கடைசி நிமிடங்களில் வெகுண்டெழும் அர்ஜென்டினா - மெஸ்ஸியின் வெற்றி வியூகம் என்ன?

அர்ஜென்டினா -

பட மூலாதாரம், Getty Images

    • எழுதியவர், பிரதீப் கிருஷ்ணா
    • பதவி, பிபிசி தமிழுக்காக
  • பிரசுரிக்கப்பட்டது
  • வாசிக்கும் நேரம்: 5 நிமிடங்கள்

அர்ஜென்டினா - தொடர்ந்து இரண்டாவது முறையாக ஃபிஃபா உலகக் கோப்பை இறுதிப் போட்டிக்கு முன்னேறியிருக்கிறது. அரையிறுதிப் போட்டியில் 2-1 என இங்கிலாந்தை வீழ்த்தி இன்னொரு கோப்பையை நோக்கி அடியெடுத்து வைத்திருக்கிறது நடப்பு சாம்பியன்.

85 நிமிடங்கள் வரை ஆட்டத்தில் பின்தங்கியிருந்த அர்ஜென்டினா, தொடரிலிருந்து வெளியேறிவிடும் என்று கருதப்பட்டது. ஆனால், கடைசி கட்டத்தில் வெகுண்டெழுந்து 8 நிமிட இடைவெளியில் 2 கோல்கள் அடித்தது அந்த அணி.

முதல் பாதியில் பெரிதாக தாக்கம் ஏற்படுத்திடாத அர்ஜென்டினா கேப்டன் லியோனல் மெஸ்ஸி, கடைசி கட்டத்தில் அந்த அணியின் இரண்டு கோல்களுக்குமே அசிஸ்ட் செய்து தன் அணி இறுதிப் போட்டிக்குத் தகுதி பெறக் காரணமாக அமைந்தார்.

இந்த உலகக் கோப்பையின் நாக் அவுட் சுற்றில் அர்ஜென்டினா அணி இதே பாணியில் வெற்றி பெறுவது தொடர்ந்துகொண்டிருக்கிறது. எகிப்து அணிக்கெதிராக 2 கோல்கள் பின்தங்கியிருந்த நிலையிலிருந்து கடைசி கட்டத்தில் 3 கோல்கள் அடித்து வெற்றி பெற்றது அந்த அணி.

நாக் அவுட் சுற்றில் இப்படியான வெற்றிகள் அந்த அணிக்கு வாடிக்கையாகியிருக்கிறது என்ற நிலையில், இந்த வெற்றிகளில் மெஸ்ஸியின் ரோலுமே மாறியிருக்கிறது. ஆரம்ப கட்டத்தில் கோல் மெஷினாக விளங்கிக்கொண்டிருந்தவர், சமீபத்திய போட்டிகளில் அசிஸ்ட்கள் கொடுக்கும் ஒரு 'கிரியேட்டராக' மாறியிருக்கிறார்.

அர்ஜென்டினாவின் இந்த கம்பேக் வெற்றிகளுக்கு முக்கியக் காரணமாக இருப்பது என்ன? இந்த அரையிறுதிப் போட்டியில் இங்கிலாந்து என்ன தவறுகள் செய்தது? அதை அர்ஜென்டினா எப்படி பயன்படுத்திக்கொண்டது? இதுபற்றி பிபிசி தமிழிடம் பகிர்ந்துகொண்டிருக்கிறார் இந்திய கால்பந்து அணியின் முன்னாள் வீரரும், தமிழ்நாடு சந்தோஷ் கோப்பை அணியின் பயிற்சியாளருமான தர்மராஜ் ராவணன்.

அர்ஜென்டினா

பட மூலாதாரம், Getty Images

அர்ஜென்டினா செய்யும் அசத்தல் கம்பேக்குகள்

இந்த உலகக் கோப்பையின் நாக் அவுட் சுற்றுகளில் பெரும்பாலான போட்டிகளில் கடைசி கட்டத்தில் தான் வெற்றியை ஈட்டியிருக்கிறது அர்ஜென்டினா.

கேப் வெர்டே அணிக்கெதிரான ரவுண்ட் ஆஃப் 32 போட்டியில் 90 நிமிடங்களின் முடிவில் 1-1 என சமநிலையில் இருந்த ஆட்டம் கூடுதல் நேரத்துக்கு சென்றது. அதிலும் இரு அணிகளும் தலா 1 கோலடித்திருக்க, 111வது நிமிடத்தில் இன்னொரு கோல் அடித்து (கேப் வெர்டே வீரர் டினே அடித்த சுய கோல்) தான் அடுத்த சுற்றுக்கு முன்னேறியது அர்ஜென்டினா.

எகிப்து அணிக்கெதிரான ரவுண்ட் ஆஃப் 16 போட்டியோ இன்னும் பரபரப்பாக இருந்தது. 78 நிமிடங்கள் வரை 2-0 என பின்தங்கியிருந்த அர்ஜென்டினா, அடுத்த 25 நிமிடங்கள் 3 கோல்கள் அடித்து மிரட்டலாக வெற்றி பெற்றது.

ஸ்விட்சர்லாந்துக்கு எதிரான காலிறுதியிலும் கூடுதல் நேரத்தில் தான் வெற்றி. 111 நிமிடங்கள் ஆட்டம் சமநிலையில் இருக்க, கடைசி 10 நிமிடங்களில் 2 கோல்கள் அடித்து வெற்றி பெற்றது நடப்பு சாம்பியன். இப்போது அரையிறுதியிலும் இப்படியொரு கடைசி கட்ட அசத்தல் வெற்றிதான் நடந்திருக்கிறது.

அர்ஜென்டினா -

பட மூலாதாரம், Getty Images

வாட்ஸ்அப் விளம்பரம் - ஐ புறக்கணித்துவிட்டு தொடர்ந்து படிக்கவும்
வாட்ஸ்ஆப்பில்

பிபிசி தமிழ் செய்திகளை செல்போனிலேயே படிக்கலாம்

பின்தொடர கிளிக் செய்யவும்

வாட்ஸ்அப் விளம்பரம் - முடிவு

அர்ஜென்டினாவின் இந்த கம்பேக் பற்றி பிபிசி தமிழிடம் பேசிய ராவணன், "ஒரு சிறந்த அணி என்பது கடினமான சூழ்நிலையில் எப்படி மீண்டு வந்து வெற்றி பெறுகிறது என்பதில் தான் இருக்கிறது. அதுதான் ஒரு சாம்பியன் அணிக்கு அழகு. அர்ஜென்டினா அதைத்தான் இந்த உலகக் கோப்பையில் செய்துகொண்டிருக்கிறது." என்று கூறினார்.

"அர்ஜென்டினா இப்படி செயல்படுவதற்கான காரணம் அவர்களின் போராட்ட குணம்தான். அவர்களின் உறுதியான மனநிலை அவர்களை மேலும் மேலும் மீண்டு வருவதற்கான உத்வேகத்தைக் கொடுக்கிறது. முற்றிலும் பின்தங்கியிருக்கும்போது மீண்டு வருவதோடு மட்டுமல்லாமல் வெற்றியும் பெறுவது சாதாரண விஷயமில்லை. இந்த அரையிறுதியாவது பரவாயில்லை, எகிப்துக்கு எதிராக 2 கோல்கள் பின்தங்கியிருந்த நிலையிலும் கூட அர்ஜென்டினா மீண்டு வந்து வெற்றி பெற்றதை நினைத்தே பார்க்க முடியவில்லை. இந்த வெற்றிகளில் மெஸ்ஸின் பங்களிப்பு மிகவும் முக்கியமானது. அதில் மாற்றுக்கருத்தே இல்லை. ஆனால், மெஸ்ஸியைக் கடந்து அந்த அணி வீரர்கள், பயிற்சியாளர் ஸ்கலோனி ஆகியோரின் பங்களிப்பும் அசாத்தியமானது.

நீங்கள் ஆட்டத்தைக் கூர்ந்து கவனித்தால் மெஸ்ஸி பெரிதாக டிஃபன்ஸில் பங்களிப்பதில்லை என்பது புரியும். அந்த அணி பின்தங்கியிருக்கும்போது கூட அவர் அவ்வளவாக டிஃபன்ஸில் இணையமாட்டார். இங்கிலாந்துக்கு எதிராகக் கூட பலமுறை அவர் பந்தை இழந்தார். ஆனால், இதை அர்ஜென்டினா வீரர்கள் எப்படி சிறப்பாக கையாள்கிறார்கள் என்பதுதான் அந்த அணியின் சிறப்பு.

'மெஸ்ஸி டிஃபன்ஸில் பங்களிக்கவில்லையா, பரவாயில்லை அதை நாங்கள் பார்த்துக்கொள்கிறோம்' என்பதுபோல் விளையாடுகிறார்கள். என்சோ, ராட்ரிகோ டி பால் ஆகியோர் விங்கர்களே இல்லை. அவர்கள் பக்காவான நடுகள வீரர்கள். ஆனால், அணியின் தேவைக்காக அவர்கள் விங்கில் ஆடுகிறார்கள். ராட்ரிகோ டி பால், சிமியோனி என வலது விங்கில் ஆடும் வீரர்கள் மெஸ்ஸிக்காகவும் சேர்ந்து கூடுதலாக டிஃபன்ஸில் பங்களிக்கிறார்கள்.'' என்றார்.

மேலும் பேசிய ராவணன், "என்னதான் அர்ஜென்டினா வீரர்கள் இந்த கூடுதல் வேலையை செய்தாலும், அதை அவர்கள் ஒரு சுமையாகக் காட்டிக்கொள்வதில்லை. தங்கள் பணியாகவே அதைக் கருதுகிறார்கள். ஆனால், இதுவே வேறொரு அணியாக இருந்தால் சிலசமயம் வீரர்கள் அதைக் களத்திலேயே காட்டுவார்கள். உதாரணமாக, போர்ச்சுகல் அணியில் அது நடந்திருக்கிறது. அர்ஜென்டினா அணியில் அதைப் பார்க்கவே முடியாது" என்று கூறினார்.

ராவணன் சொல்வது உண்மை தான். பிஎஸ்ஜி அணி சில ஆண்டுகள் முன்பு சாம்பியன்ஸ் லீக் தொடரிலிருந்து வெளியேறியபோது அந்த அணியின் கேப்டன் மார்க்கினியோஸ் 'நட்சத்திர வீரர்களாக இருந்தாலும் அவர்கள் டிஃபன்ஸில் பங்களிக்கவேண்டும்' என்று வெளிப்படையாகக் கூறினார். அது தவறில்லை. எல்லா வீரர்களும் பங்களிக்கவேண்டும் தான். ஆனால், அப்படிப் பங்களிக்காதபோது மற்ற வீரர்கள் அதைப் பெரிதுபடுத்தாமல் தாங்களே முன்வந்து அந்த வேலையையும் செய்வது அந்த அணியின் தன்மையை உணர்த்துகிறது.

"மெஸ்ஸியின் பலத்தைப் பயன்படுத்திக்கொண்டு, அவருக்கு இருக்கும் பிரச்னையை நாங்கள் பார்த்துக்கொள்கிறோம் என்ற அற்புதமான மனோபாவத்தோடு அர்ஜென்டினா வீரர்கள் செயல்படுகிறார்கள். அதுவே அவர்களின் இந்த செயல்பாட்டுக்குக் காரணம்" என்று கூறினார் ராவணன்.

அர்ஜென்டினா -

பட மூலாதாரம், Getty Images

தன் ரோலை மாற்றிக்கொண்ட மெஸ்ஸி

இந்தத் தொடரின் ஆரம்ப கட்டத்தில் மெஸ்ஸி தொடர்ச்சியாக கோல்கள் அடித்துக்கொண்டே இருந்தார். லீக் சுற்றில் அவர் களத்தில் இருந்தபோது அவரைத் தவிர வேறு எந்த அர்ஜென்டினா வீரரும் கோலடிக்கவில்லை. முழுக்க முழுக்க அவர் ஆதிக்கமாகவே இருந்தது. முதல் 4 போட்டிகளில் 7 கோல்கள் அடித்திருந்த மெஸ்ஸியின் ரோல் அதன்பின் அப்படியே மாறிவிட்டது.

கடைசி 3 போட்டிகளில் அர்ஜென்டினா 8 கோல்கள் அடித்திருக்கிறது. அதில் மெஸ்ஸி அடித்திருப்பது ஒரேயொரு கோல். ஆனால், மற்ற 7 கோல்களில் நான்குக்கு அசிஸ்ட் செய்திருப்பது அவர்தான். இந்த அரையிறுதில் கூட மிகவும் கடினமான அந்தக் கட்டத்தில் தன் அணியின் இரு கோல்களுக்குமே அசிஸ்ட் செய்தார் மெஸ்ஸி.

இந்த அரையிறுதியின் முதல் பாதியில் பலமுறை இங்கிலாந்தின் பாக்சுக்கு அருகே முன்னேற முயற்சி செய்தார் மெஸ்ஸி. ஆனால், அவரால் அது முடியவில்லை. இங்கிலாந்து வீரர்கள் சிறப்பாக செயல்பட்டு அவரைக் கட்டுக்குள் வைத்தார்கள். கடந்த சில போட்டிகளாகவே எதிரணி வீரர்கள் அதைச் செய்துவருகிறார்கள். அதனால், மெஸ்ஸி ஆட்டத்தின் கடைசி கட்டங்களில் வாய்ப்புகளை உருவாக்கும் 'கிரியேட்டர்' வேலையை எடுத்துக்கொள்கிறார்.

இதுபற்றிப் பேசிய ராவணன், "கடைசி கட்டத்தில் கோல் அவசியம் எனும்போது அர்ஜென்டினா அணி கூடுதல் அட்டாக்கர்களை களமிறக்குகிறது. இருந்தாலும், அந்த அணியில் வாய்ப்புகளை உருவாக்கும் வீரர்கள் அவ்வளவாக இல்லை. சொல்லப்போனால் மெஸ்ஸி மட்டும்தான் வாய்ப்புகளை உருவாக்கக்கூடியவர். அதை உணர்ந்த அவர் வலது விங்கில் நன்கு இறங்கிவருகிறார், மற்ற வீரர்கள் அவருக்கு பந்தை அனுப்புகிறார்கள், அவர் 'இன்ஸ்விங்கிங்' கிராஸ்களை அனுப்பிக்கொண்டே இருக்கிறார். அதில் கோல் வாய்ப்புகள் உருவாகிக்கொண்டே இருக்கின்றன" என்று கூறினார்.

அர்ஜென்டினா

பட மூலாதாரம், Getty Images

எகிப்து அணிக்கெதிராக அர்ஜென்டினாவின் கம்பேக் அப்படித்தான் ஆரம்பித்தது. அந்த அணியின் முதல் கோல், மெஸ்ஸி கொடுத்த கிராஸை கிறிஸ்டியன் ரொமேரோ ஹெட்டர் செய்ததால் வந்தது. ஸ்விட்சர்லாந்துக்கு எதிராக அந்த அணியின் முதல் கோல் (அலெக்சிஸ் மெக்காலிஸ்டர் அடித்தது), மெஸ்ஸி அடித்த கார்னரில் இருந்து வந்தது. இங்கிலாந்துக்கு எதிராக லாடாரோ மார்டினஸ் அடித்த கோல் அப்படி மெஸ்ஸி கொடுத்த கிராஸில் இருந்தது வந்ததே.

''மெஸ்ஸின் 4 அசிஸ்ட்களில் கிராஸ் மூலம் வராத கோல் ஒன்றுதான். அது இங்கிலாந்துக்கு எதிராக என்சோ ஃபெர்னாண்டஸ் அடித்து ஒன்று. அந்த 3 கிராஸ்கள் மெஸ்ஸின் தரத்தைக் காட்டினால், என்சோவின் கோலுக்குக் கொடுத்த பாஸ் மெஸ்ஸின் புத்திசாலித்தனத்தைக் காட்டுகிறது என்கிறார் ராவணன்.

"அர்ஜென்டினா அணி தொடர்ச்சியாக கிராஸ்கள் போட்டுக்கொண்டே இருந்தது. இங்கிலாந்து வீரர்களுமே அவர்களின் ஆட்டம் இதுதான் என்பதை ஓரளவு கணித்திருந்தார்கள் - மெஸ்ஸிக்கு பந்தைக் கொடுத்தால் அவர் இன்ஸ்விங்கிங் கிராஸ் போடுவார். அது, அர்ஜென்டினா அணிக்குக் கிடைத்த கார்னர் வாய்ப்புகளின்போதும் தெரிந்தது.

மெஸ்ஸி பந்தை நேரே பாக்சுக்கு அனுப்பாமல், அருகில் இருக்கும் இன்னொரு வீரருக்கு பாஸ் செய்து விட்டு சற்று மேலே வருவார். அவர் மீண்டும் மெஸ்ஸிக்குப் பந்தைக் கொடுப்பார். தற்போது இன்னும் எளிதான இடத்தில் இருந்து ஆபத்தான கிராஸை அனுப்புவார் மெஸ்ஸி. இது கார்னர்களில் தொடர்ச்சியாக நடந்துகொண்டிருந்தது. ஆனால், என்சோ கோல் அடித்தபோது, மெஸ்ஸி ஒரு மாற்றம் செய்தார். அதேபோல் ஷார்ட் கார்னர் அவர் எடுத்ததும், மீண்டும் ஒரு இன்ஸ்விங்கிங் கிராஸ் வரும் என்று எல்லோரும் எதிர்பார்த்திருந்தார்கள். ஆனால், மெஸ்ஸியோ அதை உணர்ந்துகொண்டு என்சோவுக்குப் பந்தை அனுப்பிவிட்டார். அதை இங்கிலாந்து வீரர்கள் யாரும் எதிர்பார்க்கவில்லை. என்சோவை யாரும் 'கவர்' செய்யாமல் இருந்ததால் அவர் அதை கோலாக்கிவிட்டார். சரியான தருணத்தில் மெஸ்ஸி செய்த அந்த மாற்றம் அவர்களுக்குப் பலன் கொடுத்துவிட்டது" என்று கூறினார் ராவணன்.

அர்ஜென்டினா

பட மூலாதாரம், Getty Images

இங்கிலாந்து பயிற்சியாளர் செய்த தவறு

அர்ஜென்டினாவின் இந்த கம்பேக்குக்கு இங்கிலாந்து பயிற்சியாளர் தாமஸ் டுகெல் செய்த தவறுகளும் முக்கியக் காரணம் என்று குறிப்பிட்டார் ராவணன். "இறுதிப் போட்டிக்கு முன்னேற இருந்த நல்ல வாய்ப்பை இங்கிலாந்து கெடுத்துக்கொண்டது. முதல் கோல் அடித்தபிறகும் கூட இன்னும் அட்டாக்கில் சற்று கவனம் செலுத்தியிருக்கலாம். அர்ஜென்டினாவின் பலவீனமே அவர்களின் டிஃபன்ஸ் தான். அதிலும் அவர்களின் சென்டர்பேக் இருவருமே மஞ்சள் அட்டை பெற்றிருந்த நிலையில், நன்கு நெருக்கடியை ஏற்படுத்தியிருக்க முடியும். ஆனால் முழுமையாக டிஃபன்ஸிவாக ஆடி, கிராஸ் மேல் கிராஸ் வருவதற்கு வாய்ப்புகளை வழங்கிவிட்டார்கள்.

வெறுமனே உயராமான டிஃபண்டர்களைக் கொண்டுவருவதன் மூலம் மட்டும் கோலைத் தடுத்துவிட முடியாது. தண்ணீரைத் திறந்துவிட்டுவிட்டு தரையைத் துடைத்துக்கொண்டே இருக்க முடியாது. குழாயை அடைக்கவேண்டும். இங்கிலாந்து அதைச் செய்யத் தவறவிட்டது. அதனால் இறுதிப் போட்டிக்கு செல்லும் வாய்ப்பை அவர்கள் இழந்துவிட்டார்கள்" என்று குறிப்பிட்டார் ராவணன்.

எஸ்ரி கோன்சா, டேன் பர்ன், நிகோ ஓ'ரைலி என எக்கச்சக்க டிஃபண்டர்களைக் களமிறக்கிய இங்கிலாந்து பயிற்சியாளர் தாமஸ் டுகெலின் முடிவே இங்கிலாந்தின் இந்தத் தோல்விக்குக் காரணம் என்றும், அதற்கு அவர் பொறுப்பேற்றுக்கொள்ளவேண்டும் என்றும் ராவணன் தெரிவித்தார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு