You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
'காமம், தந்திரம், அதிகாரம்': ஹோமரின் ஒடிஸியில் கதையின் போக்கை தீர்மானிக்கும் பெண்கள்
- எழுதியவர், டெய்ஸி டன்
- பிரசுரிக்கப்பட்டது
- வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள்
சுமார் 2,800 ஆண்டுகள் பழமையான காவியத்தைத் தழுவி தற்போது திரைப்படம் எடுக்கப்பட்டுள்ளது. இது வெறும் வீரச் செயல்களைப் பற்றிய நேரடியான கதை மட்டுமல்ல.
இத்திரைப்படத்தின் நாயகனான ஒடிசியஸ் ஒரு வீரர். ஆனால், அவர் தனது பயணத்தில் சந்திக்கும் பெண்கள், வனதேவதைகள், மந்திரவாதிகள் மற்றும் பெண் கடவுள்களின் தந்திரங்கள், சூழ்ச்சிகள் மற்றும் கவர்ச்சிகளால் தான் இக்கதை வடிவமைக்கப்பட்டுள்ளது.
அதனால் ஒடிசியஸ் மிகவும் சாதாரண மனிதனைப் போல் தோன்றுகிறார்.
தி ஒடிஸி என்ற இந்தக் காவியம் , ட்ரோஜன் போரில் பல ஆண்டுகள் போராடிய பிறகு, தனது ராஜ்ஜியமான இத்தாகாவுக்குத் திரும்ப முயலும் கிரேக்க புராண வீரர் ஒடிசியஸின் பயணத்தை விவரிக்கிறது.
பத்து ஆண்டுகள் நீடிக்கும் அவரது ஆபத்தான கடல் பயணம், கடுமையான சோதனைகளும் அபாயங்களும் நிறைந்ததாக இருக்கிறது. அந்தப் பயணம் தான் இந்த மாதம், மாட் டேமன் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்கள் நடித்துள்ள கிறிஸ்டோபர் நோலனின் திரைப்படமாக வெளியாகியுள்ளது.
இந்தக் கதையின் நாயகன் ஒரு ஆண் என்றாலும், தி ஒடிஸி திரைப்படத்தில் பெண்கள் தான் முக்கிய இடத்தைப் பெறுகின்றனர்.
நம் நாயகன் தனது ராஜ்யத்திற்குத் திரும்பி அதை மீண்டும் கைப்பற்றுவதற்கான தேடல், அவர் வழியில் சந்திக்கும் பெண்கள், வனதேவதைகள் மற்றும் பெண் கடவுள்களின் தந்திரங்களாலும் கவர்ச்சிகளாலும் ஒவ்வொரு திருப்பத்திலும் வடிவமைக்கப்படுகிறது.
அதனால், 'தி ஒடிஸி' வெறும் வீரத்தைப் பற்றிய கதை அல்ல.
காமம், தந்திரம், அதிகாரம் ஆகியவற்றைப் பற்றிய கதையாகவும் அது இன்றுவரை பொருத்தமுடையதாகவும் உள்ளது.
இந்தக் காவியம், கதையின் நடுப்பகுதியிலிருந்து தொடங்குகிறது.
ஏழு ஆண்டுகளாக கலிப்சோ என்னும் தேவகன்னியுடன் வாழ்ந்து வரும் ஒடிசியஸ், ஒஜீஜியா தீவின் கடற்கரையில் அமர்ந்து அழுதுகொண்டிருப்பதுடன் கதை ஆரம்பமாகிறது.
ட்ரோஜன் போர்க்களத்தில் மிகப் பெரிய வீரராகத் தன்னை நிரூபித்திருந்தாலும், இங்கே அவர் முற்றிலும் சக்தியற்றவராகத் தெரிகிறார்.
அவரை அந்தத் தீவிலிருந்து விடுவிக்கக் கூட கடவுள்களின் சபை தலையிட வேண்டிய நிலை ஏற்படுவது, அந்த உணர்வை மேலும் வலுப்படுத்துகிறது.
ஆனால், ஒடிசியஸ் கலிப்சோவின் கைதியாக அல்ல, தன்னுடைய மனநிலைக்கே கைதியாக இருக்கிறார்.
நவீன வாசகர்களின் பார்வையில், தனது சொந்த ராஜ்ஜியத்துக்கு திரும்ப வேண்டும் என்ற முயற்சியைத் தொடர முடியாமல் அவர் தயங்குவது, போர் முடிந்ததற்க்குப் பிறகு ஏற்படும் பிந்தைய மனஅழுத்தக் கோளாறான பி.டி.எஸ்.டி-யின் அறிகுறியாகக் கருதப்படலாம்.
அதேநேரத்தில், கலிப்சோவின் மீது அவருக்கு இருக்கும் ஈர்ப்பையும் அது குறைத்து மதிப்பிடுவதில்லை.
ஒடிசியஸே கலிப்சோவிடம், தனது மனைவி பெனலோப் ஒரு சாதாரண மனிதப் பெண் என்பதால், அழகில் உன்னுடன் ஒப்பிட முடியாது என்று ஒப்புக்கொள்கிறார்.
இதற்கிடையில், ஒடிசியஸின் மனைவி பெனலோப், கணவர் இல்லாத காலத்தில் அமைதியாகக் காத்திருக்கவில்லை.
அவரைத் திருமணம் செய்து கொண்டு இத்தாகாவின் புதிய அரசராக வேண்டும் என்ற ஆசையில் அரண்மனைக்கு வந்த 108 வரன்களின் முயற்சிகளை, அவர் புத்திசாலித்தனமாகவும் உறுதியுடனும் எதிர்த்து நிற்கிறார்.
தனது மாமனார் லயர்டீஸுக்காக இறுதிச் சடங்கு ஆடையை நெய்து, இரவு நேரங்களில் நெய்ததை மீண்டும் அவிழ்த்து விடும் பெனலோப்பின் செயல், இந்தக் காவியத்தில் நினைவில் நிற்கும் அத்தியாயங்களில் ஒன்றாகும்.
ஒருவகையில், அவர் எப்போதும் மாறிக்கொண்டே இருக்கும் ஒரு இலக்கைப் போன்றவர்.
வரன்களைத் தொடர்ந்து தடுப்பதில் அவர் அடையும் வெற்றி, ஒடிசியஸ் தனது அரசாட்சியை மீண்டும் கைப்பற்ற முடியுமா என்பதில் நேரடியாகத் தாக்கத்தை ஏற்படுத்துகிறது.
ஒடிசியஸுக்கு ஆதரவாக இருக்கும் முக்கிய தெய்வம் ஒரு தேவதை என்பதும் குறிப்பிடத்தக்கது.
தந்திரத்தில் சிறந்த அதீனா, ட்ரோஜன் போரிலேயே அவருக்கு உதவியதுடன், அவர் வீட்டுக்குத் திரும்ப வேண்டும் என்ற முயற்சியையும் முன்னெடுத்தார்.
பின்னர், ஒடிசியஸ் பலவீனமான நிலையில் ஃபேயேசியர்களின் நாட்டை அடையும்போது, அதீனா மிகவும் புத்திசாலித்தனமாக அவரைக் காப்பாற்றும் சூழலை உருவாக்குகிறார். அவரது பலவீனத்தை மறைத்து, தோற்றத்தை மேலும் கம்பீரமாக மாற்றி, கடவுளைப் போன்ற தோற்றத்தை அளிக்கிறார்.
அதன் மூலம், கடல் பயணத்தில் புகழ்பெற்ற ஃபேயேசியர்களின் நம்பிக்கையையும் ஆதரவையும் ஒடிசியஸ் பெறுகிறார். அவர்கள் அவருக்கு தங்குமிடம், செல்வம் மற்றும் இத்தாகாவுக்குச் செல்ல பாதுகாப்பான பயண வசதியையும் வழங்குகின்றனர்.
கவனிக்கத்தக்க வகையில், ஒடிசியஸுக்கும் அவரது மகன் டெலிமாக்கஸுக்கும் முன் தோன்றும் பெரும்பாலான தருணங்களில், அதீனா ஒரு ஆணாக வேடமிடுகிறார்.
உதாரணமாக, இத்தாகாவுக்கு நட்பான அரசரான மெண்டீஸ் என்ற பெயரிலும், ஃபேயேசியர்களின் ஆண் தூதராகவும் அவர் தோன்றுகிறார்.
பூமியில் அதிகாரம் ஆண்களிடம் இருந்தாலும், நிகழ்வுகளை மறைமுகமாக வழிநடத்துவது பெண்கள்தான் என்பதை அதீனா நன்கு அறிந்திருக்கிறார்.
ஒடிசியஸ் தனது பயணத்தில் சந்திக்கும் கதாபாத்திரங்களைப் பார்த்தாலே இதை புரிந்துகொள்ள முடியும்.
ஃபேயேசியர்களின் நாட்டை அடைந்த பிறகு, தாமரை உண்பவர்கள் முதல் சைக்ளோப்ஸ் வரை தனது பயணத்தில் நடந்த அனுபவங்களை அவர் அங்குள்ள அரச குடும்பத்தினரிடம் விவரிக்கிறார்.
அவர் சொல்லும் புராணப் பெண்களைப் பற்றிய கதைகள், அவர்களின் வெளிப்படையான அமைதியான தோற்றத்திற்குப் பின்னால் இருக்கும் மர்மத்தின் காரணமாக, மிகவும் அச்சமூட்டுவதாக இருக்கின்றன.
இனிமையான முகமூடிகளுக்குப் பின்னால்
உதாரணமாக, மேற்கு கடலில் ஆபத்தான பாறைகள் சூழ்ந்த தனிமையான தீவில் வாழும் சைரன்களின் பாடலைக் கேட்க வேண்டும் என்ற ஆசை தனக்கு இருந்ததாக, ஒடிசியஸ் தனது விருந்தினர்களிடம் வெளிப்படையாக ஒப்புக்கொள்கிறார்.
பிற்கால கிரேக்க மரபுகளிலும் கலைப்படைப்புகளிலும், சைரன்கள் பறவை போன்ற பெண்களாகவோ அல்லது கடற்கன்னிகளாகவோ சித்தரிக்கப்பட்டனர்.
ஆனால், ஒடிசியஸ் அவர்களின் தேன் போன்ற இனிமையான குரலைப் பற்றியே அதிகமாக விவரிக்கிறார். அந்தப் பாடலுக்கு, ஆண்களை கவர்ந்து அவர்களின் மரணத்திற்கே இட்டுச் செல்லும் சக்தி இருப்பதாக அவர் கூறுகிறார்.
சைரன்களுக்கு முன்னால் இருக்கும் புல்வெளி, அவர்களின் பாடலைக் கேட்க நின்று உயிரிழந்த ஏராளமான மனிதர்களின் எலும்புகளால் நிறைந்துள்ளது. அந்த ஆபத்தை ஏற்க ஒடிசியஸ் தயாராக இருந்தார்.
தன்னை அந்த இசையைப் பின்தொடர்ந்து கடலில் குதிக்காமல் தடுக்க, கப்பலின் பாய்மரத்தில் கட்டிவிடுமாறு தனது வீரர்களிடம் அவர் கூறுகிறார்.
அவர்களின் பாடல் எவ்வளவு அழகாக இருந்தாலும், சைரன்கள் உயிருக்கு ஆபத்தானவர்கள். சிர்சேவும் அதேபோல் ஆபத்தான அழகி.
அவரை முதன்முதலில் சந்திப்பவர்கள், அவர் ஆபத்தானவர் என்று நினைக்க மாட்டார்கள்.
ஆனால், சைரன்களைப் போலவே, அவரது இனிமையான தோற்றத்திற்குப் பின்னால் மந்திர சக்திகள் மறைந்திருந்தன. ஹோமர் அவரை ஒரு மந்திரவாதியாக சித்தரிக்கிறார்.
மூலிகைகள் மற்றும் மந்திர மருந்துகளைப் பயன்படுத்தி, ஒடிசியஸின் தோழர்களைப் பன்றிகளாக மாற்றும் சக்தி அவருக்கு இருந்தது.
இருப்பினும், தனது பயணத்தில் ஒடிசியஸ் சந்திக்கும் பல விசித்திரமான உயிரினங்களைப் போலவே, சிர்சே தடையாக மட்டுமல்ல, உதவியாகவும் இருக்கிறார்.
அவர் ஒடிசியஸை தனது காதலனாக ஆக்கினாலும் அவர் பாதாள உலகிற்குச் செல்ல உதவுகிறார்.
அங்கு, ஒடிசியஸ் தீர்க்கதரிசி டைரிசியஸைச் சந்திக்கிறார். இத்தாகாவுக்குத் திரும்புவதற்கான முக்கிய ஆலோசனைகளை அவர் வழங்குகிறார்.
பெண் அரக்கிகளையும் கவர்ச்சியான தேவகன்னிகளையும் வெறுமனே புறக்கணித்து விட முடியாது என்பதுதான் இந்தக் கதையில் தொடர்ந்து கூறப்படும் செய்தி.
அவர்களை வெல்ல வேண்டும் என்றால், ஒரு குறிப்பிட்ட எல்லை வரை அவர்களிடம் ஒடிசியஸ் தன்னை ஒப்படைக்க வேண்டியிருக்கிறது.
பயணத்தில் அவர் சந்திக்கும் அனைவரும், அவரது மன உறுதியையும், ஒரு குறிப்பிட்ட எல்லை வரை நடந்து கொள்ளும் அவரது திறனையும் தொடர்ந்து சோதிக்கிறார்கள்.
அந்த அளவோடு நடக்கும் பண்பு, பண்டைய கிரேக்கர்கள் மிகவும் மதித்த ஒரு குணமாகும். ஒடிசியஸின் சாகசங்களை சந்தேகத்துடன் பார்க்கும் வாசகர்கள், அவை அனைத்தும் அவர் கற்பனையாக உருவாக்கிய கதைகள் என்று நினைக்கலாம்.
ஃபேயேசியர்களைக் கவர்ந்து, அவர்கள் தன்னை இத்தாகாவுக்கு அழைத்துச் செல்ல வேண்டும் என்பதற்காக அவர் இந்தக் கதைகளைச் சொன்னதாகவும் அவர்கள் கருதலாம்.
அப்படிப்பட்ட வாசகர்கள்தான் இந்தக் கதையை உருவகமாகப் புரிந்துகொள்ள அதிகம் முன்வருவார்கள்.
ஒடிசியஸ் உண்மையில் வெளிப்புற அரக்கர்களுடன் போராடவில்லை; தனது உள்ளார்ந்த மனப் போராட்டங்களுடன் அதிகம் போராடியிருக்கலாம். அவற்றில் பல, வெளிப்படையாகத் தோன்றுவதைவிட மிகவும் ஆபத்தானவையாக இருக்கின்றன.
ஒடிசியஸின் கதைகள் தொடர்ந்து மாறிக்கொண்டே இருப்பதும், அவற்றின் பிரமாண்டமும், வண்ணமயமான தன்மையும், நம்ப முடியாத அளவுக்கு விரிவடைவதும், இந்தக் காவியத்தின் அழகில் முக்கிய பங்காற்றுகின்றன.
அதுவே ஒடிசியஸை ஒரு தனித்துவமான வீரனாகவும் உருவாக்குகிறது.
மொழிபெயர்ப்பாளர் எமிலி வில்சன் கூறுவதுபோல், அவர் "சிக்கலான மனிதர்."
ஏமாற்றுவதில் வல்லவரான அவர், சூழ்நிலைக்கு ஏற்றபடி தனது கதையையும் அடையாளத்தையும் மாற்றிக் கொண்டே இருப்பதால், அவர் நழுவிப் போகும் தன்மையும் சிக்கலான குணமும் கொண்டவராகத் தோன்றுகிறார்.
புத்திசாலித்தனம், கற்பனைத்திறன், குறைபாடுகள் ஆகிய அனைத்தும் சேர்ந்த ஒடிசியஸ், இறுதியில் பண்டைய கிரேக்க உலகின் மிகவும் மனிதத் தன்மை கொண்ட வீரராக விளங்குகிறார்.
பெண்களின் கவர்ச்சிக்கும், ஃபேயேசியர்களின் உலகம் போன்ற பிரமாண்டமான உலகங்களின் ஈர்ப்புக்கும் அவர் அடிபணியும் தன்மையே, அவரது மிகப் பெரிய பலமாகவும், அதே நேரத்தில் அவரது வீழ்ச்சிக்கான காரணமாகவும் அமைகிறது.
அதனால்தான், இன்றும் ஒடிசியஸின் கதை நம்மிடம் பேசப்பட்டுக் கொண்டே இருக்கிறது.
டெய்சி டன், விருதுகள் பெற்ற செவ்வியல் ஆய்வாளரும் எழுத்தாளரும் ஆவார். அவரது நூல்களில் 'தி மிஸ்ஸிங் த்ரெட்' மற்றும் 'தி லேடிபேர்ட் எக்ஸ்பர்ட் புக் ஆன் ஹோமர்' ஆகியவை குறிப்பிடத்தக்கவை.
தி ஒடிஸி திரைப்படம் ஜூலை 17 அன்று அமெரிக்க மற்றும் இங்கிலாந்து திரையரங்குகளில் வெளியானது.
- இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு