You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
'நீட் தேர்வை எதிர்க்கும் தவெக அரசு இளைஞர்கள் போராட்டத்தை ஒடுக்குவது ஏன்?'
- எழுதியவர், ப. சிவசங்கர்
- பதவி, பிபிசி தமிழுக்காக
- பிரசுரிக்கப்பட்டது
- வாசிக்கும் நேரம்: 3 நிமிடங்கள்
நீட் வினாத்தாள் கசிவு விவகாரத்தில் மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என்று வலியுறுத்தி, டெல்லியில் காக்ரோச் ஜனதா கட்சி (சிஜேபி) அறிவித்த போராட்டத்தில் ஏராளமான இளைஞர்கள் பங்கேற்றனர்.
இந்தப் போராட்டத்தின் ஒரு பகுதியாக, கடந்த ஜூலை 20-ஆம் தேதி நாடாளுமன்றம் நோக்கி நடைபெற்ற பேரணியில் பங்கேற்ற இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் மீது காவல்துறையினர் தடியடி நடத்தினர். மேலும், கண்ணீர்ப்புகைக் குண்டுகளும் வீசப்பட்டன.
இந்த நடவடிக்கையில் ஏராளமான இளைஞர்கள் காயமடைந்து மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர்.
காவல்துறையின் நடவடிக்கைக்கு பல்வேறு அரசியல் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், தமிழ்நாட்டிலும் மாணவர் அமைப்புகள் போராட்டங்களை முன்னெடுத்தன.
டெல்லியில் மாணவர்கள் காவல்துறையின் கட்டுப்பாடுகள் மற்றும் நடவடிக்கைகளை எதிர்கொண்டது போல, தமிழ்நாட்டிலும் மாணவர்கள் காவல்துறையின் நடவடிக்கைகளை எதிர்கொண்டனர்
தமிழ்நாட்டில் போராடும் மாணவர்களின் நிலை?
டெல்லி போராட்டத்தில் இளைஞர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலைக் கண்டித்தும், நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தியும் தமிழ்நாட்டில் மாணவர் அமைப்புகள் போராட்டங்களை முன்னெடுத்தன.
சென்னை திருவொற்றியூரில் உள்ள அரசு கல்லூரியில் மாணவர்கள் நடத்திய உள்ளிருப்புப் போராட்டத்தை கலைக்க முயன்ற காவல்துறையினர், அவர்களை வலுக்கட்டாயமாக அங்கிருந்து அழைத்துச் சென்றனர்.
மேலும், சென்னையின் பல்வேறு பகுதிகளில் போராட்டம் நடத்த முயன்ற மாணவர் அமைப்பினரை, போராட்டம் தொடங்குவதற்கு முன்பே காவல்துறையினர் அப்புறப்படுத்தினர்
கல்வி வளாகங்களுக்குள் நுழைந்து மாணவர்களை கைது செய்தது அத்துமீறலான நடவடிக்கை என்று அரசியல் கட்சிகள் குற்றஞ்சாட்டியுள்ளன.
அரசியல் கட்சிகள் கூறியது என்ன?
'ஜனநாயக உரிமைகள் சார்ந்த போராட்டங்களை ஒடுக்க நினைக்கும் காவல்துறையை தமிழக அரசு கட்டுப்படுத்த வேண்டும்' என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் சண்முகம் தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், "டெல்லியில் இளைஞர்கள் மீது நடந்த மோசமான அடக்குமுறைகளை கண்டித்து தமிழ்நாட்டில் இந்திய மாணவர் சங்கம், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் போராடுவதற்கு வழியில்லாமல் காவல்துறையால் அலைக்கழிக்கப்பட்டுள்ளனர்" என்று அவர் தெரிவித்துள்ளார்.
கடந்த மூன்று நாட்களாக அவர்கள் கைது செய்யப்பட்டு விடுவிக்கப்பட்டு வருவதாக குறிப்பிட்டிருந்த அவர், காவல்துறையின் இந்த நடவடிக்கை ஜனநாயக உரிமைக்கு எதிரானது என்று தெரிவித்திருந்தார்.
மேலும், ''சென்னை, கோவை, தஞ்சாவூர், மதுரை, கடலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் வகுப்பை புறக்கணித்து போராடிய மாணவர்களை கல்வி நிறுவனங்களுக்குள் சென்று கைது செய்திருப்பது இதுவரை நடந்திராத ஒன்று" என்று அவர் குறிப்பிட்டிருந்தார்.
"போராடும் உரிமையை நசுக்கும் தமிழ்நாடு காவல்துறையின் நடவடிக்கைகள் நிறுத்தப்பட வேண்டும்" என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதியின் எக்ஸ் பதிவில், ''சென்னை, மதுரை உள்ளிட்ட மாவட்டங்களில் 'நீட்' க்கு எதிராக போராடிய மாணவர் அமைப்பினரை வலுக்கட்டாயமாக கைது செய்யப்படுவது கண்டிக்கத்தக்கது'' என்று தெரிவித்தார்.
மேலும், "டெல்லியில் போராடும் இளைஞர்களுக்கு ஆதரவாக, தமிழ்நாட்டில் போராடுவோரை கைது செய்வது நீட் விஷயத்தில் ஆளுங்கட்சியின் இரட்டை வேடத்தையே காட்டுகிறது" என்றும் அவர் தனது பதிவில் குறிப்பிட்டிருந்தார்.
தமிழ்நாடு அரசின் நிலைபாடு என்ன?
மாணவர்களின் தொடர் கைதுக்கும் காவல்துறையின் நடவடிக்கைக்கும் அரசியல் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், "மாணவர்களின் அமைதியான அறவழிப் போராட்டத்தை நாங்கள் ஆதரிக்கிறோம்" என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், "டெல்லியில் மாணவர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலைக் கண்டித்து தமிழ்நாட்டில் நடைபெறும் போராட்டங்கள், முறையாக அனுமதி பெற்று பொதுமக்களுக்கும் போக்குவரத்துக்கும் இடையூறு இல்லாமல் நடைபெற வேண்டும்" என்று குறிப்பிட்டார்.
ஆனால், "போராட்டம் என்ற பெயரில் மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தினால், அதற்குரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன" என்று அவர் தெரிவித்தார்.
மாணவர் அமைப்பினர் சொல்வது என்ன?
பிபிசி தமிழிடம் பேசிய இந்திய மாணவர் சங்கத்தின் மாநிலத் தலைவர் மிருதுளா, "டெல்லியைப் போலவே தமிழ்நாட்டிலும் காவல்துறையினரால் மாணவர்கள் கடுமையாக நடத்தப்படுகிறார்கள்" என்று தெரிவித்தார்.
"ஜனநாயக ரீதியில் பேரணி செல்ல அனுமதி கேட்டோம். கிடைக்கவில்லை. இதனால் திட்டமிட்டபடி பேரணி தொடங்கும் புதுப்பேட்டை சித்ரா திரையரங்கு பகுதிக்கு மாணவர்கள் வரத் தொடங்கினர். ஆனால் பேரணிக்கு முன்பே காவல்துறையினர் மாணவர்களை அராஜகமாக கைது செய்தனர். அதில் நான்கு பேர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்" என அவர் கூறினார்.
மேலும் பேசிய அவர், "டெல்லியில் மாணவர்களுக்கு நடந்த அநீதிக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் தமிழ்நாடு முழுவதும் போராட்டத்தை முன்னெடுக்க எங்களுக்கு பொதுவான இடம் வழங்க வேண்டும் என்று கோரிக்கைகளை கடந்த மூன்று நாட்களாக வைத்து வருகிறோம். ஆனால் அனுமதி வழங்கப்படவில்லை" என்று கூறினார்.
தமிழ்நாடு முழுவதும் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மற்றொரு மாணவர் அமைப்பான இந்திய ஜனநாயக மாணவர் சங்கத்தின் பொருளாளர் சந்துரு பிபிசி தமிழிடம் பேசுகையில், "தமிழ்நாட்டில் உள்ள தவெக அரசு நீட் தேர்வுக்கு எதிராக இருக்கும்போது, நீட் தேர்வுக்கு எதிரான இளைஞர்கள் போராட்டத்தை தமிழ்நாடு காவல்துறை ஏன் ஒடுக்குகிறது?" என்று கேள்வி எழுப்பினார்.
சாலைகளில் போராட்டம் நடைபெறுவதால் நடவடிக்கை எடுக்கப்படுகிறது என்ற அமைச்சரின் கருத்தை ஏற்க மறுத்த சந்துரு, "சென்னையில் நடைபெற்ற முதல் கைது திருவொற்றியூர் கல்லூரியில் உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த மாணவர்களைத்தான்" என்று தெரிவித்தார்.
-இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு