You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
சப்பாணி முதல் மலைச்சாமி வரை - பாரதிராஜா படைப்பில் காலம் கடந்து நிற்கும் கதாபாத்திரங்கள்
- எழுதியவர், மீனாட்சிசுந்தரம்
- பதவி, பிபிசி தமிழுக்காக
- பிரசுரிக்கப்பட்டது
- வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள்
சமீபத்தில் மறைந்த இயக்குநர் பாரதிராஜாவின் படங்களில் வரும் கதாபாத்திரங்கள் தனித்தன்மை வாய்ந்தவை.
கதாநாயகன், கதாநாயகி மட்டுமல்ல, எதிர்மறை கேரக்டர்கள், சின்ன, சின்ன ரோல்களில்கூட அவர் அதிகம் கவனம் செலுத்தியிருப்பார்.
பாரதிராஜா படங்களில் இடம்பெற்று, இன்றும் நம் நினைவுகளுடன் வாழ்ந்து கொண்டிருக்கும் சில கதாபாத்திரங்களை இங்கு பார்ப்போம்.
சப்பாணி (16 வயதினிலே)
பாரதிராஜாவின் முதல் படமான 16 வயதினிலே (1977) படத்தில் கமல்ஹாசன் சப்பாணி கதாபாத்திரத்தில் நடித்தார்.
சிறு வயதில் தனது கிராமத்தில் பார்த்த ஒரு வெள்ளந்தி மனிதர் ஏற்படுத்திய தாக்கத்தால் அந்த கதாபாத்திரத்தை உருவாக்கியதாக பாரதிராஜா கூறியுள்ளார்.
படத்தில் சப்பாணி என்று சொல்பவரை கமல் சப்பென அடிக்கும் காட்சி இன்றும் பேசப்படுகிறது. அந்த யோசனையைக் கொடுத்தவர் படத்தின் கதாசிரியர் கலைமணி.
சப்பாணி பாத்திரத்திற்கு நடிப்பு சொல்லிக் கொடுப்பவராக, அந்தப் படத்தில் உதவி இயக்குநராக இருந்தவர் இயக்குநர் கே. பாக்யராஜ். அவர்தான் அந்த கேரக்டர் வழக்கமான முறையில் பேசாமல் இழுத்துப் பேசினால் நன்றாக இருக்குமென்ற யோசனை அளித்துள்ளார்.
கமல்ஹாசனின் நண்பரும், குணா, மகாநதி படங்களின் இயக்குநருமான சந்தானபாரதி, 16 வயதினிலே சப்பாணி கதாபாத்திரம் குறித்து பிபிசி தமிழிடம் பேசியபோது, "16 வயதினிலே வரும்போது நான் படித்துக் கொண்டிருந்தேன். சென்னை மிட்லண்ட் திரையரங்கில் பார்த்துவிட்டு, அருகே இருந்த நடைபாதையில் அதிக நேரம் இருந்தேன். அந்தப் படத்தின் தாக்கம், சப்பாணி கதாபாத்திரத்தின் நடிப்பு என்னை அப்படி அமர வைத்தது" என்று பகிர்ந்துகொண்டார்.
மேலும் பேசிய அவர், "பிற்காலத்தில் நாம் படம் எடுத்தால் இப்படி மாறுபட்ட பாத்திரங்களை உருவாக்க வேண்டும் என்றும் நினைத்தேன். அந்தத் தாக்கத்தில்தான் குணா படத்தில் வரும் கமலின் கதாபாத்திரத்தை வடிவமைத்தேன். நடிகர்களின் முகத்திலோ, உடையிலோ அழகு இல்லை. அவர்களின் நடிப்பில் இருக்கிறது என்பதை எனக்கும், தமிழ் சினிமாவுக்கும் உணர்த்தியவர் பாரதிராஜா. கமலை வழக்கமான முறையில் காட்டாமல் அப்படி மாறுபடுத்திக் காட்டியதால்தான் அந்தப் படமும் வெற்றி பெற்றது. சப்பாணி மக்கள் மனதில் நீங்கா இடத்தைப் பிடித்தார்" என்றும் தெரிவித்தார்.
சக்தி (காதல் ஓவியம்)
இது, பாரதிராஜா, இளையராஜா, எஸ்பிபி கூட்டணியில் வந்த பரதநாட்டிய கலைஞர் ஒருவருக்கும், பாடகருக்கும் இடையிலான இசை கலந்த காதல் கதை. பாடகர் கண் பார்வையை இழக்கவே, காதலிக்கு இன்னொருவருடன் கட்டாயத் திருமணம் நடக்கிறது. அதன் பிறகு மீண்டும் இருவரும் சந்திக்கும்போது என்ன நடக்கிறது என்பதை காதல் ஓவியத்தில் சொல்லியிருந்தார் பாரதிராஜா.
இந்தப் படத்தில் பாடகர் கதாபாத்திரத்தில் நடித்தவர் கண்ணன் என்கிற சுனில்கிர்பலானி. இவர் குடும்பம் பாகிஸ்தானில் இருந்து இந்தியாவுக்கு புலம் பெயர்ந்து வந்தது. பெங்காலி படத்தில் நடிக்க வாய்ப்பு தேடிக் கொண்டிருந்தவரை தேனாம்பேட்டை காவல் நிலைய வாசலுக்கு நேரெதிரில் இருந்த 'ஜாமா லாட்ஜ்' பக்கமாகப் பார்த்து, உடனேயே காதல் ஓவியம் படத்தின் கதாநாயகனாக்கியுள்ளார் பாரதிராஜா.
கண்ணன் குறித்துப் பேசியுள்ள பாரதிராஜா, "அவரது அண்ணனிடம் மட்டும் சொல்லிவிட்டு ஷூட்டிங் வந்துவிட்டார். ஷூட்டிங்கில் யாரிடமும் பேசமாட்டார். அமைதியாகவே இருப்பார். வசனம், பாடல்கள் அனைத்தையும் ஆங்கிலத்தில் எழுதி வைத்துப் படிப்பார், பேசுவார். அற்புதமாக நடித்தார். அவரை என்னால மறக்க முடியாது. ஆனால், அவருக்கு திரையுலகம் ஒத்து வரவில்லை. அந்த ஒரே படத்துடன் சென்றுவிட்டார்," என்று கூறியிருக்கிறார்.
இப்போது அமெரிக்காவில் வசித்து வரும் கண்ணனிடம் பிபிசி தமிழ் பேசியபோது, ''காதல் ஓவியம் படமே மிகவும் தனித்தன்மையானது. அந்தக் காலத்திலேயே அவ்வளவு முற்போக்காக, புதுவித காதலாக அந்தப் படத்தை எடுத்தார். மனோஜ் கிரியேஷன் சார்பில் அவர் தயாரித்த முதல் படமும் அதுதான். கண் பார்வையை இழந்த பாடகனின் காதல் கதையை அழகியலோடு எடுத்தார்" என்று கூறினார்.
அப்படிப்பட்ட படத்தில், "தெருவில் தேநீர்க் கடையில் நின்று கொண்டிருந்த என்னை கதாநாயகனாக முன்னிறுத்தினார். அவர்தான் அனைத்தையும் சொல்லிக் கொடுத்தார். ஆண்டுகள் கடந்தாலும் அந்தப் படத்தை இப்போதும் பார்த்து ரசிக்கிறார்கள். பாரதிராஜா, இளையராஜா, எஸ்பிபி, வைரமுத்து கூட்டணியில் வந்த காதல் ஓவியம் ஒரு இசை காவியம் என்பேன்" என்று தனது அனுபவத்தைப் பகிர்ந்துகொண்டார்.
மேலும், தமிழ் திரையுலகிலும் முக்கியமான படமாக இது இருப்பதாகக் கூறிய அவர், "இயக்குநர் பாரதிராஜா இன்று இல்லை. ஆனாலும், அந்தப் படத்தின் தாக்கம், அதன் நினைவுகள் என்னுடனும் மக்களுடனும் எப்போதும் இருக்கும்" என்றார்.
பாலுத்தேவர் (வேதம் புதிது)
கே.கண்ணன் எழுதிய ஜாதிகள் இல்லையடி பாப்பா என்ற நாடகமே பிற்காலத்தில் வேதம் புதிது படமாக வந்தது.
அதுவரை வில்லனாக, வளர்ந்து வரும் கதாநாயகனாக நடித்துக் கொண்டிருந்த சத்யராஜை பாலுத்தேவர் என்ற அழுத்தமான கேரக்டரில், அதுவும் கொஞ்சம் வயதான கேரக்டரில் நடிக்க வைத்தார் பாரதிராஜா.
இரண்டு சமூகங்களுக்கு இடையிலான இடைவெளி, காதல், தியாகம், கலவரம், சமூக ஒற்றுமை ஆகியவற்றை கமர்ஷியல் பாணியில் பேசியிருக்கும் படம்தான் வேதம் புதிது.
வேதம் புதிது படம் குறித்து சத்யராஜ் பேசுகையில் "இந்தப் படத்திற்கு பல்லக்கு சீன், வேறு சில வசனங்களால் பிரச்னை வந்து, படம் வெளியாவது சிக்கலானது. அதைக் கேள்விப்பட்ட அப்போதைய முதல்வர் எம்ஜிஆர், இயக்குநர் பாரதிராஜாவை அழைத்து படத்தைப் பார்க்க வேண்டுமென்றார். ஏவிஎம் ஏசி பிரிவியூவில் படம் பார்த்தார். அப்போது நானும் எம்ஜிஆருடன் படம் பார்த்தேன்," என்று தனது அனுபவத்தைப் பகிர்ந்தார்.
எம்.ஜி.ஆர் தன்னை அருகில் உட்கார வைத்து, தட்டி கொடுத்துப் பாராட்டியதாகவும் கூறுகிறார் நடிகர் சத்யராஜ்.
அதோடு, "படம் முடிந்தவுடன் என் கைகளில் முத்தம் கொடுத்தார். பாரதிராஜாவை அழைத்துப் பேசினார். பட வெளியீட்டுத் தேதியை அறிவிக்குமாறும் மற்றவற்றைத் தான் பார்த்துக் கொள்வதாகவும் கூறினார். எம்.ஜி.ஆரால் தான் பாலுத்தேவர் வெளியே வந்தார்" என்றும் கூறினார்.
மாயாண்டி தேவன் (கிழக்கு சீமையிலே)
தமிழ் திரையுலகில் அண்ணன், தங்கை உறவைச் சுற்றி நுாற்றுக்கும் மேற்பட்ட கதைகள் வந்துள்ளன. ஆனால், மண்ணின் மணம், தெற்கத்தி கலாசாரம், செய்முறை, உறவுச் சிக்கல் ஆகியவற்றின் பின்னணியில் அழுத்தமான கதையம்சத்தில் வந்த படம் 'கிழக்கு சீமையிலே'.
அண்ணனாக விஜய குமாரும், தங்கையாக ராதிகாவும் நடித்தனர்.
கிழக்கு சீமையிலே படம் குறித்துப் பேசிய எழுத்தாளர் ரத்னகுமார், "தெற்கத்தி சீமை மனிதர்களின் குணம், கலாசாரம், அங்குள்ள அண்ணன்-தங்கை உறவு, பஞ்சாயத்து எனப் பல விஷயங்களை திரையில் பதிவு செய்த படம் அது" என்று குறிப்பிட்டார்.
இப்படி ஒரு கலாசாரம் இருந்தது, இப்படிப்பட்ட மனிதர்கள் இருந்தார்கள், இப்படிப்பட்ட சடங்கு, சம்பிரதாயம், கோபம், வீரம், பாசம் இருந்தது என்பதைத் தனது கதாபாத்திரத்தின் மூலம் விஜயகுமார் வாழ்ந்து காண்பித்ததாகவும் அவர் கூறினார்.
மலைச்சாமி (முதல் மரியாதை)
நடிகர் திலகமும், இயக்குநர் இமயமும் இணைந்து கொடுத்த தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத படம், முதல் மரியாதை.
தான் திரைத்துறைக்கு வரக் காரணமான, திரையில் ரசித்த சிவாஜியை வைத்து 32 நாளில் பாரதிராஜா எடுத்த படம் அது. அந்தப் படம் குறித்து பாரதிராஜா ஒருமுறை பேசியபோது, ''ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு அனுபவம். அப்படிப்பட்ட மகா கலைஞர் நான் கூறியபடி நடித்தார். நான் சாப்பிடாமல் வேலை செய்வதைப் பார்த்து, நாம் உழைப்பதே சாப்பிடத்தான் என்று சொல்லி, எனக்கு ரசித்துச் சாப்பிட கற்றுக் கொடுத்தார்" என்று கூறியிருப்பார்.
பிபிசி தமிழிடம் பேசிய இயக்குநரும் நடிகருமான போஸ் வெங்கட், "நான் சிறு வயதில் முதல் மரியாதை பார்த்தேன். அப்போது பாடல்கள், சில காட்சிகளை ரசித்தேன். பிற்காலத்தில் திரையுலகுக்குள் வந்து உலகளாவிய திரைப்படங்களைப் பார்க்கத் தொடங்கியபோது, 'உங்கள் மாநில மண்மணம் சம்பந்தப்பட்ட படங்களை பாருங்கள்' என்றார்கள். அப்போது மீண்டும் முதல் மரியாதை பார்க்க, அந்தப் படத்தின் கரு, நடிப்பு, சொல்லப்பட்ட விஷயங்கள் அனைத்தையும் உணர்ந்து மிரண்டு விட்டேன். ஒரு மாறுபட்ட காதலை, மிகவும் சிக்கலான விஷயத்தை தனது பாணியில் சொல்லியிருந்தார்" என்று கூறினார்.
ஈரநிலம் படத்தில் பாரதிராஜா இயக்கத்தில் தான் நடித்தபோது முதல் மரியாதை குறித்த பல விஷயங்களை பாரதிராஜா தன்னிடம் பகிர்ந்து கொண்டதாகக் கூறிய போஸ் வெங்கட், "முதல் நாளில் அதிக மேக்கப், விக் வைத்து ஸ்பாட்டுக்கு வந்த சிவாஜியை பார்த்து மிரண்டு விட்டாராம். தனது கதாபாத்திரம் இதுவல்ல என்று அவரிடம் சொல்ல முடியாமல் தவித்துவிட்டு படப்பிடிப்பை ரத்து செய்திருக்கிறார். மேக்கப்பை கலைத்துவிட்டு வந்த சிவாஜியை பார்த்து இப்படித்தான் வேண்டும் என்று சொல்ல, 'இதை முன்னமே சொல்ல வேண்டியதுதானே. நீ இயக்குநர், நான் நடிகர்' என்று கூறி சிவாஜி நடித்துக் கொடுத்ததாகக் கூறினார்," என்று விவரித்தார்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு