You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
வங்கி லாக்கரில் நகை வைத்தவர் இறந்துவிட்டால் அது யாருக்கு கிடைக்கும்? வழிமுறை என்ன?
கோவையில், மறைந்த மனைவி வங்கி லாக்கரில் வைத்திருந்ததாகக் கூறப்படும் 80 சவரன் நகை தனது அனுமதியின்றி உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டதாக ஓய்வுபெற்ற தலைமையாசிரியர் புகார் அளித்துள்ளார்.
ஆனால், அந்தப் பெயரில் லாக்கரே இல்லை என வங்கியும், ஆதாரம் இல்லை என காவல்துறையும் கூறுகின்றன. இறந்த அவரது மனைவியின் உறவினர்களும் இந்தக் குற்றச்சாட்டை மறுத்துள்ளனர்.
இந்தச் சம்பவம் வங்கி லாக்கர்களில் நகை, பத்திரங்கள் போன்ற பொருட்களைப் பாதுகாத்து வைத்திருக்கும் ஒருவர் இறந்துவிட்டால், 'அந்த லாக்கரும் அதிலுள்ள பொருட்களும் யாருக்குச் சொந்தமாகும்?' என்ற கேள்வியை மக்களிடையே எழுப்பியுள்ளது. அதுகுறித்து இங்கு விரிவாகக் காண்போம்.
மனைவியின் நகையைக் கேட்டு கணவர் புகார்
கோவை சுல்தான்பேட்டையைச் சேர்ந்த ஓய்வுபெற்ற மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் முருகேசன் (72), தனது மறைந்த மனைவி சாந்தினி பாரத ஸ்டேட் வங்கியின் போத்தனூர் கிளை லாக்கரில் வைத்திருந்ததாகக் கூறிய 80 சவரன் நகையை, சட்டபூர்வ வாரிசான தன்னிடம் ஒப்படைக்காமல் அவரது உறவினர்களுக்கு வங்கி நிர்வாகம் வழங்கிவிட்டதாக ஜூலை 16 அன்று கோவை மாநகர காவல் ஆணையரிடம் புகார் அளித்தார்.
அரசுப் பள்ளி உடற்கல்வி ஆசிரியராக இருந்து ஓய்வுபெற்ற சாந்தினி, சிறுநீரக பாதிப்பால் 2024 ஆகஸ்ட் 3 அன்று இறந்தார். இந்தத் தம்பதிக்கு குழந்தைகள் இல்லை. இறப்பதற்கு முன்பு, பணம், நகை மற்றும் சொத்துகள் எங்கு உள்ளன என்பதை சாந்தினி கையெழுத்திட்டு வழங்கியதாக முருகேசன் பிபிசி தமிழிடம் தெரிவித்தார்.
அந்த ஆவணத்தில், போத்தனூர் பாரத ஸ்டேட் வங்கி லாக்கரில் 80 சவரன் நகை இருப்பதாகக் குறிப்பிடப்பட்டு இருந்ததாகவும், தனது மனைவியின் இரு சகோதரிகளும் அவர்களது கணவர்களும் வங்கி மேலாளரின் உதவியுடன் அதை எடுத்துவிட்டதாகவும் முருகேசன் புகாரில் தெரிவித்துள்ளார்.
முருகேசன் பகிர்ந்த தட்டச்சு செய்யப்பட்ட ஆவணத்தில் சாந்தினி மற்றும் இரு சாட்சிகளின் கையெழுத்துகள் இருந்தன. ஆனால், சாட்சிக் கையெழுத்து போட்டவர்களிடம் பிபிசியால் பதில் பெற முடியவில்லை. அதேவேளையில், லாக்கர் இருந்தது என்பதை நிரூபிக்கத் தேவையான வங்கி ஆவணங்கள் தன்னிடம் இல்லை என்றும் முருகேசன் ஒப்புக்கொண்டார்.
போத்தனூர் காவல் ஆய்வாளர் அசோக் குமார், "அனைத்து தரப்பிலும் விசாரித்தோம். புகாருக்கான ஆதாரத்தை அவர் தராததால் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்படவில்லை," என்றார். சாந்தினியின் பெயரில் அந்தக் கிளையில் லாக்கர் எதுவும் இல்லை என்று வங்கி எழுத்துபூர்வமாகத் தெரிவித்ததாகவும் காவல்துறை பிபிசி தமிழிடம் கூறியது.
சாந்தினியின் தங்கை தில்லைநாயகி, "இவை முற்றிலும் பொய்யான, கற்பனையான குற்றச்சாட்டுகள். ஆதாரம் இருந்தால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கட்டும்," என்றார்.
வங்கிகளின் லாக்கர் முறை
பொதுவாக, வங்கியில் லாக்கர் வைத்திருக்கும் ஒருவர் இறந்தால், நாமினி அல்லது உரிய சட்ட நடைமுறையின் அடிப்படையிலேயே பொருட்கள் ஒப்படைக்கப்படும் என வங்கி தரப்பில் விளக்கப்படுகிறது.
இதுகுறித்து பாரத ஸ்டேட் வங்கி நிர்வாகத்தில் லாக்கர்களை பராமரிக்கும் அலுவலரிடம் பிபிசி தமிழ் பேசியது. பெயரைக் குறிப்பிட வேண்டாமென்ற நிபந்தனையுடன் பேசிய அந்த அலுவலர், ''வங்கி லாக்கர்களை பொருத்தவரை ஒவ்வொரு வங்கியும் ஒவ்வொரு விதமான கட்டணம் மற்றும் விதிமுறைகளை வைத்துள்ளன. பாரத ஸ்டேட் வங்கியைப் பொறுத்தவரை லாக்கர் காலியாக இருக்கும்பட்சத்தில் மட்டுமே அதற்கு விண்ணப்பித்து இருப்பவர்களில் முன்னுரிமை அடிப்படையில் ஒதுக்கப்படும். அதற்குரிய கட்டணமும் தனித்தனியாக உள்ளது'' என்றார்.
பாரத ஸ்டேட் வங்கியில் லாக்கர்களின் வகை, அளவு மற்றும் அதற்கான கட்டணம் குறித்த விவரங்களையும் வங்கி அலுவலர்கள் பகிர்ந்தனர். அதன்படி, சிறியது, நடுத்தரம், பெரியது, மிகப்பெரியது என நான்கு அளவுகளில் லாக்கர்கள் உள்ளன.
"அவற்றுக்கான பதிவுக் கட்டணமும் லாக்கரின் அளவுக்கேற்ப மாறுபடும். அதோடு, லாக்கர் அளவுக்கு ஏற்ப வருடாந்திர கட்டணமும் வேறுபடுகிறது. நகர்ப்புறம் மற்றும் மெட்ரோ நகரங்களில் இந்தக் கட்டணம் அதிகமாகவும், ஊரகப்பகுதிகள் மற்றும் நடுத்தர நகர்ப்பகுதிகளில் அதைவிடக் குறைவாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளன. இவை அனைத்துக்கும் ஜிஎஸ்டியும் வசூலிக்கப்படுகிறது" என்று வங்கி அலுவலர்கள் விளக்கினர்.
அவர்களின் கூற்றுப்படி, லாக்கருக்கான கட்டணத்தைச் செலுத்தாமல் தாமதிக்கும் ஒவ்வொரு காலாண்டுக்கும் 10% கூடுதல் கட்டணமும், ஆண்டுக்கு 40% வரை கூடுதல் கட்டணமும் செலுத்த வேண்டும்.
லாக்கரில் நகை வைத்தவர் இறந்துவிட்டால் அது யாருக்கு கிடைக்கும்?
பாரத ஸ்டேட் வங்கியைப் பொறுத்தவரை, வங்கி லாக்கர்களை தனிநபர் பெயரிலும் அல்லது கூட்டுக் கணக்கு முறையில் கணவன்–மனைவி அல்லது இருவராகப் பராமரித்துக் கொள்ளலாம்.
"கூட்டுக் கணக்கு லாக்கரில் உள்ள பொருளை எடுப்பதற்கு இருவரும் சேர்ந்து அல்லது தனித்தனியாக வரலாம். ஆனால் தனிநபர் ஒருவரின் பெயரில் லாக்கர் இருந்தால் அவர் கட்டாயமாக தனக்குப் பதிலாக மற்றொரு நபரை நாமினியாக பரிந்துரைக்க வேண்டும்" என்பதையும் வங்கி அலுவலர்கள் குறிப்பிட்டனர்.
''தனிநபர் ஒருவர் தனது பெயரில் லாக்கர் வைப்பதாக இருந்தால் ஒரு நாமினியை குறிப்பிட வேண்டும். அந்த நபர், கணவர் அல்லது மனைவி அல்லது ரத்த உறவாகத்தான் இருக்க வேண்டுமென்ற அவசியமில்லை. அந்த நபரின் நம்பிக்கைக்குரிய யாராவது ஒருவராகவும்கூட இருக்கலாம். ஆனால் அவரது காலத்திற்குப் பிறகே அந்த லாக்கரும் அதில் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருக்கும் நகை அல்லது வேறு எந்தப் பொருளாக இருந்தாலும் நாமினியிடம் ஒப்படைக்கப்படும்."
"பொதுவாக லாக்கர் வைத்திருப்பவர்களிடம் ஒரு சாவியும், வங்கியில் அதைப் பராமரிக்கும் அலுவலரிடம் ஒரு சாவியும் இருக்கும். இரண்டையும் ஒரே நேரத்தில் பயன்படுத்தினால் மட்டுமே லாக்கரை திறக்க முடியும். இந்த இரண்டில் ஏதேனும் ஒரு சாவியை மட்டும் வைத்து அதைத் திறக்க முடியாது'' என்றும் பாரத ஸ்டேட் வங்கி அலுவலர் விளக்கினார்.
கோவையில் தன் மனைவி பெயரில் இருந்த லாக்கரில் வைக்கப்பட்டிருந்த நகைகளை, அவர் இறந்தபின் வாரிசுதாரரான தன்னிடம் கேட்காமல் மற்றவர்களிடம் வங்கி அதிகாரிகள் கொடுத்துவிட்டனர் என்பதே காவல்துறையில் முருகேசன் கொடுத்த புகாரில் முக்கியக் குற்றச்சாட்டாகவுள்ளது. ஆனால் அந்தக் குற்றச்சாட்டை சம்பந்தப்பட்ட வங்கிக் கிளை நிர்வாகம் மறுத்துள்ளது.
இதுபற்றி பிபிசியிடம் விளக்கிய போத்தனூர் பாரத ஸ்டேட் வங்கி கிளை மேலாளர் மகேஸ்வரன், ''நான் கடந்த மே மாதத்தில்தான் இங்கு பொறுப்பேற்றேன். அதற்கு முன்பிருந்த கிளை மேலாளர் மற்றும் இங்குள்ள அலுவலர்களிடம் இதுபற்றி காவல்துறை ஏற்கெனவே விசாரித்துள்ளது. அந்தப் புகாரில் குறிப்பிட்டுள்ள நபரின் பெயரில் ஒரு லாக்கர் இங்கு எப்போதுமே இருந்ததில்லை என்பது உறுதியாகியுள்ளது'' என்றார்.
''தனிநபர் பராமரிக்கும் லாக்கர் என்றால் அதற்கு நாமினி நியமிக்கப்பட்டு இருக்க வேண்டியது கட்டாயம். அந்த தனிநபர் இறந்துவிட்டாலும் அவரது நாமினியிடம்தான் அது ஒப்படைக்கப்படும். வங்கி ஆவணத்தில் யாரை நாமினியாக பரிந்துரைத்து இருக்கிறார்களோ அவர்களிடம் வங்கி நிர்வாகம் அதை ஒப்படைக்கும். இதில் வாரிசுதாரரிடம்தான் ஒப்படைக்க வேண்டுமென்பது வங்கி விதிமுறைகளில் இல்லை'' என்றார் வங்கி கிளை மேலாளர் மகேஸ்வரன்.
- இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு