காணொளி: தொடங்கியது இந்தியாவின் முதல் ஹைட்ரஜன் எரிபொருள் ரயில் சேவை
இந்தியாவின் முதல் ஹைட்ரோஜன் எரிபொருள் ரயில் இன்று தொடங்கிவைக்கப்பட்டது.
ஹரியாணாவின் ஜிந்த் - சோனிபட் இடையே இயக்கப்படும் இந்த ரயில் சேவையை பிரதமர் மோதி நாட்டுக்கு அர்ப்பணித்தார்.
இந்த ரயிலில் சிறப்பம்சங்கள் என்ன?
தமிழ்நாட்டின் சென்னை பெரம்பூரில் உள்ள ஐ.சி.எஃப்.பில் தான் இந்த ரயில் உருவாக்கப்பட்டுள்ளது. மணிக்கு 110 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும்வகையில் இந்த ரயில் வடிவமைக்கப்பட்டாலும் அதிகபட்சமாக மணிக்கு 75 கிலோமீட்டர் வேகத்தில் செல்ல மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இந்த ரயில் எப்படி இயங்கும்?
இந்திய ரயில்வே வெளியிட்டுள்ள தகவலின்படி, இந்த ஹைட்ரஜன் ரயில்களுக்கு எரிபொருள் நிரப்புவதற்காக ஹரியானாவின் ஜிந்த் நகரில் பசுமை ஹைட்ரஜன் உற்பத்தி நிலையம் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையத்தில், மின்னாற்பகுப்பு முறையின் மூலம் தண்ணீர் ஹைட்ரஜன் மற்றும் ஆக்சிஜனாகப் பிரிக்கப்படுகிறது.
உற்பத்தி செய்யப்படும் ஹைட்ரஜன், உயர் அழுத்தத் தொட்டிகளில் சேமிக்கப்பட்டு, அதற்காகவே அமைக்கப்பட்டுள்ள சிறப்பு எரிபொருள் நிரப்பு நிலையத்தில் ரயிலுக்கு நிரப்பப்படுகிறது.
நீராவி மற்றும் டீசல் என்ஜின் ரயில்களைப் போலவே, இந்த ரயிலும் தனது சக்தியைத் தானே உருவாக்கிக் கொள்கிறது. ஆனால், நிலக்கரி அல்லது டீசல் போன்ற எரிபொருட்களை எரிப்பதற்குப் பதிலாக, வளிமண்டலத்தில் உள்ள ஆக்சிஜனுடன் ஹைட்ரஜன் வினைபுரிந்து ரயிலுக்குத் தேவையான மின்சாரத்தை உற்பத்தி செய்கிறது.
தூய ஹைட்ரஜன் தொழில்நுட்பத்தின் மூலம் ரயிலுக்குள்ளேயே மின்சாரம் உற்பத்தி செய்யப்படுவதால், இது சுற்றுச்சூழலுக்கு உகந்த பசுமை ரயில் தொழில்நுட்பங்களில் மிக முன்னேறிய ஒன்றாக கருதப்படுகிறது.
உலகம் முழுவதும் தற்போது இயக்கப்பட்டு வரும் பெரும்பாலான ஹைட்ரஜன் பயணிகள் ரயில்கள், பொதுவாக 2 அல்லது 3 பெட்டிகளைக் கொண்டவையாக உள்ளன.
ஆனால், இந்திய ரயில்வே உருவாக்கியுள்ள ஹைட்ரஜன் ரயில் 10 பெட்டிகளுடன் வடிவமைக்கப்பட்டுள்ளதுடன், சுமார் 2,600 பயணிகள் வரை பயணிக்கும் வசதியைக் கொண்டுள்ளது.
இந்த ரயில் மூலம், , ஹைட்ரஜன் எரிபொருளில் இயங்கும் ரயில் தொழில்நுட்பத்தை சோதித்து வரும் நாடுகளின் பட்டியலில் இந்தியாவும் இணைந்துள்ளது.
இந்தப் பட்டியலில் ஜெர்மனி, ஜப்பான், சீனா மற்றும் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் ஏற்கனவே உள்ளன.
- இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



