You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
மெஸ்ஸியின் சக வீரர்கள் மீது பிஃபா நடவடிக்கை பாயுமா? ஆர்ஜென்டினா அணிக்கு புதிய சிக்கல்
- எழுதியவர், டேல் ஜான்சன்
- பதவி, கால்பந்து விவகாரங்கள் செய்தியாளர்
- பிரசுரிக்கப்பட்டது
- வாசிக்கும் நேரம்: 5 நிமிடங்கள்
உலகக் கோப்பை இறுதிப் போட்டியின் முடிவில் நடந்த மோசமான சம்பவங்கள் குறித்து ஆர்ஜென்டினா விசாரணைக்கு உள்ளாகும் என்பதை ஃபிஃபா உறுதிப்படுத்தியுள்ளது.
மெட்லைஃப் மைதானத்தில் இறுதி விசில் ஊதப்பட்ட பிறகு என்ன நடந்தது என்பதை மதிப்பிடுவதற்கு ஃபிஃபாவின் ஒழுங்குமுறைக் குழு ஒரு ஒழுங்கு நடவடிக்கை மற்றும் அறநெறி சார்ந்த வழக்குரைஞரை நியமித்துள்ளது.
இந்த மோதலில் ஈடுபட்ட எந்தவொரு வீரர் அல்லது பயிற்சியாளரும் இடைநீக்கத்தை எதிர்கொள்ளக்கூடும், அதே வேளையில் ஆர்ஜென்டினா கால்பந்து சங்கம் அபராதத்தையும் சந்திக்க நேரிடலாம்.
ஞாயிற்றுக்கிழமை நடந்த இறுதிப்போட்டியில் ஸ்பெயினிடம் 1-0 என்ற கோல் கணக்கில் ஆர்ஜென்டினா தோல்வியடைந்தது. இதைத் தொடர்ந்து, தங்களது உலகக் கோப்பை வெற்றியைக் கொண்டாடத் தொடங்கிய ஸ்பெயின் வீரர்களுடன் ஆர்ஜென்டினா அணியினர் மற்றும் உதவிப் பணியாளர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
நஹுயல் மோலினா, லியான்ட்ரோ பரீடஸ், தியாகோ அல்மாடா மற்றும் உதவிப் பயிற்சியாளர் ராபர்ட்டோ அயலா ஆகியோர் இதில் சம்பந்தப்பட்டிருப்பது போல் தோன்றியது.
ஸ்பெயின் வீரர் எரிக் கார்சியாவின் கழுத்தைப் பிடித்துத் தள்ளியதால் பரீடஸுக்கு நடுவர் ஸ்லாவ்கோ வின்சிக் சிவப்புக் அட்டை காட்டி வெளியேற்றியதாகத் தொடக்கத்தில் ஃபிஃபா தெரிவித்தது.
பரீடஸின் சிவப்புக் கார்டு சிறிது நேரத்திலேயே பதிவிலிருந்து நீக்கப்பட்டது. அந்த நேரத்தில் எந்தவொரு ஒழுங்குமுறை நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்பதை ஃபிஃபா பிபிசி ஸ்போர்ட்டிடம் உறுதிப்படுத்தியுள்ளது.
இரண்டாவது பாதியின் கூடுதல் நேரத்தில் என்ஸோ பெர்னாண்டஸ் இரண்டாவது மஞ்சள் அட்டையைப் பெற்றதால், ஆர்ஜென்டினா ஏற்கனவே ஒரு வீரரை இழந்துவிட்டிருந்தது.
ஆர்ஜென்டினா அணி அரையிறுதியில் இங்கிலாந்தை 2-1 என்ற கணக்கில் வென்ற பிறகு, ஃபாக்லாண்ட் தீவுகள் மீதான தங்களது நாட்டின் உரிமை கோரல்களுக்கு ஆதரவாக அந்த நாட்டு வீரர்கள் ஒரு பதாகையை ஏந்தியிருந்தனர். இது தொடர்பாக, ஆர்ஜென்டினாவுக்கு எதிராக சாத்தியமான ஒழுங்கு நடவடிக்கைகளை எடுப்பதற்கான செயல்முறையை ஃபிஃபா ஏற்கனவே தொடங்கியிருந்தது.
இறுதிப் போட்டி முடிந்ததும் என்ன நடந்தது?
நியூ ஜெர்சியில் இறுதி விசிலடித்ததும், லியோனல் மெஸ்ஸி உட்பட சில ஆர்ஜென்டினா வீரர்கள் மைதானத்திலேயே அமர்ந்துவிட்டனர்.
ஸ்பெயின் வீரர்கள் மைதானம் முழுவதும் ஓடி தங்களின் வெற்றியைக் கொண்டாடிய போது, மற்ற ஆர்ஜென்டினா வீரர்கள் எந்த அசைவும் இன்றி அப்படியே நின்றனர்.
கூடுதல் நேரத்தில் மாற்றப்பட்ட ரோட்ரி, தனது சக வீரர்களுடன் இணைவதற்காக மாற்று வீரர்களின் அமர்வுப் பகுதியிலிருந்து ஓடி வந்தார்.
மான்செஸ்டர் சிட்டி அணியின் நடுக்கள வீரரான ரோட்ரி, மொலினாவை கடந்து சென்றபோது, ஆர்ஜென்டினாவின் பின்கள வீரரான மொலினா, ரோட்ரியின் கை அல்லது வயிற்றில் குத்துவது போல் தெரிந்தது.
இதுவே மோதலுக்குக் காரணமாக அமைந்தது.
மொலினாவை ரோட்ரி எதிர்கொண்டார். ஆனால் ஆர்ஜென்டினா வீரர்தான் ஆக்ரோஷமான முறையில் முன்னோக்கித் பாய்ந்தார்.
கார்சியா தனது சக வீரருக்கு ஆதரவாக ஓடிவந்தார், அந்த நேரத்தில் பரேடெஸும் இதில் தலையிட்டு, கார்சியாவின் கழுத்தில் தாக்கினார்.
போட்டியில் விளையாடாமல் மாற்று வீரராக இருந்த காவி (Gavi) இதைத் தடுக்க முயன்றார், ஆனால் அவர் அல்மாடாவால் பலவந்தமாக தரையில் தள்ளப்பட்டார்.
பின்னர் பரேடெஸ், காவியின் முகத்தில் கையை வைத்து அவரைத் தரையில் தள்ளினார்.
அதன்பின் அயலா, கார்சியாவின் கழுத்தை நெரிப்பது போல் தெரிந்தது. அவர் ஸ்பெயின் நடுக்கள வீரர் டானி ஓல்மோவை தாக்குவது போலவும் தெரிந்தது.
"பரேடெஸ் ஒருவரது முகத்தில் இரண்டு அல்லது மூன்று பலத்த குத்துகளை விட்டார். அவர் அவர்களைத் தாக்கவே சென்றார்" என்று பிபிசி ஒன் நேரலையில் ஆலன் ஷீரர் கூறினார். "அதற்கெல்லாம் இங்கே இடமே இல்லை."
"இது அவர்களுக்கு எவ்வளவு முக்கியமானது மற்றும் தோல்வி எவ்வளவு வலிக்கும் என்பதை நாம் அறிவோம், ஆனால் தோற்பதற்கும் ஒரு வழி இருக்கிறது. ஆர்ஜென்டினா அணியிடம் இருந்து இதை நாம் பலமுறை பார்த்திருக்கிறோம். இறுதி விசிலுக்குப் பிறகு அவர்களின் எதிர்வினை மிகவும் மோசமானது."
"ஆட்டம் முடிந்துவிட்டது, இன்று நடந்ததைப் பற்றி அவர்கள் எந்தக் குறையும் கூற முடியாது. மிகவும் கேவலமான நடத்தை" என ஜோ ஹார்ட் மேலும் கூறினார்.
ஆனால், சூழ்நிலையை அமைதிப்படுத்த முயன்ற ஆர்ஜென்டினா பயிற்சியாளர் லியோனல் ஸ்கலோனி, போட்டிக்குப் பிந்தைய தனது நேர்காணலில் இந்தச் சம்பவங்களின் தீவிரத்தைக் குறைத்துப் பேசுவது போல் தோன்றியது.
"வெற்றியில் நாம் பெருந்தன்மையுடன் இருக்கிறோம், தோல்வியிலும் நாம் பெருந்தன்மையுடன் இருக்க வேண்டும்," என்று அவர் கூறினார். "இன்று, நமக்கு தோற்கத் தெரியும் என்பதை நாம் காட்டுகிறோம்."
"நாங்கள் போட்டியில் தோற்றுவிட்டோம், அதை நாங்கள் ஏற்றுக்கொள்கிறோம், ஆனால் அதற்காக நாங்கள் வாழ்வதை நிறுத்திவிடுகிறோம் என்றோ இங்கு வருவதற்கு நாங்கள் செய்த அனைத்தையும் மறந்துவிடுகிறோம் என்றோ அர்த்தமல்ல."
ஆர்ஜென்டினாவுக்கு என்ன சிக்கல்?
ஃபிஃபாவின் ஒழுங்குமுறை குழுவின் முன் பல தேர்வுகள் உள்ளன.
ஒரு ஒழுங்கு நடவடிக்கை மற்றும் அறநெறி சார்ந்த வழக்குரைஞரை நியமிப்பதன் மூலம், ஃபிஃபா வெறும் வன்முறை நடத்தைக்கான சாத்தியக்கூறுகளை மட்டும் ஆராயாமல், இந்த விதிமீறல்களை இன்னும் ஆழமாக ஆராயும்.
வீரர்கள் அல்லது தேசிய கால்பந்து சங்கம் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டால், கடுமையான தண்டனை கிடைப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளன.
ஒழுங்குமுறை விதியின் 13-வது பிரிவு, தரக்குறைவான நடத்தை மற்றும் நியாயமான ஆட்டத்தின் கோட்பாடுகள் ஆகியவற்றை உள்ளடக்கியது.
வீரர்கள் மற்றும் ஊழியர்களின் செயல்கள் "நாகரிகமான நடத்தைக்கான அடிப்படை விதிகளை மீறுவதாகவும்" மற்றும் "கால்பந்து விளையாட்டு மற்றும்/அல்லது ஃபிஃபா அமைப்பிற்கு அவப்பெயரை ஏற்படுத்தும் வகையில் நடந்துகொள்வதாகவும்" தீர்மானிக்கப்படலாம்.
ஒழுங்கு நடவடிக்கை மற்றும் அறநெறி சார்ந்த வழக்குரைஞர், "சூழ்நிலையை மோசமாக்கும் மற்றும் தணிக்கும் காரணிகள் இரண்டையும்" கருத்தில் கொள்வார். உலகளவில் தடை விதிக்கும் அதிகாரமும் அவருக்கு உண்டு.
மகளிர் உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் இங்கிலாந்தை ஸ்பெயின் வென்ற பிறகு, ஜென்னியின் உதட்டில் முத்தமிட்ட அப்போதைய ஸ்பானிஷ் கால்பந்து கூட்டமைப்பின் தலைவர் லூயிஸ் ருபியாலெஸ் மீது குற்றம் சாட்ட இந்த விதியைத்தான் ஃபிஃபா பயன்படுத்தியது.
இதன் காரணமாக 2023-ஆம் ஆண்டில் கால்பந்து தொடர்பான அனைத்து நடவடிக்கைகளிலிருந்தும் ருபியாலெஸுக்கு மூன்று ஆண்டுகள் தடை விதிக்கப்பட்டது. அந்த தடையை நீக்க கோரி அவர் செய்த மேல்முறையீடும் நிராகரிக்கப்பட்டது.
2014 உலகக் கோப்பையில் இத்தாலி பின்கள வீரர் ஜியோர்ஜியோ சியெலினியைக் கடித்ததற்காக, உருகுவே முன்கள வீரர் லூயிஸ் சுவாரெஸ் கால்பந்து தொடர்பான அனைத்து நடவடிக்கைகளில் இருந்தும் 4 மாதங்களுக்கு இடைநீக்கம் செய்யப்பட்டார்.
இதனால் அவர் பிரீமியர் லீக் சீசனின் முதல் ஒன்பது போட்டிகளை இழக்க நேரிட்டது.
ஆனால், அல்மாடா, அயலா, மொலினா மற்றும் பரேடெஸ் ஆகியோர் இவ்வளவு நீண்ட கால தடையை எதிர்கொள்ள வாய்ப்புக் குறைவு.
ஆர்ஜென்டினா கால்பந்து சங்கம் சமீபத்திய ஆண்டுகளில் தனது வீரர்களின் நடத்தை காரணமாகப் பல சிக்கல்களை எதிர்கொண்டுள்ளது.
2022 உலகக் கோப்பை இறுதிப் போட்டிக்குப் பிறகு, ஆர்ஜென்டினா "தரக்குறைவான நடத்தை மற்றும் நியாயமான ஆட்டத்தின் கோட்பாடுகளை மீறுதல்" மற்றும் "வீரர்கள் மற்றும் அதிகாரிகளின் தவறான நடத்தை" தொடர்பான குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டது.
தென் அமெரிக்க அணியான ஆர்ஜென்டினா, பெனால்டி ஷூட்-அவுட் முறையில் பிரான்ஸை வீழ்த்திய பிறகு வெற்றியைக் கொண்டாடிய விதம் கடுமையாக விமர்சிக்கப்பட்டது.
அந்த அணியின் கோல்கீப்பர் எமிலியானோ மார்டினெஸ், தனக்கு வழங்கப்பட்ட தொடரின் சிறந்த கோல்கீப்பருக்கான விருதைக் கொண்டு ஒரு ஆபாசமான செய்கையை செய்தார். பின்னர், அவர் டிரஸ்ஸிங் அறையில் பிரான்ஸ் வீரர் கிலியன் எம்பாப்பேயைக் கேலி செய்ததும் வீடியோவில் பதிவானது.
இதற்காக ஆர்ஜென்டினாவுக்கு 18,300 பவுண்டுகள் அபராதம் விதிக்கப்பட்டது. இதில் சம்பந்தப்பட்ட வீரர்கள் எவர் மீதும் தனிப்பட்ட நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
ஆனால், சிலி மற்றும் கொலம்பியாவுக்கு எதிரான உலகக் கோப்பை தகுதிச் சுற்றுப் போட்டிகளில் 'தரக்குறைவான நடத்தைக்காக' மார்டினெஸுக்கு 2024-ல் இரண்டு போட்டிகளில் விளையாட தடை விதிக்கப்பட்டது.
சிலிக்கு எதிரான 3-0 என்ற கோல் கணக்கிலான வெற்றிக்குப் பிறகு, கோபா அமெரிக்கா கோப்பையின் நகலைப் பயன்படுத்தி மார்டினெஸ் தனது அந்த மோசமான கொண்டாட்டத்தை மீண்டும் செய்தார். நான்கு நாட்களுக்குப் பிறகு, கொலம்பியாவிடம் 2-1 என்ற கணக்கில் தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, மைதானத்தில் ஒரு கேமராமேன் அவரை நெருங்கியபோது, மார்டினெஸ் தனது கையுறைகளால் கேமராவைத் தாக்கினார்.
ஆர்ஜென்டினாவின் 2024 கோபா அமெரிக்கா வெற்றிக்குப் பிறகு, செல்சீ அணியின் நடுக்கள வீரர் என்ஸோ பெர்னாண்டஸ் தான் வெளியிட்ட ஒரு வீடியோவிற்காக மன்னிப்பு கேட்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. அந்த வீடியோவில் இருந்த பாடல் ஒரு "இனவெறி மற்றும் பாகுபாடான" கோஷம் என்று பிரெஞ்சு கால்பந்து கூட்டமைப்பு தெரிவித்தது.
இந்த உலகக் கோப்பையிலும், இங்கிலாந்து போட்டிக்குப் பிறகு பதாகையை ஏந்தியதற்காக ஆர்ஜென்டினா கால்பந்து சங்கம் அநேகமாக அபராதத்தை எதிர்கொள்ளும் சூழ்நிலையில் உள்ளது.
அவர்களின் வீரர்கள் "லாஸ் மால்வினாஸ் சன் ஆர்ஜென்டினாஸ்" என்று எழுதப்பட்ட ஒரு துணியைப் பிடித்துக் கொண்டு கொண்டாடினர், இதன் பொருள் "ஃபாக்லாண்ட்ஸ் ஆர்ஜென்டினாவுக்குச் சொந்தமானது" என்பதாகும்.
2014ஆம் ஆண்டில், ஸ்லோவேனியாவுக்கு எதிரான ஒரு நட்பு ரீதியிலான போட்டிக்கு முன்பு, இதே செய்தியைக் கொண்ட பதாகையை ஏந்தியதற்காக ஆர்ஜென்டினா கால்பந்து சங்கத்திற்கு 20,000 பவுண்டுகள் அபராதம் விதிக்கப்பட்டது.
சர்ச்சைக்குரிய பதாகையை ஏந்தியிருந்த வீரர்களான கிறிஸ்டியன் ரொமேரோ, ஜியோவானி லோ செல்சோ மற்றும் லிசாண்ட்ரோ மார்டினெஸ் ஆகியோருக்கு ஃபிஃபா தடை விதிக்க வாய்ப்புள்ளது.
யூரோ 2024 இறுதிப் போட்டியில் இங்கிலாந்தை 2-1 என்ற கணக்கில் ஸ்பெயின் வென்ற பிறகு, கொண்டாட்டத்தின் போது "ஜிப்ரால்டர் ஸ்பெயினுக்குச் சொந்தமானது" என்று கோஷமிட்டதற்காக அவர்களின் கேப்டன் ஆல்வரோ மொராட்டா மற்றும் சக வீரர் ரோட்ரி ஆகியோருக்கு யுயேஃபா (Uefa) ஒரு போட்டியில் விளையாட தடை விதித்தது.
ஃபிஃபா நியமித்துள்ள வழக்கறிஞர் ஆர்ஜென்டினாவின் நடத்தை குறித்த விசாரணையை முடிப்பதற்கான குறிப்பிட்ட காலக்கெடு எதுவும் இல்லை.
பிப்ரவரி 18 அன்று, பென்ஃபிகாவுக்கு எதிரான ஆட்டத்தில் ரியல் மாட்ரிட் வென்றதும், அந்த அணி வீரர் வினிசியஸ் ஜூனியருக்கு எதிராக ஜியாலுன்கா ப்ரெஸ்டியானி இழைத்ததாகக் கூறப்படும் இனவெறி துஷ்பிரயோகம் குறித்து விசாரிக்க யுயேஃபா ஒரு நெறிமுறை மற்றும் ஒழுங்குமுறை ஆய்வாளரை நியமித்தது.
இரண்டு மாதங்களுக்கும் பிறகு, ஏப்ரல் 24 அன்றுதான், ஓரினச்சேர்க்கையாளர்களுக்கு எதிரான நடத்தைக்காக ப்ரெஸ்டியானிக்கு ஆறு போட்டிகளில் விளையாட தடை விதிக்கப்பட்டது, இதில் மூன்று போட்டிகளுக்கான தடை இரண்டு ஆண்டுகளுக்கு நிறுத்தி வைக்கப்பட்டது.
- இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு