இரான் முன் இருக்கும் 3 வழிகள் - அடுத்த நகர்வு என்ன?

பட மூலாதாரம், EPA/Shutterstock
- எழுதியவர், அமீர் அஜிமி
- பதவி, பிபிசி
- பிரசுரிக்கப்பட்டது
- வாசிக்கும் நேரம்: 5 நிமிடங்கள்
ஹோர்முஸ் நீரிணையின் கட்டுப்பாட்டை மையமாகக் கொண்டு அமெரிக்காவுடன் 10 நாட்களாக பரஸ்பரம் தாக்குதல் நடந்துவரும் நிலையில், இரான் தலைவர்களுக்கு முன் தற்போது மூன்று வழிகள் மட்டுமே இருப்பது போல் தெரிகிறது.
ஆனால் அவற்றில் எதுவும் தெளிவான வெற்றிப் பாதையை வழங்குவதாகத் தெரியவில்லை
முதல் தேர்வு, அமெரிக்காவின் பெரும்பாலான கோரிக்கைகளை ஏற்றுக்கொள்வதாகும். அதாவது, வணிகக் கப்பல்கள் மீது நடத்தப்படும் தாக்குதல்களை நிறுத்தி ஹோர்மூஸ் நீரிணை வழியாக பாதுகாப்பான மற்றும் தடையற்ற போக்குவரத்துக்கு உத்தரவாதம் அளிப்பது, அதிக அளவில் செறிவூட்டப்பட்ட யுரேனியக் கையிருப்பை கைவிடுவது அல்லது குறைப்பது, மேலும் சர்வதேச அணு ஆற்றல் அமைப்பின் கடுமையான ஆய்வுகளை ஏற்றுக்கொள்வது.
அதற்குப் பதிலாக, துறைமுகங்கள் மீதான அமெரிக்க கடற்படை முற்றுகையை முடிவுக்கு கொண்டு வருதல், பொருளாதாரத் தடைகளை தளர்த்துதல் மற்றும் எதிர்காலத் தாக்குதல்களிலிருந்து பாதுகாப்பு ஆகியவற்றைத் தேடும்.
இதற்குப் பதிலாக, தனது துறைமுகங்கள் மீதான அமெரிக்க கடற்படை முற்றுகையை முடிவுக்குக் கொண்டு வருவது, பொருளாதாரத் தடைகளை நீக்குவது மற்றும் இனி தாக்குதல் நடத்தப்படமாட்டாது போன்ற பாதுகாப்புக்கான உறுதியை இரான் எதிர்பார்க்கும்.
இந்த வழி குறைவான இழப்பைக் கொடுப்பதாக இருக்கலாம். ஆனால், அரசியல் ரீதியில் மிகவும் அதிக விலை கொடுக்க வேண்டிய தேர்வாக இது அமையும்.
ஹோர்மூஸ் நீரிணை நிர்வாகத்தில் இரானுக்கு அதிகாரப்பூர்வ பங்கு வழங்கப்படாமல் அதை மீண்டும் திறப்பது, இரானில் உள்ள சிலரின் பார்வையில் புதிய தடுப்பு சக்தியாக உருவெடுத்திருக்கும் ஒரு முக்கியமான ஆயுதத்தை கைவிடுவதாகப் பார்க்கப்படலாம். அது தற்போது இரானின் ஏவுகணைகள், பிராந்திய கூட்டாளிகள் அல்லது அணு திட்டத்தைவிட கூடுதல் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடியதாகத் தோன்றுகிறது.
முதன்முறையாக, தனது எதிரிகளால் நாட்டின் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு பதிலாக, உலகப் பொருளாதாரத்திற்கு உடனடி பாதிப்பை ஏற்படுத்தும் திறன் தமக்கிருப்பதை இரான் நிரூபித்துள்ளது
அதேநேரத்தில், அணு திட்டம் என்பது இரான் ஒருபோதும் விட்டுக்கொடுக்க முடியாத உரிமை என நீண்டகாலமாகக் கூறப்பட்டு வருகிறது.
பல மாதங்களாக நடந்த தாக்குதல்களுக்குப் பிறகு அணுசக்தி நடவடிக்கைகளுக்கு கடுமையான கட்டுப்பாடுகளை ஏற்கும் நிலை ஏற்பட்டால், அமெரிக்காவின் ராணுவ அழுத்தம் பலன் அளித்துவிட்டதாக கடும்போக்கு ஆதரவாளர்கள் வாதிட வாய்ப்பு உருவாகும்.
மேலும், இரானின் ஏவுகணைத் திட்டம், லெபனானில் உள்ள ஹெஸ்பொலா, இராக் ஷியா ஆயுதக் குழுக்கள் மற்றும் யேமனில் உள்ள ஹூதி அமைப்புகளுடனான உறவுகள் குறித்தும் அமெரிக்கா மேலும் பல கோரிக்கைகளை முன்வைக்க வழிவகுக்கும்.

பட மூலாதாரம், Getty Images
தாக்குதலை தீவிரப்படுத்துவது இரண்டாவது வழியாகும்.
அமெரிக்க ராணுவத் தளங்கள், வணிகக் கப்பல்கள் மற்றும் வளைகுடா அரபு நாடுகளின் முக்கிய கட்டமைப்புகள் மீது தாக்குதல்களை தீவிரப்படுத்துவதன் மூலம், எரிசக்தி விலைகளை உயர்த்தி, பரவலான இடையூறுகளை உருவாக்கி, அமெரிக்காவையும் அதன் கூட்டாளிகளையும் சமரசத்திற்கு தள்ளலாம் என்று இரான் கருதலாம்.
இந்த வழியைத் தேர்வு செய்வதில் தான் மிகப்பெரிய ராணுவ ஆபத்து உள்ளது.
அதிக உயிரிழப்புகளை ஏற்படுத்தும் தாக்குதல் அல்லது வளைகுடா நாடுகளின் முக்கிய உள்கட்டமைப்புகளுக்கு கடுமையான சேதம் ஏற்பட்டால், இரானின் அண்டை நாடுகள் இந்த மோதலில் நேரடியாக ஈடுபடக்கூடும்.
மூன்றாவது வழி, தற்போதைய பதற்றமான சூழலைத் தொடர்வதாகும்.
அதாவது, வணிகக் கப்பல் போக்குவரத்து மற்றும் எரிசக்தி சந்தைகளில் தங்களின் செல்வாக்கைத் தக்கவைத்துக்கொள்ளும் அளவுக்கு மட்டும் அழுத்தம் கொடுப்பது. ஆனால், அமெரிக்காவுடன் மீண்டும் முழுமையான போர் வெடிக்கும் அளவுக்கு நிலைமை மோசமடையாதபடி பார்த்துக்கொள்வது.
இது இஸ்லாமியக் குடியரசின் வழக்கமான சிந்தனைப் போக்கிற்குப் பொருந்துவது போல தெரிகிறது
தன்னைவிட வலிமையான எதிரியை தோற்கடிக்க வேண்டிய அவசியம் இரானுக்கு இல்லை.
அந்த எதிரி போராடத் தயாராக இருக்கும் காலத்தைவிட அதிக காலம் தன்னைத் தக்கவைத்துக்கொண்டால் போதும் என்ற அணுகுமுறையையே இரான் பின்பற்றுகிறது. தாக்குபிடிப்பதையே வெற்றியாகக் காட்ட முடியும்.
ஆனால், பொருளாதாரத் தடைகள், போரினால் ஏற்பட்ட சேதங்கள் மற்றும் பணவீக்கம் ஆகியவை உள்நாட்டில் தொடர்ந்து அழுத்தத்தை அதிகரித்து வருகின்றன.
காலம் செல்லச் செல்ல, ஒரு முரண்பாடு உருவெடுக்கலாம்.
ஹோர்மூஸ் நீரிணையை இரான் எவ்வளவு அதிகமாக ஒரு ஆயுதமாகப் பயன்படுத்துகிறதோ, அவ்வளவு அதிகமாக அந்த நீரிணையின் முக்கியத்துவம் குறையக்கூடும். ஏனெனில், அந்தப் பிராந்தியத்திலிருந்து எரிசக்தி மற்றும் பிற பொருட்களை ஏற்றுமதி செய்ய மாற்று வழிகளை உலக நாடுகள் கண்டுபிடிக்கத் தொடங்கலாம்.
இந்த முரண்பாட்டை நாடாளுமன்ற அவை தலைவர் முகமது பாகர் காலிபாஃப் ஒப்புக்கொண்டுள்ளார்.
ஹோர்மூஸ் நீரிணையின் மதிப்பு, அதன் வழியாகச் செல்லும் கப்பல் போக்குவரத்தை குறைப்பதில் அல்ல. அதை அதிகரிப்பதில்தான் உள்ளது என்று அவர் தெரிவித்துள்ளார்.
எப்போதும் பாதுகாப்பற்றதாக இருக்கும் ஒரு கடல் வழிப்பாதை, இரானைத் தவிர்த்து மாற்று வழிகளை உலக நாடுகள் தேட ஊக்குவிக்கும்.

பட மூலாதாரம், Getty Images
முடிவுகளை யார் எடுக்கிறார்கள்?
இரானின் முடிவெடுக்கும் செயல்முறையைச் சுற்றியுள்ள நிச்சயமற்ற தன்மை இந்தச் சூழலை மேலும் சிக்கலாக்குகிறது.
அமெரிக்கா-இஸ்ரேல் மற்றும் இரான் இடையேயான போரின் தொடக்கத்தில், பிப்ரவரி மாதம் நடத்தப்பட்ட தாக்குதலில் உயிரிழந்த ஆயத்துல்லா அலி காமனெயியின் ஆட்சிக் காலத்தில், தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசியல்வாதிகள், மத அமைப்புகள் மற்றும் புரட்சிகர காவல்படை ஆகியவற்றுக்கு இடையேயான கருத்து வேறுபாடுகள் இறுதியில் அதி உயர் தலைவரால் தீர்க்கப்பட்டன.
பல மாதங்களாக நீடித்த போருக்குப் பிறகு, காமனெயியின் மகன் மொஜ்தபா காமனெயியின் புதிய தலைமையின் கீழ் அந்த அதிகாரச் சமநிலை தற்போது எவ்வாறு உள்ளது என்பது குறித்து தெளிவு இல்லை.
அதிபர் மசூத் பெசெஷ்கியான் மற்றும் அவரது வெளியுறவுத் துறை அதிகாரிகள், பொருளாதார அழுத்தத்தைக் குறைத்து, நாட்டில் மீண்டும் நிலைத்தன்மையை ஏற்படுத்தும் வகையில் உடன்பாட்டை விரும்பக்கூடும்.
மறுபுறம், நாடாளுமன்றத்தில் உள்ள கடும்போக்காளர்கள், அதிகாரப்பூர்வ தேர்தலுக்கு உட்படாத சக்திவாய்ந்த அமைப்புகள் மற்றும் பழமைவாத ஊடகங்கள், பெரிய அளவிலான சலுகைகள் வழங்கப்படுவது இஸ்லாமியக் குடியரசின் கொள்கை அடித்தளத்தை பலவீனப்படுத்தி, அதன் முக்கிய ஆதரவாளர்களை விலகச் செய்யும் என்று அஞ்சக்கூடும்.
மிகப்பெரிய கேள்வி ஆயுதப்படைகள், குறிப்பாக புரட்சிகர காவல்படையைப் பற்றியதாகும்.
இரானின் ஏவுகணைத் திட்டம், பிராந்திய கூட்டணிகள் மற்றும் ஹோர்மூஸ் நீரிணையை மையமாகக் கொண்ட உத்தி ஆகியவை புரட்சிகர காவல்படையின் செல்வாக்கில் முக்கியப் பங்கு வகிக்கின்றன.
ஆனால், மோதலை தீவிரப்படுத்துவது அல்லது பேச்சுவார்த்தையில் ஈடுபடுவது போன்ற முடிவுகளில் அந்தப் படையின் தளபதிகளுக்கு எவ்வளவு அதிகாரம் உள்ளது என்பது குறித்து இன்னும் தெளிவாகத் தெரியவில்லை.
இரான் முன் உள்ள இந்த மூன்று வழிகளும் ஆட்சி அமைப்பின் அனைத்து தரப்புகளுக்கும் ஒரே மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்துவதில்லை.
நடைமுறை அணுகுமுறையைக் கொண்டவர்கள் ஓர் உடன்பாட்டை ஆதரிக்கலாம். கடும்போக்காளர்கள் நீண்டகாலமாக நிலைத்திருப்பதையே விரும்பலாம். சில ராணுவத் தளபதிகள் மோதலை தீவிரப்படுத்துவது, பேச்சுவார்த்தையில் இரானின் பேரம் பேசும் நிலையை வலுப்படுத்தும் என்று கருதக்கூடும்.
எனவே, இரான் எந்தப் பாதையைத் தேர்வு செய்கிறது என்பது மட்டுமல்ல, அந்த வழியைத் தேர்ந்தெடுப்பதற்கான அதிகாரம் யாரிடம் உள்ளது என்பதுதான் முக்கியமான கேள்வியாக உள்ளது.

பட மூலாதாரம், Getty Images
இரானியர்கள் என்ன சொல்கிறார்கள்?
அரசுத் தலைமையினர் கூறும் "தாங்கிக் கொண்டு போராடும்" கொள்கை, அதை நடைமுறையில் அனுபவிக்க வேண்டிய பொதுமக்களின் பார்வையில் முற்றிலும் வேறுபட்டதாகத் தெரிகிறது.
கடந்த ஜூன் மாதம், இராணுவ நடவடிக்கைகளை நிறுத்தவும், ஹோர்மூஸ் நீரிணையை மீண்டும் திறக்கவும், மேலும் அடுத்த 60 நாட்களுக்குள் போரை முடிவுக்கு கொண்டுவரும் ஒப்பந்தத்தை எட்டவும் இரானும் அமெரிக்காவும் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன.
ஆனால் அந்த ஒப்பந்தம் கையெழுத்தான மூன்று வாரங்களுக்குப் பிறகு, ஹோர்மூஸ் நீரிணையில் கப்பல்கள் மீது இரான் தாக்குதல் நடத்தியதையும், அதற்கு பதிலடியாக அமெரிக்கா தாக்குதல் நடத்தியதையும் தொடர்ந்து, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் போர் நிறுத்தம் முடிவுக்கு வந்துவிட்டது என்று அறிவித்தார்.
இரானைச் சேர்ந்த ஒரு பெண், மோதல்கள் மீண்டும் தொடங்கியபோது தாம் "மிகவும், மிகவும் மனவேதனை அடைந்தேன்" என்று பிபிசி பாரசீக சேவையிடம் கூறினார்.
இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் இரு தரப்புக்கும் மீதமுள்ள பிரச்னைகளைத் தீர்த்து நிலைத்தன்மையை மீட்டெடுக்க வாய்ப்பு வழங்கும் என்று அவர் நம்பியிருந்தார். ஆனால் இப்போது, கட்டமைப்புகள் அழிக்கப்படுவதும் பொதுமக்கள் மற்றும் ராணுவ வீரர்கள் உயிரிழப்பதும் தன்னை அச்சப்படுத்துவதாகக் கூறினார்.
இரானின் அரசியல் அமைப்புக்குள் உள்ள கடும்போக்காளர்களே இந்த அழிவுகளை ஏற்படுத்தும் கொள்கைகளை திணித்ததாக அவர் குற்றம் சாட்டினார். அதே நேரத்தில், போருக்கு ஆதரவாகப் பேசியதாக அவர் கருதும் வெளிநாட்டு எதிர்க்கட்சித் தலைவர்களையும் விமர்சித்தார்.
இரானைச் சேர்ந்த மற்றொரு பெண், தாம் பணியாற்றிய வெளிநாட்டு வர்த்தக நிறுவனம் மூடப்பட்டதால், முனைவர் பட்டமும் 17 ஆண்டுகள் பணி அனுபவமும் இருந்தபோதிலும் கடந்த நான்கு மாதங்களாக வேலை இன்றி இருப்பதாகக் கூறினார்.
"என்ன நடக்கப்போகிறது என்பது யாருக்கும் தெரியாததால், யாரும் வேலைக்கு ஆட்களை நியமிக்கவில்லை" என்று அவர் தெரிவித்தார்.
பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது, மின்வெட்டு மற்றும் குடிநீர் தட்டுப்பாடு அதிகரித்துள்ளது, திருட்டுச் சம்பவங்கள் அதிகரித்துள்ளன, இரவு நேரங்களில் அவ்வப்போது துப்பாக்கிச் சத்தமும் கேட்கிறது என்றும் அவர் கூறினார். இதன் காரணமாக, நகரத்திற்குள் தாம் பயணம் செய்வதையும் தற்போது குறைத்துள்ளதாக அவர் தெரிவித்தார்.
இந்தக் கருத்துக்கள் அனைத்தும் ஒரே அரசியல் முடிவைச் சுட்டிக்காட்டுவதில்லை.
இஸ்லாமியக் குடியரசை எதிர்ப்பவர்களிடம் கூட, வெளிநாட்டு தாக்குதல்கள் அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுக்கு எதிரான கோபத்தை உருவாக்கக்கூடும்.
ஆனால், எதிர்ப்பு என்ற பெயரில் காலவரையற்ற துன்பத்தை பொதுமக்கள் தொடர்ந்து சகித்துக்கொள்ள வேண்டும் என்று எதிர்பார்ப்பதற்கும் ஒரு வரம்பு இருப்பதையும் இந்த அனுபவங்கள் வெளிப்படுத்துகின்றன.
டிரம்பும் கடினமான முடிவுகளை எதிர்கொள்கிறார். போரை மேலும் விரிவுபடுத்துவது, ராணுவ மற்றும் பொருளாதார அழுத்தத்தைத் தொடர்வது அல்லது கடுமையான கண்காணிப்பின் கீழ் கட்டுப்படுத்தப்பட்ட பொதுமக்கள் பயன்பாட்டுக்கான அணுசக்தித் திட்டத்தை இரானுக்கு அனுமதிக்கும் ஓர் உடன்பாட்டை ஏற்றுக்கொள்வது ஆகியவற்றில் ஒன்றை அவர் தேர்வு செய்ய வேண்டியுள்ளது.
இந்த வழிகளில் எதுவும் வெற்றிக்கான தெளிவான பாதையை வழங்குவதில்லை.
தாக்குதல்கள், மத்தியஸ்த முயற்சிகள் மற்றும் தற்காலிக போர் நிறுத்தங்கள் என மாறி மாறி நடைபெறும் சூழலில் இந்த மோதல் பல மாதங்கள் நீடிக்கக்கூடும்.
முழுமையான போரைத் தூண்டாமல், மீண்டும் உள்நாட்டு அமைதியின்மையை உருவாக்காமல் அல்லது ஹோர்மூஸ் நீரிணையின் முக்கியத்துவத்தைக் குறைக்கும் மாற்று போக்குவரத்து வழிகளை உலக நாடுகள் உருவாக்காமல், அந்த நீரிணையை எவ்வளவு காலம் இரான் தனது பேரம் பேசும் ஆயுதமாகப் பயன்படுத்த முடியும் என்பதே தீர்மானிக்கும் முக்கியமான கேள்வியாக உள்ளது.
-இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
































