You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
வரலாற்று சாதனையின் விளிம்பில் மெஸ்ஸி - இது அவரது கடைசி உலகக் கோப்பையா?
அர்ஜென்டினா விளையாட்டு வரலாற்றில் அழியாத இடம்பிடிக்கும் சாதனையிலிருந்து இன்னும் ஒரு வெற்றி தூரத்தில் உள்ளது.
அர்ஜென்டினா அணி, தொடர்ந்து இரண்டு உலகக் கோப்பைகளை வென்ற மூன்றாவது அணியாக மாறும் இலக்குடன் உள்ளது. இதற்கு முன் இத்தாலி (1934, 1938) மற்றும் பிரேசில் (1958, 1962) மட்டுமே இந்தச் சாதனையை நிகழ்த்தியுள்ளன.
ஐரோப்பிய சாம்பியனான ஸ்பெயினை வீழ்த்தி கோப்பையை வெல்ல வேண்டுமெனில், லியோனல் மெஸ்ஸி மீண்டும் தனது சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டியிருக்கும்.
மெஸ்ஸிதான் எல்லா காலத்திலும் சிறந்த வீரரா?
இந்தக் கேள்விக்கு உங்கள் பதில் எதுவாக இருந்தாலும், அது பல மணி நேரங்கள் விவாதிக்கப்படக்கூடிய விஷயமாக இருந்தாலும், அர்ஜென்டினாவின் இந்த மாயாஜால வீரர் கால்பந்து மைதானத்தில் கால் பதித்த மிகச் சிறந்த வீரர்களில் ஒருவர் என்பதில் மறுப்பு இல்லை.
ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் இறுதிப்போட்டியில் அர்ஜென்டினா வென்றால், உலகக் கோப்பையை இரண்டு முறை கேப்டனாக ஏந்திய முதல் வீரர் என்ற பெருமையை மெஸ்ஸி பெறுவார்.
முதல் நான்கு உலகக் கோப்பை தொடர்களில் அவரது செயல்பாடு எதிர்பார்ப்புகளை முழுமையாக பூர்த்தி செய்யவில்லை என்று சிலர் கருதியிருந்தாலும், 2022 உலகக் கோப்பையில் அவர் அசாதாரணமாக விளையாடி அர்ஜென்டினாவை சாம்பியனாக்கினார்.
மேலும், உலகக் கோப்பை வரலாற்றில் அதிக கோல்கள் அடித்த வீரர் என்ற சாதனையை நோக்கி முன்னேறி வரும் மெஸ்ஸி, தற்போது கிலியன் எம்பாப்பேவுக்கு வெறும் ஒரு கோல் மட்டுமே பின்தங்கியுள்ளார்.
2016-ஆம் ஆண்டு சர்வதேச கால்பந்தில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்த மெஸ்ஸி பின்னர் தனது முடிவை மாற்றிக்கொண்டார்.
இந்த உலகக் கோப்பை இறுதிப்போட்டி, உலகக் கோப்பை தொடரில் மெஸ்ஸியின் 34-ஆவது போட்டியாக இருக்கும்.
ஆனால், நீலமும் வெள்ளையும் கலந்த அர்ஜென்டினா ஜெர்சியில் மெஸ்ஸியை நாம் காணும் கடைசி போட்டி இதுவாக இருக்குமா?
மெஸ்ஸியின் அடுத்த கட்டம் என்னவாக இருக்கும்? மேலும், 2030-ஆம் ஆண்டு நடைபெறவுள்ள தனது ஏழாவது உலகக் கோப்பை தொடரில்கூட அவர் விளையாட முயற்சிப்பாரா?
இந்தக் கேள்விகளுக்கான பதில்களை பிபிசி ஸ்போர்ட் ஆராய்கிறது.
மெஸ்ஸியின் 'ஆர்வம்' 2030 உலகக் கோப்பை வரை அழைத்துச் செல்லுமா?
மெஸ்ஸி 2030 உலகக் கோப்பை வரை அர்ஜென்டினா அணிக்காகத் தொடர்ந்து விளையாட முடிவு செய்தால், 43 வயதில் உலகக் கோப்பையில் விளையாடிய மிக வயதான கள வீரர் என்ற சாதனையைப் படைப்பார். ஆனால், கிறிஸ்டியானோ ரொனால்டோவும் போர்ச்சுகல் அணிக்காக தொடர்ந்து விளையாட முடிவு செய்தால் நிலைமை மாறலாம்.
மெஸ்ஸி தனது நீண்ட சாதனைப் பட்டியலில் மேலும் ஒரு புதிய சாதனையைச் சேர்ப்பதுடன், அடுத்த உலகக் கோப்பையின் தொடக்கத்தில் அர்ஜென்டினாவில் நடைபெறவுள்ள நூற்றாண்டு விழா போட்டிகளில் ஒன்றில் விளையாடும் வாய்ப்பையும் பெறுவார்.
ஸ்பானிய கால்பந்து நிபுணர் கில்லெம் பாலாகுவே, இந்த உலகக் கோப்பையில் ரசிகர்கள் மெஸ்ஸியை கடைசியாகப் பார்க்கப் போவதில்லை என்று நம்புகிறார்.
"காத்திருந்து பார்ப்போம். அவர் தேசிய அணியுடன் தொடர்வார் என்று நினைக்கிறேன். ஏனெனில், அவர் அதை மிகவும் ரசிக்கிறார்," என்று அவர் கூறினார்.
"அவர் இன்டர் மியாமிக்காக மேஜர் லீக் சாக்கரில் தொடர்ந்து விளையாடிக் கொண்டிருக்கும்போது, திடீரென தேசிய அணியிலிருந்து விலகிவிடுவார் என்று நான் நினைக்கவில்லை."
2026 உலகக் கோப்பையில் மெஸ்ஸியின் செயல்பாடு அபாரமானதாக இருந்துள்ளது. ஏழு போட்டிகளில் எட்டு கோல்கள் அடித்துள்ள அவர், தொடரின் அதிக கோல்கள் அடித்த வீரரான கிலியன் எம்பாப்பேவுக்கு இரண்டு கோல்கள் மட்டுமே பின்தங்கி உள்ளார். மேலும், தொடர்ச்சியான சிறப்பான ஆட்டங்கள் மூலம் அர்ஜென்டினாவை இறுதிப்போட்டிக்கு அழைத்துச் சென்றுள்ளார்.
அர்ஜென்டினா அணி மேலாளர் லியோனல் ஸ்கலோனி, மெஸ்ஸியை எல்லாக் காலத்திலும் சிறந்த வீரர் என்று புகழ்ந்தார்.
"அவர் ஒரு வரலாறு; ஒரு புராணம். அவரைப் பற்றி பெருமைப்படுகிறேன். உலகம் கண்ட மிகச் சிறந்த கால்பந்து வீரர் அவர்தான். 39 வயதில் ஒரு உலகக் கோப்பை இறுதிப்போட்டியை அடைவது நம்ப முடியாத ஒன்று. அதனால்தான் அவரை நாம் முழுமையாக ரசிக்க வேண்டும் என்று சொல்கிறேன்.'' என்கிறார் அவர்.
''மரடோனாவை நாம் இன்னும் நினைத்து ஏங்குகிறோம். ஆனால் மெஸ்ஸி இன்னும் நம்முடன் இருக்கிறார். அதனால் அவரை நாம் கொண்டாட வேண்டும்," என்றார்.
இது மெஸ்ஸியின் கடைசி போட்டியா என்பது குறித்து, "எனக்குத் தெரியாது. அதை அவரிடமே கேட்க வேண்டும். இதுபற்றி நாங்கள் விவாதிக்கவில்லை," என்றும் அவர் கூறினார்.
வட அமெரிக்காவில் அவர் வெளிப்படுத்திய ஆட்டம், உலகக் கோப்பை அரங்கில் அவரது வாழ்க்கையின் இறுதிக்கட்டத்தில் ஏற்பட்ட அசாதாரண எழுச்சியைத் தொடர்கிறது. உலகக் கோப்பையில் அவர் அடித்துள்ள 21 கோல்களில் 15 கோல்கள், அவரது 35-ஆவது பிறந்தநாளுக்குப் பிறகு வந்தவை.
2022-ஆம் ஆண்டு கத்தாரில் உலகக் கோப்பையை வென்ற பிறகும், 2026 உலகக் கோப்பை வரை தொடர வேண்டும் என்ற உந்துதல் மெஸ்ஸியிடம் இருந்தது என்பதை அவர் நிரூபித்தார். இப்போது அந்த உந்துதல் 2030 வரை நீடிக்குமா என்பதுதான் கேள்வி.
"அவர் இன்னும் தனது கடைசி வார்த்தையைச் சொல்லவில்லை என்று நான் நினைக்கிறேன்," என்று பாலாகுவே கூறினார்.
"39 வயதிலும் அவர் 120 நிமிடப் போட்டிகளை முழுமையாக முடிக்கிறார். கேப் வெர்டேக்கு எதிரான போட்டியின் முதல் 90 நிமிடங்களில் அவர் 6.5 கிலோமீட்டர் தூரம் ஓடியுள்ளார். அதில் 62 சதவீத நேரம் அவர் நடந்து சென்றுள்ளார். இன்னும் கொஞ்சம் அதிகமாக நடந்தாலும் பரவாயில்லை. ஆனால் அவருக்குள் இருக்கும் ஆர்வம் இன்னும் குறையவில்லை. அதனால்தான் அவர் தேசிய அணியை விட்டு விலக மாட்டார் என்று நினைக்கிறேன்," என்றார் அவர்.
மெஸ்ஸி சொந்த ரசிகர்கள் முன்னிலையில் உலகக் கோப்பையில் விளையாடும் வாய்ப்பும் ஒரு முக்கிய காரணியாக உள்ளது.
2030 உலகக் கோப்பையை ஆறு நாடுகள் இணைந்து நடத்துகின்றன. பெரும்பாலான போட்டிகள் ஸ்பெயின், போர்ச்சுகல் மற்றும் மொராக்கோவில் நடைபெறவுள்ளன. அதேநேரத்தில், அர்ஜென்டினா, உருகுவே மற்றும் பராகுவே ஆகிய நாடுகளிலும் தலா ஒரு போட்டி நடைபெறும்.
அர்ஜென்டினா ரசிகர்கள் முன்னிலையில் உலகக் கோப்பை மேடையில் விளையாடும் வாய்ப்பை மெஸ்ஸி தவிர்ப்பது கடினமாக இருக்கலாம்.
2022 உலகக் கோப்பை இறுதிப்போட்டிக்கு முன்பு, அதுவே தனது கடைசி சர்வதேச போட்டியாக இருக்கும் என்று மெஸ்ஸி சுட்டிக்காட்டியிருந்தார்.
" எனது பயணத்தை ஒரு உலகக் கோப்பை இறுதிப்போட்டியில் முடிப்பதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். கடைசி போட்டியை இறுதிப்போட்டியாக விளையாடுவது மிகுந்த திருப்தி அளிக்கிறது," என்று அவர் அப்போது கூறியிருந்தார்.
"இந்த உலகக் கோப்பைக்கும் அடுத்த உலகக் கோப்பைக்கும் இடையே பல ஆண்டுகள் உள்ளன. அதுவரை என்னால் தொடர முடியும் என்று நான் நினைக்கவில்லை. இந்த வகையில் முடிப்பது அற்புதமானது."
ஆனால் அது உண்மையாகவில்லை. எனவே, 2026 உலகக் கோப்பை இறுதிப்போட்டிக்குப் பிறகு என்ன சொன்னாலும், 2030 உலகக் கோப்பையை நோக்கி மெஸ்ஸி பயணிப்பாரா என்பதை கவனிக்க வேண்டியிருக்கிறது.
உலகக் கோப்பையில் மெஸ்ஸி முறியடித்துக்கொண்டே இருக்கும் சாதனைகள்
இங்கிலாந்துக்கு எதிரான அரையிறுதிப் போட்டியில் மெஸ்ஸி கோல் அடிக்கவில்லை. ஆனால் அர்ஜென்டினாவின் வெற்றிக்கு வழிவகுத்த அவரது இரண்டு கோல் வாய்ப்பு உருவாக்கங்கள், உலகக் கோப்பை வரலாற்றில் அவரது மொத்த அசிஸ்ட்களின் எண்ணிக்கையை 12 ஆக உயர்த்தியுள்ளன.
அவற்றில் 10 அசிஸ்ட்கள் நாக்-அவுட் சுற்றுகளில் வந்தவை. உலகக் கோப்பை வரலாற்றில் வேறு எந்த வீரரும் மொத்தமாக எட்டு அசிஸ்ட்களுக்கு மேல் வழங்கியதில்லை.
கிளப் கால்பந்தில் மெஸ்ஸியின் வாழ்க்கை தனிநபர் சாதனைகளால் நிரம்பியுள்ளது. அதிக பலோன் டி'ஓர் விருதுகள், பார்சிலோனாவின் அதிக கோல்கள் அடித்த வீரர், லா லிகா வரலாற்றில் அதிக கோல்கள், ஒரு காலண்டர் ஆண்டில் அதிக கோல்கள், அதிகாரப்பூர்வ போட்டிகளில் அதிக அசிஸ்ட்கள் என பல சாதனைகள் அவரது பெயரில் உள்ளன.
உலகக் கோப்பையில் அவரது தனிப்பட்ட சாதனைகள்:
- உலகக் கோப்பையில் அதிக போட்டிகளில் விளையாடிய வீரர் – 33 போட்டிகள்
- ஆறு ஆடவர் உலகக் கோப்பைகளில் விளையாடிய வீரர் (கிறிஸ்டியானோ ரொனால்டோவும் இந்த சாதனையை செய்துள்ளார்)
- இரண்டு முறை 'கோல்டன் பால்' விருது வென்ற ஒரே வீரர் (2014, 2022)
- 2022 உலகக் கோப்பையில் கோப்பையை வென்ற பயணத்தின் ஒவ்வொரு சுற்றிலும் கோல் அடித்த ஒரே வீரர்
- ஆடவர் உலகக் கோப்பை வரலாற்றில் அதிக அசிஸ்ட்கள் வழங்கிய வீரர் – 12
- 1966 முதல் கிடைக்கும் பதிவுகளின்படி, தொடர்ந்து 11 உலகக் கோப்பை போட்டிகளில் கோல் அடித்தோ அல்லது கோல் அடிக்க உதவியோ சாதனை படைத்தவர்
- தொடர்ந்து ஒன்பது உலகக் கோப்பை போட்டிகளில் கோல் அடித்த முதல் ஆடவர் வீரர்
- கஃபூவுக்குப் பிறகு மூன்று உலகக் கோப்பை இறுதிப்போட்டிகளில் விளையாடும் இரண்டாவது வீரராகவும் மாறவுள்ளார்
- இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு