'3 நிமிடத்தில் கவிழ்ந்துவிட்டது' - வியட்நாம் படகு விபத்தில் தமிழகத்தை சேர்ந்த 10 பேர் உள்பட 15 இந்தியர்கள் பலி

பிரசுரிக்கப்பட்டது
வாசிக்கும் நேரம்: 3 நிமிடங்கள்

வியட்நாமின் ஃபூ குவோக் தீவு அருகே இந்திய சுற்றுலாப் பயணிகளை ஏற்றிச் சென்ற அதிவேகப் படகு கவிழ்ந்து விபத்துக்கு உள்ளானதில் 15 இந்தியர்கள் உயிரிழந்ததாக வியட்நாமில் உள்ள இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது. இந்த விபத்துக்கு பிரதமர் மோதி மற்றும் தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய் இரங்கல் தெரிவித்துள்ளார்.

இந்த விபத்தில் தமிழ்நாட்டைச் சேர்ந்த பத்து பேர் பலியாகி இருப்பதாகவும், கேரளாவை சேர்ந்த இருவர் மற்றும் ஆந்திராவை சேர்ந்த மூவர் பலியாகியுள்ளதாகவும் இந்திய தூதரகம் வெளியிட்ட அறிவிப்பு கூறுகிறது.

அதிகாரிகளிடம் இருந்து கிடைத்த முதல்கட்ட தகவல்களின்படி, 32 சுற்றுலாப் பயணிகள், சில பணியாளர்களை ஏற்றிச் சென்ற அந்த அதிவேகப் படகு, ஜூலை 11 அன்று கவிழ்ந்தது.

'துவோய் த்ரே' நாளிதழின்படி, 23 பேர் கரைக்கு கொண்டு வரப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. ஏஜி 26751 என்ற பதிவு எண் கொண்ட இந்த அதிவேகப் படகு, 'மின் ஹுய் ஃபூ குவோக் டிரேடிங் அண்ட் டூரிசம் கம்பெனி லிமிடெட்' நிறுவனத்திற்குச் சொந்தமானது.

விபத்து நேரிட்டது எப்படி?

ஹோன் மே ரூட் தீவில் இருந்து சுமார் 400 மீட்டர் தூரம் சென்ற அதிவேகப் படகு திடீரென தடுமாறி பின் கவிழ்ந்தது.

விபத்து நடந்த இடத்தில் பலத்த காற்றும், உயரமான அலைகளும் வீசுவதை ஒரு காணொளி காட்டுகிறது. மீட்புக் குழுவினர் நீரில் இருந்தவர்களை நோக்கி உயிர் காக்கும் மிதவைகளை வீசுவதும், ஜெட் ஸ்கி-கள் மூலம் மீட்கப்பட்டவர்களைக் கரைக்குக் கொண்டு செல்வதையும் அந்தக் காணொளியில் பார்க்க முடிகிறது.

இந்த மீட்புப் பணிக்காக எல்லைப் பாதுகாப்புப் படை இரண்டு படகுகளையும் 35 பணியாளர்களையும் ஈடுபடுத்தியது. இந்த நடவடிக்கையில் கடற்படை, கடலோரக் காவல்படை மற்றும் பிற தொடர்புடைய முகமைகள் இணைந்து செயல்பட்டன.

இந்த விபத்து ஹோன் மே ரூட் தீவில் நடந்துள்ளது. இந்தத் தீவு அதன் இயற்கை அழகுக்காகப் பிரபலமானது மற்றும் ஃபூ குவோக் தீவின் மிகச் சிறந்த பவளப்பாறை டைவிங் தளங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது.

ஷார்ட் வீடியோ

'மூன்றே நிமிடங்களில் படகு கவிழ்ந்துவிட்டது'

வியட்நாமில் படகு விபத்தில் சிக்கி உயிர் தப்பிய பழனியைச் சேர்ந்த நிர்மல் குமாரிடம் பிபிசி தமிழுக்காக செய்தியாளார் பிரபுராவ் ஆனந்தன் பேசினார். அப்போது இந்த விபத்து நடந்த தருணம் குறித்துப் நிர்மல் குமார், "மூடிய படகில் 39 பேர் பயணித்துக் கொண்டிருந்தோம். திடீரென வீசிய ஓர் அலையால் படகு மூன்றே நிமிடங்களுக்குள் கவிழ்ந்துவிட்டது" என்று கூறினார்.

அதைத் தொடர்ந்து, படகின் முன்புறத்தில் இருந்தவர்கள், முன்புற வழியாகவும், ஜன்னல்கள் வழியாகவும் வெளியே வந்துவிட்டதாகவும், படகின் பின்புறத்தில் இருந்த 15 பேரும் மாட்டிக் கொண்டதாகவும் நிர்மல் குமார் கூறினார்.

நீங்கள் அனைவரும் ஒன்றாகச் சென்றவர்களா என்ற கேள்விக்கு பதிலளித்த அவர், "சாதனை செய்தவர்களுக்காக தங்களது நிறுவனம் ஏற்பாடு செய்திருந்த சுற்றுலா என்றும், அனைவரும் உயிர்காக்கும் கவசங்களை அணிந்து இருந்ததாகவும், மூடப்பட்ட படகு என்பதால், காற்றில் ஆடிய படகு எதிர்பாராமல் கவிழ்ந்துவிட்டது. ஆகையால் ஒன்றும் செய்ய முடியவில்லை" என்றும் தெரிவித்தார்.

ஷார்ட் வீடியோ

தனது ஊரான பழனியைச் சேர்ந்த நண்பர் முருகதாஸும் இதில் பலியாகிவிட்டதாக அவர் கவலை தெரிவித்தார். எவ்வளவு உடல்கள் அடையாளம் காணப்பட்டன என்பது பற்றிப் பேசிய நிர்மல் குமார், "அனைவரின் உடலும் உடனடியாக எடுக்கப்பட்டு அடையாளம் காணப்பட்டன. பயணிகளில் வேறு யாருக்கும் பெரிய அளவில் காயங்கள் ஏதும் ஏற்படவில்லை. அனைவருக்கும் மருத்துவப் பரிசோதனைகள் நடத்தப்பட்டன. மீட்கப்பட்ட அனைவரும் பத்திரமாக இருக்கிறோம்" என்று தெரிவித்தார்.

உயிரிழந்தோரின் உடல்களை இந்தியா கொண்டு வருவது பற்றிக் கேட்டதற்கு, "இந்திய தூதரகமும், தமிழ்நாடு அரசும் துரிதமாக நடவடிக்கை எடுத்து அனைவரின் உடல்களையும் அவரவர் வீட்டிற்கு அனுப்பி வைக்க வேண்டும்" என்று அவர் கேட்டுக் கொண்டார்.

இந்திய தூதரகம் கூறியது என்ன?

வியட்நாமில் உள்ள இந்திய தூதரகம் எக்ஸ் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், "அதிகாரபூர்வ ஆதாரங்களின்படி, சில மணிநேரத்திற்கு முன் வியட்நாமின் ஃபூ குவோக் தீவு அருகே கவிழ்ந்த படகில் 32 இந்திய சுற்றுலா பயணிகள் பயணம் செய்ததாக" தெரிவிக்கப்பட்டுள்ளது.

"பாதிக்கப்பட்டவர்கள் குறித்த கூடுதல் தகவல்களை நாங்கள் சேகரித்து வருகிறோம். உறுதி செய்யப்பட்டவுடன், மேலதிக தகவல்கள் பகிரப்படும்" என்று தெரிவித்துள்ள இந்திய தூதரகம், இந்திய சுற்றுலா பயணிகள் 32 பேரின் விவரங்களையும் வெளியிட்டுள்ளது.

பிரதமர் மோதி கூறியது என்ன?

வியட்நாம் விபத்து குறித்து பிரதமர் மோதி வெளியிட்ட எக்ஸ் பதிவில், "வியட்நாமின் ஃபூ குவோக் அருகே இந்திய குடிமக்கள் பயணித்த படகு விபத்து குறித்த துயரமான செய்தியை அறிந்து மிகுந்த மனவேதனை அடைந்தேன்."

"தங்கள் அன்புக்குரியவர்களை இழந்த குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த விபத்தில் காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன்."

"நமது தூதரகமும் தூதரக அதிகாரிகளும் சாத்தியமான அனைத்து உதவிகளையும் வழங்கி வருகின்றனர். நமது அதிகாரிகள் வியட்நாம் அதிகாரிகளுடன் தொடர்ந்து தொடர்பில் உள்ளனர்" என்று தெரிவித்துள்ளார்.

லாவா மொபைல் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தங்களின் சில சேனல் பார்ட்னர்களும், குழு உறுப்பினர்களும் விபத்தில் சிக்கியிருப்பதாகத் தெரிவித்துள்ளது.

திண்டுக்கல் மாவட்டம் பழனியைச் சேர்ந்த மொபைல் நிறுவன விநியோகஸ்தர் முருகபிரபு இந்த விபத்தில் உயிரிழந்ததாக அவரின் உறவினர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

முதலமைச்சர் விஜய் கூறியது என்ன?

வியட்நாமில், இந்திய சுற்றுலா பயணிகள் சென்ற படகு கவிழ்ந்து தமிழ்நாடு மற்றும் பிற மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் உயிரிழந்த செய்தி அறிந்து மிகுந்த மன வேதனையும் துயரமும் அடைந்ததாக தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் தெரிவித்துள்ளார்.

மேலும், "இந்தப் படகு விபத்தில் சிக்கிய தமிழர்களின் விவரங்களைப் பெற்று அவர்களுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் செய்திடும் வகையில் தமிழ்நாடு அரசு அதிகாரிகள், புது டெல்லியில் உள்ள தமிழ்நாடு இல்லம், இந்திய வெளியுறவு அமைச்சகம் மற்றும் வியட்நாமில் உள்ள இந்திய தூதரக உயர் அலுவலர்களுடன் ஒருங்கிணைந்து மீட்புப் பணிகளை மேற்கொள்ள உத்தரவிட்டுள்ளேன்" என்று கூறியுள்ளார்.

அதோடு, இந்த விபத்தில் பாதிக்கப்பட்டோருக்குத் தேவையான மருத்துவ உதவிகளை வழங்கிட இந்திய தூதரகத்துடன் ஒருங்கிணைந்து செயல்பட தமிழ்நாடு அரசு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டு இருப்பதாகவும், இதில் உயிரிழந்தோரின் உடல்களை விரைவில் தமிழ்நாட்டிற்குக் கொண்டு வருவதற்கு இந்திய தூதரகம் வாயிலாக நடவடிக்கை மேற்கொள்ள உத்தரவிட்டு இருப்பதாகவும் முதலமைச்சர் விஜய் கூறியுள்ளார்.

மேலும், இதில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும் உறவினர்களுக்கும் தனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்வதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு