மெஸ்ஸியை கண்ணீர் விடச் செய்த ஸ்பெயின்: இறுதிப்போட்டியில் 106வது நிமிடத்தில் என்ன நடந்தது?

மெஸ்ஸியை கண்ணீர் விடச் செய்த ஸ்பெயின்: இறுதிப்போட்டியில் 106வது நிமிடத்தில் என்ன நடந்தது?
பிரசுரிக்கப்பட்டது

கால்பந்து உலகக்கோப்பையை 1-0 என்ற கோல் கணக்கில் ஸ்பெயின் அணி இரண்டாவது முறையாக வென்றுள்ளது. இறுதிப் போட்டியில் அர்ஜென்டினா அணியை தோற்கடித்து கோப்பையை தன்வசம் ஆக்கியது. ஸ்பெயின் அணி முழுவதும் ஆதிக்கம் செலுத்திய இந்த இறுதிப் போட்டியில் என்ன நடந்தது?

சுமார் 80 ஆயிரம் பேர் குழுமி இருந்த அந்த மைதானத்தில் 105வது நிமிடம் வரை ஒரு முடிவு தெரியாமலே இருந்தது. கூடுதல் நேரத்தில் ஸ்பெயினின் ஃபெர்ரான் டோரஸ் ஆட்டத்தின் முதல் கோலை அடிக்க இறுதியில் 1-0 என ஸ்பெயின் உலகக்கோப்பையை வசமாக்கியுள்ளது.

2010-இல் 1-0 என நெதர்லாந்தை தோற்கடித்து தனது முதல் உலகக் கோப்பையை வசப்படுத்திய ஸ்பெயின் 16 ஆண்டுகள் கழித்து அதேபோல் 1-0 என ஆர்ஜென்டினாவை தோற்கடித்து 2வது உலகக் கோப்பையை வென்றுள்ளது.

உலகக் கோப்பை இறுதிப் போட்டி

ஆர்ஜென்டினா - ஸ்பெயின் இடையேயான உலகக் கோப்பை கால்பந்தின் இறுதிப் போட்டி அமெரிக்காவின் நியூயார்க்கில் உள்ள நியூ ஜெர்ஸி மைதானத்தில் நடந்தது. இந்த போட்டியைக் காண 80,663 ரசிகர்கள் மைதானத்தில் குழுமி இருந்தனர்.

இந்தப் போட்டி தொடங்குவதற்கு முன்பே, கடைசி நிமிடம் வரை பரபரப்பாக நீளும் கடும் மோதலாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பு நிலவியது. மெஸ்ஸி - யமால் முதன்முறையாக நேருக்கு நேர் மோதுவதாலும் இந்த ஆட்டத்தின் மீது கூடுதல் எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால், ஆட்டம் தொடங்கியதில் இருந்தே ஸ்பெயினின் ஆதிக்கமே அதிகமாக இருந்தது.

யமால் அடித்த ஷாட் உட்பட சில ஷாட்களை ஆர்ஜென்டினாவின் கோல் கீப்பர் மார்டினெஸ் அற்புதமாகத் தடுத்து நிறுத்தினார். ஆனால், அவரைத் தாண்டி மெஸ்ஸி உள்பட ஆர்ஜென்டினாவின் மற்ற வீரர்கள் இந்த ஆட்டத்தில் ஜொலிக்கவில்லை.

ஸ்பெயின் ஆக்ரோஷ பாணியில் விளையாடிக் கொண்டிருக்க ஆர்ஜென்டினாவோ தடுப்பாட்டத்தில் ஈடுபட்டு கொண்டிருந்தது.

ஆர்ஜென்டினா தனது முதல் ஷாட்டையே 117-வது நிமிடத்தில்தான் அடித்தது. அதிலும், போட்டி முழுவதும் ஒரு ஷாட் கூட கோல் கம்பங்களுக்கு இடையில் செல்லவில்லை.

இருப்பினும், இந்த ஆட்டம் கூடுதல் நேரம் வரை நீண்டது.

பந்தைப் பொறுமையாக தங்கள் வசம் வைத்துக்கொண்டு, துல்லியமான பாஸ்கள் மூலம் ஆர்ஜென்டினா வீரர்களைச் சோர்வடையச் செய்தது ஸ்பெயின்.

போட்டி முழுவதும் 65 சதவீதம் பந்தை தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்த ஸ்பெயின், மொத்தம் 20 ஷாட்களை அடித்தது. அவற்றில் 12 ஷாட்கள் இலக்கை நோக்கி சென்றன.

டோரிஸ் அடித்த கோல்

இந்த ஆட்டத்தில் அடிக்கப்பட்ட முதல் மற்றும் ஒரே கோலுக்காக 105 நிமிடங்கள் ரசிகர்கள் காத்திருக்க வேண்டியிருந்தது. ஆட்டத்தின் கூடுதல் நேரத்தில் பெட்ரோ போரோ பந்தை பின்புற கம்பத்தை நோக்கி துல்லியமாக அனுப்பினார்.

அதை நிகோ வில்லியம்ஸ் வெளியே செல்ல விடாமல் தலையால் தட்டிவிட்டு, கோல் முன்பகுதியில் இருந்த காலியிடத்துக்கு திருப்பினார்.

அந்த வாய்ப்பை தவறவிடாத ஃபெர்ரன் டோரஸ், அற்புதமாக ஷாட்டால் அதை கோலாக மாற்றினார். கோல் கீப்பருக்கு எந்த வாய்ப்பும் அளிக்காத அந்த அற்புதமான ஃபினிஷ், ஸ்பெயினுக்கு வெற்றியை உறுதி செய்த தீர்மானிக்கும் கோலாக அமைந்தது.

ஆர்ஜென்டினா அணி, போட்டியின் கடைசி 30 நிமிடங்களை 10 வீரர்களுடன் விளையாட வேண்டிய சூழலுக்குத் தள்ளப்பட்டது. மிட்ஃபீல்டர் என்சோ பெர்னாண்டஸ், ஸ்பெயின் வீரர் பாவ் குபார்சியை கடுமையாக டாக்கிள் செய்ததற்காக இரண்டாவது மஞ்சள் அட்டை பெற்று வெளியேற்றப்பட்டார்.

ஒரு வீரர் இல்லாமல் விளையாடியது, ஏற்கெனவே தடுமாறிக் கொண்டிருந்த ஆர்ஜென்டினாவின் ஆட்டத்தை மேலும் பாதித்தது. ஆர்ஜென்டினா கேப்டன் லியோனல் மெஸ்ஸி, போட்டியில் 54 முறை பந்தை டச் செய்தபோதும், ஒரே ஒரு ஷாட் மட்டுமே அடிக்க முடிந்தது. அது கூட கோலாக மாறவில்லை.

ஆர்ஜென்டினாவால் ஒரு கோல் கூட அடிக்க முடியாத நிலையில், இறுதியில் தனது இரண்டாவது உலகக்கோப்பையை ஸ்பெயின் வென்றது. அதோடு, தொடர்ச்சியாக 38 போட்டிகளில் தோல்வியின்றி விளையாடிய ஐரோப்பிய அணி என்ற சாதனையையும் அந்த அணி கொண்டுள்ளது.

எகிப்துக்கு எதிரான நாக் அவுட் சுற்றாகாட்டும், இங்கிலாந்துக்கு எதிரான அரையிறுதி போட்டியாகாடும், ஆர்ஜெண்டினா அணி ஆட்டத்தின் இறுதியில் கோல்களை அடித்து வெற்றியை வசப்படுத்தி இருந்தது. ஆனால், இந்த ஆட்டத்தில் அதற்கு வாய்ப்பு இல்லாமலேயே போனது.

ஆட்டத்தில் ஆர்ஜெண்டினா தோல்வி அடைந்த நிலையில், மெஸ்ஸி மைதானத்திலே கண்ணீர் விட்டு அழுதார்.

கோல்டன் பூட் வென்ற எம்பாப்வே

2026 உலகக்கோப்பையில் அதிக கோல்அடித்த வீரருக்கான கோல்டன் பூட் விருதை வென்றதன் மூலம், இந்த விருதை இரண்டு முறை வென்ற முதல் வீரர் என்ற வரலாற்றுச் சாதனையை பிரான்ஸ் நட்சத்திரம் எம்பாப்பே படைத்துள்ளார்.

பிரான்ஸ் அணிக்காக எட்டு போட்டிகளில் விளையாடிய எம்பாப்பே, 10 கோல் அடித்து, லியோனல் மெஸ்ஸியை பின்னுக்குத் தள்ளி அதிக கோல்அடித்த வீரராகத் திகழ்ந்தார்.

2022 கத்தார் உலகக்கோப்பையில் 8 கோல் அடித்து கோல்டன் பூட் வென்றிருந்த எம்பாப்பே, தொடர்ந்து இரண்டு உலகக்கோப்பைகளில் இந்த விருதை வென்ற முதல் வீரராகியுள்ளார்.

ஒரே உலகக்கோப்பை தொடரில் எம்பாப்பேவை விட அதிக கோல்கள் அடித்தவர்கள் இருவர் மட்டுமே.

1958 உலகக்கோப்பையில் பிரான்ஸின் ஜஸ்ட் ஃபொன்டைன் 13 கோல்களும், 1954 உலகக்கோப்பையில் ஹங்கேரியின் சாண்டோர் கொசிஸ் 11 கோல்களும் அடித்துள்ளனர்.

இதன் மூலம், ஆண்கள் உலகக்கோப்பை வரலாற்றில் மொத்தம் 22 கோல்கள் அடித்துள்ள எம்பாப்பே, 21 கோல்களுடன் உள்ள லியோனல் மெஸ்ஸியை முந்தி, உலகக்கோப்பை வரலாற்றின் அதிக கோல்கள் அடித்த வீரராகவும் உருவெடுத்துள்ளார்.

பரிசுத் தொகை எவ்வளவு?

கோப்பையை கைப்பற்றியிருக்கும் ஸ்பெயின் அணிக்கு இந்திய மதிப்பில் சுமார் 444 கோடி ரூபாய் பரிசாக வழங்கப்பட்டுள்ளது. இரண்டாம் இடம் பிடித்துள்ள ஆர்ஜெண்டினாவுக்கு இந்திய மதிப்பில் சுமார் 296 கோடி ரூபாய் பரிசாக கிடைத்துள்ளது.

முழு விவரத்தை இந்த காணொளியில் பார்க்கலாம்.

- இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு