You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
பெலே, மரடோனாவை மெஸ்ஸி முந்தி விட்டாரா? மிகச்சிறந்த கால்பந்து வீரர் யார் என்பது பற்றிய ஒரு பார்வை
- எழுதியவர், ஜியுலியா கிரான்சி
- பதவி, பிபிசி நியூஸ் பிரேசில்
- பிரசுரிக்கப்பட்டது
- வாசிக்கும் நேரம்: 5 நிமிடங்கள்
லியோனல் மெஸ்ஸி தனது தொழில் வாழ்க்கையின் மூன்றாவது உலகக் கோப்பை இறுதிப் போட்டிக்குத் தயாராகி வரும் வேளையில், ஒரு பரிச்சயமான கேள்வி மீண்டும் எழுகிறது. இந்த அர்ஜென்டினா நட்சத்திரம் வரலாற்றிலேயே மிகச்சிறந்த கால்பந்து வீரரா? அவர் தனது நாட்டுக்காரரான டீகோ மரடோனா மற்றும் பிரேசிலின் பெலே ஆகியோரை முந்திவிட்டாரா?
39 வயதிலும், மெஸ்ஸி 2026 உலகக் கோப்பையில் அர்ஜென்டினாவின் நட்சத்திர வீரராக நீடிக்கிறார்.
இளம் வயதில் இருந்தது போன்ற அதிரடியான ஆட்டக்காரராக அவர் இப்போது இல்லை என்றாலும், மெஸ்ஸி தனது ஆட்டக் களம் குறித்த பார்வை, நிலைநிறுத்தம் மற்றும் முடிவெடுக்கும் திறன் ஆகியவற்றின் மூலம் தொடர்ந்து போட்டிகளின் போக்கை மாற்றுகிறார் என்றும், பல நேரங்களில் களத்திலேயே ஒரு பயிற்சியாளராகச் செயல்படுகிறார் என்றும் ஆய்வாளர்கள் கூறுகிறார்கள்.
ஆனால், அவர் தனது போட்டியாளர்களை முந்திவிட்டாரா?
மெஸ்ஸிக்கு ஆதரவான வாதம்
கால்பந்து வரலாற்றின் மிகச்சிறந்த வீரர்கள் வரிசையில் மெஸ்ஸியை முதலிடத்தில் வைப்பவர்கள், பொதுவாக இரண்டு முக்கிய பண்புகளைக் குறிப்பிடுகின்றனர்- நீண்ட காலம் நீடித்தது மற்றும் சீரான ஆட்டத்திறன்.
தங்களது உச்சக்கட்ட ஆட்டத்திறன் காலத்தை மிகக் குறுகிய காலமே கொண்டிருந்த பல சிறந்த வீரர்களைப் போலல்லாமல், மெஸ்ஸி கிட்டத்தட்ட இரண்டு தசாப்தங்களாக உலகின் முன்னணி வீரர்களில் ஒருவராகத் தொடர்ந்து நீடித்து வருகிறார்.
இந்தக் காலகட்டத்தில், அவர் சாதனை அளவாக 8 பலோன் டி ஆர் விருதுகள், ஸ்பெயின் மற்றும் பிரான்ஸ் நாடுகளின் லீக் பட்டங்கள், சாம்பியன்ஸ் லீக் கோப்பைகள், ஒரு கோபா அமெரிக்கா கோப்பை மற்றும் கத்தாரில் நடந்த 2022 உலகக் கோப்பை ஆகியவற்றை வென்றுள்ளார். அதேநேரத்தில், கோல் அடித்தல் மற்றும் கோல் அடிக்க உதவுதல் ஆகியவற்றிலும் வியக்கத்தக்க சாதனைகளைப் படைத்துள்ளார்.
பார்சிலோனா அணியின் ஐரோப்பிய ஆதிக்கம் முதல் சர்வதேச அரங்கில் அர்ஜென்டினாவின் மறுமலர்ச்சி வரை, வெவ்வேறு சூழல்களிலும் சிறப்பாகச் செயல்படும் அவரது திறனையும் ஆதரவாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
மெஸ்ஸி ஆதரவாளர்களைப் பொறுத்தவரை, திறமை, நிலைத்தன்மை மற்றும் நீண்ட காலம் விளையாடுவது ஆகியவற்றின் கலவையே அவரை வரலாற்றின் மற்ற அனைத்து வீரர்களிடமிருந்தும் வேறுபடுத்திக் காட்டுகிறது.
பிரெஞ்சு முன்கள வீரர் தியரி ஹென்றி தனது முன்னாள் பார்சிலோனா சக வீரரான மெஸ்ஸியிடம் ஒரு விதிவிலக்கான போட்டித் திறனைக் காண்கிறார்.
ஸ்பானிஷ் நாளிதழான மார்காவுக்கு அளித்த பேட்டியில், ஹென்றி கட்டலான் கிளப்பில் நடந்த தனது பயிற்சி நேரங்களை நினைவு கூர்ந்தார். மெஸ்ஸி தனக்கு அநீதி இழைக்கப்பட்டதாக உணர்ந்தால் போதும், அவர் தனது அணுகுமுறையை முற்றிலும் மாற்றிவிடுவார் என்று கூறினார்.
தனக்கு சாதகமாக ஒரு ஃபவுல் வழங்கப்படவில்லை என்று மெஸ்ஸி நம்பிய பிறகு, அவர் அடுத்தடுத்து பல கோல்களை அடித்த நிகழ்வுகளை நினைவு கூர்ந்த பிரெஞ்சு வீரர், "மிருகத்தை எழுப்ப வேண்டாம்" என்று சுருக்கமாகக் கூறினார்.
மரடோனாவின் நிழல்
அர்ஜென்டினாவில், ஒப்பீடுகள் பொதுவாக பெலே அல்லது பிற உலகளாவிய நட்சத்திரங்களை விட, 1986 இல் தேசிய அணியை உலகக் கோப்பை வெற்றிக்கு வழிநடத்திய கேப்டன் டீகோ மரடோனா மீதே அதிகம் கவனம் செலுத்துகின்றன.
மரடோனாவின் செல்வாக்கு கால்பந்தையும் தாண்டியது. பல அர்ஜென்டினியர்களுக்கு, அவர் ஒரு தேசிய அடையாள சின்னமாக விளங்குகிறார்.
"மரடோனா அர்ஜென்டினாவின் மன்னனாக இருந்தார். ஒரு மன்னன் தேர்ந்தெடுக்கப்படுவதில்லை, அவர் நாட்டைப் பிரதிநிதித்துவப்படுத்துகிறார்," என்று மெஸ்ஸியின் வாழ்க்கை வரலாற்றாசிரியர்களில் ஒருவரான ஸ்பானிஷ் பத்திரிகையாளர் கில்லெம் பலாக் பிபிசி நியூஸ் பிரேசிலிடம் தெரிவித்தார்.
பல ஆண்டுகளாக, சில அர்ஜென்டினியர்கள் மெஸ்ஸியின் திறமையை வியந்து பாராட்டினாலும், மரடோனாவைத்தான் தங்களது நாட்டின் உண்மையான அடையாளமாகக் கருதினர்.
வறுமையில் வளர்ந்து, 2020 இல் காலமான மரடோனா, அதிகாரத்தை பகிரங்கமாக எதிர்த்தார், அரசியலில் ஈடுபட்டார். பலரை ஈர்த்த அவரது கிளர்ச்சிகரமான குணமும் ஆளுமையும் பல மக்களிடம் நெருக்கமான தாக்கத்தை ஏற்படுத்தின.
இதற்கு நேர்மாறாக, மெஸ்ஸி முற்றிலும் மாறுபட்ட ஒரு பாதையைப் பின்பற்றினார். மைதானத்திற்கு வெளியே அமைதியானவராகவும், அரசியல் விஷயங்களைப் பேசத் தயங்குபவராகவும், முழுக்க முழுக்க கால்பந்தாட்டத்தில் மட்டுமே கவனம் செலுத்துபவராகவும் இருக்கும் அவர், தனது தொழில் வாழ்க்கையின் பெரும்பகுதியை விளையாட்டுக்கு வெளியேயான கவனத்தைத் தவிர்ப்பதிலேயே கழித்துள்ளார்.
மெஸ்ஸி மக்களின் பார்வையை மாற்றியது எப்படி?
2021 இல் அர்ஜென்டினா கோபா அமெரிக்கா கோப்பையை வென்று, ஒரு முக்கிய சர்வதேசக் கோப்பைக்கான 28 ஆண்டுகால காத்திருப்பை முடிவுக்குக் கொண்டுவந்த பிறகு, அந்நாட்டு மக்களிடையே மெஸ்ஸி மீதான அணுகுமுறை மாறத் தொடங்கியது.
2022 உலகக் கோப்பையின் போது இந்த மாற்றம் மேலும் வேகம் எடுத்தது.
அந்தத் தொடரின் போது, மெஸ்ஸி தனது ஆக்ரோஷமான மற்றும் உணர்ச்சிப்பூர்வமான பக்கத்தை வெளிப்படுத்தினார். பல ரசிகர்கள் வழக்கமாக மரடோனாவுடன் மட்டுமே தொடர்புபடுத்திப் பார்த்த ஒரு தலைமைத்துவப் பண்பை அவர் கையில் எடுத்தார்.
"அவர் தனது ஆளுமையின் புதிய பரிமாணங்களை வெளிப்படுத்தினார்" என்று பலாக் கூறுகிறார்.
"மக்கள் அவரை அணியின் தளபதியாகப் பார்க்கத் தொடங்கினர்."
பல அர்ஜென்டினியர்களுக்கு, மெஸ்ஸியை அவரது முன்னோடியான மரடோனாவிடமிருந்து பிரித்து வைத்திருந்த உணர்வுப்பூர்வமான இடைவெளியைக் குறைக்க அந்தத் தருணங்கள் உதவின.
இருந்தபோதிலும், இந்த விவாதம் இன்னும் முழுமையாக முடிவுக்கு வரவில்லை என்று பலாக் நம்புகிறார்.
"இன்று, ஒரு கால்பந்து வீரராக மெஸ்ஸி மரடோனாவை முந்திவிட்டார்" என்று அவர் கூறுகிறார்.
"ஆனால் மரடோனாதான் தங்களைச் சிறப்பாகப் பிரதிநிதித்துவப்படுத்துகிறார் என்று நினைக்கும் அர்ஜென்டினியர்கள் எப்போதும் இருக்கவே செய்வார்கள்."
பெலே குறித்த வாதம்
சில ஆய்வாளர்கள், மெஸ்ஸி தனது சக அர்ஜென்டினா வீரரை மட்டுமல்லாமல், 2022 இல் காலமான "கால்பந்தின் மன்னன்"(கிங் ஆஃப் ஃபுட்பால்) என்று அழைக்கப்படும் பிரேசில் நாட்டு ஜாம்பவான் பெலேவையும் முந்திவிட்டார் என்று வாதிடுகின்றனர்.
1958, 1962 மற்றும் 1970 ஆகிய ஆண்டுகளில் தனது நாடு கோப்பையை வெல்ல உதவியதன் மூலம், மூன்று உலகக் கோப்பைகளை வென்ற ஒரே வீரராக பெலே இன்றும் திகழ்கிறார்.
2018 ஆம் ஆண்டு பிரேசில் நாட்டு நாளிதழான 'ஃபோல்ஹா டி எஸ்.பாலோ'-வுக்கு அளித்த பேட்டியில், மெஸ்ஸியை விட மரடோனா "மிகச் சிறந்த வீரர்" என்று பெலே வாதிட்டார். மெஸ்ஸி தனது இடது காலை மட்டுமே அதிகமாக நம்பியிருப்பதாகவும், மற்ற சில கால்பந்து ஜாம்பவான்களைப் போன்ற ஒரு பன்முக ஆட்டத்திறன் அவரிடம் இல்லை என்றும் அவர் கூறினார்.
1970களில் தங்களது உச்சக்கட்ட ஆட்டத்திறனில் இருந்த ஜெர்மனி மற்றும் டச்சு கால்பந்து வீரர்களைக் குறிப்பிட்டு, "[பிரான்ஸ்] பெக்கன்பாயர் மற்றும் [ஜோஹான்] க்ரூஃப் ஆகியோரும் சிறந்தவர்கள்" என்று பெலே கூறினார்.
முன்னாள் பிரேசில் சர்வதேச வீரரான டோஸ்டாவ் மாறுபட்ட ஒரு கருத்தைக் கொண்டிருந்தார். 2021 இல், மரடோனாவை மெஸ்ஸி முந்திவிட்டார், ஆனால் இன்னும் பிரேசிலிய ஜாம்பவானுக்குப் பின்னாலேயே இருக்கிறார் என்று அவர் வாதிட்டார்.
"பெலேவுக்குப் பிறகு, வரலாற்றின் மிகச்சிறந்த வீரர் மெஸ்ஸிதான்" என்று டோஸ்டாவ் கூறினார்.
"அவர் மரடோனாவை விட முழுமையானவர் மற்றும் நீண்ட கால தொழில் வாழ்க்கையைக் கொண்டவர். பெலேவுக்கும் மெஸ்ஸிக்கும் உள்ள வித்தியாசம் உடல் ரீதியானது. பெலே அதிக வலிமையும் சிறந்த தடகளத் திறனும் கொண்டவராக இருந்தார்."
தனது சொந்த ஆட்டத்திறன் மெஸ்ஸியின் திறமையுடன் ஒப்பிட முடியாதது என்று பெலே வாதிட்டார்.
"தலையால் பந்தை நன்றாக முட்டி விளையாடும், இடது காலால் உதைக்கும், வலது காலால் உதைக்கும் ஒரு மனிதரை, ஒரே ஒரு காலால் மட்டுமே உதைக்கும், ஒரே ஒரு திறமையை மட்டும் கொண்ட, தலையால் நன்றாக முட்டத் தெரியாத ஒருவருடன் நீங்கள் எப்படி ஒப்பிட முடியும்?" என்று ஃபோல்ஹா டி எஸ்.பாலோ நாளிதழிடம் பேசுகையில் அவர் கூறினார்.
"பெலேவுடன் ஒப்பிட வேண்டுமானால், அவர் இடது காலால் நன்றாக உதைப்பவராகவும், வலது காலால் நன்றாக உதைப்பவராகவும், ஹெட்டர்கள் மூலம் கோல் அடிப்பவராகவும் இருக்க வேண்டும்." என்பது அவரது கருத்து.
வெறும் புள்ளிவிவரங்களை தாண்டியது
இந்தக் கருத்து வேறுபாடு ஒரு பரந்த பிரச்னையை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது. புள்ளிவிவரங்கள் மட்டுமே ஒரு வீரரின் சிறப்பை தீர்மானிப்பதாக இருந்தால், இந்த விவாதம் எப்போதோ முடிவுக்கு வந்திருக்கலாம்.
பல்வேறு பிரிவுகளில் மெஸ்ஸி வென்றுள்ள தனிநபர் மற்றும் அணிக்கான விருதுகளின் தொகுப்பு ஒப்பிட முடியாததாக உள்ளது .
இருப்பினும், கால்பந்தின் மிகச்சிறந்த வீரர்களுக்கு இடையேயான ஒப்பீடுகள் ஏன் இன்னும் இவ்வளவு சர்ச்சைக்குரியதாகவே இருக்கின்றன என்பதை வெறும் எண்கள் மட்டுமே முழுமையாக விளக்கிவிட முடியாது.
இந்த விவாதம் ஒரு எளிய உண்மையால் மேலும் சிக்கலாகிறது. பெலே, மரடோனா மற்றும் மெஸ்ஸி ஆகிய மூவரும் முற்றிலும் மாறுபட்ட காலகட்டங்களில் விளையாடியவர்கள் என்பதே அதுவாகும்.
1958இல் பெலே தனது முதல் உலகக் கோப்பையை வென்றபோது, கால்பந்து விளையாட்டில் நவீன விளையாட்டு அறிவியல், உலகளாவிய தொலைக்காட்சி ஒளிபரப்பு மற்றும் மேம்பட்ட தொழில்நுட்பங்கள் போன்ற வசதிகள் இல்லை.
1980களில் மரடோனாவின் காலகட்டத்தில், இந்த விளையாட்டு உலகம் போற்றும் ஒரு பிரமாண்டமான நிகழ்வாக மாறியிருந்தது. ஆனாலும் அது இன்றைய பல்லாயிரம் கோடி டாலர் தொழில் என்பதிலிருந்து முற்றிலும் மாறுபட்டதாகவே இருந்தது.
மெஸ்ஸி தனது ஒட்டுமொத்த தொழில் வாழ்க்கையின் பெரும்பகுதியை செயல்திறன் பகுப்பாய்வு, அதிநவீன மருத்துவ ஆதரவு மற்றும் தொடர்ச்சியான ஊடகக் கண்காணிப்பு ஆகியவற்றால் வடிவமைக்கப்பட்ட ஒரு சூழலிலேயே கழித்துள்ளார். ஒவ்வொரு போட்டியும் உலகம் முழுவதிலும் உள்ள பயிற்சியாளர்கள், வல்லுநர்கள் மற்றும் ரசிகர்களால் உடனுக்குடன் அலசி ஆராயப்படுகிறது.
இதன் விளைவாக, வெவ்வேறு தலைமுறைகளைச் சேர்ந்த வீரர்களை ஒருவரோடொருவர் ஒப்பிடுவது என்பது மிகவும் கடினமான ஒன்றாக மாறுகிறது.
மெஸ்ஸியை ஒரு "மேதை" என்று வர்ணித்துள்ள முன்னாள் பிரேசில் முன்கள ஆட்டக்காரர் ரொனால்டோ, மிகச்சிறந்த வீரர் யார் என்பதை அடையாளம் காண்பது நாம் பயன்படுத்தும் அளவுகோல்களைப் பொறுத்தது என்று வாதிட்டார்.
"எந்தவொரு அளவுகோலும் இல்லாமல் உங்களால் எப்படித் தேர்ந்தெடுக்க முடியும்?" என்று அவர் கேள்வி எழுப்பினார்.
பெலே, மரடோனா மற்றும் மெஸ்ஸி ஆகியோரின் கால்பந்து வாழ்க்கை முற்றிலும் மாறுபட்ட உலகங்களில் அரங்கேறியது என்பது முற்றிலும் உண்மையானதே.
கால்பந்து விளையாட்டை உண்மையிலேயே ஒரு உலகளாவிய விளையாட்டாக மாற்றுவதற்கு பெலே உதவினார். அர்ஜென்டினாவின் வரலாற்றில் ஒரு கொந்தளிப்பான காலகட்டத்தில், மரடோனா ஒரு விளையாட்டு, அரசியல் மற்றும் கலாசார அடையாளமாக மாறினார். மெஸ்ஸி தனது வரலாற்றை உலகமயமாக்கல், விளையாட்டு அறிவியல் மற்றும் தொடர்ச்சியான ஊடக வெளிச்சம் ஆகியவற்றால் வடிவமைக்கப்பட்ட ஒரு காலகட்டத்தில் கட்டமைத்தார்.
இந்த மூன்று வீரர்களும் ஒரு ஆழமான மாற்றத்திற்கு உள்ளான ஒரு விளையாட்டில்தான் போட்டியிட்டனர். அவர்கள் முற்றிலும் மாறுபட்ட சூழ்நிலைகள், போட்டி அட்டவணைகள், சவால்கள் மற்றும் எதிர்பார்ப்புகளை எதிர்கொண்டனர். இறுதியில், எந்தவொரு தீர்ப்பும் திறமை, சாதனைகள், செல்வாக்கு, நீண்ட காலம் நிலைத்திருப்பது அல்லது கலாசார தாக்கம் இவற்றில் எது மிக முக்கியம் என்பதைப் பொறுத்தே அமைகிறது.
அதனால்தான் இந்த விவாதம் முடிவுக்கு வர வாய்ப்பில்லை. கால்பந்தின் மிகச்சிறந்த இந்த வாதம் தலைமுறைகளைக் கடந்து இன்றும் தொடர்ந்து நீடிக்கிறது.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு