You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
காணொளி: 'துணை ராணுவத்தை அழைக்கலாம்': உச்ச நீதிமன்ற உத்தரவால் மேகமலை கிராம மக்கள் அச்சம்
தேனி மாவட்டத்தின் கடமலைகுண்டு–மயிலாடும்பாறை ஊராட்சி ஒன்றியத்தில் வண்டியூர் உள்பட 50க்கும் மேற்பட்ட மலைக் கிராமங்கள் உள்ளன. இந்தக் கிராம மக்கள் பல தலைமுறைகளாக இங்கு வசித்து வருவதாகக் கூறுகின்றனர். இலவம் பஞ்சு, முந்திரி மற்றும் காய்கறிகள் பயிரிடுவது என விவசாயமே இவர்களின் முக்கிய வாழ்வாதாரமாக உள்ளது.
இப்பகுதி 2021ஆம் ஆண்டு ஸ்ரீவில்லிபுத்தூர்-மேகமலைப் புலிகள் காப்பகத்தின் ஒரு பகுதியாக அறிவிக்கப்பட்டது.
ஸ்ரீவில்லிபுத்தூர் மேகமலை புலிகள் காப்பகம் தமிழ்நாட்டின் ஐந்தாவது புலிகள் காப்பகமாகும். இந்தப் புலிகள் காப்பகத்தை உருவாக்குவதற்காக, ஸ்ரீவில்லிபுத்தூர் அணில்கள் சரணாலயம் மற்றும் மேகமலை வனவிலங்கு சரணாலயத்தில் உள்ள 1,01,657.13 ஹெக்டேர் நிலம் இணைக்கப்பட்டுள்ளது.
இந்தப் புலிகள் காப்பகம் விருதுநகர், தேனி மற்றும் மதுரை மாவட்டங்களில் பரவியுள்ளது.
இந்நிலையில், தேனி மாவட்டத்தில் உள்ள கண்டமனூா், வருசநாடு, மயிலாடும்பாறை, மேகமலை, சின்னமனூா், ஆகிய வனசரகங்களுக்கு உட்பட்ட சுமாா் 5,000 ஹெக்டேர் பரப்பளவு மலைப்பகுதி ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதாகவும், வனத்துறையின் அனுமதியின்றி அங்கு சுற்றுலா விடுதிகள், உணவகங்கள் செயல்படுவதாகவும் உச்ச நீதிமன்றத்தில் ஒரு பொதுநல வழக்குத் தொடரப்பட்டது.
உச்சநீதிமன்றம் கடந்த மே 29, 2026 அன்று வெளியிட்ட உத்தரவில், "அகத்தியமலை நிலப்பரப்பு புலிகள், யானைகள் உள்ளிட்ட பல அரிய உயிரினங்கள் வாழும் மிக முக்கியமான பல்லுயிர் மையமாகும். ஆனால், இங்குள்ள ஸ்ரீவில்லிபுத்தூர்-மேகமலை புலிகள் காப்பகம் ஆக்கிரமிப்பு, சட்டவிரோத மேய்ச்சல் மற்றும் கஞ்சா சாகுபடி போன்ற அச்சுறுத்தல்களால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது," என தெரிவித்துள்ளது. மேலும்,
- காடுகளை ஆக்கிரமித்துள்ளவர்களுக்கு மறுவாழ்வு அளிப்பதும், அவர்களை வெளியேற்றுவதும் ஒரே நேரத்தில் நடக்க வேண்டும். மனிதாபிமானக் காரணங்களைக் காட்டி ஆக்கிரமிப்பு அகற்றும் பணிகளைக் காலவரையின்றி தாமதப்படுத்தக் கூடாது.
- ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்கான தெளிவான, காலக்கெடுவுடன் கூடிய திட்டத்தை ஒரு மாதத்திற்குள் மத்திய அதிகாரமளிக்கப்பட்ட குழுவிடம் (சிஇசி) அரசு சமர்ப்பிக்க வேண்டும்.
- வனப்பகுதியை ஆக்கிரமித்துள்ளதாகக் கண்டறியப்பட்ட 118 அரசு ஊழியர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். அவர்களிடம் சூழலியல் மறுசீரமைப்புக்கான அபராதம் வசூலிக்கப்பட வேண்டும்.
- வனப்பகுதிகளுக்குள் அமைந்துள்ள அனைத்து அரசாங்க நிறுவனங்கள், வசதிகள் மற்றும் அங்கீகரிக்கப்படாத உட்கட்டமைப்புகள் வன நிலத்திலிருந்து ஆறு மாத காலத்திற்குள் நிறுத்தப்பட்டு பிரிக்கப்பட்டு அகற்றப்பட வேண்டும்.
- ஆக்கிரமிக்கப்பட்ட வனப்பகுதிகளில் மின்சாரம், சாலை வசதி, போக்குவரத்து மற்றும் பிற அரசு நலத்திட்டங்களை வழங்குவதற்கு முழுமையான தடை விதிக்கப்பட்டுள்ளது.
- அனைத்து ஆக்கிரமிப்புகளும் முழுமையாக அகற்றப்படும் வரை, வனப்பகுதியில் எந்தவொரு புதிய வணிக அல்லது வனம் சாராத திட்டங்களுக்கும் அனுமதி வழங்கக் கூடாது.
- இந்த உத்தரவுகளை மாநில அரசு நிறைவேற்றத் தவறினால், ஆக்கிரமிப்புகளை அகற்ற துணை ராணுவப் படையை ஈடுபடுத்த சிஇசி பரிந்துரைக்கலாம்.
- ஆகஸ்ட் 28, 2026-க்குள் சிஇசி தனது இறுதி அறிக்கையைத் தாக்கல் செய்ய வேண்டும். வழக்கின் அடுத்த விசாரணை செப்டம்பர் 1, 2026 அன்று நடைபெறும் என உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மலை கிராம மக்கள் கூறுவது என்ன? அவர்கள் அச்சப்பட என்ன காரணம்? தமிழக அரசு என்ன சொல்கிறது?
இந்தக் காணொளியில் முழு விவரம் தெரிந்து கொள்ளலாம்.
- இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு