காணொளி: இரான் மீது ஏழாவது முறையாக அமெரிக்கா தாக்குதல்
இரான் மீது அமெரிக்கா மீண்டும் தாக்குதலை நடத்தி இருக்கிறது. அமெரிக்க அதிபர் டிரம்ப் தற்காலிக போர் நிறுத்தம் முடிந்துவிட்டது என அறிவித்ததில் இருந்து இரான் மீது ஏழாவது இரவாக தாக்குதல்களை நடத்தியதாக அமெரிக்கா கூறி உள்ளது.
அமெரிக்க படைகள், இரானின் கண்காணிப்புத் தளங்கள், ராணுவ தளவாட உள்கட்டமைப்பு, நிலத்தடி ஆயுதக் கிடங்குகள் மற்றும் கடல்சார் திறன்கள் மீது தாக்குதல் நடத்தியதாக அமெரிக்கமத்திய காமாண்ட் கூறி உள்ளது.
இதற்கு பதிலடியாக, குவைத் உட்பட அந்த பிராந்தியத்தில் உள்ள அமெரிக்காவின் நட்பு நாடுகளைக் குறிவைத்ததாக இரான் கூறியது. தங்கள் நாட்டில் ஒரு மின் உற்பத்தி நிலையம் மற்றும் ஒரு எண்ணெய் ஆலை தாக்கப்பட்டதாக குவைத் கூறியது. இதில் சிலர் காயமடைந்ததாகவும் குவைத்தின் அரசு செய்தி முகமை கூறியது.
இரவில் தனது வான்வெளிக்குள் ஏவப்பட்ட 10 இரானிய ஏவுகணைகளை இடைமறித்ததாக ஜோர்டான் ராணுவம் கூறியது. அதே போல, தனது வான் பாதுகாப்புப் படைகள் இரானியத் தாக்குதல்களை முறியடித்ததாக பஹ்ரைனும் கூறியது.
அமெரிக்கா நடத்திய தாக்குதலை தொடர்ந்து, யாஸ்த், கெஷம் தீவு மற்றும் பந்தர் அப்பாஸ் துறைமுகம் ஆகிய பகுதிகளில் வெடிப்புச் சத்தங்கள் கேட்டதாக இரானிய அரசு ஊடகம் கூறியது.
ஜாஸ்க் பகுதி அருகே உள்ள ஒரு ஆலையில் மின்சார வசதிகள் மற்றும் கடல்நீர் சுத்திகரிப்பு பம்புகள் மீது நடத்தப்பட்ட தாக்குதலால், 20 கிராமங்களில் உள்ள சுமார் 10,000 மக்கள் குடிநீர் இன்றி தவிப்பதாக உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்தனர்.
போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான பேச்சுவார்த்தைகளுக்கு வழிவகுக்கும் வகையில், அமெரிக்காவும் இரானும் ஜூன் மாதம் மோதலை நிறுத்த ஒப்புக்கொண்டன.
அதை தொடர்ந்து, போர் நிறுத்தம் பெரும்பாலும் கடைப்பிடிக்கப்பட்டு வந்த நிலையில், கப்பல்கள் மீதான இரான் தாக்குதல்களைத் தொடர்ந்து, அமெரிக்கா மீண்டும் இரானை தாக்க தொடங்கியது.
பேச்சுவார்த்தைகளில் எந்த முன்னேற்றமும் தெரியாமல் இருந்த நிலையில், போர் நிறுத்தம் முடிவுக்கு வந்ததாக டிரம்ப் அறிவித்தார்.
அதன் பிறகு, இரானிய தளங்கள் மீது தாக்குதல் நடத்தியதுடன், இரானிய துறைமுகங்கள் மீது அமெரிக்கா மீண்டும் கடற்படை முற்றுகையை விதித்தது.
ஹோர்முஸ் நீரிணையின் தெற்கே கண்ணிவெடிகள் பதிக்கப்பட்ட பாதை வழியாகச் சென்றபோது இரண்டு எண்ணெய் டேங்கர்கள் வெடித்து தீப்பிடித்தன என இரானின் ஃபார்ஸ் முகமை செய்தி வெளியிட்டிருந்த நிலையில், அதை அமெரிக்க மத்திய கமாண்ட் மறுத்துள்ளது. மேலும், இஸ்லாமிய புரட்சிகர காவல்படையின் பெரும்பாலான கூற்றுக்களை போல, இதுவும் பொய்யானது என எக்ஸ் தளத்தில் குறிப்பிட்டுள்ளது.
வெள்ளிக்கிழமை குவைத், பஹ்ரைன், ஜோர்டான் மற்றும் சிரியா ஆகிய வளைகுடாப் பிராந்தியம் முழுவதும் உள்ள பல அமெரிக்க ராணுவத் தளங்கள் மீது தாக்குதல் நடத்தியதாக இரான் கூறியது. ஆனால் அதை அமெரிக்கா மறுத்தது.
எனினும், கடந்த வாரம் இரண்டு ஜோர்டானிய தளங்கள் மீது இரான் நடத்திய தாக்குதல்களில் அமெரிக்க ராணுவத்தினர் பலர் காயமடைந்ததாக பிபிசியின் அமெரிக்கக் கூட்டாளியான சிபிஎஸ் செய்தி நிறுவனத்திடம் நெருக்கமான வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
பாலங்கள், ஒரு ரயில் நிலையம் மற்றும் விமான நிலையம் உள்ளிட்ட இரானில் உள்ள பொதுமக்களின் உள்கட்டமைப்புகளை அமெரிக்கா தாக்கியதாக இரான் குற்றம் சாட்டிய நிலையில், அரசு ஊடகத்தில் அது தொடர்பாக ஒரு காணொளியும் வெளியானது. எனினும், இரானின் அந்த குற்றச்சாட்டையும் அமெரிக்கா மறுத்தது.
சாபஹார் துறைமுகத்தில் உள்ள ஒரு கட்டுப்பாட்டுக் கோபுரத்தை அழித்துவிட்டதாக அமெரிக்கா கூறியது. அமெரிக்க பாதுகாப்புச் செயலாளர் பீட் ஹெக்ஸெத், தாக்குதலில் கோபுரம் சரிந்து விழும் ஒரு படத்தைப் எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்திருந்தார். அந்தக் கோபுரம் இஸ்லாமிய புரட்சிகர காவல்படையின் கடல்சார் கண்காணிப்பு வலையமைப்பின் ஒரு பகுதி என மத்திய காமாண்ட் கூறுகிறது.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



