ஹோர்மூஸ் நீரிணை நெருக்கடி: அமெரிக்கா - இரான் மோதல் எதை நோக்கி செல்லும்?

பிரசுரிக்கப்பட்டது
வாசிக்கும் நேரம்: 5 நிமிடங்கள்

ஜூன் 17 அன்று அமெரிக்காவுக்கும் இரானுக்கும் இடையே எட்டப்பட்ட தற்காலிக ஒப்பந்தம்(புரிந்துணர்வு ஒப்பந்தம்), சில காலத்திற்கு பதற்றம் குறையும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தியிருந்தது. ஆனால் தற்போது அந்த ஒப்பந்தம் கடுமையான நெருக்கடியில் சிக்கியுள்ளது.

ஹோர்மூஸ் நீரிணை அனைவருக்கும் திறந்தே உள்ளது என்று அமெரிக்கா கூறுகிறது. அதேவேளையில், அந்த நீரிணை மீது இரானின் அதிகாரத்தை இந்த ஒப்பந்தம் அங்கீகரிக்கிறது என்று இரான் வலியுறுத்துகிறது. இதையடுத்து, இரு தரப்பும் தாக்குதல் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றன.

பிபிசியின் வாராந்திர நிகழ்ச்சியான "தி லென்ஸ்" நிகழ்ச்சியில் பேசிய முன்னாள் இந்தியத் தூதர் நவ்தீப் சூரி, "இந்த ஒப்பந்தத்தை இரு நாடுகளும் தங்களுக்கேற்ற வகையில் விளக்குகின்றன. இது தற்போது 'புரிந்துணர்வு ஒப்பந்தம்' என்பதற்குப் பதிலாக 'புரிதலின்மை ஒப்பந்தம்' ஆக மாறிவிட்டது போலத் தெரிகிறது. இந்த ஒப்பந்தம் அவசரமாக கையெழுத்திடப்பட்டதால் நீண்ட காலம் நீடிக்கவில்லை," என்றார்.

மேற்கு ஆசிய விவகார நிபுணர் அஷ்ரஃப் ஜைதி, "இந்த ஒப்பந்தம் குறித்து இரான் மக்களில் ஒரு பகுதியினர் அதிருப்தியில் உள்ளனர். அந்த மனநிலையே, டிரம்புக்கு எதிராக பழிவாங்க வேண்டும் என்ற அண்மைய இரான் அரசின் நிலைப்பாட்டிலும் பிரதிபலிக்கிறது," என்று கூறுகிறார்.

முன்னாள் தூதர் நவ்தீப் சூரியின் கருத்துப்படி, இரான் தற்போது எடுத்துள்ள ஆக்ரோஷமான நிலைப்பாட்டால் அதனை ஆதரித்து வந்த நாடுகளின் ஆதரவையும் இழக்க நேரிடலாம்.

சர்வதேச கடல் வழித்தடமான ஹோர்மூஸ் நீரிணை மீதான அதன் கட்டுப்பாடு மீண்டும் அதிகரித்திருப்பதால், எரிசக்தி விலைகள் உயர்ந்துள்ளன; இது உலகப் பொருளாதாரத்தையே பாதித்து வருகிறது என்கிறார் அவர்.

அதே நிகழ்ச்சியில், கலெக்டிவ் நியூஸ்ரூமின் பத்திரிகையியல் இயக்குநர் முகேஷ் சர்மா, வாஷிங்டனைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் வெளிநாட்டு கொள்கை நிபுணரும் மூத்த பத்திரிகையாளருமான சீமா சிரோஹியுடனும் உரையாடினார்.

அப்போது பேசிய சீமா சிரோஹி, "அமெரிக்காவைப் பொறுத்தவரை, தற்போதைய மோதலின் முக்கிய நோக்கம் ஹோர்மூஸ் நீரிணையை திறந்த நிலையில் வைத்திருப்பதுதான். உள்நாட்டில் போருக்கான ஆதரவு குறைந்து வரும் நிலையில், டிரம்ப் நிர்வாகம் மீண்டும் பேச்சுவார்த்தை மேசைக்குத் திரும்பும். அதே நேரத்தில், பதிலடி கொடுக்கும் திறன் தன்னிடம் இருப்பதை வெளிப்படுத்திய, இரான் தூதரக ரீதியான நடவடிக்கைகளுக்கும் தயாராக இருப்பதாக சைகை காட்டியுள்ளது," என்றார்.

காமனேயியின் இறுதிச்சடங்கின்போது இரானில் நிலவிய சூழல் எதைக் காட்டுகிறது?

அண்மையில் இரானில் இருந்து திரும்பிய மேற்கு ஆசிய விவகார நிபுணர் அஷ்ரஃப் ஜைதி, அலி காமனேயியின் இறுதிச்சடங்கு தொடர்பான நிகழ்வுகளின் போது, புரிந்துணர்வு ஒப்பந்தம் குறித்து பல இரானியர்களிடையே அதிருப்தி நிலவுவதை கவனித்ததாகக் கூறினார்.

அவரின் கூற்றுப்படி, "பிராந்தியத்தில் அமைதி நிலவுவதற்கான ஒரே வழி அமெரிக்க ராணுவத் தளங்கள் அகற்றப்படுவதுதான் என்று பல இரானியர்கள் நம்புகின்றனர். அந்த வகையில், தற்போதைய அரசு சமரசப் பாதையைத் தேர்ந்தெடுப்பதற்குப் பதிலாக போரையே தொடர்ந்திருக்க வேண்டும் என்று அவர்கள் கருதுகின்றனர்."

அஷ்ரஃப் ஜைதி மேலும், "அங்குள்ள மக்களில் ஒரு பகுதியினர் பெரிய அளவிலான போருக்குத் தயாராக உள்ளனர். சாலைகளில் டிரம்பை கொல்ல வேண்டும் என்ற முழக்கங்களைக்கூட நான் கேட்டேன். அமெரிக்கா வலிமையைத் தவிர வேறு எதற்கும் பின்வாங்காது என்ற புரிதல் அவர்களிடம் உருவாகியுள்ளது," என்றார்.

"சிலர் போரை ஆதரிக்கவில்லை. ஆனால் இந்தப் போர் அமெரிக்காவால் தங்கள் மீது திணிக்கப்பட்டது என்றும், தாங்கள் போராடவில்லை என்றால் நாடு வெளிநாட்டு சக்திகளின் கட்டுப்பாட்டுக்குள் சென்றுவிடும் என்றும் அவர்கள் நம்புகின்றனர்," என்றும் அவர் கூறினார்.

மேலும்,மொஜ்தபா காமனேயியின் அறிக்கையில்கூட அலி காமனேயியின் மரணத்துக்குப் பழிவாங்குவது குறித்து குறிப்பிடப்பட்டிருந்தது. இது தற்போது இரானில் நிலவும் அரசியல் மனநிலையை பிரதிபலிப்பதாக அவர் கூறுகிறார்.

அலி காமனேயியின் இறுதிச்சடங்கு நிகழ்வுகளின்போது, "டிரம்பை கொல்ல வேண்டும்" என்று வலியுறுத்தும் முழக்கங்களையும் பதாகைகளையும் தாங்களும் கண்டதாக பிபிசி மானிட்டரிங் தெரிவித்துள்ளது.

முன்னாள் தூதர் நவ்தீப் சூரி, இரானில் ஒரு தரப்பினர் போர் முடிவுக்கு வர வேண்டும் என்றும், அமெரிக்காவுக்கு எதிரான போரை வெல்வது சாத்தியமில்லை என்றும் கருதுகின்றனர். ஆனால் அங்குள்ள "கடும்போக்கு குழுக்கள்",எங்கள் தலைவரைக் கொன்ற நாட்டுடன் எந்த சமரசமும் இருக்க முடியாது என்று வாதிடுகின்றன என்றார்.

அதேவேளையில், தற்போதைய அதி உயர் தலைவரான மொஜ்தபா காமனேயி பொதுவெளியில் அதிகம் தோன்றாதிருப்பது குறித்து இரானிய மக்கள் திருப்தியுடன் இருப்பதாகவும், நாட்டிற்கும் போருக்கும் அவரது பாதுகாப்பு மிகவும் முக்கியமானது என்று அவர்கள் நம்புவதாகவும் அஷ்ரஃப் ஜைதி கூறுகிறார்.

மேலும், அலி காமனேயியின் இறுதிச்சடங்கில் திரண்ட மக்களின் எண்ணிக்கை, தற்போதைய நிர்வாகத்தின் உத்தரவுகளை பொதுமக்கள் பின்பற்றுகின்றனர் என்பதைக் காட்டுவதாக அவர் தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில், "ஹோர்மூஸ் நீரிணையில் கட்டணம் விதிப்பது அல்லது அதனை கட்டுப்படுத்துவது போன்ற சர்வதேச விதிமுறைகளுக்கு முரணான நடவடிக்கைகளில் இரான் ஈடுபட்டால், இதுவரை உலக நாடுகள் பல வழங்கி வந்த அனுதாபத்தையும் ஆதரவையும் அது இழக்கக்கூடும். அமெரிக்காவுக்கு எதிராக போராடுகிறது என்ற காரணத்தால் பல நாடுகள் இரானுக்கு ஆதரவு தெரிவித்தன. ஆனால் ஹோர்மூஸ் நீரிணை விவகாரம் உலகம் முழுவதையும் பாதிக்கும் பிரச்னையாக மாறியுள்ளதால், அந்த ஆதரவு தொடருமா என்பது கேள்விக்குறியாக உள்ளது," என்றார்.

போரின் இலக்கு இப்போது ஹோர்மூஸ் நீரிணையாகச் சுருங்கிவிட்டதா?

இந்தியாவின் முன்னாள் தூதராக ஐக்கிய அரபு எமிரேட்ஸ், எகிப்து மற்றும் ஆஸ்திரேலியாவில் பணியாற்றிய நவ்தீப் சூரி, அண்மைய பதற்றத்திற்கு முக்கியக் காரணம் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் உள்ள குறைபாடுகள்தான் என்று கூறுகிறார்.

மேலும், ஹோர்மூஸ் நீரிணை தொடர்பாக இரானுக்கு இருந்த உத்தி நன்மை இன்னும் நீடிக்கிறது என்றும், போரின் கவனம் தற்போது இரானில் ஆட்சி மாற்றம் மற்றும் அதன் அணு ஆயுதத் திட்டம் ஆகியவற்றிலிருந்து ஹோர்மூஸ் நீரிணை முற்றுகை விவகாரத்துக்கு மாறியிருப்பதாகவும் அவர் கூறுகிறார்.

"அமெரிக்கா ஆரம்பத்தில் முன்வைத்த இலக்குகளை இன்று நாம் மறந்துவிட்டோம். அணு ஆயுதத் திட்டம் என்ன ஆனது? ஆட்சியும் மாறவில்லை. இப்போது ஹோர்மூஸ் நீரிணையில் பிப்ரவரி 28-க்கு முன்பு இருந்த நிலையை மீண்டும் ஏற்படுத்துவதற்கான முயற்சிதான் நடைபெறுகிறது. அப்போது கப்பல்கள் சுதந்திரமாக வந்து சென்றன; எந்தக் கட்டணமும் விதிக்கப்படவில்லை," என்று அவர் கூறினார்.

மூத்த பத்திரிகையாளர் சீமா சிரோஹி, இந்த மோதல் தொடர்பாக அமெரிக்காவின் தற்போதைய முக்கிய இலக்கு ஹோர்மூஸ் நீரிணையை முழுமையாகத் திறக்கச் செய்வதுதான் என்று கூறுகிறார்.

டிரம்பின் செல்வாக்கு மிகக் குறைந்த நிலையை எட்டியுள்ளதுடன், நவம்பரில் தேர்தல்கள் நடைபெறவுள்ளன என்றும் அவர் சுட்டிக்காட்டுகிறார்.

இரானின் அணு ஆயுதத் திட்டம் தொடர்பான இலக்கு தற்போது அமெரிக்காவின் முன்னுரிமைப் பட்டியலில் கீழ்நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதாகவும், அது பின்னர் பேச்சுவார்த்தை மூலம் விவாதிக்கப்படும் என்றும் அவர் கூறுகிறார்.

நவ்தீப் சூரி மற்றும் சீமா சிரோஹி ஆகிய இருவரும், புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் பல அம்சங்கள் தெளிவற்றவையாக உள்ளன என்று கருதுகின்றனர். குறிப்பாக, அந்த ஒப்பந்தம் மிகவும் குறுகிய காலத்தில் தயாரிக்கப்பட்டதாக சீமா சிரோஹி கூறுகிறார்.

இதுகுறித்து நவ்தீப் சூரி, "அந்த நேரத்தில் டிரம்ப் எப்படியாவது ஒரு ஒப்பந்தத்தை எட்ட வேண்டும் என்று விரும்பினார். அதனால் அனைத்தும் அவசரமாக நடந்தன. இதன் காரணமாக, ஒப்பந்தத்தின் மொழியை இரான் தனது வசதிக்கேற்ப அமைத்துக்கொண்டது; அதனால் அதற்கு பலனும் கிடைத்தது. இரான் தாம் வெற்றி பெற்றதாகக் கூறியது; அமெரிக்காவும் வெற்றி பெற்றதாகக் கூறியது. ஆனால் அடிப்படைப் பிரச்னைகள் அப்படியே தொடர்ந்தன," என்றார்.

அவரின் கூற்றுப்படி, முக்கிய சர்ச்சை ஹோர்மூஸ் நீரிணை தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் ஐந்தாவது பிரிவை மையமாகக் கொண்டுள்ளது. இந்தப் பிரிவை அமெரிக்காவும் இரானும் வெவ்வேறு விதமாக விளக்குகின்றன.

புரிந்துணர்வு ஒப்பந்தத்தின்படி, ஹோர்மூஸ் நீரிணை வழித்தடத்தை முழுமையாகத் திறக்க இரான் ஒப்புக்கொண்டதாக அமெரிக்கா கூறுகிறது. ஆனால், தன்னுடைய கட்டுப்பாட்டின் கீழும் தானே நிர்ணயித்த பாதையிலும் மட்டுமே அந்த வழித்தடத்தைத் திறப்போம் என்று இரான் வலியுறுத்துகிறது.

இந்தக் கோரிக்கையை நடைமுறைப்படுத்தும் வகையில், தன்னுடைய அனுமதி அல்லது ஒருங்கிணைப்பு இல்லாமல் செல்லும் கப்பல்கள் மீது இரான் நடவடிக்கை எடுத்து வருகிறது. இதுபோன்ற தாக்குதல்களால் சில இந்தியர்களும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மறுபுறம், இத்தகைய நடவடிக்கைகள் சட்டவிரோதமானவை என்று கூறி அமெரிக்கா இரான் மீது தாக்குதல்களை நடத்தி வருகிறது.

இரு தரப்பினரும் இன்னும் ஒரு ஒப்பந்தத்தை எட்ட விரும்புகின்றனர். ஆனால் அது எந்த நிபந்தனைகளின் அடிப்படையில் சாத்தியமாகும் என்பது குறித்து இன்னும் நீண்ட தூரம் செல்ல வேண்டியுள்ளது என்று நவ்தீப் சூரி கூறுகிறார்.

டிரம்பின் ஆலோசகர்கள் இரு தரப்பினரையும் மீண்டும் பேச்சுவார்த்தை மேசைக்குக் கொண்டுவர முயற்சித்து வருகின்றனர். அதேபோல், இரானின் பேச்சுவார்த்தை குழுவை சேர்ந்த காலிபாஃப் கூட பேச்சுவார்த்தைக்கான சாத்தியத்தை மறைமுகமாகச் சுட்டிக்காட்டியுள்ளதாக சீமா சிரோஹி கூறுகிறார்.

இரான் போர் விவகாரத்தில் இந்தியாவின் அணுகுமுறை சரியானதா?

முன்னாள் தூதர் நவ்தீப் சூரி, இந்தியா தனது தேசிய நலன்களுக்கும், சர்வதேச சட்டம், நெறிமுறைகள் மற்றும் கொள்கைகளுக்கும் ஆதரவாகத் தெளிவாகவும் வலுவாகவும் குரல் கொடுக்க வேண்டும் என்று கருதுகிறார். அப்போதுதான் இந்தியா தனது முழு திறனுக்கு ஏற்ற அளவில் உலக அரங்கில் செல்வாக்கைப் பெற முடியும் என அவர் கூறுகிறார்.

பிப்ரவரி 28 அன்று இரான் மீது நடத்தப்பட்ட அமெரிக்கத் தாக்குதலை இந்தியா கண்டித்திருந்தால், தற்போதைய போரின் தாக்கம் அல்லது அதன் எதிர்கால விளைவுகள் மீது இந்தியாவுக்கு ஓரளவு செல்வாக்கு செலுத்தும் வாய்ப்பு இருந்திருக்கலாம் என்றும் அவர் கூறினார்.

"இந்த முறை, இந்தப் போரில் நாம் ஒரு தரப்பைத் தேர்ந்தெடுத்திருந்தால், அது இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவின் தரப்பாகத்தான் இருந்தது. பிப்ரவரி 28 அன்று இரான் தாக்கப்பட்டபோது நாம் அதைக் கண்டித்திருக்க வேண்டும். அதைச் செய்யாதது, நமது நம்பகத்தன்மையை பாதித்திருக்கலாம்," என்று அவர் கூறினார்.

அண்மையில் நடைபெற்ற அலி காமனேயியின் இறுதிச்சடங்கில் இந்தியா சார்பில் அனுப்பப்பட்ட பிரதிநிதிகள் குழு, குறைந்தபட்சம் துணைக் குடியரசுத் தலைவர் அளவிலானதாக இருந்திருக்க வேண்டும் என்றும் சூரி கருதுகிறார். அதேநேரத்தில், ஏற்கெனவே திட்டமிடப்பட்டிருந்த வெளிநாட்டு பயணங்கள் காரணமாக பிரதமர் நரேந்திர மோதியின் பங்கேற்பு சிரமமாக இருந்திருக்கும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

எனினும், எரிசக்தி நெருக்கடியை இந்தியா மற்ற நாடுகளைவிட சிறப்பாகக் கையாண்டதாக சூரி பாராட்டுகிறார்.

"நான் ராஜ்ஜிய உறவுகளை எரிசக்தி கோணத்திலும் பார்க்கிறேன். நாம் உருவாக்கிய உறவுகளின் காரணமாக, எரிசக்தி ஆதாரங்களை விரைவாகப் பல்வகைப்படுத்த முடிந்தது. நெருக்கடியையும் முதிர்ச்சியுடன் கையாண்டோம். ஆனால் நமது உத்தி பெட்ரோலிய கையிருப்பை இரு மடங்கு அல்லது மூன்று மடங்கு அதிகரிக்க வேண்டிய அவசியம் உள்ளது," என்றார்.

தற்போதைய உலகளாவிய சூழலில் பணவீக்கம் என்பது அரசின் முழுக் கட்டுப்பாட்டுக்கு அப்பாற்பட்ட பிரச்னை என்றும் சூரி கூறுகிறார். நீண்ட காலமாக அரசுக்குச் சொந்தமான எண்ணெய் நிறுவனங்களே அதன் சுமையை ஏற்றுக்கொண்டன; பின்னர் எரிபொருள் விலைகள் உயர்த்தப்பட்டன. அவ்வாறு செய்யப்படவில்லை என்றால், அந்த நிறுவனங்கள் கடுமையான நிதி நெருக்கடியைச் சந்தித்திருக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.

மோதல் பகுதிகள் வழியாகச் செல்லும் வணிகக் கப்பல்களில் பணிபுரியும் இந்தியர்களின் பாதுகாப்பு தொடர்பாக இந்திய அரசு எடுத்துள்ள நிலைப்பாட்டையும் சூரி ஆதரிக்கிறார். மாலுமிகள் மோதல் பகுதிகள் வழியாகச் செல்லும் கப்பல்களில் பணிபுரிவதைத் தவிர்க்க வேண்டும் என்று அரசு அறிவுறுத்த முடியும்; ஆனால் இறுதி முடிவு கப்பல் நிறுவனங்களிடமே உள்ளது என்று அவர் கூறினார்.

மூத்த பத்திரிகையாளர் சீமா சிரோஹி, இந்தப் போரில் இந்தியாவின் நலன்கள் ஆழமாகப் பின்னிப்பிணைந்துள்ளன என்று கூறுகிறார். பிராந்திய கடல்சார் வர்த்தகத்தில் ஏராளமான இந்திய மாலுமிகளும் கப்பல் பணியாளர்களும் பணிபுரிகின்றனர். மேலும், இந்தியாவின் எரிசக்தி பாதுகாப்பு வளைகுடா பிராந்தியத்தின் நிலைத்தன்மையைப் பொறுத்தே உள்ளது என்று கூறுகிறார்.

"இந்தியா சில வலுவான நடவடிக்கைகளை எடுத்து, சர்வதேச ராஜ்ஜிய உறவுகளில் தனது இடத்தை உறுதிப்படுத்த வேண்டும். குறைந்தபட்சம், தற்போது நடைபெறுவது தவறு என்று சொல்ல வேண்டும். ஆனால் இந்திய அரசு முழுமையாக அமைதியாக இருப்பது போலத் தோன்றுகிறது," என்று அவர் கூறினார்.

- இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு