You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
தூத்துக்குடி: கைது செய்யப்பட்ட இளைஞர் உயிரிழப்பு - காவல்துறை தாக்கியதாக குடும்பத்தினர் குற்றச்சாட்டு
- எழுதியவர், பிரபுராவ் ஆனந்தன்
- பதவி, பிபிசி தமிழுக்காக
- பிரசுரிக்கப்பட்டது
- வாசிக்கும் நேரம்: 2 நிமிடங்கள்
தூத்துக்குடியில் விசாரணைக்காக காவல்துறையினர் அழைத்துச் சென்ற 24 வயது இளைஞர், பின்னர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் இன்று உயிரிழந்துள்ளார். தனது மகனை காவல்துறையினர் தாக்கியதால்தான் உயிரிழப்பு ஏற்பட்டதாக அவரது தாய் குற்றஞ்சாட்டியுள்ளார்.
இதையடுத்து, சம்பந்தப்பட்ட காவலர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி உறவினர்களும் அரசியல் கட்சியினரும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
தூத்துக்குடி அமுதா நகர் பகுதியைச் சேர்ந்த அருணாச்சலம் (24) அரசு மதுபானக் கடை பாரில் பணியாற்றி வந்தார்.
கடந்த ஜூலை 17-ஆம் தேதி, மதுபானக் கடை மூடிய பிறகு சட்டவிரோதமாக மதுபானம் விற்பனை செய்ததாகக் கூறி தென்பாகம் காவல்துறையினர் அவரை கைது செய்தனர். அவரிடமிருந்து 120 மதுபான பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
இந்த நிலையில், அருணாச்சலம் தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். பின்னர், சிகிச்சை பலனின்றி ஜூலை 23ஆம் தேதி உயிரிழந்தார்.
குடும்பத்தினர் குற்றச்சாட்டு என்ன?
அருணாச்சலத்தின் குடும்பத்தினர், காவல்துறையினர் தாக்கியதால்தான் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டதாக குற்றஞ்சாட்டுகின்றனர்.
பிபிசி தமிழிடம் பேசிய அவரது தாய் பரமேஸ்வரி, "எனது மகனுக்கு வலிப்பு வந்ததில் தானாக கீழே விழுந்து தலையில் அடிபட்டு மருத்துவமனையில் சேர்த்து இருப்பதாக எனக்கு தகவல் தெரிவித்தனர்.
காவல்துறையினர் தாக்கியதால்தான் தலையில் காயம் ஏற்பட்டு உயிரிழந்துள்ளார். சம்பந்தப்பட்ட காவலர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். அதுவரை உடலைப் பெற்றுக்கொள்ள மாட்டோம்," என்றார்.
அருணாச்சலத்தின் உறவினர் ராஜேஸ்வரி, "அவரை கைது செய்த இடத்திலிருந்து காவல் நிலையம் வரை மற்றும் காவல் நிலையத்துக்குள் உள்ள அனைத்து கண்காணிப்பு கேமரா காட்சிகளையும் ஆய்வு செய்ய வேண்டும். காவல்துறை கூறுவது போல் அவர் தானாக விழுந்தாரா அல்லது காவல்துறையினர் தாக்கினார்களா என்பது வெளிச்சத்துக்கு வர வேண்டும்," என்று கூறினார்.
இந்த குற்றச்சாட்டுகளை காவல்துறை மறுத்துள்ளது.
தூத்துக்குடி காவல்துறை வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில், அருணாச்சலம் கைது செய்யப்பட்ட பிறகு சட்டப்படி பின்பற்ற வேண்டிய அனைத்து நடைமுறைகளும் முறையாக மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட நாளில் மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டபோது, அவரது உடலில் வெளிப்புற காயங்கள் எதுவும் இல்லை என்று மருத்துவர் சான்றளித்ததாக காவல்துறை கூறியுள்ளது.
மேலும், காவல் நிலையத்தில் இருந்தபோது அருணாச்சலம் திடீரென மயங்கி விழுந்ததாகவும், அந்த சம்பவம் கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
காவல் நிலைய வரவேற்பு பகுதியில் இருந்த அவரது தாயார் அழைக்கப்பட்டு, மேலதிக மருத்துவ பரிசோதனைக்காக அவரை உறவினர்களுடன் காவல் நிலைய பிணையில் விடுவித்ததாகவும் காவல்துறை கூறியுள்ளது.
பின்னர் மருத்துவமனை அருகே அவர் மீண்டும் மயங்கி விழுந்ததாக உறவினர்கள் தகவல் தெரிவித்ததாகவும், சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்ததாகவும் காவல்துறை விளக்கம் அளித்துள்ளது
இதனிடையே இன்று காலை தூத்துக்குடி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் தலையில் அறுவை சிகிச்சை செய்வதற்காக அருணாச்சலத்திற்கு தலையில் மொட்டை போட்டுக் கொண்டிருந்தபோது திடீரென அவருக்கு உடல்நிலை மிகவும் மோசமானது என அவரது குடும்பத்தினர் கூறுகின்றனர்.
அப்போது உடன் அவரது நண்பர்கள் அருணாச்சலத்தை செல்போனில் வீடியோ எடுத்தனர். தன்னை கைது செய்து அழைத்துச் சென்ற நான்கு போலீசார் தன்னை அடித்ததால் தான் தலையில் காயம் ஏற்பட்டதாக அருணாச்சலம் வீடியோவில் கூறியுள்ளார்.
''தலையில் பலத்த காயம் ஏற்பட்டிருப்பதால் தலையில் அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் அதற்கு தலையை முட்டை அடிக்க வேண்டும் என மருத்துவர்கள் கூறியதை அடுத்து இன்று காலை மருத்துவமனையில் வைத்து என் மகனுக்கு தலையில் மொட்டை போடப்பட்டது. ஒரு சில மணி நேரத்தில் அவன் உயிரிழந்தான். போலீசார் தாங்கள் அருணாச்சலத்தை அடிக்கவில்லை தானாக கீழே விழுந்ததில் தலையில் அடிபட்டதாக கூறுகின்றனர். என் மகனுக்கு இதுவரை வலிப்பு நோய் வந்ததில்லை'' என்கிறார் தாய் பரமேஸ்வரி
இதைத்தொடர்ந்து அருணாச்சலத்தின் உறவினர்கள் காவலர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கக்கோரி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். உரிய நீதி வழங்கவில்லை என்றால் உடலை வாங்கபோவதில்லை எனவும் அவர்கள் கூறியுள்ளனர்.
போராட்டத்தில் ஈடுபட்டு வருபவர்களுடன் தூத்துக்குடி டவுன் துணை காவல் கண்காணிப்பாளர் சுனில் மற்றும் காவல்துறையினர் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த மரணம் தொடர்பாக, அருணாச்சலத்தின் தந்தை அளித்த புகாரின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு