காந்தி சமாதிக்குச் சென்ற ராகுல் காந்தி - 'ஜனநாயகத்தை அரசு படுகொலை செய்கிறது' என குற்றச்சாட்டு

எதிர்க்கட்சி எம்.பி.க்களுடன் காந்தி சமாதிக்குச் செல்லும் ராகுல் காந்தி - என்ன நடக்கிறது?

பட மூலாதாரம், @INCIndia

பிரசுரிக்கப்பட்டது
வாசிக்கும் நேரம்: 2 நிமிடங்கள்

நீட் வினாத்தாள் கசிவு விவகாரத்தை ஒட்டி டெல்லியில் நடைபெற்று வரும் எதிர்க்கட்சிகளின் போராட்டம் வியாழக்கிழமை மாலை மேலும் தீவிரமடைந்தது.

மக்களவையில் எதிர்க்கட்சித் தலைவரான ராகுல் காந்தி மற்றும் எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த சுமார் 100 நாடாளுமன்ற உறுப்பினர்கள் காந்தி சமாதியை அடைந்தனர்.

அங்கு, நீட் வினாத்தாள் கசிவு விவகாரத்துக்குப் பிறகு உயிரிழந்த மாணவர்களுக்கும், போராட்டங்களின் போது காயமடைந்த மாணவர்களுக்கும் மரியாதை செலுத்தினர்.

அப்போது பேசிய ராகுல் காந்தி, "எங்கள் தலைவர் மகாத்மா காந்தி இங்குதான் படுகொலை செய்யப்பட்டார். இன்று மோதி அரசு இந்தியாவில் ஜனநாயகத்தை படுகொலை செய்து வருகிறது. இதை எதிர்க்கட்சிகள் ஏற்றுக்கொள்ளப் போவதில்லை," என்றார்.

மேலும், மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானை பிரதமர் மோதி பதவியில் இருந்து நீக்க வேண்டிய கட்டாயம் ஏற்படும் என்றும் அவர் கூறினார்.

எதிர்க்கட்சி தலைவர்களுடன் காந்தி சமாதிக்குச் செல்லும் ராகுல் காந்தி -  என்ன நடக்கிறது?

பட மூலாதாரம், ANI

முதலில் இந்தியா கேட் செல்ல விரும்பியதாகவும், ஆனால் அதற்கான அனுமதி மறுக்கப்பட்டதாகவும் அவர் கூறினார். அதனால் தற்போது காந்தி சமாதிக்குச் செல்ல முயற்சிப்பதாக தெரிவித்தார்.

இதுகுறித்து ராகுல் காந்தி கூறுகையில், "எங்கள் மாணவர்கள் தெருக்களில் போராடிக் கொண்டிருக்கிறார்கள். எனவே, அனைத்து எதிர்க்கட்சி எம்.பி.க்களும் அவர்களுடன் தெருவில் இருக்க வேண்டும் என்று எண்ணினோம். அதனால்தான் அனைவரும் இந்தியா கேட் செல்ல விரும்பினோம். அதற்கு அனுமதி மறுக்கப்பட்டது." என்றார்.

மாணவர்களுடன் தாம் இருப்பதாகவும் ராகுல் காந்தி கூறினார்.

வாட்ஸ்அப் விளம்பரம் - ஐ புறக்கணித்துவிட்டு தொடர்ந்து படிக்கவும்
வாட்ஸ்ஆப்பில்

பிபிசி தமிழ் செய்திகளை செல்போனிலேயே படிக்கலாம்

பின்தொடர கிளிக் செய்யவும்

வாட்ஸ்அப் விளம்பரம் - முடிவு

"உங்கள் மீது நடைபெறும் வன்முறைக்கு எதிராக நாங்கள் நிற்கிறோம்," என்றும் அவர் தெரிவித்தார்.

முன்னதாக இதுதொடர்பாக ராகுல் காந்தி வெளியிட்ட பதிவில், "தற்போது 'இந்தியா' கூட்டணியைச் சேர்ந்த எம்.பி.க்கள் மற்றும் தலைவர்கள் அமைதியான முறையில் காந்தி சமாதிக்கு சென்று கொண்டிருக்கிறோம்" என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும், "நாம் இழந்த மாணவர்களை நினைவுகூரச் செல்கிறோம். நீட் வினாத்தாள் கசிவு விவகாரத்துக்குப் பிறகு தற்கொலைக்கு தள்ளப்பட்ட மாணவர்களை நினைவுகூரப் போகிறோம். அதேபோல், நீதி மற்றும் பொறுப்புக்கூறலைக் கோரி அமைதியாக போராடியதற்காக தாக்கப்பட்டு காயமடைந்த மாணவர்களுடன் நாங்கள் நிற்கிறோம். இந்திய மாணவர்கள் தனியாக இல்லை," என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

மாணவர்களின் கோரிக்கைகளுக்கு முழு எதிர்க்கட்சியும் ஆதரவாக இருப்பதாகவும் ராகுல் காந்தி கூறியுள்ளார்.

இதற்கு முன்பு, டெல்லியில் உள்ள ராகுல் காந்தியின் இல்லம் முன்பாக காவல்துறை பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டிருந்தது.

காங்கிரஸ் எம்.பி.க்கள் பலர் ராகுல் காந்தியின் இல்லத்துக்கு வந்தனர். காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவும் அங்கு வந்தார். அப்போது ஊடகங்களிடம் பேசிய அவர், "ராகுல் காந்தி தேநீர் அருந்த வருமாறு அழைத்தார். அதற்காகத்தான் வந்துள்ளேன்," என்று கூறினார்.

எதிர்க்கட்சி தலைவர்களுடன் காந்தி சமாதிக்குச் செல்லும் ராகுல் காந்தி - என்ன நடக்கிறது?

பட மூலாதாரம், ANI

காங்கிரஸ் எம்.பி. ஜோதிமணி "அவர் எதிர்க்கட்சித் தலைவர். நாங்கள் அவரது கட்சியைச் சேர்ந்த எம்.பி.க்கள். அவரைச் சந்திக்கவே வந்துள்ளோம். ஆனால் அரசு இந்தப் பகுதி முழுவதையும் கோட்டையாக மாற்றியுள்ளது. அரசின் பதற்றத்தை என்னால் புரிந்துகொள்ள முடிகிறது. நாங்கள் எதிர்க்கட்சித் தலைவரைச் சந்திக்க வந்துள்ளோம். ஆனால் இங்கே அரசின் அச்சத்தைப் பார்க்க முடிகிறது," என்றார்.

இதற்கிடையில், மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து டெல்லி ஜந்தர் மந்தரில் இளைஞர்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

போராட்டத்தை முடிவுக்குக் கொண்டுவர அரசு விடுத்துள்ள வேண்டுகோள்களும் அளித்துள்ள உறுதிமொழிகளும் இளைஞர்களிடம் இதுவரை எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை எனத் தெரிகிறது.

-இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு