இரவுப் பணியில் இருப்பவர்கள் உடல்நலனை பேண உதவும் 'இருமுறை தூக்கம்' பற்றி தெரியுமா?

    • எழுதியவர், பல்லப் கோஷ்
    • பதவி, அறிவியல் செய்தியாளர்
  • பிரசுரிக்கப்பட்டது
  • வாசிக்கும் நேரம்: 8 நிமிடங்கள்

அதிகாலை நான்கு மணி, அந்த மருத்துவமனை வார்டு அமைதியாக இருக்கிறது. ஒரு பயிற்சி மருத்துவர் ஒன்பது மணி நேரமாகத் தொடர்ந்து நின்றுகொண்டே பணியாற்றிக் கொண்டிருக்கிறார். அவர் சோர்வாக இருக்கிறார், அவரது தசைகள் வலிக்கின்றன, கண்கள் சிரமப்படுகின்றன, ஆனால் காலை ஆறு மணிக்கு அவரது பணி நேரம் முடிந்து இறுதியாக வீட்டை அடைந்த பின்னர், அவர் தூங்குவதற்குப் போராடுகிறார்.

சூரிய உதயத்திற்கும் மறைவிற்கும் ஏற்ப மனித உயிரியலை ஒழுங்குபடுத்துவதற்காக, லட்சக்கணக்கான ஆண்டுகால பரிணாம வளர்ச்சியால் உருவாக்கப்பட்ட அவரது உடலியக்க கடிகாரம், இப்போது காலை ஆகிவிட்டது என்று பிடிவாதமாகக் கூறுகிறது. விழித்திருக்க வேண்டிய நேரம். எச்சரிக்கையாக இருக்க வேண்டிய நேரம். எந்தவொரு இருட்டோ, காது அடைப்பான்களோ அல்லது வெளிச்சம் புகாத அடர் திரைச்சீலைகளோ அதை முற்றிலும் அமைதிப்படுத்த முடியாது.

இது ஒரு தனிப்பட்ட குறைபாடு அல்ல. இது அவரது வேலையின் தேவைகளுக்கும், மனித உடலின் மிக ஆழமான சில செயல்பாட்டு அமைப்புகளுக்கும் இடையே ஏற்படும் ஒரு மோதலாகும். லட்சக்கணக்கான ஷிப்ட் தொழிலாளர்களின் வாழ்க்கையில் இது கண்ணுக்குத் தெரியாமல் அரங்கேறி வருகிறது. இதில் மற்ற அனைவரும் தூங்கிக் கொண்டிருக்கும் போது நாட்டை இயக்கிக் கொண்டிருக்கும் செவிலியர்கள், துணை மருத்துவப் பணியாளர்கள், பொறியாளர்கள், லாரி ஓட்டுநர்கள் மற்றும் தொழிற்சாலைத் தொழிலாளர்கள் உள்ளிட்டோர் அடங்குவர்.

நமது சொந்த உள் கடிகாரத்துடனும் நவீன வாழ்க்கை முறையுடனும் தொடர்ந்து நடத்தப்படும் இந்த இடைவிடாத போராட்டத்தினால் அவர்களுக்கு ஏற்படும் மாரடைப்பு, பக்கவாதம், புற்றுநோய், மனநல பாதிப்புகள் மற்றும் மிக முக்கியமாக அவர்களின் விலைமதிப்பற்ற நினைவாற்றல் இழப்பு போன்ற இழப்புகள் அறிவியல் பூர்வமான ஆதாரங்களாக வெளிவருகின்றன; இதை இனிமேலும் புறக்கணிப்பது மிகவும் கடினமான ஒன்றாகும்.

இரவுப் பணிகளால் ஏற்படும் பாதிப்புகளைக் குறைப்பதிலும், சீர்குலைந்த இரவு தூக்கத்தினால் ஏற்படும் தீமைகளைத் தணிப்பதிலும் நாம் தூங்கும் முறையை மாற்றுவது ஏதேனும் பங்காற்ற முடியுமா என்பது குறித்து விஞ்ஞானிகள் இப்போது ஆராயத் தொடங்கியுள்ளனர். அவர்களின் ஆய்வுகள் ஒரு ஆச்சரியமான கோட்பாட்டையும் சோதித்துப் பார்க்கின்றன: அதாவது, பகல் நேரத்தில் ஒரே நீளமான தூக்கத்தை வலுக்கட்டாயமாகப் பெற முயற்சிப்பதை விட, தூக்கத்தை இரண்டு தனித்தனிப் பகுதிகளாகப் பிரிப்பதுதான் உண்மையில் இரவு நேரத்தில் வேலை செய்பவர்களுக்கு மிகவும் பயனுள்ள தூக்க முறையாக இருக்கும் என்பதே அந்த கோட்பாடு.

ஷிப்ட் வேலைக்கு கொடுக்கும் விலை

ஷிப்ட் வேலை உடலுக்கு என்ன செய்கிறது என்பதைப் புரிந்து கொள்ள, தூக்கத்தைப் பற்றி வளர்ந்து வரும் புதிய ஆராய்ச்சிகள் என்ன கூறுகின்றன என்பதைப் பார்ப்பது அவசியமாகும். மூளைக்கும் உடலுக்கும் ஓய்வு கொடுப்பதை தாண்டி தூக்கம் பல விஷயங்களை செய்கிறது.

நாம் தூங்கும் போது, நமது மூளை அன்றைய நாளின் நினைவுகளை ஒருங்கிணைத்து வலுப்படுத்துகிறது, உணர்ச்சிகளைக் கையாள்கிறது மற்றும் விழித்திருந்த நேரத்தில் தன்னால் தீர்க்க முடியாத பிரச்னைகளுக்குத் தீர்வு காண்கிறது. இது நோய் எதிர்ப்புத் திறனை வலுப்படுத்துகிறது மற்றும் தசை திசுக்களைப் சீரமைக்கிறது.

ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் தூக்கவியல் விஞ்ஞானியாக இருக்கும் பேராசிரியர் ரஸ்ஸல் ஃபாஸ்டர், தூங்கும் மூளையின் உயிரியல் குறித்து ஆராய்வதற்காகத் தனது முழு வாழ்க்கையையும் செலவிட்டுள்ளார்.

"நாம் உணவு மற்றும் உடற்பயிற்சியைப் பற்றி எப்படி நினைக்கிறோமோ, அதேபோல தூக்கமும் நமது ஆரோக்கியத்தின் ஒரு முக்கியத் தூணாகும்" என்று அவர் கூறுகிறார், "நாம் அதை நம் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வர வேண்டும்."

அந்த வகையில் பார்க்கும்போது, ஷிப்ட் வேலையினால் ஏற்படும் பாதிப்பை எளிதாகப் புரிந்து கொள்ள முடிகிறது: இது வெறும் சோர்வைப் பற்றியது மட்டுமல்ல, பலரும் உணராத வகையில், மூளைக்குத் பின்னால் பல வேலைகளைச் செய்து கொண்டிருக்கும் ஒரு தற்காப்பு அமைப்பைத் தொடர்ந்து மீண்டும் மீண்டும் சீர்குலைப்பதைப் பற்றியது.

சமீபத்திய ஆண்டுகளில் கண்டறியப்பட்ட மிக முக்கியமான கண்டுபிடிப்புகளில் ஒன்று, நாம் தூங்கும் போது மூளை தன்னைத்தானே சுத்தம் செய்து கொள்கிறது என்பதாகும். மூளையின் சாம்பல் நிறப் பகுதிக்கு (grey matter) உள்ளே 'கிளிம்பாட்டிக் அமைப்பு' (glymphatic system) எனப்படும் ஒரு குழாய் போன்ற கட்டமைப்பு உள்ளது. மூளையின் ரத்த நாளங்களுக்குப் பக்கத்தில் உள்ள சிறிய பாதைகளின் வழியாகத் திரவம் பாய்ந்து, நாம் விழித்திருக்கும் நேரத்தில் மூளையில் சேரும் கழிவுப் பொருட்களைக் கழுவி வெளியேற்றுகிறது.

அப்படியானால் தூக்கம் தடைபடும் போது இந்த நச்சுகளுக்கு என்ன நடக்கிறது?

கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் பக்கவாதம் மருத்துவக் குழுவிற்குத் தலைமை தாங்கும் நரம்பியல் நிபுணரான பேராசிரியர் ஹக் மார்கஸ், இந்தக் கேள்விக்கு விடையளிக்கத் தொடங்கியுள்ளார்.

மார்கஸ் மற்றும் மருத்துவ மாணவரான யுடோங் சென் ஆகிய இருவரும், 'யுகே பயோபேங்க்' -ல் ஒரு தசாப்தத்திற்கும் மேலாகச் சேகரிக்கப்பட்ட சுகாதாரப் பதிவுகள் மற்றும் மருத்துவ ஸ்கேன்களின் மிகப்பெரிய தரவுத்தளத்திலிருந்து, 40,000-க்கும் மேற்பட்ட மக்களின் மூளை ஸ்கேன்களை ஆய்வு செய்தனர். இந்த ஸ்கேன்கள் எடுக்கப்படும் போது அவர்கள் அனைவரும் ஆரோக்கியமாகவே இருந்தனர்.

மூளையின் கழிவுநீக்க மண்டலம் செயல்பட சிரமப்படுபவர்களைத் தங்களால் அடையாளம் காண முடியும் என்பதை ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்தனர். எனினும், மிக முக்கியமாக, மூளையின் கழிவுநீக்க மண்டலம் மிகவும் மோசமாகப் பாதிக்கப்பட்டவர்கள், பல ஆண்டுகள் கழித்து 'டிமென்ஷியா' (மறதி நோய்) பாதிப்புக்கு ஆளாவதற்கான வாய்ப்புகள் கணிசமாக அதிகமாக இருப்பதை அவர்கள் கண்டறிந்ததாக மார்கஸ் கூறுகிறார்.

"அந்த கழிவுநீர் ஓட்டத்தில் ஏற்படும் சீர்குலைவு, சாதாரண மக்களில் யாருக்கு டிமென்ஷியா ஏற்படும் என்பதைக் கணிப்பதில் ஒரு முக்கியப் பங்கை வகிக்கிறது" என்று அவர் கூறுகிறார்.

இந்த கழிவுநீக்க மண்டலம் அகற்றும் கழிவுப் பொருட்களில் 'அமிலாய்ட்' மற்றும் 'டவ்' (tau) எனப்படும் புரதங்களும் அடங்கும்; இவை அல்சைமர் நோயால் பாதிக்கப்பட்டவர்களின் மூளையில் தேங்கும் படிவுகளாகும். ஒரே ஒரு இரவு தூக்கமில்லாமல் இருப்பது கூட, மூளையைச் சுற்றியுள்ள திரவத்தில் அமிலாய்ட் அளவை அளவிடக்கூடிய அளவுக்கு உயர்த்துகிறது. இதையே ஆண்டுதோறும் மீண்டும் மீண்டும் செய்யும்போது, அதன் விளைவுகள் கவலைக்குரியதாக மாறுகின்றன.

ஸ்வீடனைச் சேர்ந்த கரோலின்ஸ்கா இன்ஸ்டிடியூட் ஆராய்ச்சியாளர்களின் ஆய்வு ஒன்று, இரவு நேரப் பணியாளர்கள் உட்பட 13,000-க்கும் மேற்பட்ட ஷிப்ட் பணியாளர்களை 41 ஆண்டுகள் வரை பின்தொடர்ந்து கண்காணித்தது. அதில், நடுத்தர வயதில் ஷிப்ட் முறையில் வேலை செய்வது 36% கூடுதல் டிமென்ஷியா அபாயத்துடன் தொடர்புடையது என்பதைக் கண்டறிந்தது - ஒரு நபர் எவ்வளவு நீண்ட காலம் ஷிப்ட் முறையில் பணியாற்றினாரோ, அந்த அளவுக்கு இந்த அபாயமும் அதிகரித்தது.

பாஸ்டர் இந்தத் தொடர்பை மிகைப்படுத்திக் கூறாமல் எச்சரிக்கையாக இருக்கிறார். "குறைந்த தூக்கம் தான் டிமென்ஷியாவை ஏற்படுத்துகிறது என்று நீங்கள் கூற முடியாது," என்று அவர் கூறுகிறார், "ஆனால் நீங்கள் ஏற்கனவே அந்த நோய்ப் பாதிப்புக்கு ஆளாகக்கூடிய நிலையில் இருந்தால், இது ஒரு சாத்தியமான ஆபத்துக் காரணியாகும்."

மார்கஸின் தரவுகள் இதற்கான சாத்தியமான தொடர்பைக் காட்டுகின்றன, ஆனால் இது தற்போதைய நிலையில் ஒரு கருதுகோள் மட்டுமே என்றும், இதில் இன்னும் பல காரணிகள் முக்கியப் பங்கு வகிக்க வாய்ப்புள்ளது என்றும் அவர் எச்சரிக்கிறார்.

"தூக்கம் முக்கியமானது," என்று அவர் கூறுகிறார், "ஆனால் இரத்த அழுத்தம், புகைபிடித்தல், நீரிழிவு போன்ற பெரிய இரத்த நாளங்கள் சார்ந்த விஷயங்களும் முக்கியமானவை. அல்சைமர் நோய் வருவதற்கான ஆபத்தில் இவைகளின் பங்கு எவ்வளவு என்பது பற்றி எப்போதுமே குறிப்பிடப்படுவதில்லை - ஆனால், இவை நம்மால் உண்மையில் கட்டுப்படுத்தக்கூடிய விஷயங்கள்."

தூக்கக் கலக்கம் எவ்வாறு இதய நோய் அபாயத்தை அதிகரிக்கக்கூடும் என்பதற்கான ஆரம்பக்கட்ட, ஆனால் அதிகரித்து வரும் சில சான்றுகளும் உள்ளன. கடந்த ஆண்டு வெளியிடப்பட்ட 35 ஆய்வுகளின் பகுப்பாய்வு ஒன்றில், மூன்று அல்லது அதற்கு மேற்பட்ட இரவுகளில் தூக்கம் சுமார் 4.5 மணி நேரமாகக் குறையும் போது, அது உடலின் நோய் எதிர்ப்பு மண்டலத்தின் செயல்பாட்டைக் கணிசமாக உயர்த்துகிறது எனக் கண்டறியப்பட்டது. உடலானது ஒரு நோயை எதிர்த்துப் போராடத் தூண்டப்படும்போது இது வழக்கமாக ஒரு நல்ல விஷயம் தான், ஆனால் இது உடலில் வீக்கத்தையும் ஏற்படுத்துகிறது. இந்த வீக்கம் தொடர்ந்து நீடித்தால், அது இதய நோயுடன் தொடர்புடையதாக மாறிவிடுகிறது.

சீரற்ற தூக்கம் மன அழுத்த ஹார்மோனான 'கார்டிசோல்' அளவை உயர்த்துகிறது, இது இன்சுலின் எதிர்ப்பை ஊக்குவித்து உடலை நீரிழிவு நோயை நோக்கித் தள்ளுகிறது. கார்டிசோலின் அதிகப்படியான அளவு தூக்கத்தை மேலும் கெடுக்கிறது, இது பணியாளர்களை ஒரு சுழற்சிக்குள் சிக்க வைக்கிறது. இதனுடன், சில ஷிப்ட் பணியாளர்கள் இரவு முழுவதும் விழித்திருக்கச் சாப்பிடும் சர்க்கரை நிறைந்த தின்பண்டங்களையும் சேர்த்துக் கொண்டால், அது உடலுக்கு மிகவும் ஆபத்தான ஒரு கலவையாக மாறிவிடுகிறது.

இவை போதாதென்று, உலக சுகாதார அமைப்பின் சர்வதேச புற்றுநோய் ஆராய்ச்சி நிறுவனம், இரவு நேர ஷிப்ட் வேலையை "மனிதர்களுக்குப் புற்றுநோயை உருவாக்கக்கூடிய சாத்தியம் கொண்டது" என வகைப்படுத்தியுள்ளது. மார்பகப் புற்றுநோய், புரோஸ்டேட், பெருங்குடல் மற்றும் மலக்குடல் புற்றுநோய்களுடன் இதற்குள்ள தொடர்புகளின் சான்றுகளைக் குறிப்பிட்டு, இதைச் சிவப்பு இறைச்சிக்கு இணையான அபாயம் இருக்கும் குழுவில் வைத்துள்ளது.

உடலின் சர்க்காடியன் அமைப்பில் (உயிரியல் கடிகாரம்) ஏற்படும் சீர்குலைவு, கட்டிகளைக் கட்டுப்படுத்தும் பண்புகளைக் கொண்டதாகக் கருதப்படும் 'மெலடோனின்' ஹார்மோன் உற்பத்தியின் நேரத்தை மாற்றுவதே இதற்குப் பக்கவிளைவாக இருக்கலாம்; இதனுடன் பகல் வெளிச்சம் இல்லாததால் வைட்டமின் டி குறைபாடு ஏற்படுவது மற்றும் தடைபட்ட தூக்கத்தால் உண்டாகும் நாள்பட்ட லேசான உடல் வீக்கம் ஆகியவையும் இதற்குக் காரணங்களாக இருக்கலாம்.

இருமுறை தூங்கும் முறை

பிரிட்டனில் இரவு நேர ஷிப்டுகளில் பணிபுரியும் தங்களின் தூக்கத்தை சீர்குலைப்பதைத் தவிர வேறு வழியில்லாத 30 லட்சத்துக்கும் அதிகமான மக்களுக்கு, இவை அனைத்தும் கவலையளிப்பதாக இருக்கலாம். ஆனால், அவர்களுக்கு உண்மையில் எது உதவக்கூடும் என்பதை ஆராய்ச்சியாளர்கள் இப்போது துல்லியமாகக் கண்டறியத் தொடங்கியுள்ளனர்.

ஒஸ்லோவில் உள்ள நார்வேயின் தேசிய தொழில்சார் சுகாதார நிறுவனத்தின் ஆராய்ச்சியாளரான டாக்டர் லைன் விக்டோரியா மோயன், திட்டமிடப்பட்ட ஒரு சிறு தூக்கம் இதற்கான தீர்வின் ஒரு பகுதியாக இருக்குமா என்பது குறித்து ஆராய்ந்து வருகிறார்.

ஆர்டிக் சர்க்கிள் பகுதியில் பணிபுரியும் ஷிப்ட் தொழிலாளர்கள் குறித்த தங்களது ஆய்வில் இருந்து, இந்த ஆராய்ச்சிக் குழு ஒரு சுவாரசியமான கண்டுபிடிப்பை கண்டறிந்தது. அங்கு கோடைக் காலத்தில் சூரியன் மறைவதே இல்லை. ஒரு மனிதன் தூங்குவதற்கு அந்த பகல் நேரத்துடன் போராட வேண்டியிருக்கும். ஒரு நபரின் உடலியக்க கடிகாரத்திற்கும் இயற்கைச் சூழலுக்கும் இடையே நடக்கும் போராட்டத்தை ஆராய்வதற்கு அது ஒரு சிறந்த இடமாக இருந்தது.

மோயன் நார்வேயின் தொலைதூர வடக்குப் பகுதியில் உள்ள ஷிப்ட் பணியாளர்களைப் தொடர்ந்து கண்காணித்தார். அந்தப் பணியாளர்கள் தங்கள் தூக்கத்தைக் கண்காணிக்க 'அவுரா வளையங்களை' அணிந்திருந்தனர். மோயன் அந்தத் தரவுகளை உன்னிப்பாக ஆராய்ந்தபோது, ஒரு குறிப்பிட்ட நடைமுறை வெளிப்பட்டது. அவர்களில் பலர் வேலை முடிந்து வீட்டிற்கு வந்ததும், களைப்பினால் நீண்ட நேர ஒரே தூக்கமாக விழுந்து தூங்கவில்லை. அவர்கள் காலை ஒன்பது மணி முதல் ஒரு மணி வரையிலும், பின்னர் அடுத்த ஷிப்ட்டிற்குச் செல்வதற்கு முன்பு மதிய நேரத்திலும் என இரு வேறுபட்ட தனித்தனிப் பகுதிகளாகப் பிரித்துத் தூங்கிக் கொண்டிருந்தனர்.

"அவர்களுடைய உடல் அவர்களைக் கட்டாயப்படுத்தி எழுப்புகிறது," என்று அவர் கூறுகிறார், "மதிய வேளையில் சில கூடுதல் தூக்கத்தைப் பெற்று உடலைத் தேற்றிக் கொள்ளச் செய்கிறது."

இந்தத் தூக்க முறைக்கு ஒரு பெயர் உண்டு: அது தான் 'பைஃபாசிக் ஸ்லீப்' (biphasic sleep - இருமுறைத் தூக்கம்). இதன் பொருள் 24 மணி நேரத்தில் ஒரே ஒரு நீண்ட தூக்கமாகத் தூங்குவதற்குப் பதிலாக, இரண்டு தனித்தனி கால அளவுகளில் தூங்குவதாகும். இது தூக்க வரலாற்று ஆய்வாளர்கள் நீண்ட காலமாக கவனித்து வந்த ஒரு விஷயத்தை எதிரொலிக்கிறது: செயற்கை விளக்குகள் இல்லாத, தொழில்துறை புரட்சிக்கு முந்தைய காலத்தில், மனிதர்கள் பெரும்பாலும் இரண்டு பகுதிகளாகப் பிரித்துத் தூங்கினர். இதற்கான உயிரியல் காரணங்கள் இன்னும் விவாதத்தில் இருந்தாலும், இது மிகவும் இயற்கையான ஒரு சுழற்சியாக இருக்கலாம் என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

தொழில்துறை புரட்சிக்கு முந்தைய ஐரோப்பாவின் ஆவணக் காப்பகங்களில் 40 ஆண்டுகள் ஆராய்ச்சி செய்த வெர்ஜீனியா டெக் பல்கலைக்கழக வரலாற்று ஆய்வாளரான ரோஜர் எகிர்க், 19-ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதி வரை மேற்கத்திய உலகில் இரண்டு பகுதிகளாகத் தூங்குவதுதான் முதன்மையான தூக்க முறையாக இருந்தது என்பதை உறுதிப்படுத்தியுள்ளார்.

அக்காலத்தில் ஒரு சாதாரண குடும்பம், இரவு ஒன்பது மணி அளவில் படுக்கைக்குச் சென்று, நள்ளிரவுக்குப் பிறகு இயல்பாகவே விழித்து, ஒரு மணி நேரம் அல்லது அதற்கு மேல் பிரார்த்தனை, வீட்டு வேலைகள், உரையாடல் ஆகியவற்றில் ஈடுபட்டுவிட்டு - பின்னர் அவர்கள் தங்களது "இரண்டாவது தூக்கம்" என்று அழைத்த மற்றொரு தூக்கத்திற்குள் மீண்டும் மூழ்குவார்கள் என்பதை அவர் கண்டறிந்தார்.

செயற்கை விளக்குகள் இரவின் பொருளாதாரத்தை மாற்றியமைக்கும் வரை இந்தத் தூக்க முறை நீடித்தது: 1807-ஆம் ஆண்டில் லண்டனின் தெருக்களில் எரிவாயு விளக்குகள் ஒளிரத் தொடங்கின, மக்கள் அதிக நேரம் விழித்திருக்க ஆரம்பித்தனர், இதனால் அந்த இரண்டு தூக்கங்களுக்கு இடையே இருந்த இடைவெளி சுருங்கி, இறுதியில் முற்றிலும் மறைந்து போனது.

பழைய தூக்கச் சுழற்சி முறை இன்னும் முழுமையாக அழிந்துவிடவில்லை என்று எகிர்க் நம்புகிறார். "நள்ளிரவில் ஏற்படும் தூக்கமின்மை என்பது பல நாடுகளில் மிகவும் பரவலாகக் காணப்படும் ஒரு தூக்கக் குறைபாடாகும்," என்று அவர் கூறுகிறார்.

"பல சந்தர்ப்பங்களில், இது ஒரு குறைபாடே அல்ல. மாறாக, இது முந்தைய காலத்து தூக்க முறையின் எஞ்சியிருக்கும் ஒரு தொடர்ச்சியான எதிரொலி அல்லது எச்சம் ஆகும் என்று நான் வாதிடுவேன்," என்கிறார்.

பாஸ்டரின் சொந்த ஆய்வகப் பணிகளும் இந்த உயிரியல் கூற்றுக்கு ஆதரவாக உள்ளன: ஒரு பிரபலமான பரிசோதனையில், அமெரிக்க மனநல மருத்துவர் தாமஸ் வெஹ்ர், தன்னார்வலர்களுக்கு தொழில்துறை புரட்சிக்கு முந்தைய காலத்து குளிர்கால இரவை ஒத்த 14 மணிநேர இருண்ட சூழலை வழங்கினார். எந்தவொரு அறிவுறுத்தலும் இல்லாமலேயே, சில வாரங்களுக்குள் அவர்கள் இயல்பாகவே இரண்டு பகுதிதிகளாகப் பிரித்துத் தூங்கும் முறைக்கு மாறினர்.

"நம் உடலின் இயல்பான தூக்க முறை என்பது, நிச்சயமாக ஒரே கட்டமாகத் தூங்கும் ஒரு தூக்க வடிவம் அல்ல" என்கிறார் பாஸ்டர்.

மோயனை மிகவும் யோசிக்க வைத்தது இந்த இருமுறைத் தூக்க முறை அல்ல, மாறாக இது குறித்துக் கிடைக்கக்கூடிய சான்றுகளின் பற்றாக்குறைதான். ஷிப்ட் பணியாளர்களிடையே இந்த இருமுறைத் தூக்கம் எவ்வளவு பரவலாக இருந்தது, இதனால் என்ன வகையான ஆரோக்கிய விளைவுகள் ஏற்படுகின்றன, இவ்வாறு பிரித்துத் தூங்குவது களைப்புடன் ஒரே கட்டமாகத் தூங்குவதை விட சிறந்ததா அல்லது மோசமானதா என்பதை மதிப்பிட அவர் தரவுகளை ஆராய்ந்தார். ஆனால் அவருக்கு எவ்வித ஆதாரமும் கிடைக்கவில்லை. "எனவே இது மிகவும் சுவாரஸ்யமானது, நானே களமிறங்கி இதைச் சரியாக ஆராய்வேன் என நினைத்தேன்," என்று அவர் கூறுகிறார்.

இதைச் சரியாக ஆராய்வதற்காக 11,000 அறிவியல் கட்டுரைகளின் சுருக்கங்களை அவர் பரிசீலித்தார். ஷிப்ட் பணியாளர்களின் ஆரோக்கியம், செயல்திறன் மற்றும் அவர்களின் தனிப்பட்ட அனுபவங்கள் ஆகியவற்றில் இந்த இருமுறைத் தூக்கம் ஏற்படுத்தும் தாக்கங்களின் சான்றுகளையும் ஆய்வு செய்தார். இவரது முழுமையான ஆய்வு முடிவுகள் இந்த ஆண்டின் பிற்பகுதியில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதுவரை, இந்தத் தலைப்பில் தற்போதுள்ள ஆராய்ச்சிகள் சிதறிக்கிடப்பதையே மோயன் கண்டறிந்துள்ளார். சில ஆய்வுகள் இருமுறைத் தூக்கத்தை ஒரு நீண்ட தூக்கம் மற்றும் ஒரு சிறிய குட்டித் தூக்கம் (nap) என்று கருதுகின்றன; மற்றவை இரண்டு சமமான தூக்கக் காலங்களை மட்டுமே கணக்கில் கொள்கின்றன; இதற்கென ஒப்புக்கொள்ளப்பட்ட ஒரு பொதுவான வரையறை இன்னும் இல்லை.

தூக்கம் சார்ந்த பதற்றம்

மோயனின் ஆராய்ச்சியின் இறுதி நோக்கம், ஷிப்ட் பணியாளர்கள் மற்றும் தூக்கச் சுழற்சி மாறிய பிற நபர்களுக்கு உதவக்கூடிய தெளிவான மருத்துவ வழிகாட்டுதல்களை உருவாக்குவதாகும்.

"இரவுப் பணிமுடிந்து வந்த பிறகு அவர்களால் நீண்ட நேரம் தூங்க முடியாமல் போவதால் அவர்கள் மிகவும் பதற்றமடைகிறார்கள்," என்கிறார் மோயன். "உண்மையில் மதிய நேரத்தில் ஒரு நல்ல குட்டித் தூக்கம் போடுவது உங்களுக்கு உதவும் என்று அவர்களிடம் கூறுவது நன்றாக இருக்கும்."

ஷிப்ட் முறையில் வேலை செய்யும் போது, சாத்தியப்படும் இடங்களில் குட்டித் தூக்கம் போடுவது, தூக்கக் கலக்கத்தைக் குறைத்து விழிப்புணர்வை மேம்படுத்துகிறது என்று பல ஆய்வுகள் காட்டுகின்றன. சுகாதாரப் பணியாளர்கள் குறித்த ஆய்வுகள், ஷிப்ட்டின் போதோ அல்லது அதற்குப் பின்னரோ 20 முதல் 50 நிமிடங்கள் வரை தூங்கும் ஒரு சிறிய குட்டித் தூக்கம் கூட அவர்களின் கவனத்தை மேம்படுத்துகிறது என்றும், வேலை முடிந்து வீட்டிற்குச் செல்லும்போது தூக்கக் கலக்கத்துடன் வாகனம் ஓட்டுவதைக் குறைக்கிறது என்றும் தெரிவிக்கின்றன.

இதற்கு முன்பு மேற்கொள்ளப்பட்ட முயற்சிகளை விட மிகவும் துல்லியமாக, மோயனின் ஆராய்ச்சி விடையளிக்க முயலும் கேள்விகள் என்னவென்றால், இது எவ்வளவு பொதுவானது, இது என்னென்ன வடிவங்களை எடுக்கிறது, மற்றும் தூக்கத்தைப் பிரிப்பது ஆரோக்கியம், செயல்திறன், சோர்வு அல்லது பாதுகாப்பு ஆகியவற்றை மேம்படுத்தும் என்பதற்கான சான்றுகள் ஏதேனும் உள்ளதா என்பவைதான்.

அவரது கணவரும் ஒரு ஷிப்ட் பணியாளர் என்பதால், இந்தச் சிக்கலை அவர் துல்லியமாக விவரிக்கிறார். "அவர் எப்போதும் மூன்று அல்லது நான்கு மணிநேரத் தூக்கத்திற்குப் பிறகு மிக சீக்கிரமாகவே விழித்து விடுகிறார்," என்று அவர் கூறுகிறார். "வீட்டில் யாரும் இல்லை, இருட்டாகவும் இருக்கிறது, இருந்தாலும் அவரால் தூங்க முடிவதில்லை. அவரது பகல் நேர உயிரியல் சுழற்சிஅவரைத் தூக்கத்திலிருந்து வெளியே இழுத்து விடுகிறது."

வெளிச்சத்தைத் தடுக்கும் திரைச்சீலைகளால் அவரது உடலின் இந்தச் சுழற்சியை மாற்றிவிட முடியாது. உடலின் இந்தச் சமிக்ஞையுடன் போராடுவதை நிறுத்திவிட்டு, அதற்குப் பதிலாக அதற்கேற்ப இணைந்து செயல்படுவதற்கான அறிவியல் பூர்வமான அனுமதியை அவருக்கும், அவரைப் போன்ற மில்லியன் கணக்கான மக்களுக்கும் வழங்க மோயன் விரும்புகிறார்.

"பல ஷிப்ட் பணியாளர்களால் பகல் நேரத்தில் தூங்குவதைத் தவிர்க்க முடியாது என்பதை நாம் அறிந்திருப்பதால், அவர்கள் சிறந்த தேர்வினைக் தேர்ந்தெடுக்க நாம் எவ்வாறு உதவலாம் என்பதைப் பார்ப்பது முக்கியம் என்று நான் நினைக்கிறேன்," என்று மோயன் கூறுகிறார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு