இந்தியா தோல்வி: 388 என்ற இமாலய இலக்கை நிர்ணயித்த இங்கிலாந்துக்கு கிலி தந்த ரோஹித் - கோலி

    • எழுதியவர், மைக் பீட்டர்
    • பதவி, லார்ட்ஸ் மைதானத்திலிருந்து பிபிசி ஸ்போர்ட் செய்தியாளர்
  • பிரசுரிக்கப்பட்டது
  • வாசிக்கும் நேரம்: 3 நிமிடங்கள்

இங்கிலாந்து அணி இந்தியாவை 27 ரன் வித்தியாசத்தில் தோற்கடித்து 2-1 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது. சர்வதேச ஒருநாள் போட்டிகளில் லார்ட்ஸ் மைதானத்தில் அதிகபட்ச ஸ்கோரையும் இங்கிலாந்து பதிவு செய்தது.

அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர் பென் டக்கெட் 135 பந்துகளில் 141 ரன்களை விளாசினார். அதுவே இந்த மைதானத்தில் ஆடவர் ஒருநாள் போட்டியில் ஒரு தனிநபர் அடித்த அதிகபட்ச ஸ்கோராகும். இதன் மூலம், தனது முந்தைய சாதனையான 1975ஆம் ஆண்டில் எடுத்த 334-4 ரன்களைத் தாண்டி, இங்கிலாந்து அணி 387-3 புதிய சாதனை படைத்துள்ளது.

ஜேக்கப் பெத்தெலுடன் இணைந்து டக்கெட் தொடக்க விக்கெட்டுக்கு 192 ரன்கள் சேர்த்தார். பெத்தெல் 91 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். டக்கெட் 44-வது ஓவரில் பிரின்ஸ் யாதவ் பந்துவீச்சில் அவரிடமே கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். அவர் 18 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸர் அடித்திருந்தார்.

ஜோ ரூட் 48 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 74 ரன்கள் எடுத்து இங்கிலாந்தை இந்த பிரமாண்டமான ஸ்கோருக்கு இட்டுச் செல்ல உதவினார். இது ஒருநாள் போட்டிகளில் 50 ரன்களுக்கும் மேல் தொடர்ச்சியாக அவர் அடித்த 6-வது ஸ்கோராகும். ஜோஸ் பட்லர் ஆட்டத்தின் இறுதிப் பகுதியில் 13 பந்துகளில் 41 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் அதிரடி காட்டினார்.

மிகப்பெரிய வெற்றி இலக்கைத் துரத்த வேண்டிய கட்டாயத்தில் இருந்த இந்தியா, ரோஹித் சர்மாவின் 138 ரன்கள் உதவியால் வெற்றிக்கான போட்டியில் இறுதிவரை நீடித்தது.

இந்தத் தொடரின் முடிவில் ஓய்வு பெறுவார் என்று வதந்திகள் பரவி வரும் நிலையில், 39 வயதான ரோஹித் சர்மா, மிகச் சிறந்த ஃபார்மில் காணப்பட்டார். 111 பந்துகளைச் சந்தித்த அவர், 17 பவுண்டரிகள் மற்றும் 5 சிக்ஸர்களைப் பறக்கவிட்டார்.

ஷுப்மன் கில்லுடன் இணைந்து அவர் 147 ரன்கள் சேர்த்தார். கில் 77 ரன்கள் எடுத்திருந்த போது ஆதில் ரஷித் பந்துவீச்சில் எல்.பி.டபிள்யூ முறையில் ஆட்டமிழந்தார்.

38-வது ஓவரில் பெத்தெல் பந்துவீச்சில் ரோஹித் சர்மா போல்டு ஆகி ஆட்டமிழந்தது போட்டியின் திருப்புமுனையாக அமைந்தது. தேவையான ரன் ரேட் வேகமாக உயர்ந்து கொண்டே சென்றதால், விராட் கோலி தனி ஆளாக இந்தியாவை வெற்றிக்கு அழைத்துச் செல்ல வேண்டிய நெருக்கடிக்கு தள்ளப்பட்டார்.

கோலிக்கு மறுமுனையில் இந்தியாவின் மிடில்-ஆர்டர் பேட்ஸ்மேன்கள் அடுத்தடுத்து குறைந்த ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறியதைக் காண முடிந்தது. அவரும் சாம் கரன் பந்துவீச்சில் 74 ரன்களுக்கு கவர் திசையில் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். அத்துடன் இந்திய அணியின் சவால் முடிவுக்கு வந்தது.

இந்தியாவின் கடைசி வரிசை பேட்ஸ்மேன்கள் தொடர்ந்து பவுண்டரிகளை அடித்த போதிலும், இலக்கு மிக அதிகமாக இருந்ததால் இந்திய அணியால் 360-7 ரன்களே சேர்க்க முடிந்தது.

இங்கிலாந்து பேட்ஸ்மேன்கள் அசத்தல்

ஹாரி புரூக் இந்தத் தொடரில் தொடர்ந்து மூன்றாவது முறையாக டாஸ் வென்றபோது, தொடக்க ஆட்டக்காரர்கள் இத்தகைய சிறப்பான தொடக்கத்தை வழங்குவார்கள் என்று கற்பனை கூட செய்திருக்க மாட்டார்.

டக்கெட் மற்றும் பெத்தெல் எட்ஜ்பாஸ்டனில் 63 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்துத் தங்கள் தொடக்க ஜோடி ஆட்டத்தை தொடங்கினர். கார்டிஃபில் டக்கெட் முதல் பந்திலேயே ஆட்டமிழந்தார். அதே நேரத்தில் பெத்தெல் 14 மற்றும் 4 ரன்கள் மட்டுமே எடுத்து திணறிக் கொண்டிருந்தார்.

ஆனால் லண்டனில், இந்திய பந்துவீச்சாளர்கள் சரியான லென்த்தில் வீச முடியாமல் தடுமாறியதால் இங்கிலாந்து தொடக்க ஜோடியின் அதிரடியை அவர்களால் கட்டுப்படுத்த முடியவில்லை.

முதல் மூன்று ஓவர்களில் அவர்கள் அடித்த 27 ரன்கள், லார்ட்ஸ் மைதானத்தில் ஒருநாள் போட்டியில் ஒரு அணி எடுத்த அதிகபட்ச ஸ்கோராகும். இது 2023 உலகக் கோப்பைக்குப் பிறகு இங்கிலாந்தின் முதல் சத தொடக்க பார்ட்னர்ஷிப்பிற்கு அடித்தளமாக அமைந்தது.

2019 உலகக் கோப்பை வெற்றிக்குப் பிறகு முதல் முறையாக முதல் 20 ஓவர்களில் இங்கிலாந்து ஒரு விக்கெட்டைக் கூட இழக்காமல் இருந்தது.

31-வது ஓவரில் பிரசித் கிருஷ்ணா பந்துவீச்சில் பெத்தெல் ஸ்கொயர் லெக் திசையில், ரோஹித்திடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.

டக்கெட் 108 பந்துகளில் தனது சதத்தை எட்டினார். ரூட்டுடன் இணைந்து சத பார்ட்னர்ஷிப்பை எட்டிய சிறிது நேரத்திலேயே டக்கெட் ஆட்டமிழந்தார்.

பிரசித் கிருஷ்ணாவின் இரண்டாவது விக்கெட்டாக ஹாரி புரூக் வீழ்ந்தார். 14 ரன் எடுத்த அவர் கோலியிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். அதிரடி காட்டிய பட்லர் 4 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்களை விளாசினார். ரூட் ஒருநாள் போட்டிகளில் தொடர்ந்து நான்காவது இன்னிங்ஸாக ஆட்டமிழக்காமல் இருந்தார்.

ரோஹித் போராட்டம்

சர்வதேச அரங்கில் ரோஹித்தின் கடைசி இன்னிங்ஸ் இதுவாக இருக்கும் பட்சத்தில், இதற்கு இணையான ஒரு சிறந்த இறுதி இன்னிங்ஸ் இருக்க முடியாது.

தனது நாட்டிற்காக 514-வது போட்டியில் விளையாடிய முன்னாள் இந்திய கேப்டனான அவர், ஒருநாள் சர்வதேச போட்டிகளில் தனது 34-வது சதத்தையும், இங்கிலாந்தில் ஒருநாள் ஆட்டங்களில் தனது 8-வது சதத்தையும் பதிவு செய்தார். இதில் ஜோ ரூட்டுக்கு அடுத்தபடியாக அவரே இரண்டாவது இடத்தில் உள்ளார்.

அவரும், கில்லும் இங்கிலாந்தின் தொடக்க ஆட்டக்காரர்களைப் போலவே எதிரணிக்கு எந்தவொரு வாய்ப்பையும் தராமல் விளையாடினர். ஒரு தொடரின் இறுதிப் போட்டியில் இரு அணிகளும் முதல் விக்கெட்டுக்கு 140 ரன்களுக்கு மேல் எடுத்த இரண்டாவது ஒருநாள் போட்டி இதுவாகும்.

ரோஹித் 84 பந்துகளில் தனது சதத்தை எட்டினார். அவர் தனது வழக்கமான புல் ஷாட் மூலம் இங்கிலாந்து பந்துவீச்சாளர்களைத் திணறடித்தார்.

இந்திய அணி எளிதில் வீழ்ந்துவிடும் என்று எதிர்பார்க்கப்பட்ட நேரத்திலும் அவரது முயற்சிகள் இந்தியாவை ஆட்டத்திற்குள் நீடிக்கச் செய்தன.

38-வது ஓவரில் இந்திய அணி 253-1 ரன்களை எட்டியது. இது இங்கிலாந்து அதே கட்டத்தில் எடுத்திருந்த 250 ரன்களை விட அதிகமாகும்.

அந்தக் கட்டத்தில் அவரும் கோலியும் ரூட் மற்றும் பட்லரைப் போல ஆட்டத்தின் இறுதிப் பகுதியில் அதிரடி காட்டி இந்தியாவை வெற்றிக்கு அழைத்துச் செல்வது சாத்தியமானதாகத் தோன்றியது. ஆனால் அதற்கு அடுத்த ஓவரில் ரோஹித் போல்டு ஆனார்.

கோலி, இந்த மைதானத்தில் தனது முதல் சர்வதேச அரைசதத்தைப் பதிவு செய்தார். ஆனால் இறுதியில் சாம் கரனின் பந்துவீச்சில் அவர் ஆட்டமிழந்தார்.

- இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு