100க்கும் மேற்பட்ட இஸ்ரோ விஞ்ஞானிகள் ராஜினாமா - விதிகளில் நிகழ்ந்த அதிரடி மாற்றம்

பட மூலாதாரம், Getty Images
- எழுதியவர், இம்ரான் குரேஷி
- பதவி, பிபிசி ஹிந்திக்காக
- பிரசுரிக்கப்பட்டது
- வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள்
நாட்டின் பல்வேறு துறைகளில் புதிய மைல்கற்களைப் படைத்து வரும் ஸ்டார்ட்-அப் நிறுவனங்களின் தாக்கம், தற்போது இந்தியாவின் பெருமைமிகு விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோவையும் உலுக்கியுள்ளது.
கடந்த ஓராண்டில் மட்டும் சுமார் 100 முதல் 120 இஸ்ரோ விஞ்ஞானிகள் தங்களது பதவிகளை ராஜினாமா செய்துவிட்டு, தனியார் விண்வெளி ஸ்டார்ட்-அப் நிறுவனங்களில் இணைந்துள்ளதாகக் கூறப்படுகிறது. இதன் காரணமாக, விஞ்ஞானிகளின் ராஜினாமாவை ஏற்கும் விதிகளில் மத்திய அரசின் விண்வெளித் துறை தற்போது அதிரடி மாற்றங்களைச் செய்துள்ளது.
ககன்யான் மற்றும் பிற முக்கியத் திட்டங்களில் பணியாற்றும் 'குரூப் ஏ' விஞ்ஞானிகள் அல்லாத பிற தொழில்நுட்பப் பணியாளர்களின் விருப்ப ஓய்வு மற்றும் ராஜினாமா கோரிக்கைகளை இனி சாதாரண நடைமுறையின்கீழ் ஏற்கப் போவதில்லை என விண்வெளித் துறை தனது அதிகாரபூர்வ சுற்றறிக்கையில் தெரிவித்துள்ளது.
இதன்படி, இஸ்ரோவின் பல்வேறு மையங்களின் இயக்குநர்கள் அல்லது தலைவர்கள் இனி தன்னிச்சையாக ராஜினாமாக்களை ஏற்க முடியாது.
"விஞ்ஞானி/பொறியாளர்-எஸ்ஜி நிலைக்குக் கீழுள்ள அதிகாரிகளின் ராஜினாமா கோரிக்கைகளையும், சம்பந்தப்பட்ட மையங்களின் இயக்குநர்கள் அல்லது தலைவர்கள் தங்கள் தெளிவான பரிந்துரைகளுடன் விண்வெளித் துறைக்கு அனுப்ப வேண்டும். துறை அளவிலேயே இறுதி முடிவு எடுக்கப்படும்" என்று சுற்றறிக்கை கூறுகிறது.
விக்ரம் சாராபாய் விண்வெளி மையத்தின் 'எல்விஎம்-3' ராக்கெட்டின் திட்ட இயக்குநராக இருந்த விக்டர் ஜோசப் உள்ளிட்டோரும் விருப்ப ஓய்வு பெற்றவர்களில் அடங்குவர்.
இஸ்ரோவின் ஒட்டுமொத்த மையங்களில், சுமார் 14,600 விஞ்ஞானிகள் மற்றும் தொழில்நுட்பப் பணியாளர்களைக் கொண்ட பெங்களூரு யு.ஆர். ராவ் செயற்கைக்கோள் மையம்தான், அதிக அளவிலான விஞ்ஞானிகளை இழந்துள்ளதாகக் கூறப்படுகிறது.
இந்தியாவின் முன்னணி விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் இந்த முடிவு, விண்வெளித் துறைக்குள் புதிய விவாதத்தைக் கிளப்பியுள்ளது. ஸ்டார்ட்-அப் நிறுவனங்கள் விண்வெளித் துறையை எவ்வாறு பலப்படுத்தும் என்றும், முன்னணி நிறுவனங்களில் இருந்து திறமையான விஞ்ஞானிகளை இப்படி ஈர்ப்பது சரியானதா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

பட மூலாதாரம், Getty Images
அரசாங்க கொள்கை மாறியுள்ளதா?
தகவல் தொழில்நுட்பத் துறையில் ஏற்பட்ட புரட்சியின்போதும் இதேபோன்ற நிலை உருவானதைச் சுட்டிக்காட்டும் இஸ்ரோவின் முன்னாள் தலைவர் ஜி. மாதவன் நாயர், தற்போதும் அதுவே நடப்பதாகக் கூறுகிறார்.
பிபிசி ஹிந்திக்கு அவர் அளித்த பேட்டியில், "இதுபோன்ற நிகழ்வுகள் இஸ்ரோவின் செயல்பாடுகளில் கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும்," என்றார்.
"திறமையாளர்கள் இதுபோன்று மற்ற நிறுவனங்களுக்குச் செல்வதை நான் ஏற்கவில்லை. தனியார் துறை வளர்வதற்கு முழு உரிமை உள்ளது. ஆனால், அவர்கள் தங்களுக்குத் தேவையான ஆட்களைத் தாங்களே தேர்வு செய்து பயிற்சி அளிக்க வேண்டுமே தவிர, இஸ்ரோ போன்ற ஒரு புகழ்பெற்ற நிறுவனத்தில் இருந்து அனுபவமிக்க நிபுணர்களை எடுத்துக்கொள்வது சரியல்ல" என்று அவர் கூறினார்.
ஆனால், இஸ்ரோவின் முன்னாள் அறிவியல் செயலாளரான பி.ஜி. திவாகர், விஞ்ஞானிகள் வெளியேறுவது குறித்து ஆச்சர்யப்படவில்லை. முன்பு இஸ்ரோ அதிகளவில் புவி கண்காணிப்பு மற்றும் தகவல் தொடர்பு செயற்கைக்கோள்களைச் செலுத்தி வந்த நிலையில், "இன்று புவி கண்காணிப்புச் செயற்கைக்கோள்களின் எண்ணிக்கை கணிசமாகக் குறைந்துவிட்டது" என்று அவர் சுட்டிக்காட்டுகிறார்.
"அரசின் ஒட்டுமொத்தக் கொள்கையும் மாறிவிட்டது. முன்பு ரிசோர்ஸ்சாட், கார்ட்டோசாட், ஓஷன்சாட் போன்ற திட்டங்களுக்காக அரசாங்கம் இஸ்ரோவுக்கு நேரடியாக நிதி வழங்கும். சமூகப் பயன்பாட்டிற்காக இஸ்ரோ இந்தச் செயற்கைக்கோள்களை உருவாக்கும். ஆனால் இப்போது, பல்வேறு அமைச்சகங்களும் தங்களது தேவைகளுக்கு ஏற்ப சொந்தமாக செயற்கைக்கோள்களை ஏவிக் கொள்ளுமாறு அரசு அறிவுறுத்தியுள்ளது" என்கிறார் திவாகர்.
சமூக நலனுக்காக செயற்கைக்கோள்களில் முதலீடு செய்ய வேண்டியதன் அவசியத்தை அமைச்சகங்கள் புரிந்துகொள்ளச் சிறிது காலம் பிடிக்கும் என்று கூறும் அவர், அதேவேளையில் இந்தியாவில் விண்வெளி ஸ்டார்ட்-அப்கள் வேகமாக வளரும் என்ற நம்பிக்கையையும் வெளிப்படுத்துகிறார்.
"தற்போது, விஞ்ஞானிகள் இதை ஒரு சிறப்பான வாய்ப்பாகவே பார்ப்பதாகவும்," அவர் கூறுகிறார்.

பட மூலாதாரம், Getty Images
தனியார் துறை விஞ்ஞானிகளால் இஸ்ரோ போன்ற பணிகளைச் செய்ய முடியுமா?
ஆனால், இஸ்ரோ போன்றதொரு நிறுவனத்தில் கிடைக்கும் அறிவியல் ரீதியான வளர்ச்சி, தனியார் ஸ்டார்ட்-அப்களில் விஞ்ஞானிகளுக்குக் கிடைக்குமா என்ற கேள்வி எழுகிறது.
இதற்குப் பதிலளித்த திவாகர், ஆரம்பத்தில் அப்படிப்பட்ட வாய்ப்பு கிடைக்காமல் போகலாம் என்றாலும், "ஸ்டார்ட்-அப்கள் வளரும்போது விஞ்ஞானிகளுக்கும் அதன் பலன் கிடைக்கும், அது வெறும் பணம் சம்பாதிப்பதோடு மட்டுமே சுருங்கிவிடாது" என்றார்.
இதை மாதவன் நாயர் ஏற்கவில்லை. "தனியார் துறை அதிக சம்பளம் கொடுக்கலாம். ஆனால் இஸ்ரோவில் இருப்பதைப் போன்ற சவாலான அறிவியல் பணிகள் அங்கிருக்காது," என்கிறார் அவர்.
இஸ்ரோவுக்குள் இருக்கும் அமைப்பு சார்ந்த பிரச்னைகள்தான் விஞ்ஞானிகளை தனியார் துறைக்குத் தள்ளுகிறதா என்ற கேள்விக்கு அவர் நேரடியாகப் பதிலளிக்க மறுத்துவிட்டார். இருப்பினும், தனியார் துறைக்கும் அரசுப் பணிக்கும் இடையிலான ஊதிய முரண்பாட்டை அவர் ஒப்புக்கொண்டார்.
"இது அசாதாரணமான திறமைகள் தேவைப்படும் மிகச் சிறப்பான ஒரு துறை. அத்தகைய திறமையாளர்களைத் தக்கவைத்துக் கொள்ள அரசாங்கம் சிறப்பு முயற்சிகளை எடுக்க வேண்டும். ஆனால், இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கான சிறப்பு ஊக்கத்தொகைத் திட்டங்கள் இப்போது நிறுத்தப்பட்டுவிட்டன," என்கிறார் அவர்.
"பிரதமர் மன்மோகன் சிங் பதவிக் காலத்தில், விண்வெளி மற்றும் அணுசக்தித் துறைகளை மற்ற அரசுப் பணிகளைப் போலப் பார்க்காமல், சற்று வித்தியாசமாக அணுக வேண்டும் என்று அரசாங்கத்தை நாங்கள் சம்மதிக்க வைத்தோம்" என்று மாதவன் நாயர் கூறுகிறார்.
அதன் பிறகு, செயல்பாடு அடிப்படையிலான ஊக்கத்தொகை, ரொக்கப் பரிசுத் திட்டம், சிறப்பு ஊதிய உயர்வு எனப் பல திட்டங்கள் தொடங்கப்பட்டன.
"ஆனால் காலப்போக்கில், இந்தத் திட்டங்கள் பலவும் படிப்படியாகத் திரும்பப் பெறப்பட்டன. இந்த முடிவுகளை எடுப்பவர்களில் சிலருக்கு, விண்வெளித் தொழில்நுட்பத்தின் சிக்கல்களும் தேவைகளும் முழுமையாகப் புரியாமல் இருக்கலாம்" என்கிறார் நாயர்.

பட மூலாதாரம், Getty Images
விண்வெளி ஸ்டார்ட்-அப்களின் வளர்ச்சி
தகவல் தொடர்பு மற்றும் புவி கண்காணிப்புச் செயற்கைக் கோள்களை உருவாக்குவதுடன், சந்திரயான் மற்றும் மங்கள்யான் போன்ற முக்கியத் திட்டங்களை இஸ்ரோ இயக்கி வந்த ஒரு காலம் இருந்தது.
ஆனால், இன்று நிலைமை மாறிவிட்டதாகக் கூறிய திவாகர், "இன்று பிக்செல் (Pixel), ஸ்கைரூட் (Skyroot), அக்னிகுல் (Agnikul), கேலக்ஸிஐ (GalaxyEye) போன்ற நிறுவனங்கள் உள்ளன. வெளிநாட்டு முதலீடுகளை ஈர்க்கும் இதுபோன்ற 10 முதல் 15 சிறந்த விண்வெளி ஸ்டார்ட்-அப்களை என்னால் பட்டியலிட முடியும்" என்றார்.
கடந்த ஜனவரி மாதம் மாநிலங்களவையில் பேசிய அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் விண்வெளித் துறை அமைச்சர் ஜிதேந்திர சிங், இந்தியாவின் விண்வெளிப் பொருளாதாரம் சுமார் 8.4 பில்லியன் டாலர்களாக வளர்ந்துள்ளதாகவும், நாட்டில் 399 விண்வெளி ஸ்டார்ட்-அப்கள் இயங்கி வருவதாகவும் தெரிவித்தார். ஏவுகணைகள், செயற்கைக் கோள்கள், உந்துவிசை அமைப்புகள் மற்றும் விண்வெளிப் பயன்பாட்டு மின்னணுப் பொருட்கள் போன்ற துறைகளில் இந்த நிறுவனங்கள் தீவிரமாகச் செயல்பட்டு வருகின்றன.
புதிய சுற்றறிக்கை குறித்துப் பேசிய ஜிதேந்திர சிங், "நிர்வாகக் காரணங்களுக்காகவே இந்த சுற்றறிக்கை தயார் செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம், அதிக முதிர்ச்சியான நிலையில் முடிவுகளை எடுக்க முடியும். விஞ்ஞானிகளின் நகர்வால் முக்கியத் திட்டங்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாமல் இருப்பதையும் இது உறுதி செய்யும்," என்று டெல்லியில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
கடந்த 2019ஆம் ஆண்டு 'இன்-ஸ்பேஸ்' (IN-SPACe - இந்திய தேசிய விண்வெளி மேம்பாட்டு மற்றும் அங்கீகார மையம்) அமைப்பை உருவாக்கியதன் மூலம், விண்வெளித் துறையை தனியார் நிறுவனங்களுக்கும் அரசாங்கம் திறந்துவிட்டது. தனியார் துறைக்கும் இஸ்ரோ போன்ற அரசு நிறுவனங்களுக்கும் இடையிலான ஒற்றைச் சாளர அமைப்பாக இந்த நிறுவனம் செயல்பட்டு வருகிறது.
இஸ்ரோ அதிகாரிகளிடம் இருந்து அதிகாரபூர்வ விளக்கம் பெறப்பட்டதும் இந்தச் செய்தி புதுப்பிக்கப்படும். ஊடகங்களிடம் பேச தனக்கு அனுமதி இல்லை எனத் தெரிவித்த இஸ்ரோ அதிகாரி ஒருவர், இஸ்ரோ தலைவர் வி. நாராயணன் தற்போது டெல்லியில் இருப்பதாகவும், அவர் மட்டுமே ஊடகங்களிடம் பேச அதிகாரம் பெற்றவர் என்றும் பிபிசி ஹிந்தியிடம் தெரிவித்தார்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு




























