முதல்வர் விஜயின் 'ஜனநாயகன்' எப்படி உள்ளது? ஊடக விமர்சனம்

பட மூலாதாரம், KVN Productions
ஹெச். வினோத் இயக்கத்தில், தமிழ்நாடு முதலமைச்சரும், தமிழக வெற்றிக் கழகத் தலைவருமான விஜய் நடிப்பில் உருவான 'ஜனநாயகன்' திரைப்படம் ஜூலை 23 ( இன்று ) வெளியானது.
விஜயுடன், கௌதம் வாசுதேவ் மேனன், பிரகாஷ் ராஜ், பூஜா ஹெக்டே, மமிதா பைஜு, பிரியாமணி,சுனில், கஜராஜ் என பெரிய நட்சத்திரப் பட்டாளமே இத்திரைப்படத்தில் நடித்துள்ளது.
கதை என்ன?
ஒரு சிறைக் கைதியாக இருக்கிறார் நாயகன் விஜய். அந்த சிறையில் உள்ள ஒரு பெரும்புள்ளியைத் தப்பிக்க வைக்க, போலியாக ஜெயில் கலவரத்தை ஏற்படுத்தத் திட்டம் தீட்டப்படுகிறது.
ஆனால் நாயகன் விஜய் அத்திட்டத்தை முறியடிக்கிறார்.
காவல்துறைக்கு விஜய் உதவியதால், அவர் மீது நல்லெண்ணம் ஏற்பட்டு காவல்துறை அதிகாரியாக நடித்துள்ள கௌதம் வாசுதேவ் மேனன் விஜய்க்கு உதவுகிறார்.
பிறகு, ஒரு விபத்தில் கௌதம் வாசுதேவ் மேனன் உயிரிழக்கிறார். அதனைத் தொடர்ந்து, கௌதம் வாசுதேவ் மேனனின் மகளாக நடித்துள்ள மமிதா பைஜுவை தத்தெடுத்து வளர்க்கிறார் விஜய்.
அவரது தந்தையின் விருப்பப்படி மமிதாவை ராணுவத்தில் சேர்க்க விஜய் தொடர்ச்சியாக பல முயற்சிகளை மேற்கொள்கிறார்.
மறுபுறம், அரசியல்வாதிகளுடன் இணைந்து தனது சுயலாபத்துக்காக தமிழ்நாட்டை அழிக்க நினைக்கிறார் சர்வதேச குற்றவாளியாக நடித்துள்ள பாபி தியோல்.
யார் இந்த பாபி தியோல்? அவருக்கும் விஜய்க்கும் எவ்வாறு மோதல் ஏற்படுகிறது? அவரது சதியை முறியடிக்க தளபதி வெற்றி கொண்டானாக நடித்துள்ள விஜய் என்ன செய்கிறார் என்பதே படத்தின் மீதிக்கதை.

பட மூலாதாரம், KVN Productions
திரைப்படம் எப்படி உள்ளது?
"இயக்குநர் எச்.வினோத், முழுக்க முழுக்க ரசிகர்களை மனதில் வைத்து ஒரு கமர்ஷியல் விருந்தை படைத்திருக்கிறார். ஆக்ஷன், குடும்ப பாசம், தேசப்பற்று, சமூக கருத்து ஆகியவற்றை சரியான விகிதத்தில் கலந்து திரைக்கதையை நகர்த்தியிருக்கிறார். சில இடங்களில் திரைக்கதை வழக்கமான கமர்ஷியல் பாதையில் சென்றாலும், மாஸ் தருணங்கள் அதை மறக்கச் செய்கின்றன" என்று மாலை மலரில் வெளியாகியுள்ள திரை விமர்சனத்தில் கூறப்பட்டுள்ளது.
"ஜனநாயகன் திரைப்படம், தெலுங்கில் வெளியான பகவந்த் கேசரி திரைப்படத்தின் 80 சதவிகித ரீமேக். மீதமுள்ள திரைப்படத்தின் கதையை முதல்வர் விஜய்க்கான அரசியல், மக்கள் நலன் குறித்த பார்வையைக் கொண்டு எழுதியிருக்கிறார் இயக்குனர் ஹெச். வினோத்" என தினமணியில் வெளியாகியுள்ள விமர்சனம் கூறுகிறது.

பட மூலாதாரம், X/@JanaNayaganFilm
"ஜெயில் அதிகாரியாக வரும் கௌதம் வாசுதேவ் மேனனின் நடிப்பு கனகச்சிதம். அழகான நாயகியாக வந்து போகிறார் பூஜா ஹெக்டே. துறுதுறு நடிப்பால் கவனம் ஈர்க்கிறார் மமிதா பைஜு. வில்லத்தனத்தில் பாபி தியோல் மிரட்டுகிறார். பிரியாமணி, சுனில், பிரகாஷ்ராஜ், கஜராஜ் என அனைவருமே சிறப்பாக நடித்துள்ளனர்" என மாலைமலரின் விமர்சனம் கூறுகிறது.
"வில்லனான பாபி தியோலுக்கு குறைவான காட்சிகள்தான் என்றாலும், வலுவான கதாபாத்திரமாகத் தெரிகிறது. கதையின் நாயகியான மமிதா பைஜு நன்றாக நடித்துள்ளார். இந்தக் கதாபாத்திரத்தை ஏற்றாலும் அதை மிகச் சிறப்பாகச் செய்ய பழகிவிட்டார்" என தினமணியில் வெளியான விமர்சனத்தில் கூறப்பட்டுள்ளது.
"மமிதா பைஜு தனது காட்சிகளுக்கு கனத்தைச் சேர்த்துள்ளார். மேலும், இப்படத்தில் மிகவும் உணர்வுபூர்வமான நடிப்பை வழங்கியவர்களில் ஒருவராகவும் திகழ்கிறார். கயல் பாத்திரத்தில் நடித்துள்ள பூஜா ஹெக்டே, திரைக்கதைக்கு தேவையானதை மட்டுமே செய்திருக்கிறார், அதற்கு மேல் செய்வதற்கு அங்கு பெரிதாக எதுவும் இல்லை. பிரகாஷ் ராஜ் மற்றும் கௌதம் வாசுதேவ் மேனன் ஆகிய இருவருக்கும் திரையில் போதுமான நேரம் வழங்கப்படவில்லை என்றாலும், தங்களது துணை கதாபாத்திரங்கள் மூலம் படத்திற்கு மேலும் உயிரூட்டியுள்ளனர்" என இந்தியன் எக்ஸ்பிரஸில் வெளியாகியுள்ள விமர்சனம் கூறுகிறது.
படத்தின் கதை, திரைக்கதை எப்படி இருக்கிறது?

பட மூலாதாரம், X/@KvnProductions
"படத்தின் பிற்பகுதியில், நாம் அதுவரை பார்த்துக் கொண்டிருந்த ஒரு கதையில் இருந்து முற்றிலும் மாறுபட்ட ஒரு திரைப்படமாக இது மாறுகிறது. வளர்ப்புத் தந்தை-மகள் இடையேயான கோணம் ஓரங்கட்டப்படுகிறது. தனிப்பட்ட முறையில் இருந்த முரண்பாடு, திடீரென்று சமூகம் மற்றும் தேசம் சார்ந்த ஒரு பெரிய விஷயமாக வெடிக்கிறது. அதுவும் மிகவும் நம்பகத்தன்மையற்ற முறையில் நடக்கிறது" என டைம்ஸ் ஆஃப் இந்தியாவின் விமர்சனத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
"ஜனநாயகன் திரைப்படம், அனில் ரவிபுடி இயக்கத்தில் தெலுங்கில் வெளியாகி வெற்றிபெற்ற 'பகவந்த் கேசரி' படத்தின் ரீமேக்காகும். படத்தின் அடித்தளம் ஒன்றாகவே இருக்கும் அதே வேளையில், ஜனநாயகன் திரைப்படத்தில் இந்தக்கதை, நவீனப் போர்முறை மற்றும் அமைப்பு ரீதியிலான ஊழல் பற்றிய ஓர் அரசியல் ஆக்சன் திரில்லராக மாற்றியமைக்கப்பட்டுள்ளது.
கதைக் கருவைப் பொறுத்தவரை, வலுவான உணர்வுப்பூர்வமான கதையை அடிப்படையாகக் கொண்டு அதை இன்னும் பெரிய கதையாக விரிவுபடுத்திய முயற்சியாக இது தெரிகிறது. ஆனால் திரையில், ஒன்றோடு ஒன்று கோர்க்கப்பட்ட இரண்டு வெவ்வேறு படங்களைப் போல இது காட்சியளிக்கிறது. அதில் எதுவுமே முழுமையாகப் பலனளிக்கவில்லை" என இந்தியன் எக்ஸ்ப்ரஸில் வெளியாகியுள்ள விமர்சனத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
"சில காட்சிகளில் ஊகிக்கக்கூடிய திரைக்கதை, வழக்கமான கமர்ஷியல் சினிமா அம்சங்கள் அதிகம் உள்ளது" என்கிறது மாலை மலரின் விமர்சனம்.
"பெண்கள் முன்னேற்றம், பெண்களிடமிருந்து அகல வேண்டிய அச்சம், கிளர்ந்தெழ வேண்டிய தைரியம் என்கிற கதையில் இந்து - முஸ்லீம் கலவரங்கள் குறித்த காட்சிகள் சரியான அரசியலைப் பேசியிருந்தாலும் இன்னும் கவனமாக அதனைக் கையாண்டிருக்கலாம் என தோன்றுகிறது" என தினமணியில் வெளியாகியுள்ள விமர்சனத்தில் கூறப்பட்டுள்ளது.
படத்தின் இசை எப்படி உள்ளது?
"அனிருத்தின் இசை ஆட்டம் போட வைக்கிறது. குறிப்பாக, தளபதி கச்சேரி, ராவணன் மவண்டா பாடல்கள் சிலிர்ப்பூட்டுகின்றன" எனக் கூறுகிறது மாலைமலர் விமர்சனம்.
"இசையமைப்பாளர் அனிருத் உயிரற்ற பல காட்சிகளுக்குத் தன் பின்னணி இசையால் ரசிக்க வைக்கிறார். பாடல்களில் தளபதி கச்சேரி விசில் சப்தங்களை எழுப்புகின்றன" என தினமணியின் விமர்சனத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
"அனிருத் தனது பங்கிற்கு காட்சிகளுக்கு மேலும் விறுவிறுப்பைச் சேர்த்துள்ளார்" என்கிறது டைம்ஸ் ஆஃப் இந்தியாவில் வெளிவந்துள்ள விமர்சனம்.
"அனிருத் மீண்டும் ஒருமுறை படத்தின் இணைப்புப் பாலமாக அமைந்திருக்கிறார். அவருடைய பின்னணி இசை மட்டுமே இப்படத்தின் மிகவும் சீரான, ஒரே அம்சமாக உள்ளது. மாஸ் காட்சிகளில், தொய்வடைந்திருக்கக்கூடிய காட்சிகளை அவர் உயர்த்திப் பிடிக்கிறார். அமைதியான தருணங்களில், திரைக்கதை முழுமையாக வெளிப்படுத்தத் தவறும் உணர்வுகளுக்குத் தனது இசையால் ஆழம் சேர்க்கிறார்.
'ஒரு பேரே வரலாறு' பாடல் ஏற்கனவே விஜய்யின் அரசியல் பயணத்தின் ஓர் அடையாளமாக மாறிவிட்டது. அந்தச் சூழலோடு படத்தில் கேட்கும்போது, அத்திரைப்படத்தையும் தாண்டிய ஒரு உணர்வை அளிக்கிறது. இருப்பினும், அடிப்படையில் மோசமாக வடிவமைக்கப்பட்ட காட்சிகளை அனிருத்தால் கூட தனது இசையின் மூலம் காப்பாற்ற முடியாமல் போய்விடுகிறது" என இந்தியன் எக்ஸ்பிரஸ் விமர்சனம் சுட்டிக்காட்டுகிறது.
ஒளிப்பதிவு
"ஒளிப்பதிவாளர் சத்யன் சூரியன், ஒவ்வொரு ஆக்ஷன் காட்சியையும் பிரமாண்டமாக பதிவு செய்திருக்கிறார். குறிப்பாக கிளைமாக்ஸ் காட்சிகள் காட்சியமைப்பில் மிகப்பெரிய பலமாக அமைகின்றன" எனக் கூறுகிறது மாலைமலரில் வெளியாகியுள்ள விமர்சனம்.
"ஒளிப்பதிவு, எடிட்டிங் என கதைக்குள் என்னென்ன செய்ய வேண்டுமோ அவை செய்யப்பட்டிருந்தாலும் 3 மணி நேரத்துக்கும் அதிகமான நேரம் என்பதால் அவற்றின் பங்கு தனியாகத் தெரியவில்லை" என தினமணியின் விமர்சனத்தில் கூறப்பட்டுள்ளது.
"சத்யன் சூரியனின் ஒளிப்பதிவு, குறிப்பாக வெளிப்புறக் காட்சிகளிலும் சிஜிஐ-ஐ அதிகம் சாராத சண்டைக் காட்சிகளிலும் கவனத்தை ஈர்க்கிறது. ஆனால், உட்புறக் காட்சிகளும், விஎஃப்எக்ஸ் அதிகமாக பயன்படுத்தப்பட்ட பகுதிகளும் மந்தமாகவும் முழுமையாக உருவாக்கப்படாததாகவும் தெரிகின்றன. பிரதீப் ஈ. ராகவின் படத்தொகுப்பு சீரற்றதாக உள்ளது. 183 நிமிடங்கள் கொண்ட இந்தப் படம் மிகவும் நீளமாக உள்ளது" என்கிறது இந்தியன் எக்ஸ்பிரஸ் விமர்சனம்.
விஜயின் நடிப்பு எப்படி உள்ளது?
"ஒன் மேன் ஆர்மியாக கதையை தாங்கி பிடித்துள்ளார் விஜய். ஆக்ரோஷமாகட்டும், மகளிடம் பாசம் காட்டுவதாகட்டும் இரு வேறு பரிமாணங்களில் மிரட்டியுள்ளார். நடனத்திலும்தான் மாஸ் என்பதை காட்டியுள்ளார். விஜய் ரசிகர்களுக்கு கொண்டாட்டம் உறுதி" என்கிறது மாலைமலரின் விமர்சனம்.
''சிரித்தால், அழுதால், கிண்டலடித்தால் விஜய் எப்படி நடிப்பாரோ அதேபோன்ற நடிப்புதான் இப்படத்திலும் இடம்பெற்றிருக்கிறது. ஒட்டுமொத்தமாக அவர் இன்னும் கூடுதல் காட்சிகளில் வந்திருக்கலாம்" என தினமணியில் இடம்பெற்றுள்ள விமர்சனம் கூறுகிறது.
"ஜனநாயகன் திரைப்படம், விஜய் ஏன் 30 ஆண்டுகளாக ஒரு நட்சத்திரமாக நிலைத்து நிற்கிறார் என்பதை நினைவூட்டுகிறது. திரைக்கதை சிறப்பாக இல்லாவிட்டாலும் கூட, திரையைத் தன் கட்டுப்பாட்டில் வைக்கும் ஈர்ப்பு விசை அவரிடம் உள்ளது" என இந்தியன் எக்ஸ்ப்ரஸில் வெளியாகியுள்ள விமர்சனத்தில் கூறப்பட்டுள்ளது.
படத்தின் பலவீனம் என்ன?
"சில காட்சிகளில் யூகிக்கக்கூடிய திரைக்கதை, வழக்கமான கமர்ஷியல் சினிமா அம்சங்கள் அதிகம்" என மாலைமலரில் வெளியாகியுள்ள விமர்சனத்தில் கூறப்பட்டுள்ளது.
"விஜய் இதைவிடச் சிறந்த ஒரு படத்திற்குத் தகுதியானவர். தணிக்கைச் சான்றிதழ் தொடர்பான போராட்டம், நீதிமன்ற வழக்கு, படம் லீக் ஆனது மற்றும் 'ஏ' சான்றிதழ் வழங்கப்பட்டது என இத்திரைப்படத்தைக் காண ஆறு மாத காலம் காத்திருந்த அவரது ரசிகர்களும் இதைவிடச் சிறந்த படத்தைக் காண தகுதியானவர்கள். மேலும், 'தீரன்' படத்தின் மூலம் ஒரு புத்திசாலித்தனமான, யதார்த்தமான படத்தை உருவாக்கத் தன்னால் முடியும் என்று நிரூபித்த ஹெச். வினோத், இதையெல்லாம் உணர்ந்து இன்னும் சிறப்பாகச் செயல்பட்டிருக்க வேண்டும்" என இந்தியன் எக்ஸ்பிரஸ் விமர்சனம் கூறுகிறது.
"ஜனநாயகன் விஜய் ரசிகர்களுக்கு மாஸ் விருந்தாகவும், குடும்ப ரசிகர்களுக்கு உணர்வுப்பூர்வமான கமர்ஷியல் படமாகவும் அமைந்துள்ளது. ஆக்ஷன், உணர்வு, தேசப்பற்று, அனிருத் இசை, விஜய்யின் திரை ஆளுமை ஆகியவை சேர்ந்து கொண்டாட்டம் மிகுந்த படமாக உருவாகியுள்ளது" என்கிறது மாலைமலரில் வெளியாகியுள்ள விமர்சனம்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
































