'முதல்வர் விஜய் குறித்து பேச்சு' - திமுக எம்.எல்.ஏ மார்க்கண்டேயன் கைதின் பின்னணி

- எழுதியவர், பிரபுராவ் ஆனந்தன்
- பதவி, பிபிசி தமிழுக்காக
- பிரசுரிக்கப்பட்டது
- வாசிக்கும் நேரம்: 2 நிமிடங்கள்
விளாத்திகுளம் திமுக சட்டப்பேரவை உறுப்பினர் மார்க்கண்டேயன், கோவில்பட்டியில் நடந்த பொது நிகழ்ச்சி ஒன்றில் முதலமைச்சர் விஜய் மற்றும் தவெக குறித்தும் சில கருத்துகளை தெரிவித்திருந்தார்.
இது சர்ச்சையான நிலையில், தூத்துக்குடி தவெக வடக்கு மாவட்ட செயலாளர் கொடுத்த புகாரின் பேரில் இன்று காலை காவல்துறையினர் மார்க்கண்டேயனை கைது செய்தனர்.
இதற்கு அவரது ஆதரவாளர்களும், திமுக தொண்டர்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
முதலமைச்சரை மிரட்டும் வகையில் பேசியதாக, மார்க்கண்டேயன் மீது மூன்று பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டதாக முதல் தகவல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கோவில்பட்டியில் கடந்த சனிக்கிழமை இரவு, திமுக சார்பில் வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் பொதுக்கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்தில் பேசிய விளாத்திகுளம் சட்டப்பேரவை உறுப்பினர் மார்க்கண்டேயன், முதலமைச்சர் விஜய் மற்றும் தவெக குறித்தும் சில கருத்துகளை கூறினார்.
எம்.எல்.ஏ பேச்சு தொடர்பாக தூத்துக்குடி காவல் துறையிடம் தூத்துக்குடி தவெக வடக்கு மாவட்ட செயலாளர் பாலசுப்ரமணியன் கொடுத்த புகாரின் பேரில் முதலமைச்சரை மிரட்டும் வகையில் பேசியதாக, மார்க்கண்டேயன் மீது 3 பிரிவுகளில் போலீஸார் வழக்கு பதிவு செய்தனர்.
இந்த நிலையில், இன்று காலை மார்க்கண்டேயனின் இல்லத்திற்கு காவல்துறையினர் சென்றனர்.
அப்போது எம்எல்ஏவிடம் தங்களை கைது செய்ய வந்திருப்பதாக போலீசார் தெரிவித்தனர். அதற்கு 'சபாநாயகர் அனுமதி இல்லாமல் எம்எல்ஏவை கைது செய்ய முடியாது', என காவல்துறையினரிடம் மார்க்கண்டேயன் வாதிட்டார்.
இந்த தகவல் பரவியதும், ஏராளமான திமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் மார்க்கண்டேயனின் வீட்டின் முன்பு திரண்டனர். கைது நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து போலீசாருக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர்.
போலீசார் பாதுகாப்பை பலப்படுத்தி, மார்க்கண்டேயனை கைது செய்து காவல் வாகனத்தில் பாதுகாப்புடன் அங்கிருந்து அழைத்துச் சென்றனர்.
பின்னர், அவரை தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு அழைத்துச் சென்றனர். அங்கு அவரிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்றது. மேலும், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது.
அங்கு மார்க்கண்டேயனை சந்திக்க வந்த முன்னாள் அமைச்சர் கீதா ஜீவன், எம்.எல்.ஏ அனிதா ராதாகிருஷ்ணன் ஆகியோர் அனுமதி மறுக்கப்பட்டதாக கூறி, காவல்துறையினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
காவல்துறையினர் தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலக பகுதியில் இருந்து திமுகவினரை அப்புறப்படுத்தும் பணிகள் ஈடுபட்டனர்.

விமர்சனம் என்ன?
ஆட்சியில் நடைபெறும் தவறுகளை சுட்டிக்காட்டும் திமுக-வினர் மீது தவெக அரசு தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகிறது என்று கூறியுள்ள திமுக தலைவர் ஸ்டாலின், த.வெ.க. அரசு குறித்து அரசியல் விமர்சனங்கள் செய்பவர்களை மட்டும் கைது செய்வது ஏன் எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்
''தமிழகத்தில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்களாட்சி நடக்கிறது. திமுக பதற்றத்தில் இருப்பதால் அதன் கட்சியை சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்கள் இவ்வாறு தரக்குறைவான வார்த்தைகளை பேசி வருகின்றனர்.'' என தவெக மதுரை மத்திய சட்டமன்ற உறுப்பினர் முஸ்தபா பிபிசி தமிழிடம் கூறினார்.
''திமுகவினர் நாகரிகம் இல்லாமல் பேசுவதால் இந்த கைது நடவடிக்கை நடந்திருக்கிறது. தொடர்ச்சியாக தவறு செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். இது தமிழகத்தை ஆண்ட எல்லா ஆட்சியிலும் நடந்துள்ளது. ஸ்டாலினை விமர்சித்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லையா?'' என முஸ்தபா கேள்வி எழுப்பியுள்ளார்.
- இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
































