You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
'நியூ யார்க் வந்தால் நெதன்யாகு கைது செய்யப்படலாம்' - ஜோஹ்ரான் மம்தானி கருத்துக்கு இஸ்ரேலின் பதில் என்ன?
இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு கைது செய்யப்படலாம் என நியூ யார்க் நகர மேயர் ஜோஹ்ரான் மம்தானி தெரிவித்த கருத்து விவாதப் பொருளாகியுள்ளது.
செப்டம்பர் மாதம் நியூ யார்கில் நடைபெற இருக்கும் ஐக்கிய நாடுகள் பொது சபையின் கூட்டத்தில் கலந்து கொள்ள நெதன்யாகு வந்தால் அவரைக் கைது செய்வதற்கான சாத்தியங்கள் குறித்து தனது அலுவலகம் ஆலோசித்து வருவதாக மம்தானி தெரிவித்துள்ளார்.
நியூ யார்க் டைம்ஸின் பாட்காஸ்டான "தி இன்டர்வியூவில்' பேசிய மம்தானி, நெதன்யாகுவின் கைது தொடர்புடைய சட்ட அம்சங்களை தனது சட்டக்குழு விவாதித்து வருவதாகத் தெரிவித்திருந்தார். தனது தேர்தல் பரப்புரையிலும் இதனை அவர் உறுதியளித்திருந்தார்.
"பிரதமர் நெதன்யாகுவின் இடம் ஹேகில் தான் இருக்கிறது. அவர் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தால் (ஐசிசி) குற்றச்சாட்டுக்கு உள்ளாக்கப்பட்ட ஒரு போர்க்குற்றவாளி. கடந்த சில ஆண்டுகளாக அவருடைய செயல்களால் உருவான சூழலால் பலரும் இந்தப் பார்வையைக் கொண்டுள்ளனர்," என மம்தானி கூறினார்.
இந்த விவகாரத்தில் சட்டம் தன்னை என்ன செய்ய அனுமதிக்கிறது என மம்தானியிடம் கேட்கப்பட்டபோது, "இது தொடர்பாக எங்கள் சட்டத்துறையுடன் தொடர்ந்து விவாதித்து வருகிறோம். ஆனால் சிலர் தங்களின் சொந்த விருப்பங்களுக்கு ஏற்ப சட்டங்களை எழுதுவது அல்லது சட்ட நடைமுறைகளைக் கடந்து செல்வது ஆகியவற்றை தேசிய அளவில் பலமுறை பார்த்திருக்கிறோம். நம்முடைய நோக்கம் அதைச் செய்வது அல்ல" என்றார்
2023 அக்டோபர் 7-ஆம் தேதியன்று நடைபெற்ற ஹமாஸ் தாக்குதலைத் தொடர்ந்து காஸாவில் போர்க்குற்றத்தில் ஈடுபட்டதாகக் குற்றம் சாட்டி பெஞ்சமின் நெதன்யாகு மற்றும் பல இஸ்ரேலிய தலைவர்களுக்கு எதிராக 2024-இல் ஐசிசி கைது வாரண்ட் பிறப்பித்திருந்தது.
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் முன்னாள் அதிபர் ஜோ பைடன் ஆகிய இருவருமே ஐசிசியின் கைது வாரண்டை விமர்சித்திருந்தனர்.
இந்த நிலையில் மம்தானியின் கருத்து சமூக ஊடகங்களில் விவாதப் பொருளாகியுள்ளது.
இந்தச் செய்திக்கு எதிர்வினையாற்றிய ஐ.நாவுக்கான அமெரிக்க தூதர் மைக் வால்ட்ஸ், நெதன்யாகுவை கைது செய்வதாக அச்சுறுத்துவதை ஏன் நடைமுறைப்படுத்த முடியாது என தெரிவித்தார்.
அதற்கான நான்கு காரணங்களை அவர் தனது எக்ஸ் பதிவில் பட்டியலிட்டுள்ளார்.
அந்தப் பதிவில்,''முதலாவதாக சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் அமைக்கப்படுவதற்கு சட்ட அடிப்படையாக இருந்த ஒப்பந்தத்தில் அமெரிக்கா கையெழுத்திடவில்லை. இரண்டாவதாக ஐ.நா தலைமையக ஒப்பந்தம் ஐ.நா கூட்டங்களில் கலந்து கொள்ளும் வெளிநாடுகளின் தலைவர்களுக்கு ராஜ்ஜிய பாதுகாப்பை வழங்குகிறது. மூன்றாவதாக அரசாங்கம் அல்லது நாடுகளின் தலைவர்களுக்கு உள்ள சட்டப் பாதுகாப்பு இந்தச் சூழலிலும் பொருந்தும். நான்காவதாக வெளியுறவு கொள்கை மற்றும் அது போன்ற சட்ட விவகாரங்களில் உள்ளூர் அமைப்புகளைவிடவும் மத்திய அரசாங்கத்திற்கே அதிகார வரம்பு உள்ளது. எனவே அத்தகைய நடவடிக்கைகளை நியூ யார்க் மேயரின் விருப்பு அல்லது அறிவிப்பால் மேற்கொள்ள முடியாது.'' என கூறியுள்ளார்.
'இது ஒரு அரசியல் கவனம் ஈர்க்கும் உத்தி'
மம்தானியின் கருத்து வெறும் தலைப்புச் செய்திகளை உருவாக்குவதற்காகவே தெரிவிக்கப்பட்டுள்ளது என ஐ.நாவுக்கான இஸ்ரேல் தூதர் டேனி டேனன் தெரிவித்தார்.
"ஜோஹ்ரான் மம்தானி நியூ யார்கை நிர்வகிக்கத் தவறிவிட்டார். அவர் மேயராக தனது பொறுப்புகளில் கவனம் செலுத்தி நகரத்தில் நிகழும் யூத எதிர்ப்பு சம்பவங்களை எதிர்கொள்ளாமல் இஸ்ரேலைத் தாக்குவதன் மூலம் சர்ச்சையை உருவாக்கி தலைப்புச் செய்திகளில் வர விரும்புகிறார்," என்று தனது எக்ஸ் பதிவில் தெரிவித்துள்ளார்.
மேலும் அவர், "இது எதையும் மாற்றப்போவதில்லை. இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு நியூ யார்க் வந்து ஐ.நாவின் பொதுச் சபையில் கலந்து கொண்டு இஸ்ரேலின் நிலையையும் தன் குடிமக்களைப் பாதுகாக்கும் அதன் உரிமைகளையும் ஆதரித்துப் பேசுவார்.'' என கூறியுள்ளார்.
இஸ்ரேலுக்கான முன்னாள் அமெரிக்க தூதர் டான் ஷாபிரோ எக்ஸ் தளத்தில் தனது எதிர்வினையைப் பதிவு செய்துள்ளார்.
"மேயர் மம்தானிக்கு ஒரு செய்தி: நெதன்யாகு அரசியலில் பிழைத்திருக்க போராடி வருகிறார். இஸ்ரேலில் பலரும் அவர் மீது கோபத்தில் உள்ளனர். அடுத்த தேர்தல் வருகிறபோது அவரை ஆட்சியிலிருந்து அகற்ற விரும்புகின்றனர். நியூ யார்கில் அவரைக் கைது செய்ய முயற்சி செய்து தோல்வியடைந்தால், அவருக்கு அரசியல் அனுதாபம் மற்றும் உள்நாட்டில் ஆதரவு கிடைப்பது மட்டுமே அதனால் கிடைக்கக்கூடிய பலனாக இருக்கும். அத்தகைய நகர்வு அவருடைய எதிராளிகளைவிட அவருக்கே நன்மைபயக்கும். வேறு வார்த்தைகளில் சொன்னால், இது ஒரு சுய-கோலாக அமையலாம்." என்று அதில் தெரிவித்துள்ளார்.
மனித உரிமைச் செயற்பாட்டாளரும் இஸ்ரேல்-ஆஸ்திரேலிய யூதர்கள் கவுன்சிலின் ஆர்சென் ஓஸ்ட்ரோவ்ஸ்கி, "நெதன்யாகு நியூ யார்கிற்கு வந்தால் அவரைக் கைது செய்வேன் என மம்தானி கூறுவது வெறும் பொறுப்பற்ற அரசியல் பேச்சு மட்டுமல்ல, அது சர்வதேச சட்டம், அமெரிக்கச் சட்டம் மற்றும் மேயரின் அதிகாரம் ஆகியவற்றை பற்றிய தவறான புரிதல்களாகவே இருக்கிறது." எனத் தெரிவித்தார்.
இது இஸ்ரேல் எதிர்ப்பு நிலைப்பாட்டை பிரதிபலிப்பதாக விமர்சகர்கள் கருதுகின்றனர்.
வெளிநாடுகளின் தலைவர்கள், குறிப்பாக ஐ.நா நிகழ்வில் கலந்துகொள்கிறபோது அவர்களை கைது செய்யும் சட்ட அதிகாரம் நியூ யார்க் மேயருக்கு இல்லை என விமர்சகர்கள் கூறுகின்றனர்.
ஐ.நா அமைந்திருக்கும் நாடான அமெரிக்கா சர்வதேச கடமைகளுக்கு உட்பட்டது. இத்தகைய விவகாரங்களுக்கான அதிகார வரம்பு மத்திய அரசிடம் தான் உள்ளது, நியூ யார்க் நகர நிர்வாகத்திடம் அல்ல என அவர்கள் கூறுகின்றனர்.
மம்தானி மீது நெதன்யாகு வைக்கும் குற்றச்சாட்டு என்ன?
இதற்கிடையே வானொலி நிகழ்ச்சித் தொகுப்பாளராக சிட் ரோசன்பெர்க் உடன் நெதன்யாகு சமீபத்தில் நடத்திய உரையாடல் சமூக ஊடகங்களில் விவாதிக்கப்படுகிறது. ரோசன்பெர்க் மம்தானியின் விமர்சகராக அறியப்படுகிறார். அந்த உரையாடலில், மம்தானி ஹமாஸ் மீது அனுதாபம் கொண்டவராக இருக்கிறார் எனத் நெதன்யாகு குற்றம் சுமத்தியிருந்தார்.
"அமெரிக்க மதிப்புகளுடன் தோளோடு தோள் நின்று செயல்படும் ஒரே ஜனநாயக நாடான இஸ்ரேலை அவர்கள் கண்டிக்கிறார்கள். ஆனால் அவர்கள் யாரை ஆதரிக்கிறார்கள்? உலகில் உள்ள ஒவ்வொரு யூதரையும் அழித்தொழிக்க வேண்டும் என்று வெளிப்படையாகக் கூறும் ஹமாஸைத் தான். மேலும், ஹோலோகாஸ்டிற்குப் பிறகு யூதர்களுக்கு எதிராக நிகழ்த்தப்பட்ட மிகப் பெரிய படுகொலைத் தாக்குதலையும் ஹமாஸ் மேற்கொண்டது." எனத் தெரிவித்தார்.
நெதன்யாகு, "யூதர்களையும் இஸ்ரேலையும் வெறுப்பவர்கள் இறுதியில் அமெரிக்காவையும் வெறுக்கிறார்கள் என்பதை மம்தானி பொருட்படுத்தவில்லை" என்று கூறினார்.
மேலும். "அவர் ஆழமாக அமெரிக்காவையும் வெறுக்கிறார் என நினைக்கிறேன்." என்றார்,
நவம்பர் 2024-இல் நெதன்யாகுவுக்கு எதிராக ஐசிசி கைது வாரண்ட் பிறப்பித்திருந்தது.
நெதன்யாகு காஸாவில் போர்க்குற்றத்தில் ஈடுபட்டதாக ஐசிசி குற்றம் சாட்டுகிறது. ஆனால் இதனை இஸ்ரேல் மறுக்கிறது. ஹமாஸ் தளபதிக்கு எதிராகவும் ஐசிசி வாரண்ட் பிறப்பித்திருந்தது.
முன்னாள் அதிபர் ஜோ பைடன் தனது ஆட்சிக் காலத்தின் கடைசி வாரங்களிலும் ஐசிசி கைது வாரண்டை விமர்சித்திருந்தார்.
ஐசிசி-யின் நடவடிக்கையை 'அதிர்ச்சியளிக்கும் செயல்' என்று குறிப்பிட்ட பைடன், இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையே எந்த ஒப்பீடும் இல்லை என்று கூறினார்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு