கொள்வது அசாதாரணமான ஒன்றல்ல என்கிறார் ஆன் ஜார்ஜ். இவர் அமெரிக்காவின் சிகாகோவில் உள்ள இல்லினியோஸ் பல்கலைக்கழகத்தில் வாய் உயிரியல் துறையில் பேராசிரியராக உள்ளார்.
அதற்குக் காரணம் இந்தச் சிகிச்சைகள் சேதத்தைச் சரிசெய்வதில் கவனம் செலுத்துகிறதே தவிர உயிரியல் செயல்பாட்டை மீட்டமைப்பதில் கவனம் செலுத்துவதில்லை என்கிறார் ஜார்ஜ். "மீளுருவாக்கப் பல் மருத்துவம் என்பது ஒரு மிகப்பெரிய மாற்றம். இது குணப்படுத்துவதை வலியுறுத்துகிறது." என்றும் அவர் தெரிவித்தார்.
சொத்தை பாதிப்பை சரி செய்வது எப்படி?
ஈறுகள் தான் பற்களை அழிக்கும் பொதுவான விஷயமாக இருக்கிறது என்கிறார் ஜார்ஜ்.
பற்கள் எனாமல், டென்டின், சிமென்டம் மற்றும் பல் கூழ் ஆகிய நான்கு முக்கியமான அடுக்குகளைக் கொண்டது. பற்படிவு பாக்டீரியா சர்க்கரைகளை உண்டு பல் எனாமலின் முதல் அடுக்கை கறைக்கும் அமிலங்களை உற்பத்தி செய்கிறபோது பல் சொத்தை வளர்கின்றன. டென்டினுக்குக் கீழே உள்ள எனாமல் மெலிதாகவும் பல் சொத்தைக்கு எதிர்ப்பு குறைவாகவும் உள்ளது. எனாமல் கரைகிறபோது டென்டின் பாதிக்கப்படுவதால் பல் சொத்தை ஆபத்து அதிகரிக்கிறது.
டென்டின் வளர்வதற்கும், கனிமமயமாவதற்கும், தன்னைத்தானே சரிசெய்துகொள்வதற்கும் உதவும் புரதங்களை ஜார்ஜ் ஆய்வு செய்து வருகிறார்.
டென்டினை உருவாக்க உதவும் மரபணுக்களை நகலெடுத்த (Clone) குழுவில் அவரும் ஓர் அங்கமாக உள்ளார். பற்கள் எவ்வாறு இந்தத் திசுக்களை உருவாக்கி பராமரிக்கின்றன என்பது குறித்த உள்ளார்ந்த செயல்பாடுகளை புரிந்துகொள்ள அது உதவுகிறது.
இந்த அறிவு சேதமடைந்த பற்களைத் தாண்டி, சொத்தை பாதிப்பை புதிய டென்டின் மூலம் தாமாகவே சரி செய்துகொள்ளும் புதிய சிகிச்சைகளுக்கு வழிவகுக்கக்கூடும் என்கிறார் ஜார்ஜ். இது பற்களில் உள்ள இடைவெளிகளை அடைப்பதற்கு பாரம்பரிய முறைகளுக்கான தேவை இல்லாமல் ஆக்குகிறது.
ரூஹோலா பேக்கர் மற்றும் அவரது குழுவினர் "உயிருள்ள நிரப்பிகள்" (living fillings) குறித்தும் பணியாற்றி வருகின்றனர். ஆனால், இவை டென்டினை விட எனாமலை அடிப்படையாகக் கொண்டவையாக உள்ளன.
தானமாகப் பெறப்பட்ட விஸ்டம் பற்களை ஆய்வு செய்த விஞ்ஞானிகள் எனாமலை உருவாக்கும் 'அமிலோப்ளாட்ஸ்' என்கிற சிறப்பு செல்கள் மனிதப் பற்கள் முளைத்த பிறகு இறந்துவிடுகின்றன என்பதைக் கண்டறிந்தனர். எனவே பற்கள் விழுந்த உடன் மீண்டும் அவற்றைத் தூண்ட முடியாது.
மாறாக இந்தக் குழு, சில ஸ்டெம் செல்கள் அமிலோப்ளாஸ்டுகள் உடன் சேர ஊக்கப்படுத்துவதற்கு ரசாயண சமிக்ஞைகளைப் பயன்படுத்தின மற்றும் இதர ஸ்டெம் செல்கள் ஓடன்டோப்ளாஸ்டுகளாக மாறத் தூண்டின. இவை தான் டென்டினை உருவாக்கும் செல்களாக உள்ளன.
இவற்றை ஒன்றாகச் சேர்ந்தால் இந்த உள்ளீடுகள் எனாமல் புரதங்களைச் சொந்தமாகச் சுரக்கும் பல் உறுப்புருவை உற்பத்தி செய்கின்றன.
இந்த எனாமல் புரதங்கள் எதிர்காலத்தில் இடைவெளிகளை நிரப்பவும் உடைந்த பற்களைச் சரி செய்யவும் பயன்படுத்துவதை ரூஹோலா பேக்கர் உணர்கிறார்.
ஆனால் முழுவதும் ஆய்வுக் கூடத்திலே உருவாக்கப்பட்ட பற்கள் தான் அவரின் நீண்டகால இலக்காக உள்ளது. இறுதியாகப் பற்களை உருவாக்கத் தேவையான மாற்றியமைக்கப்பட்ட செல்களை நோயாளிகளின் வாயிலே வைக்க வேண்டும் என விரும்புகிறார். "இயற்கையே மீதமுள்ளவற்றை பார்த்துக்கொள்ள விட வேண்டும்," என்றும் அவர் தெரிவிக்கிறார்.
ஒரு பல்லை எவ்வாறு வளர்ப்பது?
ஒரு பல்லில் பல சொத்தைகள் மற்றும் சிதைவு இருந்தால் அவற்றைப் பிடுங்கி ஒரு செயற்கைப் பல்லைப் (Implant) பொருத்துவது தான் சிறந்த மற்றும் எளிமையான சிகிச்சையாக இருக்கும். இந்த மாற்றுப் பல் திருகு போன்ற ஒரு தூண், செயற்கை கிரீடம் மற்றும் இவ்விரண்டையும் இணைக்கும் ஒரு இணைப்புப் பகுதி ஆகியவற்றின் கலவையாக உள்ளது.
ஆனால் இந்த செயற்கைப் பற்கள் நீங்கள் மெல்வதற்கு உதவும் நரம்புகளைக் கொண்டிருக்காது. எனவே தவறுதலாக, கடினமாகக் கடித்து அந்தப் பல் உடைவதற்கான சாத்தியமும் உள்ளது. இந்த செயற்கைப் பல்லில் பாக்டீரியாக்கள் தங்கி மற்ற ஆரோக்கியமான பற்களையும் பாதிக்கும் நிலை உருவாகலாம். செயற்கைப் பற்களுக்கு 15 ஆண்டுகள் கழித்து மாற்று தேவைப்படலாம். மேலும் காப்பீட்டைப் பொருத்து ஆயிரக்கணக்கான டாலர் செலவாகலாம்.
எனவே இந்தச் செயற்கைப் பற்களை விட ஆய்வகத்தில் வளர்க்கப்படும் பற்கள் ஒரு நீடித்த தீர்வாக இருக்கலாம் என்கிறார் அனா ஏஞ்சலோவா வொல்போனி. இவர் பிரிட்டனில் உள்ள லண்டன் கிங்ஸ் கல்லூரியில் மீளுருவாக்கப் பல் மருத்துவத்தின் இயக்குநராக உள்ளார்.
"சேதமான ஒன்றைச் சரி செய்ய முயல்வதற்குப் பதிலாக ஓர் உயிரியல் மாற்றைப் பயன்படுத்தலாம்," என்கிறார் வொல்போனி. ஒரு மாற்றுப் பல்லாக உருவாவதற்கான திறனுள்ள ஆர்கனாய்டுகளை அவர் உருவாக்கி வருகிறார்.
வயது வந்த மனிதர்களின் ஈறு திசுக்களிலிருந்து எடுக்கப்படும் செல்கள் எலியில் இருந்து கிடைக்கும் பற்களை உருவாக்கும் செல்களுடன் சேர்ந்தால் அவை மனிதன் மற்றும் எலியின் பங்களிப்பால் உருவாகும் வலுவான மற்றும் ஆழமான வேர்களைக் கொண்ட பல் அமைப்பை உருவாக்கலாம்.
அத்தகைய பல் உருவாக்கத்தை வழிநடத்தும் வழிமுறைகளை மீண்டும் உருவாக்கும் வழிகளிலும், இந்தச் செல்கள் முறையான அமைப்பு மற்றும் செயல்பாட்டைக் கொண்ட பற்களாக உருவாக உதவும் பொறியியல் முறையில் உருவாக்கப்பட்ட உயிரியல் பொருட்களுடனும் பணியாற்றி வருகிறார்.
ஆனால் இது இயற்கையாக நடக்காது.
சில விலங்குகளைப் போல மனிதர்களால் தங்களின் பற்களுக்கு ஏதாவது ஆனவுடன் புதிய பற்களைத் தொடர்ந்து வளர்க்க முடியாது. இதற்கு மாறாக, சுறாக்களிடம் முடிவில்லாத எண்ணிக்கையிலான பற்கள் உள்ளன. அவை ஒரு தொடர்ச்சியான நகரும் பட்டை போன்ற முறையில் மீண்டும் மீண்டும் முளைக்கின்றன. யானைகளைப் போலவே, கங்காருகளுக்கும் பல தொகுப்பு அரைவைப்பற்கள் முளைக்கின்றன.
பன்றிகளுக்கு உயிரியல் ரீதியிலான விநோதமான பற்கள் உள்ளன. அவற்றின் தாடைகளில், இன்னும் வெளிவராத பல தொகுப்பு முதிர் பற்களின் முளைகள் உள்ளன.
இந்த விசித்திரத் தன்மையின் காரணமாகத்தான் யெலிக், மனித மற்றும் பன்றி பல் செல்களின் கலவையைப் பயன்படுத்தி, வயதுவந்த யுகடான் மினிபன்றிகளில் மனிதனைப் போன்ற பற்களை வளர்க்க முடிந்தது.
இந்த குழுவினர் டென்டின் உருவாகும் திறன் கொண்ட செல்களை மனிதப் பற்களில் இருந்தும் முளைக்காத பற்களில் இருந்து எனாமலை உருவாக்கும் செல்களை ஒரு கசாப்புக் கடைக்காரரிடமிருந்து தூக்கி விடப்பட்ட பன்றியின் தாடைகளில் இருந்தும் சேகரித்தனர்.
"ஒரு பன்றி உணவுக்காக அறுவடை செய்யப்பட்டாலும், அதன் தாடையில் மற்றொரு பல்லை உருவாக்கத் தயாராக இருக்கும் பல் மொட்டுகள் உள்ளன." என்கிறார் யெலிக்.
அந்தச் செல்களை ஓர் ஆய்வகத்தில் வளர்த்த பிறகு, வளர்ந்து வரும் பல்லின் சூழலைப் பிரதிபலிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்ட உயிரியல் பொறியியல் கட்டமைப்பு ஒன்றின் மீது ஆராய்ச்சியாளர்கள் அவற்றை ஒருங்கிணைத்தனர்.
மூன்று மாதங்கள் கழித்து, இயற்கையான பன்றியின் பல் வளரும் வேகத்தில் பல் போன்ற அமைப்புகள் உருவாகின.
"இவை நிஜமாகவே வேலை செய்யும் என்பதற்கான ஒரு கொள்கைச் சான்றாக இது உள்ளது. எங்களைத் தொடர்பு கொண்ட பலரும் தங்களின் சொந்த பல் பிரச்னைகளைச் சரி செய்ய தீவிரமாக முயன்றனர்," என்கிறார் யெலிக்.
இவர் இந்த முயற்சியை நீண்ட கால நோக்கில் ஒரு பன்றியின் தாடையில் நேரடியாக மேற்கொள்ள இருக்கிறார். ஒரு கட்டத்தில், பன்றியின் செல்கள் எதையும் பயன்படுத்தாமலேயே, ஒருவரின் வாயில் பற்களை வளர்க்குமாறு செல்களைத் தூண்ட யெலிக் மற்றும் அவரது குழுவினர் விரும்புகின்றனர்.
இந்த ஆய்வின் அடுத்தக்கட்டம் என்ன?
இதற்கான தேவைகள் இருந்தாலும், ஒரு மனிதர் தாமாக நிரம்பும் பல் சொத்தைகள் அல்லது ஆய்வகத்தில் உருவாக்கப்பட்ட பல் மாற்றைப் பெறுவதற்கு பல ஆண்டுகள் இருக்கின்றன.
மனிதர்களை ஆய்வு செய்வது பற்றி நாம் பேசுவதற்கு முன்பாக மனிதர் அல்லாத உயிர்வகை விலங்குகள் மீதான பரிசோதனைகள் நடக்க வேண்டும் என்கிறார் ரூஹோலா பேக்கர்.
அதற்கு கூடுதல் ஆய்வு, நேரம் மற்றும் செலவு ஆகும். மேலும் மனிதனின் வாயில் ஆய்வகத்தில் உருவாக்கப்பட்ட பற்களை வைப்பதற்கு பல் வளர்ச்சிக்கான மேம்பட்ட சுற்றுச்சூழலை உருவாக்க வேண்டிய தேவை ஆய்வாளர்களுக்கு உள்ளது.
இதற்கிடையே மீளுருவாக்க பல் மருத்துவத்தில் கற்றுக்கொள்ளும் பாடங்கள் உறுப்புகள் மற்றும் எலும்புகள் போன்ற உடலின் பாகங்களை மீண்டும் உருவாக்கும் பரந்த முயற்சிகளுக்கும் உதவும்.
ஏனெனில் பற்கள் "மிகவும் அதி நவீன வாழும் உறுப்பு" ஆகும் என்கிறார் யெலிக். அவற்றை ஆய்வகத்தில் நகலெடுக்கும் முயற்சிகள் என்பது கடினமான மற்றும் மெலிதான திசுக்கள் எவ்வாறு மிகவும் அடிப்படையான நிலையில் இணைந்து வேலை செய்கின்றன என்பதை ஆய்வாளர்களுக்கு கற்பிப்பதாகும்.
அவை உடனடியாக நடக்கவில்லையென்றாலும் பொதுமக்களுக்கு பாதுகாப்பான மற்றும் நீடித்த மீளுருவாக்க பல் தீர்வுகள் இறுதியாக கிடைக்கும் என வொல்போனி நம்பிக்கை தெரிவிக்கிறார்.
- இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு